Showing posts with label actor. Show all posts
Showing posts with label actor. Show all posts

25 August 2013

கேப்டன்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இணையவெளியில் அதிகமாக கேலி செய்யப்படுபவர்களில் ஒருவர். சமகாலத்தில் அவருடைய ரசிகர் என்று யாரேனும் சொன்னால், சொன்னவர் சர்வநிச்சயமாக எள்ளி நகையாடப்படுவார். அவருடைய உருவம், வசன உச்சரிப்பு, சண்டைமுறை, ஆங்கிலம் பேசும் முறை என்று அரசியல் வரைக்கும் எல்லா வகையிலும் அவரை ஜாலியாக கிண்டலடிப்பதில் துவங்கி சீரியஸாக விமர்சிப்பவர்கள் உண்டு. ஆனாலும் போகிறபோக்கில் எல்லாம் அவரை அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியாது. தமிழகத்தில் மிமிக்ரி கலைஞர் என்றால் கண்டிப்பாக அவருக்கு நாக்கை மடித்து, “ஆங்...!” என்று சொல்லும் அவருடைய ஸ்டைல் தெரிந்திருக்க வேண்டும். சிகப்புநிற தோல் இல்லை, புஜபல பராக்கிரமசாலியும் இல்லை, சினிமாவில் பெரிய பின்புலம் இல்லை. ஆனாலும், ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த நிலையில், குறிப்பாக பி, சி செண்டர்களின் பேராதரவை பெற்று பிசியாக நடித்துக்கொண்டிருந்தவர். கேப்டன் விஜயகாந்த் !

யாரிந்த விஜயகாந்த் ?

விஜயகாந்த் அறுபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு ஆகஸ்ட் இருபத்தி ஐந்தில் நாராயணனாக பிறந்தார். ஆண்டாள் அழகர் தம்பதியர் ஈன்றெடுத்தனர். பிறந்த மண் மதுரை. நாராயணன் என்பது அவருடைய தாத்தாவின் பெயர். அந்த பெயரைச் சொல்லி அழைக்கும் சங்கடத்தை தவிர்ப்பதற்காக விஜயராஜ் என்ற கூப்பிடுபெயரையும் சூட்டி வைத்தனர். சினிமா அவரை காந்தம் போல ஈர்த்து ராஜ் என்பதற்கு பதிலாக ‘காந்த்’ என்ற பின்னொட்டை சேர்த்துக்கொண்டது. பின்னாளில் இயக்குநர் விஜயன், அமிர்தராஜ் என்ற புதுப்பெயரை சூட்டினாலும் கூட விஜயகாந்த் என்பதே நிலைத்துவிட்டது.

விஜயகாந்தின் குடும்பம் பெரியது. உடன்பிறப்புகளில் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என்று எல்லோரையும் வாய்க்கப்பெற்றவர் விஜயகாந்த். ஆண்டாள் – அழகர் தம்பதியருக்கு விஜயகாந்துடன் சேர்த்து மொத்தம் எட்டு குழந்தைகள். விஜயகாந்துக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா. மூன்றாவதாக விஜயகாந்த். ஒரு தங்கை, நான்கு தம்பிகள். கேட்கவே மலைப்பாக இருக்கிறது. விஜயகாந்த் அவருடைய வீட்டில் ஒரு ஆறிலிருந்து அறுபது வரை ரஜினிகாந்த். தங்கை, தம்பிகளுக்கெல்லாம் திருமணம் செய்து வைத்துவிட்டு திரைப்படத்துறையிலும் முத்திரையை பதித்துவிட்டு தன்னுடைய முப்பத்தி ஏழாவது வயதில் தான் அண்ணியாரை கை பிடித்தார்.

விஜயகாந்தின் தந்தையார் மதுரையில் ரைஸ்மில் முதலாளி. விஜயகாந்தும் பத்தாம் வகுப்போடு பள்ளிக்கு நிரந்தர விடுப்பு எடுத்துக்கொண்டு ரைஸ்மில்லை கவனித்து வந்தார். அப்போது விஜயகாந்தின் நண்பர் எம்.ஏ.காஜா மதுரையில் சினிமா கம்பெனி வைத்திருந்தார். 1979ம் ஆண்டு சினிமா பிரவேசம் செய்த எம்.ஏ.காஜா நட்பின் அடிப்படையில் தன்னுடைய இனிக்கும் இளமை திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஒரு முக்கிய வேடம் கொடுத்தார். விஜயகாந்த் என்ற பெயரும் அவர் சூட்டியது தான். அப்படித்தான் விஜயகாந்தின் சினிமா வாழ்க்கை துவங்கியது.

சராசரியாக போய்க்கொண்டிருந்த அவருடைய சி.வா.யில் திருப்புமுனை ஏற்படுத்தியது யாரென்று நினைக்கிறீர்கள் ? தி ஒன் அண்ட் ஒன்லி – எஸ்.ஏ.சி ! பஸ்.ஏ.சியின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை மாபெரும் வெற்றி பெற்றது. எஸ்.ஏ.சி.க்கு அதுதான் முதல் படம். கிடைத்த நடிகரை கப்பென பிடித்துக்கொண்டு தொடர்ந்து விஜயகாந்தை வைத்தே படங்கள் எடுக்கலானார். எஸ்.ஏ.சி, விஜயகாந்தை வைத்து இதுவரையில் பதினேழு படங்களை இயக்கியிருக்கிறார் என்கிறது புள்ளிவிவரம். எஸ்.ஏ.சி.யைப் போலவே விஜயகாந்துடன் இணைந்து வளர்ந்த இன்னொரு இயக்குநர் ராம.நாராயணன். அவரும் விஜயகாந்தை வைத்து அதே எண்ணிக்கையில் படங்களை இயக்கியிருக்கிறார்.

புகழின் படிகளில் முன்னேறிய விஜயகாந்த், ஒரு கட்டத்தில் ரஜினிகாந்துக்கு மாற்றாக இருந்திருக்கிறார். ரஜினியை வைத்து படம் பண்ண முடியாதவர்கள் எல்லாம் நேரே வண்டியை விஜயகாந்த் வீட்டிற்கு செலுத்தியிருக்கிறார்கள். சிறு முதலீட்டாளர்களின் பொன் முட்டையிடும் வாத்தாக வாழ்ந்திருக்கிறார் விஜயகாந்த். 1984 மற்றும் 1985 ஆண்டுகளில் விஜயகாந்த் தன்னுடைய புகழின் உச்சத்தில் இருந்திருக்கிறார். இரண்டே ஆண்டுகளில் முப்பத்தி ஐந்து படங்கள். யோசித்துப் பார்த்தாலே தலை கிறுகிறுக்கிறது. சராசரியாக இருபது நாட்களுக்கு ஒரு படம். அவற்றில் நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள் போன்ற ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களும் அடங்கும். தமிழ் சினிமா தன்னை முதன்முதலில் விஜயகாந்த் மூலமாகத்தான் முப்பரிமாணத்தில் வெளிக்காட்டிக்கொண்டது. திரைப்படம்: அன்னை பூமி. 1984-ம் வருடம் பதினெட்டு படங்களில் நடித்து உச்சத்தில் இருந்தார். அதில் சில… சுந்தர்ராஜன் இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாள், மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள் மற்றும் ஆபாவாணன் எழுதி தயாரித்த ஊமை விழிகள். 1984ல் மதுரை சூரன் முதல் ஜனவரி 1 படம் வரை 18 படங்களும் 1985ம் ஆண்டில் மட்டும் அலை ஓசை முதல் நானே ராஜா நானே மந்திரி வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார். வேறு எந்த ஹீரோவும் செய்யாத சாதனை இது. விஜயகாந்த் வில்லனாக நடித்த ஒரே படம் இனிக்கும் இளமை.

அந்த சமயத்தில் நடந்த ஒரு பட விழாவில் தான் கலைஞர் முன்னிலையில் புரட்சிக்கலைஞர் என்ற பட்டம் விஜயகாந்துக்கு சூட்டப்பட்டது. சூட்டியவர் கலைப்புலி தாணு.

நிறைய துணை நடிகர்களை தன்னுடன் சேர்த்து வளர்த்துவிட்டிருக்கிறார் விஜயகாந்த். ஆனந்த் ராஜ், அருண் பாண்டியன் (என்கிற துரோகி), மன்சூர் அலிகான் போன்றவர்களை நிறைய விஜயகாந்த் படங்களில் பார்க்கலாம். போலவே விஜய்யுடன் செந்தூரப்பாண்டி, சரத்குமாருடன் கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களில் நடித்து அவர்களை ஆரம்பகாலத்தில் உயர்த்தி விட்டிருக்கிறார். இதனை விஜய்யே பல மேடைகளில் ஒப்புக்கொண்டுள்ளார். அந்தந்த காலக்கட்டங்களில் திரைப்பட கல்லூரி மாணவர்களின் திறமைகளை தட்டிக் கொடுத்து தானும் வெற்றிக் கண்டவர் நம்ம கேப்டன். அப்படி வெளிவந்த படங்களில் முக்கியமான படங்கள் செந்தூரப்பூவே மற்றும் ஊமை விழிகள்.

விஜயகாந்தின் நண்பர் அ.செ.இப்றாஹீம் ராவுத்தர், பால்ய பருவத்திலிருந்தே நண்பர் (இப்போது இல்லை). வேற்றுமொழிப்படங்களே நடிக்கக்கூடாது என்ற கொள்கையோடு இருந்த விஜயகாந்த் அவருக்காக மே டே என்னும் ஆங்கிலப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு பூஜையும் போடப்பட்டது. அசம்பாவிதமாக அதுவும் வெளிவரவில்லையாம். 

புகழின் உச்சியில் இருந்தபோதும் மற்ற மொழிப் படங்களில் நடிக்க சம்மதிக்காத விஜயகாந்த் ஒரு ஹிந்தி படத்தில் நடித்துள்ளார், அது 1975ல் வெளிவந்த Zakhmee. படத்தைப் பற்றிய செய்திகள் இணையத்தில் எங்கும் கிடைக்கப்பெறவில்லை. விஜயகாந்த் நடித்த படங்களில் முக்கியமான படம் சின்ன கவுண்டர். 1992ல் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டு ஓடியது. சின்ன கவுண்டரை பார்த்த ரஜினி, உதயகுமாரை அணுகி அதுபோன்றதொரு படம் தனக்கு வேண்டும் என்று வேண்டி விரும்பிக்கேட்டு வெளிவந்தது தான் எஜமான். 

நடனம் ஆடுவதிலும் தலைவர் கில்லி. இதை ஏனோ பல இயக்குனர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. பரதன் படத்தில் வரும் புன்னகையில் மின்சாரம், மாநகர காவல் படத்தில் வரும் வண்டிக்காரன்  சொந்த ஊரு மதுரை இவரது நடனத்திறமையை வெளிக்கொண்டு வந்த பாடல்கள்.

விஜயகாந்த்துடைய கால்கள் உதைத்து பழக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவருடைய கைகள் கொடுத்து பழக்கப்பட்டவை. பொன்மனச் செம்மலை பார்த்து வளர்ந்த அவருக்கும் அந்த குணம் இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் அவருடைய அலுவலகத்தில் குறைந்தது நூறு பேராவது சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். (விஜயகாந்த் ஆபீசுல எப்போ கறிசோறு போடுறாங்க என்பதை டைரியில் குறித்து வைத்திருக்கும் அன்னவெறி கண்ணையனை நினைவுகூரவும்).

தமிழ் சினிமாவில் துரிதமாக நூறாவது பட இலக்கை எட்டியவர்களில் ஒருவர் விஜயகாந்த். அவருடைய நூறாவது படம் கேப்டன் பிரபாகரன். பல எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் படத்திற்கு அப்பெயரை சூட்டினார். படம் இமாலய வெற்றி. அன்றிலிருந்து புரட்சிக்கலைஞருடன் கேப்டன் என்கிற புனைப்பெயரும் இணைந்துக்கொண்டது. கேப்டன் பிரபாகரன் என்பது சமகாலத்தில் சிலர் செய்வது போல வணிக நோக்கத்திற்காக சூட்டிய பெயரல்ல. FYI, விஜயகாந்த்துடைய மூத்த மகனின் பெயர் விஜய பிரபாகரன் !

விஜயகாந்த்தின் அரசியல் நிலைப்பாட்டின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் மற்றவர்களைப் போல வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்என்று சொல்லி யாரையும் ஏமாற்றவில்லை. இதுவரை, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களில், இவர் மட்டும் தான் எடுத்த எடுப்பிலேயே கட்சி ஆரம்பித்தவர். மற்றவர்கள் எல்லாம், ஏதேனும் ஒரு பெரிய கட்சியில் இருந்து பின் பிரிந்து கட்சி ஆரம்பித்தவர்கள். தன்னுடைய படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டால் உடனே பம்மிக்கொண்டு ஓடி ஒளியும் கோழையும் அல்ல. ச்சும்மா Time to Lead என்று கேப்ஷன் போட்டாலே துரத்தியடிக்கும் கேவலமான அரசியல் சூழல் கொண்ட தமிழகத்தில், கட்சி துவங்கி, சில தேர்தல்களை சந்தித்து, எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்திருக்கும் அவருடைய துணிச்சல், தன்னம்பிக்கை சர்வநிச்சயமாக பாராட்டுக்குரியது தான் ! ஆங் !

ஓவியம்: விஜய்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 May 2013

சூது கவ்வும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமா விழித்துக்கொண்டதாக தோன்றுகிறது. ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைப்பது எப்படியென்று தெளிவாக புரிந்துக்கொண்டார்கள். குறிப்பாக இளைஞர்கள். மூன்று மீடியம் பட்ஜெட் படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் கூட சூது கவ்வும் ரசிகர்களை கவ்வியிருக்கிறது, என்னையும் சேர்த்து.

அரைகுறை கிட்னாப் ஆசாமி விஜய் சேதுபதி. சூழ்நிலை காரணமாக அவருடன் இணையும் மூன்று இளைஞர்கள். ஒரு கட்டத்தில் அமைச்சரின் மகனை கடத்த வேண்டியிருக்கிறது. அந்த கடத்தலை மையமிட்டு கதை நகர்கிறது.

நயன்தாராவுக்கு கோவில் கட்டிய வாலிபர் என்கிற சுமாரான நகைச்சுவை காட்சியுடன் தான் படம் துவங்குகிறது. அதன்பிறகும் கூட ஒரு மாதிரியான தொய்வாகவே ஆங்காங்கே சிரிக்க வைக்கும் வசனங்களுடன் படம் ஓடிக்கொண்டிருந்தது. கடைசி வரைக்கும் கூட பரபரப்பு இல்லை. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பிடித்திருக்கிறது. படத்தின் பலம், பலவீனம் இரண்டுமே மிதவேக திரைக்கதை தான். நிஜவாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாக எதுவும் நடைபெறுவதில்லை. அதுபோல தான் சூது கவ்வும். கதையின் ஓட்டத்திற்கு நேரடியாக தொடர்பில்லாத அல்லது தேவையில்லாத இடங்களில் நீளமான காட்சிகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன. கதைக்கு தேவைப்படாத சின்னச் சின்ன டீடெயிலிங் மூலம் சுவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கின்றனர். அது சில இடங்களில் மொக்கை தட்டினாலும் சரியாகவே கை கொடுத்திருக்கிறது. அட்டகத்தி, நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் போன்ற படங்களோடு சூது கவ்வும் படத்தை ஒப்பிடலாம். முந்தய இரண்டினை ரசித்தவர்கள் இதையும் ரசிக்கலாம். மற்றவர்கள் தவிர்க்கலாம்.

குறும்பட இயக்குனர்களின் செல்லப்பிள்ளை விஜய் சேதுபதிக்கு மைடாஸ் டச். படத்தில் அவருடைய தோற்றம் நாற்பது வயதுக்காரருடையது என்று சினிமா செய்திகளில் படிக்காமல் இருந்திருந்தால் தெரிந்திருக்காது. இளநரை தோன்றியவர்களெல்லாம் நாற்பது+ ஆகிவிட முடியுமா ? நாயகத்தனத்தை காட்டாமல் காட்டும் வேடம் விஜய் சேதுபதியுடையது. அவர் இனிவரும் படங்களில் ஆக்குசன் வழிமுறையை மட்டும் பின்பற்றிவிடக் கூடாது.

கதாநாயகி சஞ்சிதா ஷெட்டியின் மூக்கை பார்க்கும்போது அவதார் பட நாயகி நினைவுக்கு வருகிறார். ரப்பர் உதடுகள். சஞ்சிதா படுகோன் என்ற பெயரில் ஒரு நடிகையும் இதேபோல படுமொக்கையாக இருந்ததாக ஞாபகம். சஞ்சிதா என்று பெயர் வைத்தாலே அப்படித்தான் போல. நாயகி வேடத்திற்கு மகா மட்டமான தேர்வு. சஞ்சிதாவோடு ஒப்பிடும்போது காசு பணம் துட்டு மணி மணி பாடலில் ஆடும் இளம்சிட்டுக்கள் அம்புட்டும் ஜூப்பர்.

மற்ற காஸ்டிங் படத்தினுடைய பிரதான பலம். குறும்பட ஆட்களின் படங்களில் பார்த்த முகங்களாகவே தென்படுகின்றன. டாக்டர் ரவுடியாக நடித்த அருள்தாஸ் தடையறத் தாக்க படத்தின் ஒரு காட்சியில் அதகளப் படுத்தியிருப்பார். இந்த படத்தில் அவ்வளவு வெயிட்டான ரோல் இல்லையென்றாலும் கூட சின்னச் சின்ன உடல்மொழிகளில் சீரிய நடிப்பு. அடுத்ததாக சைக்கோ போலீஸ் அதிகாரியாக வரும் யோக் ஜெப்பி. இவருக்கு கடைசி வரைக்கும் வசனமே இல்லை. நாயகனுக்கு அடுத்து பலம் பொருந்திய வேடம் இவருடையது. அருமை பிரகாசமாக நடித்த கருணாகரனும், பகலவனாக நடித்த சிம்ஹாவும் நடிப்பில் மற்ற உப நடிகர்களை காட்டிலும் தனித்து தெரிகிறார்கள். அமைச்சரின் மனைவியாக நடித்திருப்பவர் அம்மா வேடங்களுக்கான புதிய கண்டுபிடிப்பு. எம்.எஸ்.பாஸ்கர் கிளாஸ்.

பாடல்கள் இசைப்பிரியர்கள் மத்தியில் ஏற்கனவே ஹிட் என்று நினைக்கிறேன். நான் முதல்முறை கேட்டதால் அதிகம் ஒட்டவில்லை. கானா பாலாவின் பாடல் மட்டும் மீண்டும் தேடிக் கேட்க தூண்டுகிறது. அந்த பாடலுக்கு பாரம்பரிய மேற்கத்திய கலவை நடனம் அட்டகாசம். வசனங்கள் பலதும் நறுக்கென்று இருக்கின்றன. ஓ மை காட் என்று பரட்டை தலையை உலுக்குவதும், டவுசர் கிழிஞ்சிருச்சு என்ற வசனமும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடையக் கூடும்.


ஆள் கடத்தலை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் படத்தில் ரத்தம், மரணம் போன்ற குரூரங்கள் இல்லாதது படத்தினுடைய சிறப்பு. இத்தனைக்கும் ஒரு குற்றவாளியை சைக்கோ போலீஸ் அதிகாரி உயிருடன் புதைக்கும் காட்சியோ மின்னணுவியல் மாணவனை மாடியில் இருந்து தலைகீழாக கீழே போடுவது கூட அவ்வளவு கொடூரமாக தோன்றவில்லை. டாம் & ஜெர்ரி கார்ட்டூனில் ஜெர்ரியுடைய மரணம் எப்படி இருக்குமோ அப்படி உறுத்தாமல் கடந்து செல்கிறது.

டிராவிட் போன்ற ஒரு விளையாட்டு வீரர் துவக்கத்திலிருந்து நிலைக்கொண்டு விளையாடி ஆட்டத்தின் முடிவில் அதிரடியாட்டம் ஆடினால் எப்படி இருக்கும் ? அப்படித்தான் இருக்கிறது சூது கவ்வும். படத்தின் இறுதியில் வரும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து, துப்பாக்கி சூடு போன்ற காட்சிகளுக்கு திரையரங்கில் எழும் சிரிப்பலை படத்தினை கரை சேர்த்துவிடும்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் நேர்மையான கடத்தல் கும்பலைப் போலவே படக்குழுவினரும் சினிமாவை புரட்டிப்போடும் பெருமுயற்சி எதுவும் எடுக்காமல் கருத்து சொல்லி உசுரை வாங்காமல் பக்காவாக ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தினை கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் நலன் குமரசாமிக்கு வாழ்த்துகள் :)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment