Showing posts with label ori. Show all posts
Showing posts with label ori. Show all posts

17 October 2013

கபிலரின் கலாய்த்தல் திணை


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முதலில், பொதுவாக மப்பில் இருப்பவர்கள் மத்தியில் நிகழும் சில உரையாடல்களைப் பற்றி பார்ப்போம். நண்பர்கள் புடைசூழ போதையை போட்டுக் கொண்டிருக்கும்போது குழுவில் யாரேனும் ஒருவர் உணர்ச்சிவயப்பட்டு “மச்சான்... நான் போதையில சொழ்றன்னு நினைக்காத....” என்று ஆரம்பிப்பார். உடனே அவருக்கு ஏறிவிட்டது என்கிற உண்மையை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். இன்னும் ஒரு சிலர் நண்பராவது மண்ணாவது உனக்கு சீக்கு வந்தா எனக்கென்ன என்கிற ரீதியில் பழகுவார்கள். ஆனால் போதையேறி விட்டால் நண்பர் மீது பாசமழை பொழிவதும் கொடைவள்ளலாக பணத்தை வாரியிறைப்பதும் நடக்கும். அந்த மாதிரி ஒரு போதை நண்பர் வாழும் வள்ளலாக மாறிக்கொண்டிருக்கும்போது அவரிடம், “மச்சான்... சில பேர் போதையில தான் கன்னாபின்னான்னு செலவு பண்ணுவாங்க... ஆனா நீ எவ்வளவு சரக்கடிச்சாலும் தெளிவா இருக்க மச்சான்...” என்று உசுப்பேற்றி விட்டால் எப்படி இருக்கும் ?

ஓகே, இப்போது கடையேழு வள்ளல்கள் சீரிஸின் முந்தைய பதிவான மலையமான் திருமுடிக்காரியின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தை பார்ப்போம். ஒருநாள் ஒரு புலவர் காரியைப் புகழ்ந்து பாடிக்கொண்டு அவன் திருமனையை அடைந்தார். அப்போது காரி, தன்னை எளியரும் காணும்படி வெளியிடத்தில் அமர்ந்திருந்தான். தன்னைப் புகழ்ந்து பாடும் புலவரை எதிரில் கண்டான். உடனே எழுந்து சென்று தன் தேரை அவரிடம் ஒப்படைத்து, “அருங்கலைப்புலவரே ! தாங்கள், தங்கள் திருவடிகள் வருந்த நடந்துவந்தீர்கள்; மீண்டும் அவ்வாறு நடவற்க: இத்தேர்மேல் அமர்ந்து இன்பமாய்ச் செல்க.” என்று மிக்க மகிழ்ச்சியுடன் கூறி மற்றும் வேண்டிய பொருள்கள் பல அளித்து அனுப்பினான். அதனை நேரில் கண்டுகொண்டிருந்த கபிலர் ஒரு பாடலை பாடினார். அது புறநானூற்றில் 123வது பாடலாக பதியப்பட்டுள்ளது.

நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கு மெளிதே தேரீ தல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழா தீத்த விழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி யுறையினும் பலவே !
புறம் 123

விளக்கம்: உலகிலுள்ள மக்கள் சிலர் மது அருந்துகிறார்கள். அதனால் மதிமயங்கிப் போகிறார்கள். அவ்வமயம் அவர்கள் இன்னது செய்யவேண்டும். இன்னது நீக்கவேண்டும் என்று ஓராமல் என்னென்னவோ செய்துவிடுகிறார்கள். அச்செயல்களுள் கொடைச்செயலும் ஒன்று. வெறிகொண்டபோது அளவுகடந்த கொடை செய்வது குடியர் எல்லோருக்கும் இயல்பு. தேர் முதலிய பொருள்களை அளிப்பார்கள். அங்ஙனம் மயக்கச் சேர்க்கையால் செய்யும் கொடை இயற்கையாகாது. அது செயற்கை கொடையாகும். காரி அவ்வாறு செய்பவன் அல்லன். இன்று காலை புதிதாய் கொணர்ந்த மதுவை உண்டான். ஆனால், அதன் மயக்கத்திற்கு ஆட்படவில்லை. அதுவும் அவன் மதியை ஆட்கொள்ளவில்லை. அவன் நல்லுணர்வுடனே தேரைப் புலவருக்கு அளித்தான். அவ்விதம், அவன் தேரை அளிக்கையில் வெறியர் போல மகிழவும் நகைக்கவும் இல்லை. ஆகையால், அக்கொடை இயற்கையையேச் சாரும்.

கபிலரின் வரிகளை கொஞ்சம் காம்பாக்ட்டாக புரிந்துக்கொள்வதென்றால் “மச்சான்... சில அயோக்கியப்பயலுக அப்படியெல்லாம் செய்வாங்க மச்சான்... ஆனா நீ யோக்கியன்டா...” என்று மறைமுகமாக கலாய்த்திருப்பது தெரிகிறது. கூடவே மன்னர்களின் கொடைபண்பு குறித்த உண்மைகளும், கபிலரின் ஹியூமர் சென்ஸும் புலப்படுகின்றன. நாம் முந்தய சில பதிவுகளில் வாசித்த புலவர்களைப் போல அல்லாமல் கபிலர் கொஞ்சம் ப்ராக்டிக்கலாகவும், தைரியமாகவும் மன்னர்களிடம் நடந்திருக்கிறார். அடுத்த பதிவில் அப்ரைசல் பற்றி கபிலர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 October 2013

கடையேழு வள்ளல்கள் – காரி


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கிடையே, தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு நாடு அமைந்திருந்தது. மலைகள் அதிகம் கொண்டது என்பதால் மலையமா நாடு என்று மலாடு என்றும் அழைக்கப்பட்ட நாடு அது. அந்த மலைகளுள் பெரியது முள்ளூர் மலை. மலையடிவாரத்தில் முள்ளுள்ள கொடிகள் பல முளைத்து மலையின் மேல் ஊர்ந்து செல்லும் காரணத்தினால் அப்பெயர் பெற்றிருந்தது. அம்மலை நாடு பெண்ணையாற்றின் உதவியால் பலவளங்களும் பெற்றுச் சிறந்திருந்தது. திருக்கோவலூரை தலைநகரமாகக் கொண்ட அம்மலையமா நாட்டை காரி என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் முதலில் முள்ளூருக்கும் முள்ளூர் மலைக்கும் தலைவனாகிப் பிறகு மலை நாட்டிற்கே திருமுடி புனைந்து அரசன் ஆனான். அவனுடைய குதிரை கார் நிறமுடையது. அதனால் அவன் மலையமான் திருமுடிக்காரி என்று அழைக்கப்பட்டான்.

படம்: இணையத்தில் இருந்து பெறப்பட்ட சித்தரிக்கப்பட்ட படம்
காரி ஒரு சிறந்த கல்விமான். ஊர்கள் தோறும் கல்விக்கூடங்கள் பல அமைத்தவன். பாலின பேதமின்றி மக்கள் கல்வியறிவு பெற ஏற்பாடு செய்தவன். காரி கல்வியில் சிறந்து விளங்கியதோடு மட்டும் நில்லாமல் போர்ப் பயிற்சியிலும் வலிமை கொண்டவனாக விரும்பினான். எனவே, தனக்கென ஒரு பஞ்சகல்யாணி குதிரையைத் தேர்ந்தெடுத்து அதனைப் போருக்கு ஏற்ப பழக்கினான். அத்துடன் வில், வாள், வேல் போன்ற படைக்கல பயிற்சிகளிலும் பங்கேற்று வல்லமையாளனாக விளங்கினான். அதனால் மூவேந்தர்களும் தங்களுக்கு வேண்டிய பொழுதெல்லாம் அவனைப் படைத்துணையாக அழைப்பர். காரி எப்பக்கமோ வெற்றி அப்பக்கமே என்ற நிலையில் காரியின் போர்த்திறன் பெரிதும் போற்றப்பட்டது. 

ஒருமுறை சோழ வேந்தர் பரம்பரையில் வந்த பெருநற்கிள்ளி என்ற சிற்றரசன் உறையூரை ஆண்டு வந்தான். அவனுடைய காலத்தில், சேரர் பரம்பரையில் தோன்றிய யானைக்கண் சேய் என்னும் சிற்றரசன் தொண்டி என்ற ஊரை ஆண்டு வந்தான். யானைக்கண்ணுக்கு உறையூர் மீது ஒரு கண். அதனால் அவன் பெருநற்கிள்ளியைப் பகைத்துக்கொண்டு உறையூரின் மீது அநீதியாகப் படை எடுத்துச் சென்றான். கிள்ளியோடு சண்டையிட்டு பலத்த சேதம் ஏற்படுத்தினான். முடிவில் கிள்ளிக்கு தோல்வியும் இறப்பும் ஏற்பட்டு விடும் என்கிற சூழல் உருவாகியிருந்தது. இந்நிலையில் காரி செய்தியறிந்தான். காரி, கிள்ளியின் பழைய நண்பன். நண்பனுக்கு உதவும்பொருட்டு பெருஞ்சேனையுடன் உறையூர் அடைந்தான். யானைக்கண் சேயின் படைகளை துரத்தியடித்தான். 

காரி வீரத்தில் மட்டுமின்றி நெஞ்சின் ஈரத்திலும் நிகரில்லாத வள்ளலாக இருந்தான். போரில் செய்த உதவிகளின் பொருட்டு மூவேந்தர்களும் அவனுக்கு பல பொருள்களைப் பரிசிலாகவும், ஞாபகார்த்தமாகவும் வழங்குவார்கள். அங்ஙனம் பெற்ற செல்வத்தை ஒருபோதும் தன்னுடையதாக கொண்டதில்லை காரி. அவன் அவனுடைய இல்லத்தலைவி தவிர்த்து மற்ற அனைத்தும் பிறருடையது என்ற எண்ணம் கொண்டிருந்தான். காரி தன்னுடைய அரண்மனை வாயிலில் எவர் வந்து நின்றாலும் வந்தவர்களின் தரத்தையும் திறத்தையும் சீர்த்தூக்கி பாராமல் அனைவருக்கும் வேண்டுவன அளித்தான்.

அக்காலகட்டத்தில் வடநாட்டில் அரசர்களாய் இருந்த ஆரிய வேந்தர்கள் சிறுகச் சிறுகத் தென்னாட்டின்மேல் படையெடுக்கலானார்கள். அப்படி படையெடுத்து வந்தவர்கள் திருக்கோவலூரின் செழுமையைக் கண்டு, அதனை பறித்துக்கொள்ள எண்ணினார்கள். உடனே திரண்ட சேனையுடன் வந்து திருக்கோவலூரைச் சூழ்ந்து முற்றுகையிட்டார்கள். தகவல், காரியின் காதுகளுக்கு எட்டியது. அவன் சிறிதும் அஞ்சவில்லை. தன்னுடைய சேனைகளை சேர்த்துக்கொண்டு போர்க்களம் பூண்டான். இரு கூட்டத்தாரும் பலநாள் சண்டையிட்டார்கள். இறுதியில் காரியின் வாட்படைக்கு ஆரிய படைகள் சின்னாபின்னமானது. ஆரியர்கள் பலர் மாண்டனர். மற்றவர்கள் அஞ்சியோடினார்கள்.

ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒருவேற்கு ஓடி ஆங்கு 

விளக்கம்: ஆரியர் நெருங்கிச் செய்த போரில், பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்தில், பலருடன் சென்று உறையினின்றும் உருவிய ஒளி வீசும் வாட்படையை உடைய மலையனது வேற்படைக்கு அஞ்சி அவ்வாரியப்படை ஓடியது.

ஒருநாள் ஒரு புலவர் காரியைப் புகழ்ந்து பாடிக்கொண்டு அவன் திருமனையை அடைந்தார். காரி தன்னை புகழ்ந்து பாடும் புலவரைக் கண்டான். உடனே எழுந்து சென்று தன் தேரை அவரிடம் ஒப்படைத்து, “அருங்கலைப்புலவரே ! தாங்கள் தங்கள் திருவடிகள் வருந்த நடந்துவராதீர்கள். தேர் மேல் அமர்ந்து இன்பமாய்ச் செல்லுங்கள்...!” என்று மகிழ்ச்சியுடன் கூறி அவருக்கு தேரையும் மற்ற வேண்டிய பொருட்களையும் கொடுத்து அனுப்பினான். இதுபோலவே, நிறைய புலவர்களுக்கு தேர் கொடுத்திருக்கிறான் காரி. அவனுடைய தேர்க்கொடையின் காரணமாக அவனுக்கு தேர்வண்மலையன் என்ற பெயரும் உண்டு.

மேற்கூறிய சம்பவத்தைப் பற்றி கபிலர் புறநானூற்றில் ஒரு பாடல் இயற்றியுள்ளார். (புறம் 123). அது சற்றே எள்ளல் தொனி கலந்த பாடல் என்பதால் தனிப்பதிவாக வெளியிடுகிறேன். அது குறித்து யாருக்கேனும் ஏற்கனவே தெரிந்திருந்தால் பின்னூட்டமிடவும்.

காரிக்குக் கொடையாலும் படையாலும் வரவரப் பெரும்புகழ் வளர்வதைக்கண்ட சில சிற்றரசர்கள், அவன்மீது அழுக்காறு கொண்டார்கள். சில குறுநில மன்னர்களின் சூழ்ச்சியால் காரிக்கும் அதியமான் அஞ்சிக்கும் பகைமை நேர்ந்தது. அதன் காரணமாக, ஆற்றல் படைத்த அஞ்சி காரியின்மேல் படையெடுத்துத் திருக்கோவலூரை முற்றுகையிட்டான். காரியோ அஞ்சினான். ஆயினும், தன்னிடம் உள்ள சேனைகளைக் கொண்டு எதிர்த்து அவனோடு போரிட்டு பார்த்தான். தனக்கு வெற்றி ஏற்படாது என்று உணர்ந்துக்கொண்டான். அவன் சேனைகளுள் மிகுதியும் மாண்டொழிந்தன. முடிவில் காரி உயிர் தப்பினால் போதுமென திருக்கோவலூரை விட்டு சேரநாட்டிற் புகுந்தொளிந்தான். பிறகு அஞ்சி திருக்கோவலூரைப் பிடித்துக்கொண்டு, தன் நாட்டுடன் சேர்த்தாள்வானாயினன்.

அப்போரில் அஞ்சிக்கு புறமுதுகு காட்டிய காரி சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் தஞ்சம் புகுந்தான். சேரனும் காரியை ஏற்றுக்கொண்டு நல்லுரை பல நவின்றான். மீண்டும் அவன் நாட்டை அதியனிடமிருந்து மீட்டுத் தருவதாய் வாக்களித்தான். காரியும் சற்று மனந்தேறினான். ஆயினும், அவன் தனது நாட்டைப் பெறுங்காலம் நோக்கிச் சாலத்துயர் உற்றிருந்தான்.

பெருஞ்சேரல் இரும்பொறைக்கு முன்பிலிருந்தே சிற்றரசனான ஓரியின் மீது வெறுப்பு இருந்து வந்தது. அவன் காரியைக் கொண்டு ஓரியைத் தொலைத்துவிட எண்ணினான். சேரனே நேரடியாக ஓரியின் மீது போர் தொடுக்கலாம் எனினும் அது முறையாகாது. ஓரி சேரனுடன் சமபலம் பொருந்தியவனில்லை. அவ்வாறு சமபலமில்லாதவனிடம் போரிட்டு வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அதனால் வசையே ஒழிய இசையேற்படாது. எனவே காரியை அழைத்து தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தான். அதனை ஏற்றுக்கொண்ட காரி, இரும்பொறையின் பெருஞ்சேனைக்கு தலைமை தாங்கிச் சென்று கொல்லிமலையை முற்றுகையிட்டான்.

ஓரியுடனான காரியின் போர் பலநாள் நீடித்தது. அதனை சிறுபாணாற்றுப்படை காரிக்குதிரை காரியோடு மலைந்த ஓரிக்குதிரை ஓரியும் என்று கூறுகிறது. பின்னர் ஓரி இப்போர் சேரனால் ஏற்பட்டது என்று தெரிந்துக்கொண்டான். போரின் முடிவில் காரி மிகத் தந்திரமாக ஓரியை விண்ணுலகிற்கு அனுப்பி வைத்தான். 

ஓரி அகன்றுவிட்டதைக் கேள்விப்பட்ட இரும்பொறை தன் கவலையை ஒழித்தான். காரிக்கு உதவி செய்ய முற்பட்டான். உடனே பெருஞ்சேனையைத் திரட்டிக்கொண்டு தானே சேனைத்தலைவனாக அமர்ந்து அதியமானின் தகடூரை முற்றுகையிட்டான். அதியமானும் குகையிலிருந்து வெளிப்படும் சிங்கம் போல நேருக்கு நேராக போரில் இறங்கினான். ஆயினும் இரும்பொறையுடன் காரியும் சேர்ந்து போரிட்டமையால் அதியமான் படையில் சேதம் அதிகரிக்கத் தொடங்கியது. இறுதியில் இரும்பொறை அதியமானை போரில் கொன்று வீழ்த்தி அவனுடைய நாட்டை தன்னுடையதாக்கிக் கொண்டான். வெற்றிக்களிப்பில் மிதந்த சேரன் காரிக்கு அவனது ஆட்சிப்பகுதியான முள்ளூர் மலை நாட்டை தந்தான்.

கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே !
அழல்புறந் தரூஉம் அந்தணர் அதுவே
வீயாத் திருவின் விறல்கெழு தானை
மூவரு ளொருவன் துப்பா கியரென
ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோளள வல்லதை
நினதென இலை நீ பெருமிதத்தையே !
(புறம் 122) 
 
விளக்கம்: பழந்தமிழ் திருந்தடிக் காரி ! நின்னாடு கடலாலும் கொள்ளப்படாது. பகைவரும் மேற்கொள்ளார். நின்னாடு அந்தணருடைய வேள்வித் தீயைப் போன்றது. மூன்று பெரும் வேந்தர்களிடமிருந்து வந்தோர் நின்னை வாழ்த்தித் தரும் பெரும் பொருள் நும் குடியை வாழ்த்தி வரும் பரிசிலருடையது. ஆதலால் வடதிசை தோன்றும் அருந்ததியை ஒத்த கற்பினளான மென்மொழி நின்துணைவியை மட்டுமே உன்னுடையது என்று சொல்ல ஒன்று உடையவனாய் இருக்கையில் எப்படி நீ பெருமிதமுடையவனாய் இருக்கிறாய் ?

இங்ஙனம், இழந்த நாட்டினை திரும்பப் பெற்றுவிட்ட மலையமான் திருமுடிக்காரி தன்னாட்டை முன்புபோல நன்கு ஆட்சி புரிந்தான்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 June 2013

கடையேழு வள்ளல்கள்



அன்புள்ள வலைப்பூவிற்கு,

சுமார் பத்து மாதங்களுக்கு முன்பு என்னுடைய அலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. கிட்டத்தட்ட என்னுடைய குருநாதருக்கு எழுதப்படும் வாசகர் கடிதம் போலவே இருந்தது. நெல்லையிலிருந்து செந்தில் என்பவர் அனுப்பியிருந்தார். அவர் என்னுடைய வாசகர் என்றும், கடையேழு வள்ளல்களை பற்றியும் அவர்கள் ஏன் வள்ளல்கள் ஆனார்கள் என்றும் எழுதும்படி பணித்திருந்தார். அதாவது மயிலுக்கு போர்வை தந்த பேகன், அவ்வைக்கு நெல்லிக்கனி தந்த அதியமான் மாதிரி ஒவ்வொரு வள்ளலுக்கும் பின் உள்ள வரலாற்று சம்பவத்தை குறித்து கேட்டிருக்கிறார். “அது ஏன்டா என்னைப் பார்த்து அந்த கேள்விய கேட்ட !” என்று செந்திலை பளார் விடும் கவுண்டமணி நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது. வாட் எ கோ-இன்ஸிடென்ஸ், நம்முடைய வாசகர் பெயரும் செந்தில் தான் ! இருப்பினும் என்னையும் நம்பி ஒரு ஜீவன் ஒரு வாசகர் விருப்பத்தை முன் வைத்திருப்பதால் தாமதமானாலும் கூட அதனை முடிந்த வரைக்கும் நிறைவேற்றலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். நீங்கள் படித்து இன்புற அன்னார் அனுப்பிய குறுந்தகவல்.

புறநானூறு, சிறுபாணாற்றுப்படை, பத்துப்பாட்டு, லொட்டு லொசுக்கு போன்ற சங்க இலக்கியங்களில் வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. மேலும், அவர்கள் வாழ்ந்த காலத்தை கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுக்கப்பட்டுள்ளனர். ஆகமொத்தம் இருபத்தியொன்று. ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றிய தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. தவிர, செந்தில்நாதர் கடையேழு வள்ளல்களைப் பற்றி மட்டும் கேட்டிருப்பதால் மற்றவர்களை வசதியாக புறக்கணித்து விடலாம். சிறு குறிப்பாக :-

முதலேழு வள்ளல்கள்: சகரன், காரி, நளன், தந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன்
இடையேழு வள்ளல்கள்: அக்குரன், அந்திமான், கர்ணன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன், சந்தன்

சரி, கடையேழு வள்ளல்கள் ? பாரி, அதியமான், பேகன்.... அப்புறம்... அப்புறம்... ம்ம்ம் புரோட்டா சாப்பிடலாமா ? கடையேழு வள்ளல்கள்: பாரி, காரி, ஓரி, அதியன், பேகன், நள்ளி, ஆய் அண்டிரன். ஏன் பாரி, அதியமான், பேகன் - மூவரை மட்டும் நிறைய பேருக்கு தெரிந்திருக்கிறது ? ஏன் கடையேழு வள்ளல்களில் மற்றவர்கள் அவ்வளவு ஃபேமஸ் இல்லை. எனக்குத் தெரிந்த முக்கியமான காரணம், நம்முடைய பாடத்திட்டம். பள்ளிக்கூட கல்வித்தமிழில் பாரி, அதியமான், பேகன் பற்றி படித்திருக்கிறோம். மற்றவர்களை பற்றி அதிகம் படித்ததில்லை. அப்படியே படித்திருந்தாலும் அவை பதினாறு மதிப்பெண் கேள்விகளில் கேட்கப்படுவதில்லை. மறுபுறம், முன்னரே குறிப்பிட்டது போல இவர்கள் மூவருக்கும் இருப்பதைப் போல ஸ்பெஷல் வரலாற்றுச் சம்பவம் மற்றவர்களுக்கு பதியப்படவில்லை / முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அப்படியென்றால் அவர்கள் எதன் அடிப்படையில் வள்ளல்களாக தெரிவு செய்யப்பட்டனர் ? யார் இதையெல்லாம் தெரிவு செய்தார்கள் ? போலவே கோர்வையாக நிறைய கேள்விகள் ஏழத் துவங்கிவிட்டன. இதுகுறித்து சில புத்தகங்கள், இணையத்தரவுகளை படித்து / சேகரித்து வருகிறேன். பெரிய ஆய்வு, ஆராய்ச்சி அளவில் இல்லையென்றாலும் கூட செந்தில் அவர்களுடைய கேள்விக்கு விடை சொல்லும் வகையில் அடுத்த சில வாரங்களுக்கு போதிய இடைவெளியில் கடையேழு வள்ளல்கள் பற்றிய பதிவுகள் தொடராக வெளிவரும் என்பதை மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடிக்குறிப்பு 1: தமிழ் மீதுகொண்ட பற்று காரணமாகவும், வள்ளல்களின் வரலாற்றின் மீதான ஆர்வம் காரணமாகவும் வாசகர் செந்தில் அவர்கள் தன்னுடைய மகனுக்கு பேகன் பெயர் சூட்டியுள்ளார்.

அடிக்குறிப்பு 2: இதுகுறித்த தகவல்களை இணையத்தில் தேடியபோது பதிவுகளைக் காட்டிலும் பின்னூட்டங்களில் நிறைய தகவல்கள் கிடைத்தன. எனவே, இதனை படிப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment