2 March 2015

ஃப்ராய்ட் தந்த முத்தம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மதியம் பன்னிரண்டே முக்காலுக்கு சைதாப்பேட்டை நிலையத்தை தாண்டி விரைந்துகொண்டிருக்கும் கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயிலின் ஒரு பெண்கள் பெட்டிக்கு முந்தைய பெட்டியில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். கண்களில் தூக்கம் தேங்கியிருக்கிறது. கைகளோ சிக்மண்ட் ஃப்ராய்டின் புத்தகமொன்றை தாங்கியிருக்கின்றன. முப்பத்தி ஐந்தாம் பக்கத்தின் வலது மூலையில் உள்ள வரிகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்...

எல்லா கண்ணியமானவர்களுக்கும் அசிங்கமான...

நிறைந்த வெள்ளிக்கிழமை. மஞ்சள் பூக்கள் மரங்களிலிருந்து உதிர்ந்து நிறைந்திருக்கும் சாலை. ஒருபுறம் அரூபமான பாறைகள். மறுபுறம் மரவேலி அமைக்கப்பட்ட அழகழகான தோட்டங்கள். அவற்றில் ஒன்றிலிருந்து பெண் புலியொன்று சிரித்தபடி எட்டிப்பார்க்கிறது. எனது குறி விறைக்கிறது. சுற்றிலும் வீடுகள் எதுவும் தென்படவில்லை. மனிதர்களும், எனக்கு முன்னால் நடந்து கொண்டிருப்பவளைத் தவிர. சமீபத்தில் வெளியான ஒரு திரைப்பட பாடலை பாடியபடி அவள் நடக்கிறாள். நான் தொடர்கிறேன். புட்டங்களில் முரசு கொட்டும் அவள் கூந்தலை கவனிக்கிறேன். கொஞ்ச தூரத்தில் இன்னொரு மனிதன் தென்படுகிறான். கருத்த தேகத்துடன் முக்கால் நிர்வாணமாக நின்றுக்கொண்டிருக்கிறான். எனக்கு முன்பாக நடந்துகொண்டிருப்பவளை பார்த்து ஈஈஈஈ’யென இளிக்கிறான். ஒருவேளை முன்புறமும் முரசு இருக்கிறதோ என்னவோ ? இருந்தாலும் இசை எழுப்ப கூந்தல் இல்லையே. அவன் தடிமனான ஒரு மரக்கிளையை ஜில்லெட் ரேஸர் வைத்து ஷேவ் செய்துகொண்டிருக்கிறான். அதிலிருந்து உதிரும் இலைகள் பச்சையில் இருந்து சிகப்புக்கு மாறுகின்றன. திடீரென முரசொலி கவன ஈர்ப்பு செய்கிறது. நடந்துகொண்டிருந்தவள், சட்டென திரும்பிப் பார்க்கிறாள். பரிட்சயமான முகமாக தெரிகிறது. அவளை திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். பெயர்தான் நினைவுக்கு வரவில்லை. ஒரு படத்தில் நாயகனிடம் மன்னிப்பு கோருவதற்காக கைகளை பறவையின் இறக்கைகளைப் போல விரித்துக் காட்டுவாள். அது மட்டும்தான் நினைவில் இருக்கிறது. ஏதோ என்னிடம் ஏற்கனவே எதையோ பேசி தீர்மானித்து வைத்திருப்பது போல ஒரு பார்வையை உமிழ்ந்துவிட்டு மறுபடியும் நடக்கிறாள். பல மைல் தூரம் நடந்திருப்பாள். சலிக்கவில்லை. பத்து மைலுக்கு முன்னால் பார்த்த பார்வை மட்டும் கிடைத்திராவிட்டால் சலித்திருக்கக்கூடும். சாலையின் இடது புறத்தில் பல்வேறு மரங்களின் கிளைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து நீளமான கிளையொன்றை தேர்ந்தெடுக்கிறாள். இதழ்கள் பிரிகின்றன. அந்த மரக்கிளையை நேசிப்பதாக சொல்கிறாள். அது அவளுடைய தோட்டத்திற்கு தேவைப்படுகிறதாம். மரக்கிளையை தோட்டத்திற்கு கொண்டு வந்து போட முடியுமா ? என்கிறாள்.

ஜனத்திரளின் சத்தம் கேட்கிறது. கிண்டியின் நிலையத்தை கிழித்து நுழைந்துக்கொண்டிருக்கிறது ரயில். இன்னும் நிற்கவில்லை. வேகம் குறைந்துகொண்டே இருக்கிறது. ஜனத்திரள் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

... கனவுகள் வரத்தான் செய்கின்றன ...

அவளும் நானும் நகரத்தின் பிரபலமான ஷாப்பிங் மாலின் நான்காவது மாடியிலோ ஐந்தாவது மாடியிலோ நின்று கீழே பார்த்துக்கொண்டிருக்கிறோம். அன்றைய தினம் போகி என்பதால் மாலுக்கு நடுவே பிரம்மாண்டமாக அக்கினிக்குண்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. யுவன்களும் யுவதிகளும் ஆடைகளை களைந்து தீயில் வீசிவிட்டு நிர்வாணமாக திரும்பிச் செல்கிறனர். எனக்கு அருகில் நின்றுக்கொண்டிருப்பவளும் ஒரு யுவதிதான். அவள் பக்கமாக திரும்பி நேற்றைய ரயில் பயணத்தில் அவள் என் கனவில் வந்தது பற்றி கூறுகிறேன். என்ன கனவு என்கிறாள். சொல்கிறேன். ஒன்று விடாமல் சொல்லவில்லை. ‘முரசு’ சம்பவத்தை மட்டும் தந்திரமாக சென்ஸார் செய்துவிட்டு மற்றவைகளை சொல்கிறேன். உண்மையில் அந்த முரசு சம்பவம் நடைபெற வாய்ப்பில்லை. அவளுக்கு அவ்வளவு நீளமான கூந்தல் இல்லை. முழுக்கனவையும் கேட்டுவிட்டு சுவாரஸ்யமில்லாமல் சிரிக்கிறாள். ஒரு தற்செயலான பொருத்தம் என்ன தெரியுமா ? நான் தற்சமயம் சிக்மண்ட் ஃப்ராய்டை படித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை அதனால் தான் இப்படியெல்லாம் கனவுகள் வருகிறதா ? என்று கவலையாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன். பெண்களுக்கு கவலையுடன் இருப்பவர்களை பிடிக்கிறது. அப்போதுதானே சமாதானப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். அருகில் வந்து என்னை கட்டிபிடித்து அரவணைக்கிறாள். நாவில் பட்ட எக்லேர்ஸ் சாக்லேட் போல உருக்குலைந்து கொண்டிருக்கிறேன். உருக்குலைந்த என்னை உருண்டையாக திரட்டி போகி நெருப்பில் வீசுகிறாள்.

... என்பது ஒரு அழகான உண்மை.

தொப்புள் தெரிய புடவை கட்டிய ஒருத்தி என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறாள். க்ளக் க்ளக் க்ளக். யாரோ பரோட்டாவுக்கு மாவு பிசைந்துவிட்டு கடப்பா கல்லில் போட்டு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அடப்பாவிகளா... இவ்வளவு பலமாகவா அடிப்பது ? அருமையான கனவொன்று கண்டு கொண்டிருக்கின்றேனே அய்யா என்று புலம்புகிறேன். யாரோ என் உச்சந்தலையில் கை வைத்து தம்பி தம்பி என்று அழைப்பது போல தெரிகிறது. அடேய், அரை மணிநேரம் கழித்து வா ஐம்பது பரோட்டா சாப்பிடுகிறேன். இப்போது போய் விடு !

“தம்பி... அக்காவுக்கு காசு கொடுப்பா...”

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 comments:

Manimaran said...

செம்ம...! பின்நவீனத்துவ சிந்தனையில் எழுதியதா..?

அனுஷ்யா said...

இரட்டை பிண்ணலோ? ஒரு கொம்பால் அடிக்கப்படும் முரசு கணவில் வருவது எந்த மாதிரியான குறியீடு? :)

கனவுக்குள் கனவென வரும் inception பாணியிலான எழுத்து. முடியும்போது இங்கொரு பம்பரம் நிற்காமல் சுற்றியிருந்தால் இன்னும் ஒரு படி மேலே போயிருக்கும் என நினைக்கிறேன்.. anyways, அட்டகாசம்.

//இலைகளின் நிறம்// கனவுகளுக்குள் நிறம் இராது என்பதுதான் ஃபிராய்டிய கருத்து. பின்னாளில் அது தவறென நிரூபனம் ஆனது. அத காலத்தில் வெளியான கருப்பு வெள்ளை புகைப்படங்களும் காணொளிகளுமே நிறமற்ற கனாக்களுக்கு காரணம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. பிறவியிலேயே பார்வையற்றவர்களுக்கு காட்சிகளற்ற கனாதானாம். சப்தங்கள் நிறைந்தது. கனவை நாம் நினைவுக்கூர்ந்து சொல்லும்போது அதில் ஒரு நிறத்தைக் குறிப்பிட்டோமெனில், அது அத்தனை முக்கியமானது. ஏதோ அடர்த்தியான குறியீடு. என் திருமணத்திற்கு சில வாரங்கள் முன்பு, என் கனவில் மணமேடையில் என்னருகே அமர்ந்திருக்கும் பெண் நீல நிற புடவை அணிந்திருந்தாள். முகம் சரியாக தெரியவில்லை. அன்றைய தொலைபேசியில் அந்த கனவை அவளிடம் சொன்னேன். ஒரு வாரம் கழித்து கல்யான ஜவுளி எடுக்கப்போகும் போது என் அம்மாவிடம் பேசி நீல நிற புடவை எடுத்துக்கொண்டாள். :)

fine.. Going too much out of the box.. தலைப்பைப் பார்த்ததும் லீனாவின் கவிதையொன்றின் கடைசி வரி நினைவு வந்தது..//அல்லது ஃபிராய்டைப் புணர வேண்டும்// ஆனால் உங்களது பிரமாதம்.

சீனு said...

Attakasam

சீனு said...

Ithuvum attakasam :-)

aavee said...

:)

Philosophy Prabhakaran said...

மயிலன்,

உண்மையில் நான் வண்ணங்களை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. இங்கே கிளைகளும், தோட்டமும் தான் குறியீடு...

அனுஷ்யா said...

ஜில்லெட் கொண்டு ஒரு ஆடவன் மழிக்கும் கிளை, அதே கிளை ஒரு பெண்ணின் பேணிக்காக்கும் ஒரு தோட்டத்திற்கு தேவைப்படுவது எல்லாமே புரிதலுக்கு உறுத்தல் இல்லாதவை. அந்த இலைகளின் நிறத்தில் நீங்கள் செய்திருக்கும் ஜிகினா வேலைதான் கொஞ்சம் யோசிக்க வைத்தது. அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்றமைக்கு நன்றி.. :)

அனுஷ்யா said...

அக்காவுக்கு காசு கொடுப்பா' என்ற நம் தமிழகத்தவர்கள் எவ்வளவோ பரவாயில்லை. விஜயவாடா'விற்கு வடக்கே செல்லும் ரயில்களில் சில அதிர்ச்சிகள் காத்திருக்கும். ஒருவள் என்னை ஆஷிர்வாத் ஆட்டாவெல்லாம் செய்து காசு கேட்க, நான் இல்லை என்பது போல செய்கை காட்ட, அப்படியே அவள் குனிந்து அவள் பாவாடையை எடுத்து தலையை முக்கிவிட்டாள். அப்படியான ஒரு அனுபவம் உங்களுக்கு கிடைத்திருந்தால் இந்த சிறுகதை எப்படி நீண்டிருக்கும் என யோசிக்கிறேன். :)