Showing posts with label story. Show all posts
Showing posts with label story. Show all posts

16 March 2015

கால்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இவ்வளவு போரிங்கான நாவலை இதுவரையில் நான் வாசித்ததில்லை. உண்மையில், நான் அபிலாஷுடைய ரசிகனை வாசிக்க விரும்பினேன். அதனை வாசிப்பதற்கு அவருடைய முதல் நாவல் என்கிற வகையிலும், யுவ புரஸ்கார் விருது பெற்றது என்பதாலும் கால்கள் ஒரு Pre-requisite என்று நானாகவே கருதினேன்.

மொத்தம் 550 பக்கங்கள். நிறைய எழுத்தாளர்கள் எழுத்துரு அளவை பெரிதாக வைத்தோ, வரி வெளி அதிகமாக விட்டோ அல்லது படங்களைச் சேர்த்தோ பக்கங்களை அதிகரிக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் புத்தகம் முழுக்க முழுக்க எழுத்துகளால் நிறைந்திருக்கிறது என்பது முதல்முறை புரட்டும்போதே புரிந்துவிட்டது. ஆனால் உள்ளடக்கம் தான் சற்று சிக்கலானது. நான் பொதுவாக சோகமயமான படைப்புகளை விரும்புவது கிடையாது. கால்களை பொறுத்தவரையில் சோகம் என்று சொல்ல முடியாது. ஒருவிதமான அயர்ச்சியான உணர்வு.

சில நாவல்களை எடுத்து ஐம்பது பக்கம் வரை தாண்டி ஒரு Pleasure of the Text-ம் கிடைக்கவில்லை என்கிற பட்சத்தில் அதைத் தொடர்ந்து படித்து காலத்தை விரயம் ஆக்காமல் மற்றொன்றை ஆரம்பித்தல் என்றுமே சாலச் சிறந்தது என்கிறார் பிரபு காளிதாஸ். ஒவ்வொரு முறை மூடி வைத்துவிடலாமா என்று யோசிக்கும்போதும் யுவ புரஸ்காரை நினைத்துக்கொண்டே தம் கட்டி முடித்துவிட்டேன்.

இளம் பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட மது என்கிற பருவப்பெண்ணை மையப்படுத்தி கதை நகர்கிறது. தட்டையான நாவல் என்பார்களே, அதற்கு கால்கள் ஒரு நல்ல உதாரணம். கிட்டத்தட்ட முப்பத்தி இரண்டு அத்தியாயங்கள் வரை (365 பக்கங்கள் !) நாவல் ஒரே தொனியில் பயணிக்கிறது. அதற்குப் பிறகும் கூட பெரிய வித்தியாசமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மதுவின் உணர்வுகள் தான் நாவலின் சாரம் எனும்போது அது எவ்வளவு வலிமையானதாக இருந்திருக்க வேண்டும். நாவலில், மது யாரிடமும் எந்த உணர்ச்சியையும் பெரிதாக காட்ட மறுக்கிறாள். அப்பா, அம்மா, வைத்தியர், கார்த்திக் என பல பாத்திரங்கள் வருகின்றன. அவர்களையெல்லாம் மது எந்தவித சலனமும் இல்லாமல் எதிர்கொள்கிறாள், எதிர்கொள்கிறாள், எதிர்கொண்டே இருக்கிறாள், கடைசி வரைக்கும் எந்த மாற்றமும் இல்லை. மதுவுக்கு யாரைப் பார்த்தாலும் சோர்வாக இருக்கிறது. மற்றொரு எழுத்தாளருக்கு அடிக்கடி துக்கம் தொண்டையை அடைப்பது போல மதுவுக்கு அடிக்கடி சோர்வாக இருக்கிறது. அதை படிக்கும்போது நமக்கும் சோர்வாக இருக்கிறது. வார நாளொன்றின் மதியவேளையில் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு மாதிரியான சவசவ உணர்வு ஏற்படும் அல்லவா ? அந்த உணர்வுதான் நாவல் முழுமைக்கும் கிடைக்கிறது.

ஆரம்ப அத்தியாயங்களில் மது, கார்த்திக் உரையாடல்கள் வருகின்றன. பழைய பாலச்சந்தர் படங்களில் வருவது போல ஒருமாதிரி லொட லொட. ஒரேயொரு ஆறுதல், நல்லவேளையாக மது ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கவில்லை. அப்படி பிறந்திருந்தால் அதற்கும் சேர்த்து வேறு அழுது வடிந்திருக்கும் நாவல்.

உண்மையாகவே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதையே நினைத்து வருந்திக்கொண்டோ அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை காலிபர் இல்லாமல் நடந்து கீழே விழுந்து கொண்டோவா இருக்கிறார்கள் ? அல்லது அப்படி இருந்தால் அது ஊக்குவிக்கக் கூடிய விஷயமா ? என்னைப் பொறுத்தவரையில், கால்கள் ஆப்டிமிஸ்டிக் தொனியில் எழுதப்பட்ட ஒரு பெஸ்ஸிமிஸ்டிக் நாவல்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 April 2014

ரத்தம் ஒரே நிறம் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் சுஜாதா நாவல்களை விரும்பி வாசிக்கிறேன் என்பதையும், ரத்தம் ஒரே நிறம் படித்ததில்லை என்பதையும் தெரிந்துகொண்ட நண்பர் செந்தில்குமார் (ஆரூர் மூனா அல்ல !) அந்த புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். முதற்கண் நன்றி செந்தில்குமாருக்கு. அவர் அனுப்பிய சமயத்தில் தற்செயலாக சீனு ரத்தம் ஒரே நிறத்தை சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். இருக்கலாம். ஆனால் இது என்னுடைய சிலபஸ் கிடையாது. நான் கொஞ்சம் ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன், த்ரில்லர் போன்றவை வாசிக்க விரும்பும் ஆசாமி. ரத்தம் ஒரே நிறத்தின் கதைக்கரு என்னவென்று தெரிந்தபோதே எனக்கு அசுவாரஸ்யமாக ஆகிவிட்டது. புத்தகம் வேறு முன்னூறு பக்கங்களுக்கு மேல். பிறகு படிக்கலாம் என்று கிடப்பில் போட்டாயிற்று. 

புத்தகம் கையில் கிடைத்து ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் கழித்து மெதுவாக மனமுவந்து புத்தகத்தை பிரித்தேன். வடிவமைப்பை பொறுத்தவரையில் சுஜாதா புத்தகங்களில் மாஸ்டர்பீஸ் என்பதில் சந்தேகமே இல்லை. புக்மார்க் தான் கொஞ்சம் நைந்து போயிருந்தது. எனக்கெல்லாம் சரித்திர கதை என்றாலே மன்னர் கால கதை என்றுதான் எண்ணம். சுஜாதா அவ்வளவு தூரம் செல்லவில்லை. 1857ம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற சிப்பாய் கலகத்தை அடிப்படையாக கொண்டு அதனோடு ஒரு தமிழ் சினிமா பாணி பழி வாங்கல் கதையையும் சேர்த்து எழுதியிருக்கிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில், ஆலப்பாக்கத்தில் வசிக்கும் முத்துக்குமரன் என்பவனுடைய தந்தையை ஆங்கிலேய லெப்டினன்ட் எட்வர்ட் மக்கின்ஸி என்பவன் கொன்றுவிடுகிறான். முத்துக்குமரன் மக்கின்ஸியை பழி வாங்கத் திட்டமிடுகிறான். அங்கிருந்து கதை துவங்குகிறது. ஒரு பெண் ஒரு நல்மனம் படைத்த ஆண் மீது காதல் வயப்படுகிறாள். ஆனால் அசம்பாவிதமாக அவளுடைய உடலை விரும்பும் ஒருவனுக்கு மனைவியாக்கப்படுகிறாள். இதையே இரண்டாக பெருக்கிக்கொள்ளுங்கள். ஒன்றுமில்லை, முத்துக்குமரன் – பூஞ்சோலை – ராக்கன், ஆஷ்லி – எமிலி – மக்கின்ஸி இரு முக்கோண காதல்களும் ஒரே மாதிரியாகவே பயணிக்கிறது. பதினெட்டு அத்தியாயங்கள் வரை இவர்களுடைய காதல் கதைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

அதன்பிறகு சிப்பாய் கலகத்திற்குள் மெதுவாக நுழைகிறது கதை. அதாகப்பட்ட சிப்பாய்க் கலகம் என்பது என்னவென்றால் ஆங்கிலேயர்களின் என்ஃபீல்டு ரக துப்பாக்கியில் பன்றி கொழுப்பை பயன்படுத்தினார்கள். இதனை உபயோகிக்கும் பொருட்டு கடிக்க வேண்டும் போல தெரிகிறது. இயல்பில் புலால் மறுக்கும் பிராமண சிப்பாய்களும், பன்றி இறைச்சி உட்கொள்வதை பாவமாக நினைக்கும் இஸ்லாமிய சிப்பாய்களும் எதிர்க்கிறார்கள். அதாவது பன்றி கொழுப்பை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக புரட்சி செய்கிறார்கள். சிப்பாய்க் கலகத்தில் வட இந்தியர்களே கணிசமான அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் ஒரு தமிழன் பங்கேற்றால் எப்படி இருந்திருக்கும் என்ற கண்ணோட்டம் நாவலின் ஒரு சிறப்பு.

ஒரு கதை அல்லது நாவலை படிக்கும்போது அதன் கதை மாந்தர்களுக்கென ஒரு உருவத்தை நம் மனம் தானாகவே வரைந்துகொள்ளும் இல்லையா...? முத்துக்குமரன் என்ற கதையின் நாயகன் பெயரை படித்ததும் சட்டென ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமரன் கண்களில் தெரிகிறார். அடுத்து எமிலி. சந்தேகமே இல்லாமல் எமி ஜாக்சனை நினைவூட்டுகிறார். சில காட்சிகள் மதராஸபட்டினத்தை நினைவூட்டுகிறது. பைராகி ஏனோ பிரேமானந்தாவாக தெரிகிறார். 

நிறைய இடங்களில் ஒரு தேர்ந்த மசாலா சினிமாவைப் போல செல்கிறது ரத்தம் ஒரே நிறம். கதையின் நாயகன் இரண்டு முறை சாவின் விளிம்பு வரை சென்று தப்பித்துவிடுகிறான். நம்பமுடியாத செயல்களை எல்லாம் செய்கிறான். பூஞ்சோலை ஆண் வேடமணிகிறாள். பைராகி என்கிற சித்தர் கதாபாத்திரம் வேறு.

ஏராளமாக உழைத்திருக்கிறார் சுஜாதா. கூகுள் பரிட்சயமில்லாத கால கட்டத்திலேயே நிறைய தகவல்களை திரட்டி எழுதியிருக்கிறார். படிக்கும்போது சாதாரணமாக தெரியக்கூடிய ஒரு பத்தியை எழுதுவதற்கு கூட நிறைய உழைப்பை செலவிட்டிருக்கிறார். முட்டை நடனம் என்ற ஒன்றை கூத்து கலைஞர்கள் செய்வதாய் ஒரு அத்தியாயத்தில் வருகிறது. அது பற்றிய விவரணையாக ஆங்கில புத்தகம் ஒன்றின் பெயரை கடைசி பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

செந்தில் குமார் எனக்கு அனுப்பி வைத்த பிரதியின் முதல் பக்கத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார். ஒருவர் நமக்கு பரிசளித்த பொருளை நாம் மற்றவருக்கு பரிசளிப்பது சரியாக இருக்காது. இருப்பினும் இந்த புத்தகம் ஒரு தவறான கைகளுக்கு கிடைத்திருப்பதில் எனக்கு வருத்தம் உள்ளது. இந்த நாவலை என்னிடமிருந்து இரவலாக பெற்று யாரேனும் படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.

ரத்தம் ஒரே நிறம்
சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
342 பக்கங்கள்
ரூ.260

என்றும் அன்புடன், 
N.R.PRABHAKARAN

Post Comment

31 March 2014

ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும் - ஆடியோ போஸ்ட்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஆடியோ போஸ்ட் வெளியிட வேண்டுமென்பது என்னுடைய நீண்டநாள் அவா. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை முயற்சி செய்தேன். தோல்வி. மொத்தம் நூற்றி எழுபத்தைந்து முறை அந்த ஆடியோ கேட்கப்பட்டிருப்பதாக தரவு சொல்கிறது. அதில் நானே ஐம்பது முறை கேட்டிருப்பேன். எத்தனை பேர் முழுவதுமாக கேட்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதற்குப் பிறகு ஆடியோ முயற்சி ஏதும் செய்யவில்லை.

ஆடியோ போஸ்ட் வெளியிடுவதில் நிறைய சிரமங்கள் உள்ளன. முக்கியமானது இரைச்சல். நள்ளிரவில் அறையில் மின்விசிறியை எல்லாம் கூட நிறுத்திவிட்டு பதிவு செய்ய தயாரானேன். சி.பி.யூவிலிருந்து ஒரு சத்தம், கடிகாரம் டிக் டிக் என்று அடிக்கிறது. ‘நிசப்தத்தை’ புறக்கணித்துவிட முடியாத இடத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். கடிகாரத்தை நிறுத்தியிருந்தால் இன்னும் கூட சத்தம் குறைந்திருக்கும். அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாமென விட்டுவிட்டேன். அடுத்தது குரல். சென்ற முறை பதிவிட்டபோது வாய்ஸ் சர்பத் சாப்பிட்டு பேசியது போல இருக்கிறது என்று சிலர் சொன்னார்கள். என்னுடையது இயல்பிலேயே அப்படித்தான். சாதாரணமாக பேசும்போது பிரச்சனையில்லை. ஏதாவது திட்டமிட்டு பேசினால் நாக்கு குழறும். ஒவ்வொரு பத்தியாக பதிவு செய்து அடோசிட்டியில் ஒன்று சேர்த்திருக்கிறேன்.

இரண்டு நிமிடங்களுக்குள் முடிக்க விரும்பினேன். ஆனால் அநியாயத்துக்கு ஐந்தரை நிமிடங்கள் வரை நீண்டுவிட்டது. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...!



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 March 2014

மரப்பல்லி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அனுபவம் #1
இந்த காலத்து பசங்க குமுதம், ஆனந்த விகடன் தாண்டி எதையும் படிப்பதில்லை என்று அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வார் ஒரு பெரியவர். தீவிர இலக்கியமில்லை’ன்னாலும் வாமு கோமு வரைக்குமாவது படிங்கப்பா என்று ஒருநாள் புலம்பினார். அவருடைய கூற்றைக் கொண்டு நவீன இலக்கியத்திற்கான வாசல்படி வாமு கோமு என்று நானாகவே புரிந்துகொண்டேன். அப்போது அவருடைய 'எட்றா வண்டியை' என்ற புத்தகம் இணையத்தில் பிரசித்தி பெற்றிருந்தது. அதிலிருந்தே துவங்கலாம் என்று முடிவெடுத்து டிஸ்கவரி புக் பேலஸை புரட்டியபோது எனக்கு அது கிடைக்கவில்லை. 'நாவலல்ல கொண்டாட்டம்' என்ற புத்தகம் கையில் கிடைத்தது. வாங்கிக்கொண்டேன்.  அந்தமான் சென்றபோது கப்பல் பயணத்தில் அந்த புத்தகத்தை பிரித்தேன். தொடர்வதற்கு முன்பு ஒன்றை சொல்லி விடுகிறேன், நான் சுஜாதா நாவல்கள், கிழக்கு வெளியீடுகள் போன்றவற்றை மட்டும் படிக்கும் லைட் ரீடிங் ஆசாமி. ஒரேயொரு முறை எ.பேன்சி பனியனும் படித்துவிட்டு பேயறை வாங்கியவன். அப்படிப்பட்ட நான் கொண்டாட்டத்தை படித்திருக்கக்கூடாது. பெக்குக்கு ஒரு பிராண்ட் மாற்றி அடித்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒன்றிற்கு ஒன்று தொடர்பில்லாமல் இருந்தன அதன் அத்தியாயங்கள். ஒருவேளை பின்நவீனத்துவம் என்றாலே இப்படித்தான் இருக்குமோ என்று வெறுப்புற்றேன். அதன்பிறகு நான் என் பாணி வாசிப்பிற்கு திரும்பிவிட்டேன்.

அனுபவம் #2
புத்தகக்காட்சி உயிர்மை அரங்கில் அனு, அக்கா, ஆண்ட்டி, ஆயா மாதிரி வயது வேறுபாட்டுடன் ஒரு பெண்கள் குழு புடவைக்கடை நினைப்பிலோ என்னவோ புத்தகங்களை புரட்டிப்போட்டு எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள். நான் கூட என்னவோ சமையல் குறிப்பு புத்தகத்தை தேடுகிறார்களோ ? அதெல்லாம் இங்க கிடைக்காது’ன்னு எடுத்துச் சொல்லலாமா என்று நினைத்தேன். அதற்குள் அந்த அக்கா வாமு கோமுவின் ஒரு புத்தகத்தை எடுத்து ஆண்ட்டியிடம் காட்டினார். ஆண்ட்டி அதன் முகப்பை பார்த்துவிட்டு, ‘வாமு கோமுவா ? அவருது எல்லாம் ஒன்னுபோல இருக்கும்...’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

இரு மோசமான அனுபவங்களையும் தாண்டி வாமு கோமுவின் புத்தகங்களை படிக்க வேண்டுமென ஒரு ஆர்வம் ஏனோ என்னிடம் மிச்சமிருந்தது. இருக்கவே இருக்கிறார் ஆபத்பாந்தவன் ஆரூர் மூனா. புத்தகக்காட்சியில் வாமு கோமுவின் ஐந்து புத்தகங்களை வாங்கியிருக்கிறார். முதற்கட்டமாக அதிலிருந்து மரப்பல்லியை உருவி வந்தேன். லெஸ்பியன் உறவு சம்பந்தப்பட்ட கதை என்று கேள்விப்பட்டதால் அதற்கு முன்னுரிமை.

அட்டகாசமாக ஹார்ட் பவுண்ட் செய்யப்பட்டு, புக்மார்க் எல்லாம் வைக்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. உண்மையில் மரப்பல்லிக்கு அவை தேவையில்லை. மொத்தம் நூற்றி ஐம்பது பக்கங்கள் மட்டுமே. எழுத்துக்கூட்டி படித்தால் கூட சில மணிநேரங்களில் முடித்துவிடலாம். அப்புறம் ஏன் புக்மார்க் ?

வாமு கோமுவைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் என்று யாராவது எழுதினால் மறக்காமல் ‘பாலியல் எழுத்தாளர் என்று விமர்சிக்கப்படும்’ என்ற அடைமொழியை சேர்த்துவிடுகிறார்கள். அவ்வாறு அடைமொழி கொடுத்துவிடுவதால் அவரை பாலியல் எழுத்தாளர் என்று விமர்சிப்பது தவறான கருத்து என்று நிறுவ முனைகிறார்கள். 

நான் படித்த பிரதியின் உரிமையாளர் உப்புநாய்களை பற்றி எழுதும்போது சேர்த்துக்கொண்ட வரிகள் :-
காமம் கலந்து நாசூக்காகவும் கிளர்ச்சியாகவும் எழுதுவது வேறு. சரோஜாதேவி டைப் புத்தகங்களை தாண்டும் அளவுக்கு வக்கிரம் புடித்து எழுதுவது வேறு. அரைகுறை எழுத்தாளர்கள் வாமுகோமுவைப் பார்த்து எப்படி பட்டும்படாமலும் எழுதுவதை என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.

புத்தகத்தை படித்து முடித்ததும் எனக்கு மேற்கண்ட வரிகள் நினைவுக்கு வந்தன. உண்மையைச் சொன்னால் எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. 

ஆறாவது அத்தியாய முடிவிலிருந்து சில வரிகள்:
மணிபாரதியின் கீழ் உதட்டை சப்பி எடுத்தவளை அப்படியே கட்டிக்கொண்டு தூக்கியபடி படுக்கையறைக்கு நுழைந்தான். நாமெல்லாம் காத்தாடி சுத்துவதை உன்னிப்பாக கவனிக்கிறோம். காத்தாடியை காட்டிய கேமரா கீழே இறங்கி படுக்கையில் கிடக்கும் ஜோடியை காட்டுமா என்று ஆவலுடன் இருக்கிறோம்.

ஒருவேளை ஆரூர் மூனா இதுபோன்ற வரிகள் எதையாவது படித்துவிட்டு அடடா பச்சையாக எல்லாவற்றையும் விவரிக்காமல் காட்சியை கட் செய்திருக்கிறார் என்று நினைத்திருக்கக்கூடும். அப்படி நினைத்திருந்தால் அவருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

கொச்சையான வார்த்தைகள் பயன்படுத்தி எழுதுவது ஒருவகை, கொச்சையான கதையம்சம் வைத்து எழுதுவது இன்னொரு வகை. வாமு கோமுவுடையது இரண்டாவது.

பி-கிரேடு படங்கள் பார்த்திருக்கிறீர்களா ? பெரும்பலான பி-கிரேடு படங்கள் ஒரு நாயகன் – மூன்று நாயகிகள் என்ற கோட்பாட்டை தழுவி எடுக்கப்பட்டிருக்கும். ஒரே நாயகியை காட்டிக்கொண்டிருந்தால் போரடிக்கும் என்பதால் மாற்றி மாற்றி சீன் காட்டுவார்கள். சமீபத்தில் அசைவம் என்ற பி-கிரேடு படம் பார்க்க கிடைத்தது. அதன் பிரதான நாயகி செம ஃபிகர். கதை இதுதான். நாயகன் நாயகியை ஏதோ ஒரு காரணத்திற்காக திட்டமிட்டு திருமணம் செய்துகொள்கிறான். அதன்பிறகு ஒரு வல்லிய சந்தர்ப்பத்தில் நாயகியின் தங்கையை அனுபவிக்கிறான். ஒரு கட்டத்தில் நாயகியின் அம்மாவையும் பலவந்தப்படுத்தி அனுபவிக்கிறான். கடைசியில் எல்லோரும் எல்லாரையும் பழி வாங்கிக்கொண்டு சாகிறார்கள். 

கிட்டத்தட்ட அதே பாணி கதைதான் மரப்பல்லி. மணிபாரதி என்பவன் நாயகன். அவனுடைய மனைவி இறந்துவிட்டாள். அவனுக்கு பக்கத்து வீட்டில் கணவனிடம் சுகம் கிடைக்காமல் தாய் வீட்டில் வந்து அண்டியிருக்கும் ஒருத்தி, அவளுடைய திருமணமாகாத தங்கை, மணிபாரதியின் மகளுடைய ‘கணவனை பிரிந்து வாழும்’ டீச்சர். மாறி மாறி பிட்டுக்கள். இடையே ஒரு லெஸ்பியன் பிட்டு. அவ்வளவுதான் மரப்பல்லி.

அசைவமாக எழுதுவதோ அதை வாசிப்பதோ எனக்கு பிரச்சனை இல்லை. உண்மையில் நான் அதனை விரும்புகிறேன். ஆனால் இந்த புத்தகத்தில் மனித உணர்வுகள், குறிப்பாக பெண்ணின் உணர்வுகள் படுகேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதே என் வருத்தம். போதாத குறைக்கு ஓரினச்சேர்க்கையை பற்றி எந்தவித புரிந்துகொள்ளுணர்வும் இல்லாமல், மறைமுகமாக அதனை எதிர்த்தும் எழுதியிருக்கிறார் வாமு கோமு. ஒருபால் உறவெல்லாம் பேத்தல். பெண்களுக்கு சுகம் வேண்டுமென்றால் at last ஒரு ஆணிடம் தான் பெண் வரவேண்டும் என்று சொல்கிறார். மரப்பல்லியை படித்தால் ஏதோ ஊரில் உள்ளவர்கள் எல்லாரும் ஓழுக்காக மட்டுமே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக கடைசி சில அத்தியாயங்கள் வக்கிரம். ப்ரியா மனிபாரதியை பிறந்ததிலிருந்து அண்ணா என்றே அழைத்திருக்கிறாள். திடீரென ஒரு சமயத்தில் மணிபாரதி ப்ரியாவை கட்டிப்பிடித்து, உதட்டை கடித்து, பின்புறத்தை பிசைந்ததும் ப்ரியா ஒத்துழைக்கிறாள்.

மரப்பல்லி இனத்தில் ஒருபால் உணர்வு உண்டு என்பதால் குறிப்பாக அப்பெயர் சூட்டியதாக திலீபன் எழுதியிருக்கிறார், எனக்கு வேறு மாதிரியான அர்த்தம் தோன்றுகிறது. ஒருபால் உறவு என்பது மரத்தால் செய்யப்பட்ட உயிரற்ற பல்லியை போன்றது என்று அர்த்தத்தில் எழுதியிருப்பதாக தோன்றுகிறது. 

நல்ல விஷயங்கள் என்று சொல்வதானால், வாமு கோமுவின் வட்டார பேச்சு வழக்கில் உள்ள எழுத்து நடை. அதில் அவர் ஸ்பெஷலிஸ்ட் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மைதான். ஐந்தாவது அத்தியாயத்தில் ஆண்களால் பாதிக்கப்பட்ட ப்ரியா தன்னுடைய காதலி ஜெனிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். க்ளாஸ். பேசாமல் அதை மட்டும் ஒரு சிறுகதையாகவோ அல்லது அதனை மையக்கருவாக வைத்து ஒரு நாவலோ எழுதியிருந்தால் பிரமாதம் என்றிருக்கலாம்.

மரப்பல்லி
வா.மு.கோமு
எதிர் வெளியீடு
160 பக்கங்கள்
ரூ.150

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 November 2013

இரண்டாம் உலகம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

செல்வராகவன் படம் என்பதைத் தவிர இரண்டாம் உலகம் பார்க்க வேறேதும் காரணங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன். இல்லையென்றாலும் ஃபேண்டஸி வகையறா என்பதாலும் எக்கச்சக்க எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். படத்தின் ட்ரைலர் அப்படியொன்றும் ஈர்க்கவில்லை. ஆனாலும் முன்கூறிய இரண்டு காரணிகளால் பார்த்தே ஆகவேண்டிய நிலை.

படத்தின் கதை வழவழ கொழகொழ ரகம். சில இடியாப்ப சிக்கல்களை வாசகர்கள் நலன் கருதி தவிர்த்துவிட்டு சொல்வதென்றால், உலகம் போலவே ஒரு கிரகம். இரண்டாம் உலகம் என்று வைத்துக்கொள்வோம். அது காதலில்லா உலகம். அங்கே பெண்கள் மதிக்கப்படுவதில்லை. காதலில்லா, பெண்களை மதிக்காத உலகம் எப்படி பிழைக்கும்...? அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. அதனை காப்பாற்ற ஒரு வீரன் தேவை. காதல் தேவை. வீரன் ஆர்யா இருக்கிறார். காதல்...? காதலை கற்றுக்கொடுக்க பூமியிலிருந்து ஒரு ஆர்யா அங்கே அனுப்பி வைக்கப்படுகிறார். இரண்டாம் உலகம் காப்பாற்றப்படுகிறது. இவ்வுலகம் மட்டுமல்ல, எவ்வுலகம் ஆனாலும் காதலில்லாமல் இயங்க முடியாது என்ற கருத்தோடு படம் நிறைவடைகிறது.

உலகம், இரண்டாம் உலகம் குறித்த காட்சிகள் இணையொத்து காண்பிக்கப்படுகின்றன. உலகத்தில் அனுஷ்கா ஆர்யாவை மணந்துகொள்ள விரும்புகிறார். பின்பு ஆர்யாவும். சிலகால ஊடலுக்குப் பிறகு இருவரும் காதலிக்க துவங்குகின்றனர். எதிர்பாரா விபத்தொன்றில் அனுஷ்கா இறந்துவிடுகிறார்.

செல்வராகவனுக்கென்று சில தனிக்கூறுகள் இருக்கின்றன. பெண்களின் காதல் சார்ந்த உணர்வுகளை செல்வராகவனைப் போல யாராலும் அவ்வளவு கச்சிதமாக காட்டிவிட முடியாது. முதலில் மறுப்பது. பின்னர் உணர்வுகள் மெல்ல தலை தூக்குவது, இருப்பினும் சூழ்நிலை கருதி மறுக்க முயல்வது, மறுக்க முடியாமல் தவிப்பது, இறுதியாக கட்டுப்படுத்த முடியாமல் உணர்வு பிரவாகம் எடுப்பது போன்ற காட்சிகளை அவருடைய முந்தைய படங்களான 7G ரெயின்போ காலனி, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன...? ஆகியவற்றில் பார்த்திருக்கலாம். இம்முறை தான் சிறந்து விளங்கும் மேற்கண்ட பரப்பிலேயே செல்வராகவன் படுமோசமான தோல்வியுற்றிருக்கிறார். ஆர்யா – அனுஷ்கா காதல் காட்சிகள் ஏதோ மூன்றாம் தர மசாலா பட சாயலில் அமைந்துள்ளன. குறிப்பாக கோவா மெடிக்கல் ட்ரிப் காட்சிகள் அபத்தத்தின் உச்சக்கட்டம். ஒருவேளை, அபத்தமான நகைச்சுவை படங்களை ரசிக்கும் தமிழ் ரசிகர்களை பகடி செய்யும் நோக்கத்தோடு செல்வா இப்படியெல்லாம் காட்சி அமைத்திருக்கக்கூடும். அனுஷ்கா ஏதோ வந்தா மலை போனா மசுரு என்கிற ரீதியில் ஆர்யாவை காதலிப்பதாக தோன்றுகிறது.


மற்றொரு உலகத்தில், ஆர்யா அனுஷ்காவை விரும்புகிறார். அனுஷ்கா யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை. அதனால் ஆர்யாவை வெறுக்கிறார். இருப்பினும் சூழ்நிலை காரணமாக இருவரும் மணந்துக்கொள்கின்றனர்.

இரண்டாம் உலகத்தில் காதலே இல்லை என்கிறார்கள். ஆனால் ஆர்யா மட்டும் அனுஷ்காவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். இ.உலகம் குறித்த காட்சிகள் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டுள்ளன. துணை நடிக / நடிகைகளை எல்லாம் பட்டாளத்தோடு ஜார்ஜியா அழைத்துச் செல்ல முடியாது என்பதால் அங்குள்ள ஜூனியர் ஆர்டிஸ்ட்களை நடிக்க வைத்து, அவர்கள் தமிழ் பேசுவது போல காட்டியிருக்கிறார்கள். அது என்னவென்றால், ஏதோ பென் ஹர் காலத்து ஆங்கில படத்தை தமிழில் டப் செய்தது போலிருக்கிறது. போதாத குறைக்கு பிரதான வேடம் ஒன்றில் அயல்நாட்டு சுமார் மூஞ்சி பெண் நடித்திருக்கிறார். அங்கேயும் ஒரு மதுக்கூடம் இருக்கிறது. அதிலும் அடிடா, வெட்டுறா ரீதியில் ஒரு காதல் தோல்வி குத்துப்பாடல் இருக்கிறது. ஃபேண்டஸி படங்களில் இப்படியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது என்றாலும் எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. தவிர, எல்லை மீறல்கள் இருப்பினும் ரசிக்கின்ற வகையில் இருந்திருக்க வேண்டும்.

ஆர்யாவை பார்க்கும்போது 7G ரவிகிருஷ்ணா நினைவுக்கு வருகிறார். அனுஷ்காவை பார்க்கும்போதெல்லாம் ஈ’யென்று இளிக்கிறார். இ.உலகத்து ஆர்யா வாட்ட சாட்டமாக நியாண்டர்தால் மனிதர் போல இருக்கிறார். அனுஷ்காவின் ஆளுமை படத்திற்கு மிகப்பெரிய பலம். தெலுங்கு டப்பிங்கில் அனுஷ்கா தான் முன்னிலைபடுத்தப் படுகிறார். அனுஷ்கா அவருடைய கேரியரின் இறுதிப்பகுதியை நெருங்குவதாக அவருடைய தொப்பை ஜோசியம் சொல்கிறது.

சில பாடல்கள் படம் வெளிவருவதற்கு முன்பே ஹிட் என்றாலும் படத்தோடு பார்க்கும்போது ரசிக்க முடியவில்லை. படத்தில் முக்கியமான காட்சிகள் வரும்போதெல்லாம் ஒரு இசையை பயன்படுத்தியிருக்கிறார் அனிருத். அதை கேட்டதும் ரசிகர்களின் நரம்பெல்லாம் புடைத்துக்கொள்ளும் என்று நினைத்திருப்பார் போல.

மொத்தத்தில் படத்தில் உருப்படியான விஷயங்கள் என்று பார்த்தால், விஷுவல் விருந்து என்ற சொல்லக்கூடிய ஆர்யா – சிங்கம் சண்டைக்காட்சி, அனுஷ்கா, காதலில்லாமல் உலகமில்லை என்கிற கதைக்கரு. அவ்வளவுதான்.

செல்வராகவனின் தீவிர விசிறிகள், அவரது நலம்விரும்பிகள் வேண்டுமானால் தங்களது மன திருப்திக்காக இரண்டாம் உலகம் பார்க்கலாம். மற்றவர்களுக்கு திரையரங்கில் பார்க்கக்கூடிய அளவிற்கு படம் வொர்த் கிடையாது. பிரச்சனை என்னவென்றால் இரண்டாம் உலகத்தை ஆதரிக்காத பட்சத்தில் தமிழ் சினிமாவில் மீண்டுமொரு ஃபேண்டஸி படத்தினை இயக்க யாரும் தைரியமாக முன்வர மாட்டார்கள். ஆமாம், ஒரு மோசமான ஃபேண்டஸி படத்தினை கொடுத்து தமிழில் ஃபேண்டஸி படங்களுக்கு கனகச்சிதமாக ஒரு முட்டுக்கட்டையை போட்டுவிட்டார் செல்வராகவன்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 November 2013

ஆரம்பம்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஆரம்பம் ட்ரைலர் பார்க்கும்போதே படம் மொக்கையா இருக்கும் போல பொறி தட்டியது. ஒண்ணுமில்லை, அஜித்தின் முந்தய சில படங்களைப் போலவே தத்துவ குத்து வசனங்கள், டுப்பு டுப்பு’ன்னு சுடுறாங்க, ஸ்லோ மோஷனில் நடக்குறாங்க, மங்காத்தா ட்ரைலரில் அஜித் கெட்டவார்த்தையில கத்துவாரே, அதே தொனியில் Make it simple என்று கத்துகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது எனக்குள் ஒரு எச்சரிக்கை மணி பலமாகவே ஒலித்தது. இருந்தாலும் அஜித் ரசிகனா நமக்கு கடமை’ன்னு ஒன்னு இருக்கு இல்லியா ? அதுவுமில்லாமல் மனதின் ஏதோவொரு ஒரு ஓரத்தில் படம் நல்லா இருந்து தொலைத்துவிடாதா என்ற ஆசையும் இருந்தது. இனி ஆரம்பம் !

இந்திய காவல்துறையில் ATS என்றழைக்கப்படும் Anti-Terrorist Squad பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். உயிரை பணயம் வைத்து பணிபுரியக்கூடியவர்கள். அந்த குழுவில் அஜித்தும் ராணாவும் பணிபுரிகிறார்கள். ஒருமுறை தீவிரவாதிகளிடமிருந்து பணயக்கைதிகளை மீட்கும் பணியின்போது ராணா உயிரிழந்துவிடுகிறார். காரணம், அவர் அணிந்திருந்த தரக்குறைவான புல்லட் ப்ரூப் ஜாக்கெட். அஜித் அதன் பின்புலத்தை ஆராய்ந்து புல்லட் ப்ரூப் ஜாக்கெட் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதை கண்டறிகிறார். அப்புறம் ஊழலுக்கு காரணமானவர்களை பழி வாங்கி, ஊழல் பணத்தை ஸ்விஸ் வங்கியிலிருந்து ரிசர்வ் வங்கிக்கு மாற்றி, தர்மத்தை நிலைநாட்டுவதோடு படம் நிறைவடைகிறது.

To make it simple, காலம் காலமாக தமிழ் சினிமாவில் பார்த்துவரும் பழி வாங்கும் கம் அநீதிக்கு எதிராக அவதாரம் எடுக்கும் கதை தான். ஆனால் திரைக்கதையை அட்டகாசமாக செதுக்கி அமைத்திருக்கிறார்கள் என்று சிம்பிளாக எழுதிவிட எனக்கும் ஆசை தான்...! ஆனால்...

சரி, தமிழ் சினிமாவில் அடிக்கடி காணக்கிடைக்கும் சில காட்சிகளை பற்றி கொஞ்சம் பார்ப்போம் :-
1. ஒரு நேர்மையான, புத்திசாலித்தனமான போலீஸ் அதிகாரி இருப்பார். அவர் அக்யூஸ்ட் பற்றிய எல்லா விவரங்களையும் சேகரித்துக் கொண்டுபோய் அவருடைய உயரதிகாரியிடம் தெரிவிப்பார். அந்த உயரதிகாரி கேரக்டர் கண்டிப்பாக பாலிவுட்டில் இருந்து துரத்திவிடப்பட்ட ஏதாவது ஒரு வில்லன் நடிகராக இருப்பார். அவர் முகத்தைப் பார்த்ததும் அவருதான் அந்த கருப்பு ஆடு’ன்னு நமக்கே தெள்ளத்தெளிவா தெரியும்.

2. விறுவிறுப்பான கதையோட்டத்தில் ஹீரோவுக்கு மிகமிக அருகாமையில் வெற்றி நெருங்க இருக்கிற தருணத்தில் ஒரு டுவிஸ்ட் வரும். வில்லன் குரூப் ஹீரோவுக்கு நெருக்கமான யாரையாவது கடத்தி வச்சிட்டு ஹீரோவை வரச்சொல்லி மிரட்டுவாங்க. அப்போ புத்திசாலி ஹீரோ அதே பாணியில் வில்லன் தரப்பு ஆட்களை கடத்தி வில்லனுக்கு செக் வைப்பார்.

3. கிட்டத்தட்ட பாதி படம் முடிந்திருக்கும் நிலையில் ஹீரோ வில்லன் குரூப்பிடம் வசமாக சிக்கிக்கொள்வார். வில்லன் குரூப்பிடம் துப்பாக்கி இருந்தாலும் சுட மாட்டாங்க, சுட்டாலும் உயிர் போயிடுச்சா’ன்னு கன்ஃபார்ம் பண்ண மாட்டாங்க. குத்துயிரும் கொலையுயிருமா விட்டிருவாங்க. அதுக்கப்புறம் ஹீரோ உயிர்த்தெழுந்து வந்து ஹீரோ வில்லன் குரூப்பை பழி வாங்குவார்.

4. ஒரு சேஸிங் சீன் வரும். வில்லன் குரூப் ஆளுங்க ஏகே 47 மாதிரியான துப்பாக்கியை வைத்துக்கொண்டு டுப்பு டுப்பு’ன்னு சுட்டுக்கிட்டே வருவாங்க. ஆனா ஹீரோவுக்கு எதுவும் ஆகாது. என்னடான்னு பார்த்தா, ஹீரோவுக்கு பக்கத்துலயும் பெஞ்சுலயும் தான் குண்டு படுமே தவிர மேல ஒரு குண்டு பாயாது. அப்படியே தப்பித்தவறி பாஞ்சா கூட தோள்பட்டை, முட்டிக்காலுக்கு கீழே போன்ற ஹீரோ அளவில் ஆபத்தில்லாத பகுதியில் மட்டுமே படும்.

4a. அதே சேஸிங் சீன். ஹீரோ ஒரு சின்ன கை துப்பாக்கி வச்சிட்டு வண்டி ஒட்டிக்கிட்டே திரும்பி பார்த்து சுடுவாரு. அதிக பட்சம் இரண்டு அல்லது மூன்று குண்டுகள். வில்லனின் அடியாட்கள் ஒவ்வொருவராக குண்டடி பட்டு ஆட்டத்திலிருந்து விலகிக்கொள்வார்கள். சமயங்களில் ஹீரோ மிகச்சரியாக வில்லன் குரூப் காரின் பெட்ரோல் டேங்கில் சுட்டு கார் பனைமர உயரத்திற்கு பறந்து சிதறும்.

5. வில்லனுக்கு நெருக்கமா ஒரு ரிவால்வர் ரீட்டா இருப்பாங்க. வில்லனுக்கு அடிக்கடி தொட்டுக்கிட ஊறுகாய் மாதிரி. ஆனா பாருங்க, படத்தின் இரண்டாம் பாதியில் ஹீரோ கையாலோ அல்லது வில்லன் கையாலேயோ அற்பாயுசில் இறந்துவிடுவார்கள்.

6. ஹீரோ படத்துவக்கத்திலிருந்து மர்மமான முறையில் நிறைய சமூக விரோத செயல்களைச் செய்வார். அவர் கெட்டவர் என்கிற தொனியில் ஏதாவதொரு துணை கதாபாத்திரம் கேள்வியெழுப்ப, அதற்கு இன்னொரு துணை கதாபாத்திரம் அவரு யாருன்னு தெரியுமாடா என்றபடி தொடங்க காட்சிகளில் ஃப்ளாஷ்பேக் விரியும்.

6a. ஃப்ளாஷ்பேக்கில் ஹீரோ அவருடைய குடும்பம், நண்பர்கள் சகிதம் சந்தோஷமா வாழ்ந்துக்கொண்டு இருப்பார். அவர்களின் மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு உணர்த்தும்பொருட்டு ஒரு கொண்டாட்டமான பாடல் வரும். கண்டிப்பாக அந்த பாடல் முடிந்தபிறகு ஒரு ட்விஸ்ட் வரும். குடும்பத்தின் மகிழ்ச்சி சிதைய துவங்கும்.

7. க்ளைமேக்ஸ் நெருங்கி வரும் வேளையில் ஒரு கிளப் சாங் வரும். ஏதாவது ஒரு ஐட்டம் சாங் நடிகை ஆடிக்கொண்டு இருப்பார். அங்கே ஹீரோவும் குறுக்க மறுக்க நடந்துக்கொண்டிருப்பார். பாடலுக்கு இடையிடையே மர்மமாக சில வேலைகளை செய்வார். பாடல் முடிந்ததும் க்ளைமேக்ஸ் தொடங்கும்.

8. பாம் வெடிக்க இன்னும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே உள்ளன என்று செவன் செக்மென்ட் டிஸ்ப்ளேயில் காட்டும். சிகப்பு, கருப்பு என இரண்டு வயர்கள். ஒன்றை கத்தரித்தால் சேஃப், மற்றொன்றை கத்தரித்தால் க்ளோஸ். ஒருசில நொடிகள் தடுமாறிவிட்டு ஹீரோ மிகச்சரியாக சேஃபான வயரை கத்தரிப்பார்.

மேலே சொன்ன காட்சிகளை நீங்கள் ரசித்துப் பார்ப்பவரா ? ஆம் எனில் கையைக் கொடுங்கள் ! சந்தேகமே இல்லாமல் ஆரம்பம் உங்களுக்கான சினிமா தான்...!

அஜித் இல்லையேல் ஆரம்பத்திற்கு ஆரம்பம் கூட கிடைத்திருக்காது. அஜித்தை திரையில் காட்டினாலே திரையங்கம் ஆனந்த அலறல் போடுகிறது. வாய் திறந்து ஏதாவது பேசிவிட்டால் விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. சர்வநிச்சயமாக ரஜினிக்கு அடுத்து அஜித்துக்கு தான் அதிக மாஸ் ! ஹாலியுட்டு படங்களில் மேட் டீமன் போல ஆர்யாவிற்கு இரண்டாம் நிலை கதாபாத்திரம். அவருடைய கல்லூரிக்கால கெட்டப் புதுமையாக இருந்தாலும் அப்படியொன்றும் சிரிப்பு மூட்டவில்லை. 

நயன்தாராவிற்கு ஒரேயொரு காட்சி தவிர்த்து கிளாமர் இல்லை. ஆனால் அந்த ஒரேயொரு காட்சி போதும். நயன்தாரா இன்னமும் டொக்கு ஆகவில்லை. அநேகமாக, டாப்ஸியின் நடிப்பில் நான் காணும் முதல் திரைப்படம் இதுதான் நினைக்கிறேன். பேபி ச்சோ ச்வீட் என்று கன்னத்தில் கிள்ளி முத்தா கொடுக்கணும் என்பது போல அப்படி இருக்கிறார்.

துணை நாயகிகள் விஷயத்தில் விஷ்ணுவை பாராட்ட வேண்டும். அதிகம் அறியப்படாத, எனினும் நல்ல பதார்த்தங்களான சுமா ரங்கனாதனையும் அக்ஷரா கவுடாவையும் கொணர்ந்திங்கு சேர்த்திருக்கிறார். டைட்டிலில் அறிமுகம் அக்ஷரா கவுடா என்று பார்த்ததும் பதறிவிட்டேன். அக்ஷரா ஏற்கனவே துப்பாக்கி படத்தில் ஐட்டம் என்னும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பே உயர்திரு 420 என்னும் படத்தில் அறிமுகமாகி விட்டதாக விக்கி சொல்கிறது. 

அஜித்தின் நண்பராக ராணா, நல்ல போலீஸ் கிஷோர், கெட்ட போலீஸ் அதுல் குல்கர்னி, மந்திரி மகேஷ் மஞ்சரேக்கர் என இன்னும் சிலரும் நடித்திருக்கிறார்கள்.

யுவன் இசையில் பாடல்கள் அப்படியொன்றும் ஈர்க்கவில்லை. ஒன்றிரண்டு கேட்கக் கேட்க பிடிக்கலாம். பின்னணி இசை கூட வழக்கம் போல அதிரடியாக இல்லையென்றாலும் ஆங்காங்கே படத்தை தூக்கி நிறுத்துகிறது. அஜித் ஒரு காட்சியில் அதுல் குல்கர்னியிடமும், அதற்கடுத்த காட்சியில் மகேஷ் மஞ்சரேக்கரிடமும் சவால் விடுகிறார். அவ்வளவு அருமையான காட்சியொன்றும் இல்லை. ஆனால், அப்படியே அங்கிருந்து திரும்பும்போது ஜோபியில் இருந்து கூலிங் கிளாஸ் எடுத்து மாட்டிக்கொண்டே ஸ்லோ மோஷனில் நடந்துவருகிறார் அஜித். அங்கே தடதடக்கிறது ஒரு பின்னணி இசை. அரங்கம் ஆர்ப்பரிக்கிறது !

ஆக, அஜித்தின் மாஸ், யுவனின் பின்னணி இசை. விஷ்ணுவின் ஸ்டைலிஷ் மேக் இவை மூன்றும் சேர்ந்து தான் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்துகின்றன. அஜித் ரசிகர்களுக்கும், வணிக சினிமாக்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கும் நிச்சயமாக இது ‘தல’ தீபாவளி தான் ! மற்றபடி என்னளவில் ஆரம்பம் பல்லைக் கடித்துக்கொண்டு ஒரேயொரு முறை பார்க்கக்கூடிய சினிமாவாகத் தான் தெரிகிறது.

ஆரம்பத்தில் குறிப்பிடத்தகுந்த சில நல்ல விஷயங்கள் என்று பார்த்தால், மும்பை தாக்குதலில் பலியான ஹேமந்த் கர்கரே என்னும் தியாகியின் வாழ்க்கையை யொட்டி மிக நெருக்கமாக அமைக்கப்பட்ட கதைக்களம், (இதனைப் பற்றி இன்னும் விரிவாக உண்மைத்தமிழன் அவர்களின் இடுகையில் படிக்கலாம்), அஜித் – நயன்தாராவிற்கு இடையே காதல், டூயட் வைக்க வாய்ப்பிருந்தாலும் அப்படி செய்யாதது போன்றவற்றை குறிப்பிடலாம்.

ஸ்டைலிஷ் மேக்கிங் என்ற பெயரில் அஜித் தொடர்ச்சியாக ஒரே மாதிரியான மாஸ் காட்சியமைப்புகள் கொண்ட படங்களில் நடிப்பது இன்னும் எவ்வளவு நாளைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரியவில்லை. அதற்குள் அஜித் அவருடைய படங்களின் பாணியை மாற்றிக்கொள்வது நல்லது. இல்லையேல் அவருடைய படங்களுக்கு எப்பொழுதுமே ‘ஆரம்பம்’ மட்டும்தான் கிடைக்கும் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 July 2013

ஒரு மழைநேர மாலைப்பொழுதும் சில கஜுராக்களும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அது ஒரு மாலை நேரம். வெறுமனே மாலை நேரம் என்றெல்லாம் சாதாரணமாக சொல்லிவிட முடியாது. கார்மேகங்கள் சூழ்ந்து மழை பொழிவதற்காக காத்திருந்த மிக மிக ரம்மியமான மாலைப்பொழுது. அலுவலகத்தில் அரக்க பறக்க மின்னஞ்சலொன்றை தட்டச்சிக் கொண்டிருந்தேன். இதை மட்டும் அனுப்பி முடித்துவிட்டால் சீக்கிரம் வீட்டுக்குப் போய் முந்தானை முடிச்சு சீரியல் பார்க்கலாம், ஜொள்ளு வடிய வடிய சேட்டுக்கடை ஜிலேபி இரண்டை உள்ளே தள்ளலாம். எல்லாவற்றையும் விட முக்கியமாக ரமாவின் தினசரி வசையருவியிலிருந்து தப்பிக்கலாம். “ஸ்லர்ப்” – அன்றைய தினத்தின் ஆறாவது டீயின் கடைசி மடக்கை குடித்தேன், கூடவே மின்னஞ்சலையும். ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு வெளியேறத் தயாரானேன். ரிசப்ஷனில் பாலா தன்னுடைய கணினித்திரையில் எதையோ வெறித்துப்பார்த்தபடி இருந்தாள். என்னைப் பார்த்ததும் கொஞ்சம் மிரட்சியுடன் எழுந்து நின்றாள். நான் அவளை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. தப்பித்தவறி அவள்மீது பார்வை பட்டுவிட்டால் ராத்திரியெல்லாம் தூங்கவிடாமல் படுத்தியெடுத்து விடுவாள் ராட்சசி. இருப்பினும் அவளைக் கடந்துவந்த பின், பார்த்திருக்கலாமோ என்று தோன்றியது.

Thanks: gapingvoid.com

பாலாவை காணத்தவறிய விழிகளின் மீதுள்ள கோபத்தை பைக்கின் கிக் ஸ்டார்ட்டர் மீது காண்பித்தேன். அது உறுமியபடி வேகமெடுத்தது. அதிகபட்சம் இரண்டு சிக்னல்களை கடந்திருக்க மாட்டேன், ஒரு கவிதைத்துளி என் மீது சிந்திய உணர்வு. அதெல்லாம் இருக்காது என்றெண்ணியபடியே வண்டியின் வேகத்தை அதிகரித்தேன். அடுத்ததடுத்து கவிதைத்துளிகள் என்னை சீண்டிக்கொண்டிருந்தன. சில நிமிடங்களில் வானிலிருந்து அதீத கவிதைகள் பொழிய ஆரம்பித்தன. ஆம், பெருமழை. அடடே முந்தானை முடிச்சு பார்க்க முடியாதே ! ம்ம்ம் பரவாயில்லை ரமாவிடம் கதை கேட்டுக்கொள்ளலாம். மொத்தமாக நனைந்து முடிவதற்குள் டீக்கடையின் ஓரமாக வண்டியை செலுத்திவிட்டு ஒதுங்கினேன்.

அது நாயர் டீக்கடை என்று சொன்னால் க்ளேஷேவாக இருக்கும். தாராளமாக நின்றால் ஐந்து பேர் நிற்கக்கூடிய அந்த டீக்கடையின் வெளிப்பகுதியில் மழையின் காரணமாக சுமார் இருபது பேர் நின்றுக்கொண்டிருந்தோம். அதாவது அடைந்திருந்தோம். நான்கைந்து ஐ.டி. பணியாளர்கள், ஒருவன் கையில் டீ கிளாஸும் ஒருத்தியின் விரலிடுக்கில் கிங்ஸும் அகப்பட்டது. ஒரு தாத்தா அவருடன் அழைத்து வந்திருந்த சிறுமிக்கு ஜாம் பன் வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அது அவரை சட்டை செய்யாமல் குர்குரே கேட்டு அடம் பிடித்துக்கொண்டிருந்தது. ஒருத்தி சுற்றியிருந்த காடா துணிக்கிடையே இரண்டு கண்கள் மட்டும் தெரிந்தது. அவளுடைய ஸ்கூட்டி என்னுடைய ஸ்ப்ளெண்டருடன் சேர்ந்து நனைந்துக்கொண்டிருந்தது. எனக்கு எதிரில் ஒருத்தன் வாழைக்காய் பஜ்ஜியை தினத்தந்தியில் வைத்து பிதுக்கி கொடுமைபடுத்திக் கொண்டிருந்தான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டேயிருந்த எனக்கு சற்றே அயர்ச்சியான காரணத்தினால் “மாஸ்டர்... ஒரு டீ...!” என்று அலறினேன்.

பட உதவி: கூகிள்
டீ சொல்லிவிட்டு சட்டென திரும்பியபோது தான் அந்த காக்கி நிற வஸ்து என் கண்களில் பட்டது. அதற்கு கஜூரா என்று பெயர். முதலில் கஜூராவின் குணநலன்களை ஒப்பித்துவிடுகிறேன். கஜூரா கிட்டத்தட்ட சதுர வடிவத்தில் இருக்கும், சமயத்தில் மாஸ்டரின் கைவண்ணத்தை பொறுத்து வடிவம் மாறுபடும். போண்டாவை போலவே கஜூராவும் ஒரு இனிப்பு பண்டம். எனினும் போண்டாவைக் காட்டிலும் திடமானது. ஒரு கஜூராவை கையில் எடுத்தால் சாப்பிட்டு முடிக்க பத்து நிமிடங்கள் வரை ஆகலாம். நிற்க. என்னைப் போன்ற திறன் படைத்தவர்கள் இரண்டு நிமிடங்களிலேயே கூட தின்று முடிக்கலாம். என்னுடைய நினைவுக்குவியலிலிருந்து அரைக்கால் சட்டை அணிந்திருந்த நான் தேன்மொழியிடமிருந்து கஜூராவை அபகரித்துத் தின்ற காட்சியை “சார்... டீ...” என்ற பாழாய்ப்போன மாஸ்டரின் குரல் கலைத்து தொலைத்தது.

ஒரு கையில் டீ கிளாஸை வாங்கியபடி மறு கையில் கஜூரா ஒன்றினை எடுத்து வாயில் வைத்தேன். அய்யுய்யோ ! நான் கஜூராவையா சாப்பிடுறேன்... கடவுளையே சாப்பிடுறேன். நான் கடைசியாக கஜூரா சாப்பிட்டது எப்போது என்று நினைவில்லை. ஆனால் நிச்சயமாக பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். கஜூரா சாப்பிடுவதில் ஒரு மிகப்பெரிய நன்மை உள்ளது. வயிறு துரிதமாக நிரம்பிவிடும். கஜூராவை கடித்தபடியே உலகத்தைப் பற்றி சிந்திக்க துவங்குகிறேன். உலகம் ஏன் கஜூராவைப் போல சதுரமாக அல்லாமல் போண்டாவை போல உருண்டையாக இருக்கிறது. ஆனால் அத்தகைய உலகத்தில் வாழக்கூடிய வாழ்க்கை மட்டும் போண்டாவை போல மென்மையாக அல்லாமல் கஜுராவைப் போல கடினமானதாக இருக்கிறதே ! போண்டாவின் சுவை போண்டாவில் இல்லை, அதன் இடையிடையே தென்படும் மிளகில் தான் என்று யாரோ ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறாராம். அதுபோலத்தான் கஜூராவும். கஜூராவின் சுவை கஜூராவில் இல்லை, அதனை மெல்லும் வாயில்தான் இருக்கிறது. அடுத்ததடுத்து கஜூராக்களை லபக்கிக்கொண்டிருந்தேன். கடைசியாக ஒரேயொரு கஜூரா மட்டும் பலகார பலகையில் எஞ்சியிருந்தது.

பட உதவி: கூகிள்
ஒரு புதிய மனிதர் டீக்கடைக்குள் நுழைகிறார். உடைந்து விழுந்து விடுவாரோ என்று அச்சப்படுகின்ற வகையில் ஒல்லியான தேகம், வழுக்குப்பாறை போன்றதொரு சொட்டைத்தலை, தன்னுடைய அளவிற்கு பொருந்தாத முழுக்கை சட்டை, பாலைவனச்சோலை காலத்து பேண்ட், கழுத்தில் ருத்திராட்ச கொட்டை, நெற்றியில் விபூதிப்பட்டை. கணநேரம் கஜூராவை மறந்து கண்ணசைக்காமல் அந்த மனிதரை பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன வாங்க வந்திருப்பார் ? மாஸ்டரிடம் ஒற்றை விரலைக்காட்டி சைகையில் ஏதோ சொன்னார். ரெகுலர் கஷ்டமராக இருக்கக்கூடும். பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். அது புகையை கக்கியது. அடுத்த சில நிமிடங்களில் அவர் சைகையில் குறிப்பிட்ட பானம் அவருடைய கைகளுக்கு வந்தது. அது டீ ! டீயை ஒரு மிடறு குடித்துவிட்டு சிகரெட்டை இழுத்தார். அதுவே சில நிமிடங்களுக்கு தொடர்ந்தன. சிகரெட் தன்னுடைய கடைசி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்தது. திடீரென ஒரு சுதாரிப்பு. நான் ஏன் அவரையே நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன் ? உண்மையில் எனக்கு என்ன பிரச்சனை ? ஏதோவொரு உண்மை உரைக்க அவர் மீதிருந்து என்னுடைய பார்வையை விலக்கிக்கொண்டேன். கடைசி கஜூராவை எடுக்க கையை நீட்டினேன். என்னை முந்திய ஒரு கை அதனை அபகரித்துவிட்டது. அது அவருடைய கை. அவருக்கும் கஜூரா பிடிக்கும் போலிருக்கிறது. வந்த கோபத்திற்கு அவரை நாலு மிதி மிதிக்கவேண்டும் போல தோன்றியது. எனக்கொரு தேன்மொழி இருந்தது போல அவருக்கொரு கனிமொழி இருந்திருக்கலாம் என்று நினைத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். மழை குறைந்திருந்தது.

சாலையில் வாகனங்கள் நகர ஆரம்பிக்கின்றன. நான் என்னுடைய நந்தவனத்தேரை நகர்த்தி அதன் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முற்படுகிறேன். அதற்குள் பாலைவனச்சோலை கடைசி கஜூராவை விழுங்கிவிட்டு அவருடைய வாகனத்தை எடுக்கிறார். அவரைக் கண்டதும் எனக்குள் சிறு அதிர்ச்சி. அவர் என்னைக்கண்டு லேசாக புன்னகைக்கிறார். கஜூராவை அபகரித்ததற்காக மன்னிப்பு கேட்கும் புன்னகை. புது உற்சாகத்துடன் வண்டியை கிளப்பி வேகமெடுக்கிறேன். அவரும் வண்டியை எடுத்துக்கொண்டு எனக்கு நேரெதிர் திசையை நோக்கி தன்னுடைய பயணத்தை துவங்குகிறார். சிறு தூறலுக்கிடையே தொடர்கிறது எங்கள் பயணம்... சாலையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் கூட !


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 May 2013

சூது கவ்வும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமா விழித்துக்கொண்டதாக தோன்றுகிறது. ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைப்பது எப்படியென்று தெளிவாக புரிந்துக்கொண்டார்கள். குறிப்பாக இளைஞர்கள். மூன்று மீடியம் பட்ஜெட் படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் கூட சூது கவ்வும் ரசிகர்களை கவ்வியிருக்கிறது, என்னையும் சேர்த்து.

அரைகுறை கிட்னாப் ஆசாமி விஜய் சேதுபதி. சூழ்நிலை காரணமாக அவருடன் இணையும் மூன்று இளைஞர்கள். ஒரு கட்டத்தில் அமைச்சரின் மகனை கடத்த வேண்டியிருக்கிறது. அந்த கடத்தலை மையமிட்டு கதை நகர்கிறது.

நயன்தாராவுக்கு கோவில் கட்டிய வாலிபர் என்கிற சுமாரான நகைச்சுவை காட்சியுடன் தான் படம் துவங்குகிறது. அதன்பிறகும் கூட ஒரு மாதிரியான தொய்வாகவே ஆங்காங்கே சிரிக்க வைக்கும் வசனங்களுடன் படம் ஓடிக்கொண்டிருந்தது. கடைசி வரைக்கும் கூட பரபரப்பு இல்லை. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பிடித்திருக்கிறது. படத்தின் பலம், பலவீனம் இரண்டுமே மிதவேக திரைக்கதை தான். நிஜவாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாக எதுவும் நடைபெறுவதில்லை. அதுபோல தான் சூது கவ்வும். கதையின் ஓட்டத்திற்கு நேரடியாக தொடர்பில்லாத அல்லது தேவையில்லாத இடங்களில் நீளமான காட்சிகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன. கதைக்கு தேவைப்படாத சின்னச் சின்ன டீடெயிலிங் மூலம் சுவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கின்றனர். அது சில இடங்களில் மொக்கை தட்டினாலும் சரியாகவே கை கொடுத்திருக்கிறது. அட்டகத்தி, நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் போன்ற படங்களோடு சூது கவ்வும் படத்தை ஒப்பிடலாம். முந்தய இரண்டினை ரசித்தவர்கள் இதையும் ரசிக்கலாம். மற்றவர்கள் தவிர்க்கலாம்.

குறும்பட இயக்குனர்களின் செல்லப்பிள்ளை விஜய் சேதுபதிக்கு மைடாஸ் டச். படத்தில் அவருடைய தோற்றம் நாற்பது வயதுக்காரருடையது என்று சினிமா செய்திகளில் படிக்காமல் இருந்திருந்தால் தெரிந்திருக்காது. இளநரை தோன்றியவர்களெல்லாம் நாற்பது+ ஆகிவிட முடியுமா ? நாயகத்தனத்தை காட்டாமல் காட்டும் வேடம் விஜய் சேதுபதியுடையது. அவர் இனிவரும் படங்களில் ஆக்குசன் வழிமுறையை மட்டும் பின்பற்றிவிடக் கூடாது.

கதாநாயகி சஞ்சிதா ஷெட்டியின் மூக்கை பார்க்கும்போது அவதார் பட நாயகி நினைவுக்கு வருகிறார். ரப்பர் உதடுகள். சஞ்சிதா படுகோன் என்ற பெயரில் ஒரு நடிகையும் இதேபோல படுமொக்கையாக இருந்ததாக ஞாபகம். சஞ்சிதா என்று பெயர் வைத்தாலே அப்படித்தான் போல. நாயகி வேடத்திற்கு மகா மட்டமான தேர்வு. சஞ்சிதாவோடு ஒப்பிடும்போது காசு பணம் துட்டு மணி மணி பாடலில் ஆடும் இளம்சிட்டுக்கள் அம்புட்டும் ஜூப்பர்.

மற்ற காஸ்டிங் படத்தினுடைய பிரதான பலம். குறும்பட ஆட்களின் படங்களில் பார்த்த முகங்களாகவே தென்படுகின்றன. டாக்டர் ரவுடியாக நடித்த அருள்தாஸ் தடையறத் தாக்க படத்தின் ஒரு காட்சியில் அதகளப் படுத்தியிருப்பார். இந்த படத்தில் அவ்வளவு வெயிட்டான ரோல் இல்லையென்றாலும் கூட சின்னச் சின்ன உடல்மொழிகளில் சீரிய நடிப்பு. அடுத்ததாக சைக்கோ போலீஸ் அதிகாரியாக வரும் யோக் ஜெப்பி. இவருக்கு கடைசி வரைக்கும் வசனமே இல்லை. நாயகனுக்கு அடுத்து பலம் பொருந்திய வேடம் இவருடையது. அருமை பிரகாசமாக நடித்த கருணாகரனும், பகலவனாக நடித்த சிம்ஹாவும் நடிப்பில் மற்ற உப நடிகர்களை காட்டிலும் தனித்து தெரிகிறார்கள். அமைச்சரின் மனைவியாக நடித்திருப்பவர் அம்மா வேடங்களுக்கான புதிய கண்டுபிடிப்பு. எம்.எஸ்.பாஸ்கர் கிளாஸ்.

பாடல்கள் இசைப்பிரியர்கள் மத்தியில் ஏற்கனவே ஹிட் என்று நினைக்கிறேன். நான் முதல்முறை கேட்டதால் அதிகம் ஒட்டவில்லை. கானா பாலாவின் பாடல் மட்டும் மீண்டும் தேடிக் கேட்க தூண்டுகிறது. அந்த பாடலுக்கு பாரம்பரிய மேற்கத்திய கலவை நடனம் அட்டகாசம். வசனங்கள் பலதும் நறுக்கென்று இருக்கின்றன. ஓ மை காட் என்று பரட்டை தலையை உலுக்குவதும், டவுசர் கிழிஞ்சிருச்சு என்ற வசனமும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடையக் கூடும்.


ஆள் கடத்தலை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் படத்தில் ரத்தம், மரணம் போன்ற குரூரங்கள் இல்லாதது படத்தினுடைய சிறப்பு. இத்தனைக்கும் ஒரு குற்றவாளியை சைக்கோ போலீஸ் அதிகாரி உயிருடன் புதைக்கும் காட்சியோ மின்னணுவியல் மாணவனை மாடியில் இருந்து தலைகீழாக கீழே போடுவது கூட அவ்வளவு கொடூரமாக தோன்றவில்லை. டாம் & ஜெர்ரி கார்ட்டூனில் ஜெர்ரியுடைய மரணம் எப்படி இருக்குமோ அப்படி உறுத்தாமல் கடந்து செல்கிறது.

டிராவிட் போன்ற ஒரு விளையாட்டு வீரர் துவக்கத்திலிருந்து நிலைக்கொண்டு விளையாடி ஆட்டத்தின் முடிவில் அதிரடியாட்டம் ஆடினால் எப்படி இருக்கும் ? அப்படித்தான் இருக்கிறது சூது கவ்வும். படத்தின் இறுதியில் வரும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து, துப்பாக்கி சூடு போன்ற காட்சிகளுக்கு திரையரங்கில் எழும் சிரிப்பலை படத்தினை கரை சேர்த்துவிடும்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் நேர்மையான கடத்தல் கும்பலைப் போலவே படக்குழுவினரும் சினிமாவை புரட்டிப்போடும் பெருமுயற்சி எதுவும் எடுக்காமல் கருத்து சொல்லி உசுரை வாங்காமல் பக்காவாக ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தினை கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் நலன் குமரசாமிக்கு வாழ்த்துகள் :)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment