Showing posts with label adhiyaman. Show all posts
Showing posts with label adhiyaman. Show all posts

17 October 2013

கபிலரின் கலாய்த்தல் திணை


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முதலில், பொதுவாக மப்பில் இருப்பவர்கள் மத்தியில் நிகழும் சில உரையாடல்களைப் பற்றி பார்ப்போம். நண்பர்கள் புடைசூழ போதையை போட்டுக் கொண்டிருக்கும்போது குழுவில் யாரேனும் ஒருவர் உணர்ச்சிவயப்பட்டு “மச்சான்... நான் போதையில சொழ்றன்னு நினைக்காத....” என்று ஆரம்பிப்பார். உடனே அவருக்கு ஏறிவிட்டது என்கிற உண்மையை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். இன்னும் ஒரு சிலர் நண்பராவது மண்ணாவது உனக்கு சீக்கு வந்தா எனக்கென்ன என்கிற ரீதியில் பழகுவார்கள். ஆனால் போதையேறி விட்டால் நண்பர் மீது பாசமழை பொழிவதும் கொடைவள்ளலாக பணத்தை வாரியிறைப்பதும் நடக்கும். அந்த மாதிரி ஒரு போதை நண்பர் வாழும் வள்ளலாக மாறிக்கொண்டிருக்கும்போது அவரிடம், “மச்சான்... சில பேர் போதையில தான் கன்னாபின்னான்னு செலவு பண்ணுவாங்க... ஆனா நீ எவ்வளவு சரக்கடிச்சாலும் தெளிவா இருக்க மச்சான்...” என்று உசுப்பேற்றி விட்டால் எப்படி இருக்கும் ?

ஓகே, இப்போது கடையேழு வள்ளல்கள் சீரிஸின் முந்தைய பதிவான மலையமான் திருமுடிக்காரியின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தை பார்ப்போம். ஒருநாள் ஒரு புலவர் காரியைப் புகழ்ந்து பாடிக்கொண்டு அவன் திருமனையை அடைந்தார். அப்போது காரி, தன்னை எளியரும் காணும்படி வெளியிடத்தில் அமர்ந்திருந்தான். தன்னைப் புகழ்ந்து பாடும் புலவரை எதிரில் கண்டான். உடனே எழுந்து சென்று தன் தேரை அவரிடம் ஒப்படைத்து, “அருங்கலைப்புலவரே ! தாங்கள், தங்கள் திருவடிகள் வருந்த நடந்துவந்தீர்கள்; மீண்டும் அவ்வாறு நடவற்க: இத்தேர்மேல் அமர்ந்து இன்பமாய்ச் செல்க.” என்று மிக்க மகிழ்ச்சியுடன் கூறி மற்றும் வேண்டிய பொருள்கள் பல அளித்து அனுப்பினான். அதனை நேரில் கண்டுகொண்டிருந்த கபிலர் ஒரு பாடலை பாடினார். அது புறநானூற்றில் 123வது பாடலாக பதியப்பட்டுள்ளது.

நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கு மெளிதே தேரீ தல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழா தீத்த விழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி யுறையினும் பலவே !
புறம் 123

விளக்கம்: உலகிலுள்ள மக்கள் சிலர் மது அருந்துகிறார்கள். அதனால் மதிமயங்கிப் போகிறார்கள். அவ்வமயம் அவர்கள் இன்னது செய்யவேண்டும். இன்னது நீக்கவேண்டும் என்று ஓராமல் என்னென்னவோ செய்துவிடுகிறார்கள். அச்செயல்களுள் கொடைச்செயலும் ஒன்று. வெறிகொண்டபோது அளவுகடந்த கொடை செய்வது குடியர் எல்லோருக்கும் இயல்பு. தேர் முதலிய பொருள்களை அளிப்பார்கள். அங்ஙனம் மயக்கச் சேர்க்கையால் செய்யும் கொடை இயற்கையாகாது. அது செயற்கை கொடையாகும். காரி அவ்வாறு செய்பவன் அல்லன். இன்று காலை புதிதாய் கொணர்ந்த மதுவை உண்டான். ஆனால், அதன் மயக்கத்திற்கு ஆட்படவில்லை. அதுவும் அவன் மதியை ஆட்கொள்ளவில்லை. அவன் நல்லுணர்வுடனே தேரைப் புலவருக்கு அளித்தான். அவ்விதம், அவன் தேரை அளிக்கையில் வெறியர் போல மகிழவும் நகைக்கவும் இல்லை. ஆகையால், அக்கொடை இயற்கையையேச் சாரும்.

கபிலரின் வரிகளை கொஞ்சம் காம்பாக்ட்டாக புரிந்துக்கொள்வதென்றால் “மச்சான்... சில அயோக்கியப்பயலுக அப்படியெல்லாம் செய்வாங்க மச்சான்... ஆனா நீ யோக்கியன்டா...” என்று மறைமுகமாக கலாய்த்திருப்பது தெரிகிறது. கூடவே மன்னர்களின் கொடைபண்பு குறித்த உண்மைகளும், கபிலரின் ஹியூமர் சென்ஸும் புலப்படுகின்றன. நாம் முந்தய சில பதிவுகளில் வாசித்த புலவர்களைப் போல அல்லாமல் கபிலர் கொஞ்சம் ப்ராக்டிக்கலாகவும், தைரியமாகவும் மன்னர்களிடம் நடந்திருக்கிறார். அடுத்த பதிவில் அப்ரைசல் பற்றி கபிலர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 October 2013

கடையேழு வள்ளல்கள் – காரி


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கிடையே, தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு நாடு அமைந்திருந்தது. மலைகள் அதிகம் கொண்டது என்பதால் மலையமா நாடு என்று மலாடு என்றும் அழைக்கப்பட்ட நாடு அது. அந்த மலைகளுள் பெரியது முள்ளூர் மலை. மலையடிவாரத்தில் முள்ளுள்ள கொடிகள் பல முளைத்து மலையின் மேல் ஊர்ந்து செல்லும் காரணத்தினால் அப்பெயர் பெற்றிருந்தது. அம்மலை நாடு பெண்ணையாற்றின் உதவியால் பலவளங்களும் பெற்றுச் சிறந்திருந்தது. திருக்கோவலூரை தலைநகரமாகக் கொண்ட அம்மலையமா நாட்டை காரி என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் முதலில் முள்ளூருக்கும் முள்ளூர் மலைக்கும் தலைவனாகிப் பிறகு மலை நாட்டிற்கே திருமுடி புனைந்து அரசன் ஆனான். அவனுடைய குதிரை கார் நிறமுடையது. அதனால் அவன் மலையமான் திருமுடிக்காரி என்று அழைக்கப்பட்டான்.

படம்: இணையத்தில் இருந்து பெறப்பட்ட சித்தரிக்கப்பட்ட படம்
காரி ஒரு சிறந்த கல்விமான். ஊர்கள் தோறும் கல்விக்கூடங்கள் பல அமைத்தவன். பாலின பேதமின்றி மக்கள் கல்வியறிவு பெற ஏற்பாடு செய்தவன். காரி கல்வியில் சிறந்து விளங்கியதோடு மட்டும் நில்லாமல் போர்ப் பயிற்சியிலும் வலிமை கொண்டவனாக விரும்பினான். எனவே, தனக்கென ஒரு பஞ்சகல்யாணி குதிரையைத் தேர்ந்தெடுத்து அதனைப் போருக்கு ஏற்ப பழக்கினான். அத்துடன் வில், வாள், வேல் போன்ற படைக்கல பயிற்சிகளிலும் பங்கேற்று வல்லமையாளனாக விளங்கினான். அதனால் மூவேந்தர்களும் தங்களுக்கு வேண்டிய பொழுதெல்லாம் அவனைப் படைத்துணையாக அழைப்பர். காரி எப்பக்கமோ வெற்றி அப்பக்கமே என்ற நிலையில் காரியின் போர்த்திறன் பெரிதும் போற்றப்பட்டது. 

ஒருமுறை சோழ வேந்தர் பரம்பரையில் வந்த பெருநற்கிள்ளி என்ற சிற்றரசன் உறையூரை ஆண்டு வந்தான். அவனுடைய காலத்தில், சேரர் பரம்பரையில் தோன்றிய யானைக்கண் சேய் என்னும் சிற்றரசன் தொண்டி என்ற ஊரை ஆண்டு வந்தான். யானைக்கண்ணுக்கு உறையூர் மீது ஒரு கண். அதனால் அவன் பெருநற்கிள்ளியைப் பகைத்துக்கொண்டு உறையூரின் மீது அநீதியாகப் படை எடுத்துச் சென்றான். கிள்ளியோடு சண்டையிட்டு பலத்த சேதம் ஏற்படுத்தினான். முடிவில் கிள்ளிக்கு தோல்வியும் இறப்பும் ஏற்பட்டு விடும் என்கிற சூழல் உருவாகியிருந்தது. இந்நிலையில் காரி செய்தியறிந்தான். காரி, கிள்ளியின் பழைய நண்பன். நண்பனுக்கு உதவும்பொருட்டு பெருஞ்சேனையுடன் உறையூர் அடைந்தான். யானைக்கண் சேயின் படைகளை துரத்தியடித்தான். 

காரி வீரத்தில் மட்டுமின்றி நெஞ்சின் ஈரத்திலும் நிகரில்லாத வள்ளலாக இருந்தான். போரில் செய்த உதவிகளின் பொருட்டு மூவேந்தர்களும் அவனுக்கு பல பொருள்களைப் பரிசிலாகவும், ஞாபகார்த்தமாகவும் வழங்குவார்கள். அங்ஙனம் பெற்ற செல்வத்தை ஒருபோதும் தன்னுடையதாக கொண்டதில்லை காரி. அவன் அவனுடைய இல்லத்தலைவி தவிர்த்து மற்ற அனைத்தும் பிறருடையது என்ற எண்ணம் கொண்டிருந்தான். காரி தன்னுடைய அரண்மனை வாயிலில் எவர் வந்து நின்றாலும் வந்தவர்களின் தரத்தையும் திறத்தையும் சீர்த்தூக்கி பாராமல் அனைவருக்கும் வேண்டுவன அளித்தான்.

அக்காலகட்டத்தில் வடநாட்டில் அரசர்களாய் இருந்த ஆரிய வேந்தர்கள் சிறுகச் சிறுகத் தென்னாட்டின்மேல் படையெடுக்கலானார்கள். அப்படி படையெடுத்து வந்தவர்கள் திருக்கோவலூரின் செழுமையைக் கண்டு, அதனை பறித்துக்கொள்ள எண்ணினார்கள். உடனே திரண்ட சேனையுடன் வந்து திருக்கோவலூரைச் சூழ்ந்து முற்றுகையிட்டார்கள். தகவல், காரியின் காதுகளுக்கு எட்டியது. அவன் சிறிதும் அஞ்சவில்லை. தன்னுடைய சேனைகளை சேர்த்துக்கொண்டு போர்க்களம் பூண்டான். இரு கூட்டத்தாரும் பலநாள் சண்டையிட்டார்கள். இறுதியில் காரியின் வாட்படைக்கு ஆரிய படைகள் சின்னாபின்னமானது. ஆரியர்கள் பலர் மாண்டனர். மற்றவர்கள் அஞ்சியோடினார்கள்.

ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒருவேற்கு ஓடி ஆங்கு 

விளக்கம்: ஆரியர் நெருங்கிச் செய்த போரில், பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்தில், பலருடன் சென்று உறையினின்றும் உருவிய ஒளி வீசும் வாட்படையை உடைய மலையனது வேற்படைக்கு அஞ்சி அவ்வாரியப்படை ஓடியது.

ஒருநாள் ஒரு புலவர் காரியைப் புகழ்ந்து பாடிக்கொண்டு அவன் திருமனையை அடைந்தார். காரி தன்னை புகழ்ந்து பாடும் புலவரைக் கண்டான். உடனே எழுந்து சென்று தன் தேரை அவரிடம் ஒப்படைத்து, “அருங்கலைப்புலவரே ! தாங்கள் தங்கள் திருவடிகள் வருந்த நடந்துவராதீர்கள். தேர் மேல் அமர்ந்து இன்பமாய்ச் செல்லுங்கள்...!” என்று மகிழ்ச்சியுடன் கூறி அவருக்கு தேரையும் மற்ற வேண்டிய பொருட்களையும் கொடுத்து அனுப்பினான். இதுபோலவே, நிறைய புலவர்களுக்கு தேர் கொடுத்திருக்கிறான் காரி. அவனுடைய தேர்க்கொடையின் காரணமாக அவனுக்கு தேர்வண்மலையன் என்ற பெயரும் உண்டு.

மேற்கூறிய சம்பவத்தைப் பற்றி கபிலர் புறநானூற்றில் ஒரு பாடல் இயற்றியுள்ளார். (புறம் 123). அது சற்றே எள்ளல் தொனி கலந்த பாடல் என்பதால் தனிப்பதிவாக வெளியிடுகிறேன். அது குறித்து யாருக்கேனும் ஏற்கனவே தெரிந்திருந்தால் பின்னூட்டமிடவும்.

காரிக்குக் கொடையாலும் படையாலும் வரவரப் பெரும்புகழ் வளர்வதைக்கண்ட சில சிற்றரசர்கள், அவன்மீது அழுக்காறு கொண்டார்கள். சில குறுநில மன்னர்களின் சூழ்ச்சியால் காரிக்கும் அதியமான் அஞ்சிக்கும் பகைமை நேர்ந்தது. அதன் காரணமாக, ஆற்றல் படைத்த அஞ்சி காரியின்மேல் படையெடுத்துத் திருக்கோவலூரை முற்றுகையிட்டான். காரியோ அஞ்சினான். ஆயினும், தன்னிடம் உள்ள சேனைகளைக் கொண்டு எதிர்த்து அவனோடு போரிட்டு பார்த்தான். தனக்கு வெற்றி ஏற்படாது என்று உணர்ந்துக்கொண்டான். அவன் சேனைகளுள் மிகுதியும் மாண்டொழிந்தன. முடிவில் காரி உயிர் தப்பினால் போதுமென திருக்கோவலூரை விட்டு சேரநாட்டிற் புகுந்தொளிந்தான். பிறகு அஞ்சி திருக்கோவலூரைப் பிடித்துக்கொண்டு, தன் நாட்டுடன் சேர்த்தாள்வானாயினன்.

அப்போரில் அஞ்சிக்கு புறமுதுகு காட்டிய காரி சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் தஞ்சம் புகுந்தான். சேரனும் காரியை ஏற்றுக்கொண்டு நல்லுரை பல நவின்றான். மீண்டும் அவன் நாட்டை அதியனிடமிருந்து மீட்டுத் தருவதாய் வாக்களித்தான். காரியும் சற்று மனந்தேறினான். ஆயினும், அவன் தனது நாட்டைப் பெறுங்காலம் நோக்கிச் சாலத்துயர் உற்றிருந்தான்.

பெருஞ்சேரல் இரும்பொறைக்கு முன்பிலிருந்தே சிற்றரசனான ஓரியின் மீது வெறுப்பு இருந்து வந்தது. அவன் காரியைக் கொண்டு ஓரியைத் தொலைத்துவிட எண்ணினான். சேரனே நேரடியாக ஓரியின் மீது போர் தொடுக்கலாம் எனினும் அது முறையாகாது. ஓரி சேரனுடன் சமபலம் பொருந்தியவனில்லை. அவ்வாறு சமபலமில்லாதவனிடம் போரிட்டு வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அதனால் வசையே ஒழிய இசையேற்படாது. எனவே காரியை அழைத்து தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தான். அதனை ஏற்றுக்கொண்ட காரி, இரும்பொறையின் பெருஞ்சேனைக்கு தலைமை தாங்கிச் சென்று கொல்லிமலையை முற்றுகையிட்டான்.

ஓரியுடனான காரியின் போர் பலநாள் நீடித்தது. அதனை சிறுபாணாற்றுப்படை காரிக்குதிரை காரியோடு மலைந்த ஓரிக்குதிரை ஓரியும் என்று கூறுகிறது. பின்னர் ஓரி இப்போர் சேரனால் ஏற்பட்டது என்று தெரிந்துக்கொண்டான். போரின் முடிவில் காரி மிகத் தந்திரமாக ஓரியை விண்ணுலகிற்கு அனுப்பி வைத்தான். 

ஓரி அகன்றுவிட்டதைக் கேள்விப்பட்ட இரும்பொறை தன் கவலையை ஒழித்தான். காரிக்கு உதவி செய்ய முற்பட்டான். உடனே பெருஞ்சேனையைத் திரட்டிக்கொண்டு தானே சேனைத்தலைவனாக அமர்ந்து அதியமானின் தகடூரை முற்றுகையிட்டான். அதியமானும் குகையிலிருந்து வெளிப்படும் சிங்கம் போல நேருக்கு நேராக போரில் இறங்கினான். ஆயினும் இரும்பொறையுடன் காரியும் சேர்ந்து போரிட்டமையால் அதியமான் படையில் சேதம் அதிகரிக்கத் தொடங்கியது. இறுதியில் இரும்பொறை அதியமானை போரில் கொன்று வீழ்த்தி அவனுடைய நாட்டை தன்னுடையதாக்கிக் கொண்டான். வெற்றிக்களிப்பில் மிதந்த சேரன் காரிக்கு அவனது ஆட்சிப்பகுதியான முள்ளூர் மலை நாட்டை தந்தான்.

கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே !
அழல்புறந் தரூஉம் அந்தணர் அதுவே
வீயாத் திருவின் விறல்கெழு தானை
மூவரு ளொருவன் துப்பா கியரென
ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோளள வல்லதை
நினதென இலை நீ பெருமிதத்தையே !
(புறம் 122) 
 
விளக்கம்: பழந்தமிழ் திருந்தடிக் காரி ! நின்னாடு கடலாலும் கொள்ளப்படாது. பகைவரும் மேற்கொள்ளார். நின்னாடு அந்தணருடைய வேள்வித் தீயைப் போன்றது. மூன்று பெரும் வேந்தர்களிடமிருந்து வந்தோர் நின்னை வாழ்த்தித் தரும் பெரும் பொருள் நும் குடியை வாழ்த்தி வரும் பரிசிலருடையது. ஆதலால் வடதிசை தோன்றும் அருந்ததியை ஒத்த கற்பினளான மென்மொழி நின்துணைவியை மட்டுமே உன்னுடையது என்று சொல்ல ஒன்று உடையவனாய் இருக்கையில் எப்படி நீ பெருமிதமுடையவனாய் இருக்கிறாய் ?

இங்ஙனம், இழந்த நாட்டினை திரும்பப் பெற்றுவிட்ட மலையமான் திருமுடிக்காரி தன்னாட்டை முன்புபோல நன்கு ஆட்சி புரிந்தான்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 June 2013

கடையேழு வள்ளல்கள் – அதியமான்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பண்டைய தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்களுள் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரே முடியுடை வேந்தர்கள். அவர்களைத் தவிர சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் மூவேந்தர்களிடம் பரிசாகப் பெற்ற நாடுகளை ஆண்ட அரசர்களும், அரிய ஆற்றல் கொண்டு தாமே புதிதாக நாடுகோலியோ, வேறு நாட்டைக் கைப்பற்றி ஆண்ட வேந்தர்களும் வீற்றிருந்தார்கள். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சேரநாட்டில் அதியை எனும் சிற்றூர் இருந்தது. அவ்வூரை ‘அஞ்சி’ என்பவன் ஆண்டு வந்தான். அவனை எழினி என்றும் கூறுவர். அக்காலத்தில் சேர நாட்டை சூழ்ந்து, சிறு நாடுகள் பல இருந்தன. அவற்றுள் குதிரைமலைக்கு அருகே அமைந்துள்ள தகடூரும் ஒன்று. அச்சமயம் தகடூர் நாட்டை ஆண்டுவந்த சிற்றரசன் இறந்துவிட்டான். உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. அமைதியகன்றது. தாமே அரசன் என்று ஆளாளுக்கு பறை சாற்றினர். தகவல் எழினிக்கு சென்றடைந்து, அவன் சேனைகளுடன் தகடூரை அடைந்தான். கலகத்தலைவர்களை அடக்கினான். அடங்காதவர்களைக் கொன்றான். எழினி அந்நாட்டிற்கு முடிமன்னன் ஆனான். எழினி, அதியை என்ற ஊரிலிருந்து வந்திருந்தமையால் தகடூர் மக்கள் அவனை அதியமான் என்று வழங்கினர்.

அதியமான் உடல்நலம், தேகப்பயிற்சியில் ஈடுபாடு கொண்டவன் என்ற செய்தி புறநானூற்றில் பதியப்பட்டுள்ளது. விற்பயிற்சி, வாட்பயிற்சி பயின்றிருந்தான். நல்ல பலசாலியாகவும், வீரனாகவும் விளங்கினான்.

அதியமானின் உடல் வலிமை பற்றி அவ்வையார் பாடியது :-

‘போற்றுமின் மறவீர் ! சாற்றதும் நும்மை
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தான்படு சின்னீர் களிறுஅட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
நுண்பல் கருமம் நினையாது
இளைமன் என்றிகழின் பெறலரிது ஆடே !

(புறம் – 104)

விளக்கம்: அதியமான் முழவெனப் பருத்த தோள்களை உடையவன். எட்டுத் தேர்களை ஒரே நாளில் செய்ய வல்ல ஒருவர், முப்பது நாட்கள் முயன்று திட்டமிட்டு ஒரு திண்ணிய தேர்க்காலை மட்டும் செய்தால் அது எந்த அளவிற்கு வலிமை கொண்டதாக இருக்குமோ அதுபோன்று உரமும் உருவமும் கொண்டவன். போர் என்றால் காலம், இடம், மாற்றார் வலிமை போன்றவற்றை நன்கு அறிந்து செயல்படும் திறன் பெற்றவன். ஆற்றல் மிகுந்த கடாவால் போகமுடியாத துறையும் உளதோ ? அதுபோல நீ களம் புகுந்தால் எதிர்ப்பாரும் இருக்கிறார்களா ?

எல்லோரிடத்தும் சாலப்பரிவோடு நடந்துக்கொள்ளும் நற்பண்பு அதியமானிடம் இயல்பிலேயே அமைந்திருந்தது. அதனால் அவன் குடிமக்களிடமும் மிக்க அன்புடன் நடந்துக்கொண்டான். அவனுடைய ஆட்சியில் மக்கள் அச்சமற்று களிப்புற்று வாழ்ந்தனர். தன்னிடத்தில் யார் எச்சமயத்தில் வந்து எப்பொருள் கேட்பினும் இல்லை என்றுரையாமல் ஈந்துவந்தான். அவன் தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக தன்னிடம் வரும் புலவர் பெருமக்களிடம் அளவிலா அன்புடன் அளவளாவி வரைவிலாப் பொருளளிப்பான். அப்புலவர்களும் அவனை பாடி அவனுடைய புகழை நாடெங்கும் பரப்பினர். அதியமான் சிற்றரசனாயினும் அவனுடைய அரசியல் முறையை பேரரசர்களும் கண்டு வியந்தனர். எனினும் நாடெங்கும் பரவியிருந்த அதியமானின் புகழ் அவர்களை பொறாமை கொள்ள வைத்தது.

அவ்வையார் என்ற சரித்திரப்புகழ் வாய்ந்த மூதாட்டியார் அதியமானின் காலத்தில் தான் வாழ்ந்து வந்தார். அவர் அதியமானின் பெருங்குணத்தை அறிந்து, காண விழைந்தார். தகடூரை நோக்கி பயணித்தார். வாகன வசதிகளற்ற காலம். எங்கே செல்வதென்றாலும் நடந்தே செல்ல வேண்டும். செல்வந்தர்களிடம் மட்டும் மாட்டுவண்டி இருக்கும். அவ்வையிடம் அது இல்லாததால் நடந்தே தகடூரை சென்றடைந்தார். அதியமான் ஒவ்வொரு வேளை புசிப்பதற்கு முன்பும் தன் மாளிகைக்கு வெளியே வந்து ஏழை எளிய மக்கள் யாராவது பசியோடு இருக்கிறார்களா என்று சுற்றிப்பார்ப்பது வழக்கம். அப்படி ஒருநாள் பார்க்கும்போது அவனுடைய கண்களுக்கு அவ்வையாரின் வருகை தென்பட்டது. அதுதான் அவ்வையாருக்கும் அதியமானுக்கும் நிகழ்ந்த முதல் சந்திப்பு. எவர் தன்னிடம் வரினும் வரவேற்று உபசரிக்கும் உத்தம குணம் வாய்த்த அதியமான், வந்திருப்பது அவ்வையார் என்பதை அறியாமலே, அவருக்கு உணவளித்து, உபசரித்து, உண்ட களைப்பில் உறங்க இடம்கொடுத்துவிட்டு பின் தானும் புசிக்கச் சென்றான். பின்னர், அவ்வையாரை அறிந்துக்கொண்டபின் அவரை அங்கேயே தங்கிவிடும்படி அதியமான் வலியுறுத்தினான். அதியமானின் விருந்தோம்பும் பண்பு அவ்வையை கவர்ந்துவிட்டது. ஆயினும் அதியமானின் பெருங்குணத்தை மென்மேலும் பரப்ப வேண்டும் என்று விரும்பிய அவ்வை, அடிக்கடி வருவதாக கூறிவிட்டு அதியமானிடம் இருந்து புறப்பட்டார்.

கூறியதை போலவே அவ்வையார் பலநாட்கள் பரிவுடன் வந்து அதியமானிடம் தங்கியிருந்தார். அதனைப் பற்றிய புறநானூற்றுப் பாடல் :-

ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம்
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாட் போன்ற விரும்பினன் மாதோ;
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉம் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யா காதே;
யருந்தே மாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா, வாழ்கவன்றாளே !

(புறம் - 101)

விளக்கம்: அழகிய பூனணிந்த யானையையும் ஒழுங்காயமைந்த தேரையும் உடைய அதியமானிடம் யாம் ஒருநாளன்று, இருநாளன்று, பலநாள் பலரோடு சென்று தங்கினோம். அங்ஙனம் சென்றபோதும் அவன் எம்மை முதல்நாள் கண்டபோது காட்டிய அன்பையே என்றும் காட்டி உபசரித்தான். அதியமானிடம் பரிசில் பெறும் காலம் நீண்டாலும் அது யானை தன் தந்தங்களுக்கிடையே வைத்துள்ள கவளம் போன்று தம் கைக்குரிய தப்பாததாகும். ஆகையால், அதனை உண்ண விரும்பும் நெஞ்சே நீ வருந்த வேண்டாம். அவன் தாள் வாழ்க !

ஒருமுறை மூதறிஞர் ஒருவர் அதியமானை நாடி வந்திருந்தார். அதியமானும் வழக்கம்போல அவர் மனம் மகிழும்படி உபசரித்தார். அதியமானின் உபசரிப்பில் மயங்கிய மூதறிஞர் அவருக்கு குதிரைமலை ரகசியத்தை கூறினார். அதாவது, குதிரைமலையின் மீது பெரிய சரிந்த பிளவு ஒன்று உண்டு. அப்பிளவில் ஒரு நெல்லிமரம் உண்டு. அதில் பல்லாண்டுக்கொருமுறை இரண்டொரு கனிகள் உண்டாகும். அம்மரத்திற்கு அருகில் அத்தனை எளிதாக யாரும் செல்ல முடியாது. அரிய பெரிய முயற்சி எடுத்து அம்மரத்திலிருந்து நெல்லிக்கனியை பறித்து உண்டால் நீண்ட நாட்கள் வாழலாம். நீ தக்கபடி முயன்றால் அதனைப் பெறுவாய் என்று அதியமானிடம் கூறிவிட்டுச் சென்றார். அதியமான் அன்றிலிருந்து அந்த நெல்லிமரத்தை கண்டுபிடிக்க முயன்றான். ஒருநாள் ஆபத்தான பெரும்பிளவை கண்டான். அச்சரிவில் தவறி விழுந்தவன் பாதாளம் புக்கொழிவான். இடையிடையே முட்புதர்கள் கொண்ட அப்பிளவில் சிக்குண்டால் உடல் சல்லடைக்கண்கள் ஆகிவிடும். அப்பிளவில் தன் ஏவலாளரை இயக்கினால் ஆபத்து என்றெண்ணிய அதியமான் தானே பக்குவமாய் இறங்கி மரத்திலிருந்த ஒரே கனியை பறித்துக்கொண்டு தனது மாளிகையை நோக்கி திரும்பினான்.

வழக்கப்படி அன்று அதியமானைக் காண வந்திருந்த அவ்வையார், அதியமானின் வருகைக்காக காத்திருந்தார். அச்சமயம் அங்கே வந்த அதியமான் முகமலர்ந்து இன்சொல் பகர்ந்தான். அவ்வையாருடைய முகவாட்டத்தைக் கண்டான். அவர் பசியினால் களைத்திருக்கிறார் என்று உணர்ந்துக்கொண்டான். உடனே தான் கொண்டுவந்த நெல்லிக்கனியை அவ்வையிடம் கொடுத்து உண்ணும்படி வேண்டினான். அவ்வையாரும் அவ்வண்ணமே உண்டு களைப்பையோட்டினார். கனியின் சுவையை வியந்த அவ்வை அதியமானிடம் அதைப்பற்றி வினவினார். அதியமான் அக்கனியின் வரலாற்றைக் கூறினான். அக்கனியை தான் உண்ணுவதைக் காட்டிலும் அவ்வை உண்டால் அது அவர் உலகிற்கு பல நற்போதனைகளை செய்ய உதவும் என்று உரைத்தான். அதியமானின் மேன்மை கண்டு அவ்வையார் உவகையுற்றார்.

அதுகுறித்து அவ்வையார் பாடிய புறநானூற்றுப் பாடல் :-

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான் !
போரடு திருவின் பொலந்தார் அஞ்சி !
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும ! நீயே தொன்னிலைப்
பெருமலை விடாகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
தாதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கீத் தனையே

(புறம் - 91)

விளக்கம்: வெற்றி தரும் கூரிய வாளேந்திப் போர்க்களத்தில் பகைவர் இறந்துபட வெட்டி வீழ்த்தி, கழலணிந்த வீரனே ! வீரவளை அணிந்த பெரிய கையினையும் மிகுந்த ஆரவாரத்தைச் செய்யும் முரசினையும் உடைய அதியர்களுக்குத் தலைவனே ! பகைவரை வெல்லும் வீரச்செல்வத்தை விளக்கும் பொன்னால் செய்யப்பட்ட வாகைப்பூ மாலையை சூடிய அஞ்சியே ! தொன்றுதொட்டு புகழப்பட்டு வரும் நன்னிலைமையை உடைய பெரிய மலையின்மேல் உள்ள ஆழ்ந்த பிளவில் வளர்ந்த சிறிய இலைகளையுடைய கரிய நெல்லிமரத்தினது இனிய கனியை, மீண்டும் அத்தகைய கனியைக் பெறுவதற்கு அரிதென்று கருதாமலும், அதனால் பெறும் பெரும்பயனை அரிதென்று கருதாமலும், அதன் பெரும்பயனை எமக்கு முன்னதாகக் கூறாமலும் உன்னுள்ளத்துள் அடக்கிக்கொண்டு எமது சாதலை ஒழிக்க அளித்தாய். ஆதலால் பெருமையோனே, நீ பால்போன்ற வெண்மையான பிறைமதியையும், நெற்றிக்கு அழகாக பொலிவுறும் திருமுடியினையும், நீலமணி போலும் கரிய திருக்கண்டத்தையும் உடைய ஒப்பற்ற பரமசிவனைப் போல நிலைபெறுவாயாக.

அதியமான், அவ்வையாருக்கு அருங்கனியளித்த செய்தி நாடெங்கும் பரவியது. அது மூவேந்தர்களுக்கும் எட்டிற்று. அதனால், அவர்கள் முன்னையினும் மிகுந்த பொறாமையுற்றார்கள். அவர்கள் கூடி அதியமானை ஒழிக்க முடிவுசெய்து, அதற்கேற்ற நேரம் கருதி காத்திருந்தார்கள். குறுநில மன்னர்கள் சிலரும் அதியமானிடம் பொறாமை கொண்டிருந்தார்கள். அவர்களில் கடையேழு வள்ளல்களில் இன்னொருவரான மலையமான் திருமுடிக்காரியும் ஒருவர். காரி, அதியமானுக்கு எதிராக வேற்றரசரிடம் மித்திரபேதம் செய்துவந்தான். அச்செயலை அறிந்த அதியமான் தன் சேனைகளை மலையமாநாட்டுக்கு அனுப்பி பயமுறுத்தி அவன் கொட்டத்தை அடக்கினான். மேலும், காஞ்சிமாபுரியை ஆண்டுவந்த தொண்டைமான் என்கிற வேந்தன் அதியமானிடம் மாற்றெண்ணம் கொண்டு போர்புரியக் கருதினான். அதனை அறிந்த அதியமான் அவ்வையாரை தூது அனுப்பி தொண்டைமானின் பிள்ளைப்புத்தியை போதித்து போக்கும்படி பணித்தான். தொண்டைமானும் அவ்வையாரின் வேண்டுகோளை அங்ஙனமே ஆகுக என்று ஏற்றுக்கொண்டான்.

அடுத்த ஆபத்து இரும்பொறை வடிவத்தில் வந்தது. அப்போது சேரநாட்டை பெருஞ்சேரல் இரும்பொறை என்ற பேரரசன் ஆண்டுவந்தான். அதியமானுக்கு அவ்வை போல இரும்பொறைக்கு அரிசில்கிழார் என்னும் புலவர் பதிற்றுப்பத்தில் எட்டாம் பத்தை பாடியிருக்கிறார், தம் முரசுக்கட்டிலில் களைத்து உறங்கிக்கொண்டிருந்த மோசிக்கீரனார் எனும் செந்நாப்புலவருக்கு (அப்படி உறங்குபவர்களுக்கு அந்நாட்டு சட்டப்படி மரண தண்டனை) அருகில் நின்று சாமரம் வீசிய பெருமை இரும்பொறைக்கு உண்டு. இரும்பொறை அக்காலத்தில் சோழனையும் பாண்டியனையும் வென்றவன். மற்றொரு வள்ளலான வல்வில் ஓரியை வென்று கொல்லிமலையைக் கொண்டவன். அவனுடைய ஆட்சி எல்லை தகடூரை நெருங்கிவிடவே அதியமானுக்கு அச்சம் துளிர்விட ஆரம்பித்தது. அதியமான் இரும்பொறையை எதிர்க்க தயாரானான். அப்போது அரிசில்கிழார் அதியமானுடைய நலன்கருதி, இரும்பொறையிடம் அனுமதி பெற்றுக்கொண்டு அதியமானிடம் சென்று போரிடாமல் இருப்பதே அவனுக்கும் தகடூர் மக்களுக்கும் நல்லது என்று எடுத்துரைத்தான். அவருடைய அறிவுரையை அதியமான் மறுத்துவிட்டான். அரிசில்கிழார் சென்ற தூது அற்பத்தனமாகி விட்டதால் பெருஞ்சினம் கொண்ட இரும்பொறை தகடூர் மீது போர் தொடுத்தான்.

ஒரு சமயம் அதியமானால் பாதிக்கப்பட்ட மலையமான் திருமுடிக்காரியும் தன் படைகளுடன் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையுடன் இணைந்துக்கொண்டான். இரு படைகள் இணைந்து போரிட்டதால் அதியமான் படையில் சேதம் அதிகரிக்க ஆரம்பித்தது. முடிவில் அதியமான் பெருஞ்சேரல் இரும்பொறையின் வாள் பாய்ந்து வீரமரணம் அடைந்தான். தன்னால் கொலையுண்ட அதியமான் நெடுமானஞ்சிக்கு இறுதியாகச் செய்யும் கடன்களை சேரமானே முன்னின்று செய்தான். உண்மையிலேயே வீரத்திலும் ஈரத்திலும் சிறந்த அதியமானின் மனம் எதிரியே ஆனாலும் அவனது ஏற்றமிகு ஆற்றலைப் போற்றும் மாற்றுக்குறையாப் பண்பாளனான சேரமானின் நெஞ்சில் கழிவிரக்கத்தைச் சுரக்கச் செய்தது போலும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment