Showing posts with label bala. Show all posts
Showing posts with label bala. Show all posts

2 May 2013

சூது கவ்வும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமா விழித்துக்கொண்டதாக தோன்றுகிறது. ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைப்பது எப்படியென்று தெளிவாக புரிந்துக்கொண்டார்கள். குறிப்பாக இளைஞர்கள். மூன்று மீடியம் பட்ஜெட் படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் கூட சூது கவ்வும் ரசிகர்களை கவ்வியிருக்கிறது, என்னையும் சேர்த்து.

அரைகுறை கிட்னாப் ஆசாமி விஜய் சேதுபதி. சூழ்நிலை காரணமாக அவருடன் இணையும் மூன்று இளைஞர்கள். ஒரு கட்டத்தில் அமைச்சரின் மகனை கடத்த வேண்டியிருக்கிறது. அந்த கடத்தலை மையமிட்டு கதை நகர்கிறது.

நயன்தாராவுக்கு கோவில் கட்டிய வாலிபர் என்கிற சுமாரான நகைச்சுவை காட்சியுடன் தான் படம் துவங்குகிறது. அதன்பிறகும் கூட ஒரு மாதிரியான தொய்வாகவே ஆங்காங்கே சிரிக்க வைக்கும் வசனங்களுடன் படம் ஓடிக்கொண்டிருந்தது. கடைசி வரைக்கும் கூட பரபரப்பு இல்லை. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பிடித்திருக்கிறது. படத்தின் பலம், பலவீனம் இரண்டுமே மிதவேக திரைக்கதை தான். நிஜவாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாக எதுவும் நடைபெறுவதில்லை. அதுபோல தான் சூது கவ்வும். கதையின் ஓட்டத்திற்கு நேரடியாக தொடர்பில்லாத அல்லது தேவையில்லாத இடங்களில் நீளமான காட்சிகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன. கதைக்கு தேவைப்படாத சின்னச் சின்ன டீடெயிலிங் மூலம் சுவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கின்றனர். அது சில இடங்களில் மொக்கை தட்டினாலும் சரியாகவே கை கொடுத்திருக்கிறது. அட்டகத்தி, நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் போன்ற படங்களோடு சூது கவ்வும் படத்தை ஒப்பிடலாம். முந்தய இரண்டினை ரசித்தவர்கள் இதையும் ரசிக்கலாம். மற்றவர்கள் தவிர்க்கலாம்.

குறும்பட இயக்குனர்களின் செல்லப்பிள்ளை விஜய் சேதுபதிக்கு மைடாஸ் டச். படத்தில் அவருடைய தோற்றம் நாற்பது வயதுக்காரருடையது என்று சினிமா செய்திகளில் படிக்காமல் இருந்திருந்தால் தெரிந்திருக்காது. இளநரை தோன்றியவர்களெல்லாம் நாற்பது+ ஆகிவிட முடியுமா ? நாயகத்தனத்தை காட்டாமல் காட்டும் வேடம் விஜய் சேதுபதியுடையது. அவர் இனிவரும் படங்களில் ஆக்குசன் வழிமுறையை மட்டும் பின்பற்றிவிடக் கூடாது.

கதாநாயகி சஞ்சிதா ஷெட்டியின் மூக்கை பார்க்கும்போது அவதார் பட நாயகி நினைவுக்கு வருகிறார். ரப்பர் உதடுகள். சஞ்சிதா படுகோன் என்ற பெயரில் ஒரு நடிகையும் இதேபோல படுமொக்கையாக இருந்ததாக ஞாபகம். சஞ்சிதா என்று பெயர் வைத்தாலே அப்படித்தான் போல. நாயகி வேடத்திற்கு மகா மட்டமான தேர்வு. சஞ்சிதாவோடு ஒப்பிடும்போது காசு பணம் துட்டு மணி மணி பாடலில் ஆடும் இளம்சிட்டுக்கள் அம்புட்டும் ஜூப்பர்.

மற்ற காஸ்டிங் படத்தினுடைய பிரதான பலம். குறும்பட ஆட்களின் படங்களில் பார்த்த முகங்களாகவே தென்படுகின்றன. டாக்டர் ரவுடியாக நடித்த அருள்தாஸ் தடையறத் தாக்க படத்தின் ஒரு காட்சியில் அதகளப் படுத்தியிருப்பார். இந்த படத்தில் அவ்வளவு வெயிட்டான ரோல் இல்லையென்றாலும் கூட சின்னச் சின்ன உடல்மொழிகளில் சீரிய நடிப்பு. அடுத்ததாக சைக்கோ போலீஸ் அதிகாரியாக வரும் யோக் ஜெப்பி. இவருக்கு கடைசி வரைக்கும் வசனமே இல்லை. நாயகனுக்கு அடுத்து பலம் பொருந்திய வேடம் இவருடையது. அருமை பிரகாசமாக நடித்த கருணாகரனும், பகலவனாக நடித்த சிம்ஹாவும் நடிப்பில் மற்ற உப நடிகர்களை காட்டிலும் தனித்து தெரிகிறார்கள். அமைச்சரின் மனைவியாக நடித்திருப்பவர் அம்மா வேடங்களுக்கான புதிய கண்டுபிடிப்பு. எம்.எஸ்.பாஸ்கர் கிளாஸ்.

பாடல்கள் இசைப்பிரியர்கள் மத்தியில் ஏற்கனவே ஹிட் என்று நினைக்கிறேன். நான் முதல்முறை கேட்டதால் அதிகம் ஒட்டவில்லை. கானா பாலாவின் பாடல் மட்டும் மீண்டும் தேடிக் கேட்க தூண்டுகிறது. அந்த பாடலுக்கு பாரம்பரிய மேற்கத்திய கலவை நடனம் அட்டகாசம். வசனங்கள் பலதும் நறுக்கென்று இருக்கின்றன. ஓ மை காட் என்று பரட்டை தலையை உலுக்குவதும், டவுசர் கிழிஞ்சிருச்சு என்ற வசனமும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடையக் கூடும்.


ஆள் கடத்தலை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் படத்தில் ரத்தம், மரணம் போன்ற குரூரங்கள் இல்லாதது படத்தினுடைய சிறப்பு. இத்தனைக்கும் ஒரு குற்றவாளியை சைக்கோ போலீஸ் அதிகாரி உயிருடன் புதைக்கும் காட்சியோ மின்னணுவியல் மாணவனை மாடியில் இருந்து தலைகீழாக கீழே போடுவது கூட அவ்வளவு கொடூரமாக தோன்றவில்லை. டாம் & ஜெர்ரி கார்ட்டூனில் ஜெர்ரியுடைய மரணம் எப்படி இருக்குமோ அப்படி உறுத்தாமல் கடந்து செல்கிறது.

டிராவிட் போன்ற ஒரு விளையாட்டு வீரர் துவக்கத்திலிருந்து நிலைக்கொண்டு விளையாடி ஆட்டத்தின் முடிவில் அதிரடியாட்டம் ஆடினால் எப்படி இருக்கும் ? அப்படித்தான் இருக்கிறது சூது கவ்வும். படத்தின் இறுதியில் வரும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து, துப்பாக்கி சூடு போன்ற காட்சிகளுக்கு திரையரங்கில் எழும் சிரிப்பலை படத்தினை கரை சேர்த்துவிடும்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் நேர்மையான கடத்தல் கும்பலைப் போலவே படக்குழுவினரும் சினிமாவை புரட்டிப்போடும் பெருமுயற்சி எதுவும் எடுக்காமல் கருத்து சொல்லி உசுரை வாங்காமல் பக்காவாக ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தினை கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் நலன் குமரசாமிக்கு வாழ்த்துகள் :)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 March 2013

பரதேசி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இனி இயக்குனர் பாலா படங்களை பார்ப்பதில்லை என்று முடிவு செய்திருந்தவர்களில் நானும் ஒருவன். விமர்சகர்களின் ஏகோபித்த ஓகோபித்த ஆதரவு தான் என்னை திரையரங்கிற்கு நகர்த்திச் சென்றது. எப்போதுமே ஒரு படத்தை வெளிவந்ததும் சுடச்சுட பார்ப்பதற்கும், நான்கைந்து நாட்கள் ஆறப்போட்டு அடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சஸ்பென்ஸோடு படம் பார்க்கும்போது அது ஏற்படுத்தும் தாக்கம், விமர்சனங்களை படித்துவிட்டு பார்க்கும்போது கிடைப்பதில்லை.

பரதேசியைப் பற்றி ஏற்கனவே பலதரப்பட்ட விமர்சனங்கள் வெளிவந்துவிட்டன. புதிதாக சொல்வதற்கு ஏதுமில்லை என்று நினைக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு நான் Grotesque என்கிற படத்தை பார்த்தேன். திரைப்பட வரலாற்றில் அதீத வன்முறை கொண்ட பத்து திரைப்படங்களை பட்டியலிட்டால் Grotesque கண்டிப்பாக இடம்பெறும். முதன்முதலில் அதனை பார்த்தபோது அது பிடித்ததா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் கடுமையான தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது. இன்றளவும் அந்த படம் என்னை அடிக்கடி மன உளைச்சலிலிருந்து விடுவிக்கிறது. உங்கள் முகத்தில் தொடர்ந்து கரியை பூசிக்கொண்டே இருக்கும் இருபெரும் அரசியல்வாதிகளைப் பற்றி நினைத்தாலே உங்களுக்கு காறி உமிழ தோன்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். எனினும் உங்களுடைய கோபம் அவரை துளியளவு கூட பாதிக்கப்போவதில்லை. போன்ற சமயங்களில் Grotesque படத்தில் துன்புறுத்தப்படும் மனிதர்களாக அந்த இருபெரும் அரசியல்வாதிகளை நினைத்துக்கொண்டால் ஒருவித மனநிம்மதி கிடைப்பதை உணருவீர்கள். வன்முறை, செக்ஸ் என்று நம்முடைய உணர்ச்சிகளுக்கு கட்டாயம் ஒரு வடிகால் தேவை. இல்லையென்றால் ஒரு கட்டத்தில் அது வெடித்துச் சிதறிவிடும். Noctural emission கேள்விப்பட்டதில்லையா ? அதுபோல பாலாவுடைய ஆழ்மன வன்முறை உணர்வுகளுக்கு அவருடைய படங்கள் வடிகாலாக இருக்கலாம்.

கார்த்திக்கு ஒரு பருத்தி வீரன் கிடைத்தது போல, அதர்வாவிற்கு பரதேசி கிடைத்திருக்கிறது. முதல் படமாக கிடைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதர்வாவின் நடிப்பு ஒன்றும் உறுத்தலாக இல்லையென்றாலும், சாலூர் ராசா என்கிற அந்த வேடத்தில் கச்சிதமாக நடிப்பதற்கு தமிழ் சினிமாவில் அதர்வாவை விட திறமைசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

வேதிகாவும், தன்ஷிகாவும் நாயகிகள். தன்னுடைய பட நாயகிகளை அவலட்சணமாக காட்சிப்படுத்த முனையும் திருவாளர் பாலாவிற்கு இந்தமுறை தோல்வியே கிடைத்திருக்கிறது. குறிப்பாக தன்ஷிகா, ஒரு பத்து லோடு கரியை இறக்கி தன்ஷியின் முகத்தில் தேய்த்தால் கூட அவர் அழகாகவே இருப்பார். 

கவிஞர் விக்கிரமாதித்யனும், அதர்வாவின் பாட்டியும் மனதைவிட்டு அகல மறுக்கின்றனர். கிராமத்தில் வசிப்பவர்கள், நிச்சயமாக விக்கிரமாதித்தன் கதாபாத்திரம் போன்ற ஒருவரையாவது தங்கள் வாழ்நாளில் சந்தித்திருப்பார்கள். 

ஆமாம், பரதேசியில் பவர்ஸ்டார் நடிப்பதாக இருந்ததே. இப்படிப்பட்ட கதைக்கு எப்படி பவர் பொருந்துவார் என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் வருகிற மருத்துவர் பரிசுத்தம் - அதுதான் பவருக்கு ஒதுக்கப்பட்ட வேடம். இப்போது நடன இயக்குனர் சிவசங்கர் நடிப்பில் வெளிவந்திருக்கிறது. அந்த வேடத்தில் மட்டும் பவர் ஸ்டார் நடித்திருந்தால், பரதேசி பஞ்சராகியிருக்கும்.

அவத்த பையா பாடலும் அதன் பெண்குரலும் அநியாயத்திற்கு வசீகரிக்கின்றன. மற்றபடி இசையைக் காட்டிலும் கேமரா அதிக கவன ஈர்ப்பு செய்கிறது. முதல்காட்சியில் சாலூர் கிராமத்திற்குள் நம்மை அழைத்துச் செல்வதிலிருந்தே கேமராவின் ஆளுமை துவங்கிவிடுகிறது. 

வழக்கமாக பாலா படங்களில் காணப்படும் சில விஷயங்கள் பரதேசியில் இல்லாதது அதிர்ச்சியான ஆறுதல். போலீஸ், நீதிபதிகளை கிண்டலடிக்கவில்லை; திருநங்கை அல்லது போன்ற கதாபாத்திரங்கள் இல்லை; உச்சக்கட்ட காட்சியில் நாயகன் பொங்கி எழுந்து வன்முறையில் இறங்கவில்லை. இப்படி நிறைய இல்லைகள்.

பரதேசியிலிருந்து இருவேறு தரப்பினரும் புரிந்துக்கொள்ள விஷயங்கள் இருக்கிறது. நமக்கு கீழே பணிபுரிபவர்களை அன்பாக நடத்தவேண்டும், அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதே சமயம், நம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மேல்மட்டத்திற்கு நேர்மையான உழைப்பை தரவேண்டும். அதையெல்லாம் விட முக்கியமாக சுதந்திரத்தின் மேன்மையை சமகால இளைஞர்களுக்கு உணர்த்தியிருக்கிறது பரதேசி.

நமக்கு ஃபீலிங் படமெல்லாம் பிடிக்காது என்பவர்களுக்காக சொல்கிறேன் - பரதேசி ஒரு நல்ல ஃபீல் குட் திரைப்படம். நல்ல நிறுவனத்தில் வேலை செய்து, கைநிறைய ஊதியம் வாங்கினாலும் கூட என்ன வாழ்க்கைடா இது ? என்கிற ரீதியில் புலம்புபவர்கள் பரதேசியை பாருங்கள். உங்களுடைய நிலையை மனமகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள பழகிவிடுவீர்கள்...!

என்னையும் சேர்த்து, பரதேசியின் மீது மட்டரகமான எதிர்பார்ப்பை வைத்திருந்த அனைவருடைய முகத்திலும் கரியை பூசிவிட்டார் பாலா...!

தொடர்புடைய சுட்டி: Grotesque

அடுத்து வருவது: அந்தமான் - போர்ட் ப்ளேர் நகருலா

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment