Showing posts with label piece. Show all posts
Showing posts with label piece. Show all posts

7 January 2014

பேரடைஸ் பிரியாணி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பள்ளிக்கூட பருவத்திலிருந்தே எனக்கு ‘லஞ்ச் பாக்ஸ்’ கட்டிக்கொண்டு போகும் பழக்கத்தின் மீது ஒரு பயங்கர வெறுப்பு. மணியடித்ததும் டிபன் பாக்ஸை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். காக்காய் எச்சம் போடாத ஒரு மரத்தடி நிழலில் இடம்பிடிக்க வேண்டும். டீச்சர் ‘ஷேரிங்’ பற்றி சொல்லிக்கொடுத்திருந்தாலும் குழுவாய் வட்டமிட்டு அமர்ந்து அரட்டையடித்தபடியே சாப்பிடும் கலாசாரத்தில் எனக்கொன்றும் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. சாப்பிடும்போது பேசும் பழக்கம் கிடையாது. அதுவுமில்லாமல் எனது எண்ண அலைவரிசைக்கு நெருக்கமான நண்பர்கள் யாரும் எனக்கு கிடைத்ததில்லை. பெரும்பாலும் தனியாகவே அமர்ந்து சாப்பிடுவேன். அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. யாராவது நான் தனியாக அமர்ந்து சாப்பிடுவதை பார்த்துவிட்டால் என்னவோ சுயமைதுனம் செய்பவனை கையும் குறியுமாக பிடித்துவிட்டதைப் போன்ற பாவனையுடன் என்னடா தனியா உக்காந்து சாப்பிடுற ? என்று அலறித் தொலைப்பார்கள். அதற்காகவே நேரத்தை வீணடிக்காமல் துரிதமாக சாப்பிட்டு முடிப்பதை பழக்கமாக வைத்திருந்தேன்.

ரெண்டு லெக்பீஸையும் பிரபாவுக்கே கொடுத்திட்டேனே !
அதன்பிறகு நான்கு வருடங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்தமையால் லஞ்ச் பாக்ஸ் தொல்லை இல்லை. என் விசுப்பலகையில் அமருபவர்கள், அறைத்தோழர்கள் என சமயத்திற்கு கிடைத்தவர்களோடு போய் சாப்பிட்டு வந்துவிடுவேன். முதன்முதலாக வேலையில் சேர்ந்தபோது ‘க்ரேவ்யார்ட்’ ஷிப்ட் கிடைத்தது. அதாவது இரவு ஒன்பது மணிக்கு துவங்கி காலை ஆறு மணிக்கு முடியும் ஷிப்ட். முதலிரண்டு நாட்களுக்கு சிரமமாக இருந்து, அதன்பின் பழகிவிட்டது. நிம்மதியான வேலை. அங்கேயும் லஞ்ச் பாக்ஸுக்கு வேலை கிடையாது. சில மாதங்களுக்கு பிறகு பகல் ஷிப்டிற்கு மாற்றினார்கள். வீட்டில் எவ்வளவோ சொல்லியும் லஞ்ச் பாக்ஸ் எடுத்துச் செல்ல விடாப்பிடியாக மறுத்துவிட்டேன். உண்மையில் லஞ்ச் பாக்ஸ் சுமப்பது என்பது ஒரு காமன் மேன் இமேஜை கொடுக்கும் என்பதாலும் எனக்கு அதில் விருப்பமில்லை. பட்டினியாக கிடந்தாலும் கிடப்பேனே தவிர லஞ்ச் பாக்ஸ் சுமக்கமாட்டேன். தற்சமயம் யூ.கே ஷிப்ட் வேலை என்பதால் மதிய உணவிற்கு அவசியமில்லை. இரவு உணவிற்கு தான் வெளியே அலைய வேண்டும்.

சமீபத்தில் நான் பணிபுரிந்துக்கொண்டிருக்கும் அலுவலகம் தேனாம்பேட்டையில் இருந்து கிண்டிக்கு மாற்றப்பட்ட போது முதலிரண்டு நாட்கள் உணவுக்காக அல்லாட வேண்டியதாகிவிட்டது. தேனாம்பேட்டையை பொறுத்தவரையில் ஃபாஸ்ட் ஃபுட், வடக்கம்பட்டி புரோட்டா கடை, தலைப்பாகட்டி பிரியாணி, உயர்தர சைவ என பலதரப்பட்ட உணவகங்கள் நடை தூரத்திலேயே இருந்தன. கிண்டியில் அப்படியொன்றும் பிடிபடுவதாக தெரியவில்லை. முதலிரண்டு நாட்கள் ஒரு தள்ளுவண்டிக் கடையில் சப்பாத்தி வாங்கிச் சாப்பிட்டேன். தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி. ச்சை, இப்போது நினைத்துப் பார்த்தால் அசூயையாக இருக்கிறது. நானெல்லாம் வாரத்தில் குறைந்தது ஆறு நாட்களாவது மாமிசம் சாப்பிடுபவன். நான் போய் தொடர்ச்சியாக இரண்டு இரவுகள் சப்பாத்தி, தக்காளி சட்னி சாப்பிட்டிருக்கிறேன். மூன்றாவது நாள் கொலைவெறியுடன் தேடியதில் அரை கிலோ மீட்டர் தொலைவில் மயூரா என்றொரு துரித உணவகம் கிடைத்தது. ஆரம்பத்தில் அங்கே அதிக கூட்டமில்லை. நல்ல மரியாதை கொடுப்பார்கள். வெறும் ஃபிரைட் ரைஸ் மாத்திரமில்லாமல் வேறு உணவு வகைகளும் இருந்தமையால் தொடர்ந்து அங்கே சாப்பிடுவதை வழக்கமாக்கியிருந்தேன். நாளாக நாளாக கடையில் கூட்டம் அதிகரித்தது. மரியாதையும் குறைய ஆரம்பித்தது. ஒருநாள் ஃபிரைட் ரைஸ் சொல்லிவிட்டு இருபது நிமிடங்கள் ஆகியும் வராததால் போங்கடா நொன்னைகளா என்று எழுந்து வந்துவிட்டேன். அதன்பிறகு அங்கே செல்லவில்லை. தற்சமயம் அந்த உணவகம் வேறு பெயருக்கு மாற்றலாகி வேறு உரிமையாளர் அமர்ந்திருக்கிறார்.

அதன்பிறகு வேறு வழியில்லாமல் உணவகம் தேடியபோது தான் கவனித்தேன். அந்த சுற்றுவட்டாரத்தில் ஏராளமான பெண்கள் விடுதியும், சில ஆண்கள் விடுதியும் அவற்றை சார்ந்து இருபதுக்கும் மேற்பட்ட சிறிய உணவகங்களும் இருந்தன. நிறைய இருந்தாலும் சிலவற்றில் மட்டும்தான் தரம் இருக்கும். தக்கன தப்பிப்பிழைக்கும் எனும் விதிப்படி தரமான மெஸ்கள் தவிர்த்து மற்றவை கை மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு மெஸ்’ஸாக சாப்பிட்டு பார்த்து இறுதியில் ஒரு ஆந்திரா மெஸ்ஸின் சால்னாவுக்கு அடிமையாகி அங்கேயே ஐக்கியமாகிவிட்டேன். அந்த மெஸ்’ஸில் சால்னா தவிர்த்து மற்ற அனைத்தும் எனக்கு எடாகூடமாகவே இருந்தன. அங்குள்ள பணியாளர்கள் அனைவரும் ஆந்திராவைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்கள். யாருக்கும் தமிழ் தெரியாது. அங்குள்ள தொலைக்காட்சியில் ஜெமினி சேனலில் சன் டிவியின் நெடுந்தொடர்களின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பு ஓடிக்கொண்டிருக்கும். சால்னா ஊத்துவதற்கு ஏதோ அவன் அப்பன் வீட்டுச் சொத்தை கேட்டது போல சதாய்ப்பான். அரைக்கரண்டி ஊற்றிவிட்டு முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பான். நான் அங்கே சால்னா தவிர்த்து வேறு எதையும் ஊற்றிச் சாப்பிடுவதில்லை என்று நன்றாக தெரிந்தும் ஒவ்வொரு முறையும் சாம்பார் வாளியை என் முன் கொண்டுவந்து காட்டி வசை வாங்கிக்கொள்வார்கள். இவை எல்லாம் கூட பரவாயில்லை. அங்குள்ள சிறுவர்களுக்கு என் தலைமயிர் மீது ஒரு கண். மிகைப்படுத்தி சொல்லவில்லை. அங்கு போய் அமர்ந்துவிட்டால் குறைந்தது நான்கு பணியாளர்களாவது என் தலைமயிரை குறுகுறுவென பார்த்துக்கொண்டிருப்பார்கள். வாஷ் பேஸினுக்கு அருகில் சென்று ஒரு சிலுப்பு சிலுப்பினால் பின்னால் நின்று இரண்டு பேர் பார்த்தபடி அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொள்வார்கள். அவர்கள் அனைவரும் கே’யாக இருப்பார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. அங்கிருக்கும் நேரம், அழகாக பிறந்த பெண்கள் அன்றாடம் அனுபவிக்கும் அவஸ்தைகளை நான் உணரக்கூடிய சில மணித்துளிகள். அவ்வளவு அவஸ்தைகளுக்கு மத்தியிலும் அந்த சால்னாவுக்காக அடிக்கடி அங்கு போக வேண்டியிருக்கிறது.

வாரத்திற்கு இரண்டு நாட்களாவது ஆந்திரா மெஸ்ஸில் ஆஜாராகிவிடுவேன். ஆனாலும் தினமும் பரோட்டா சால்னாவையே சாப்பிட முடியாதல்லவா...? அதனால் ஒரு மாற்றத்திற்காக துரித உணவகம், தோசைக்கடை எனது உணவகங்களை மாற்றிக் கொண்டிருப்பேன். ஒரேயொரு குறை அந்த சுற்றுவட்டாரத்தில் நடந்து போகக்கூடிய தொலைவில் எங்கேயும் பிரியாணி கடை கிடையாது. 

சில வாரங்களுக்கு முன்பு ஆந்திராவை நோக்கி நடந்துக் கொண்டிருந்தபோது கவனித்தேன். தனம் என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருந்த வெகு சுமாரான ஒரு மெஸ் மூடப்பட்டு அங்கே புதிய கடை உதயமாகியிருந்தது. பேரடைஸ் பிரியாணி செண்டர்....! புதிய உணவகம் என்பதாலோ என்னவோ எல்லாம் சுத்தமாக இருந்தன. கடையில் ஒன்றிரண்டு பேர் தவிர ஆட்கள் இல்லை. மயூராவை விட ஒரு படி அதிகமாகவே மரியாதை கிடைத்தது. சாப்பிட்டு முடித்ததும் கல்லாவில் இருந்தவர் தங்கள் தரத்தை உயர்த்திக்கொள்வதற்காக ஃபீட்பேக் கேட்டார். பிரியாணியில் ஸ்பைசஸ் (பட்டை, லவங்கம், கிராம்பு இத்யாதிகள்) அதிகமுள்ளதாக சொல்லிவிட்டு அகன்றேன். அதன்பிறகு விடுமுறை பருவம் வந்ததால் கிட்டத்தட்ட அரை மாதத்திற்கு அங்கே செல்ல முடியவில்லை.

புத்தாண்டு பிறந்ததும் சென்ற வாரத்தில் ஒருநாள் பேரடைஸுக்கு சென்றிருந்தேன். வாடிக்கையாளர்கள் யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. ஆனால் ஆச்சரியமாக இருந்தது. இன்னமும் அதே சுத்தத்தை பராமரிக்கிறார்கள். இம்முறை மெனு கார்டு விஸ்தரிக்கப் பட்டிருந்தது. அதே மரியாதை. பிரியாணி மட்டுமில்லாமல் ஃபிரைட் ரைஸ் வகையறாக்கள், தந்தூரி வகையறாக்கள், சிக்கன் உப உணவுவகைகள் என மெனுவே அட்டகாசமாக இருந்தது. விலையும் அப்படியொன்றும் அதிகமில்லை. அரை பிளேட் சிக்கன் பிரியாணி தொண்ணூறு ரூபாய். இன்னொரு ஆச்சரியம். பிரியாணியில் சென்ற முறை சொன்ன குறை களையப்பட்டு கச்சிதமாக இருந்தது. சாப்பிட்டு முடிப்பதற்குள் கல்லாவில் இருந்தவர் இரண்டுமுறை வந்து நல்லாயிருக்கா சார் என்று கேட்டுவிட்டார். கொஞ்சம் வெறுப்பாக இருந்தாலும் அவருடைய மெனக்கெடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதற்காகவேனும் பேரடைஸ் பிரியாணி செண்டர் நீண்ட நாட்களுக்கு பெயர் மாற்றப்படாமல் இருக்க வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 July 2013

அந்தப்பக்கம் போயிட்டுவா நீ


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இருவருமே மும்பையில் பிறந்தவர்கள், வெண்ணெய்க்கட்டி நிறம், கொழுக் மொழுக் உடல்வாகு, கொஞ்சம் ஒரே மாதிரியான முக அமைப்பு. கவனிக்க: கொஞ்சம் தான். இவ்வளவுதான் குஷ்பூவுக்கும் ஹன்சிகாவுக்கும் உள்ள ஒற்றுமைகள். அதற்காக எல்லாம் ஹன்சிகாவை ‘சின்ன குஷ்பூ’ என்று அழைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குஷ்பூவுடன் ஒப்பிடும்போது மன்னிக்க அந்த வார்த்தையை பயன்படுத்த என் மனம் ஒப்பவில்லை. உடல் வாகிற்காக வேண்டுமானால் ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என்று சொல்லலாம். அதில் கூட கூடிய விரைவில் குஷ்பூவை சின்ன ஹன்சிகா என்று அழைக்கும் நிலை ஏற்படலாம். குஷ்பூ ஆரம்பத்திலிருந்தே அழகுப்பதுமையாக மட்டுமில்லாமல் நடிப்புத்திறனையும் பெற்றிருந்தார். உடல் வனப்புடன் கூடிய வசீகரமான முக லட்சணமும் அவரிடம் அமைந்திருந்தது. எல்லாவற்றையும் விட குஷ்பூவிடம் ஒரு ஆளுமை இருந்தது. அதுதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற பிரதான அம்சம். அத்தகைய குஷ்பூவின் சிறப்புத்தன்மைகள் அனைத்திலும் ஹன்சிகா சுமார் என்று கூட சொல்ல முடியாது. அப்படியிருக்கும் போது ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என்று அழைப்பதில் துளியேனும் நியாயம் இருக்கிறதா ? வேண்டுமென்றால் கொஞ்சூண்டு குஷ்பூ என்று அழைத்துக்கொள்ளலாம். சரி குஷ்பூவுடனான ஒப்பிடலை ஒதுக்கிவிடலாம். பொதுவாக ஹன்சிகாவிடம் அப்படியென்ன தான் இருக்கிறது.

ஹன்சிகா தமிழில் நடித்த முதல் படமான “மாப்பிள்ளை” பார்த்திருக்கிறீர்களா ? சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை. தனுஷ் நல்ல நடிகர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், முழுநீள ஆக்குசன் திரைப்படம் என்றால்தான் மனிதர் முருங்கைமரம் ஏறிவிடுகிறார். அதிலும் பஞ்ச் டயலாக் பேசுவதெல்லாம் உச்சக்கட்ட வன்முறை. அதசரி, தனுஷ் கதை நமக்கெதற்கு. ஹன்சிகாவிடமே வருவோம். லைஃப்பாய் பயன்படுத்தினால் அழிந்துபோகக்கூடிய கிருமிகளின் சதவிகித நடிகைகள் தமிழில் தங்கள் சொந்தக்குரலில் பேசி நடிப்பதில்லை. அதற்கு முதலில் தமிழ் தெரிய வேண்டும். போய்த் தொலையட்டும். குறைந்தபட்சம் வாயசைப்பதையாவது ஒழுங்காக செய்யலாம் இல்லையா ? மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகாவின் உதட்டசைவை பார்த்தால் ஓங்கி சுவற்றில் போய் முட்டிக்கொள்ள தோன்றும். உதாரணத்திற்கு, ‘திருவண்ணாமலை’ என்ற சொல்லுக்கு ஹன்சிகா உதடசைத்தால் ஏதோ கெட்டவார்த்தையில் திட்டுவது போல தெரியக்கூடும். பாடல்காட்சிகளில் அதைவிட மோசம். ஒருவேளை ஹன்சிகாவின் உதட்டசைவு சிக்கலின் காரணமாகத்தான் அவரை படம்பிடிக்கும் கேமராக்கள் கழுத்துக்கு கீழேயே படம் பிடிக்கின்றனவோ என்னவோ ?

சச்சின் படத்தில் விஜய் ஒரு வசனம் பேசுவார். “...ஓசியில கிடைக்குதுன்னு சீஸ் பர்கர், சீஸ் பீட்சால்லாம் தின்னு தின்னு தின்னு இப்படி அஞ்சரையடி பீப்பா மாதிரி இருந்துக்கிட்டு...” என்று போகிற வசனம். நியாயமாக ஸ்லிம் ஜெனிலியாவிற்கு கொஞ்சம் கூட பொருந்தாத வசனம் அது. இருப்பினும் நடைமுறையில் ஹன்சிகாவிற்கு கனக்கச்சிதமாக பொருந்தும். வெண்ணையினால் செய்யப்பட்ட ஐந்தரையடி உருவமாகத்தான் ஹன்சிகா என் கண்களுக்கு தோன்றுகிறார். கெளதம் மேனன் படப்பாடல்களின் இடையிடையே மேலைநாட்டு பெண்கள் வந்து சம்மர்சால்டெல்லாம் அடிப்பார்களே, அவர்களில் ஒருவராக வேண்டுமென்றால் ஹன்சிகாவை ஏற்றுக்கொள்ளலாம். “இவ்வளவு பேசுகிறாயே... ஹன்சிகாவையும் உன்னையும் தனியறையில் வைத்து அடைத்தால் என்ன செய்வாய் ?” என்றொரு குரூர மனப்பான்மையுடைய கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டால், சாரி பாஸ் அப்போதைக்கு சுப்பையா என்கிற மானஸ்தன் உங்கள் கண்களுக்கு அகப்பட மாட்டான். நிஜவாழ்க்கையில் நாம் சந்திக்கும் சுமார்மூஞ்சிகளோடு ஒப்பிடும்போது, ஆமாம் ஹன்சிகா அழகாகத்தான் இருக்கிறார். ஆனால் சினிமா நடிகை என்ற தளத்தில் யோசித்துப்பார்க்கும்போது தான் சிக்கல் துவங்குகிறது.

தமிழன் எப்போது ஹன்சிகாவிடம் தன்னை ஒப்புவித்தான் என்று சிந்தித்துப் பார்க்கும்போது மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஏன் வேலாயுதம் வெளிவந்தபோது கூட தமிழன் தடுமாறாமல் தான் இருந்திருக்கிறான் என்று தெரிய வருகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி என்றொரு பாழாய்ப்போன சினிமா வந்து தொலைத்தது. அதில் இடம்பெற்ற அழகே அழகே என்ற பாடலில் இறுக்கமான மஞ்சள்நிற உடையணிந்து பாலைவனத்தில் ஓடிவந்து தமிழர்களுக்குள் கிறக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஹன்சிகா. “பார்ப்பதற்கே மெத்து மெத்து என்று இருப்பதால், தன் பெயரை ஹன்சிகா மெத்துவானி என்று அவர் மாற்றி வைத்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.” – ஒ.க.ஒ.க.வில் ஹன்சிகாவைக் கண்டு மயங்கிய ஒரு பிரபல எழுத்தாளர் இப்படி எழுதியிருக்கிறார். என்னுடைய சந்தேகம் என்னவென்றால் பார்ப்பதற்கு மெத்து மெத்து என்றால் என்ன அர்த்தம் ? “மெத்து மெத்து” என்பது காட்சியுணர்வா அல்லது தொடுவுணர்வா ? ஒருவேளை அந்த பிரபலம் அதனை தொட்டுப்பார்த்து மெத்து மெத்து என்று இருக்கிறதே என்று உணர்ந்திருப்பாரோ ? ம்ம்ம்... அப்படியே இருந்தால் தான் என்ன செய்ய முடியும். சரி, மறுபடியும் கட்டுரையின் சாரத்திற்கு வருவோம். ஆமாம், ஒ.க.ஒ.க படப்பாடலில் ஹன்சிகாவின் கழுத்துக்கு கீழே பகுதிகள் கிறங்கடிக்கத்தான் செய்தன. ஆனால் முகலட்சணம் என்று ஒன்று இருக்கிறதே.

அதே ஒ.க.ஒ.க படத்தில் ஒரு கதாபாத்திரம் ஹன்சிகாவின் BMI, உடையலங்கார உணர்வு, பல் தெரிகிற சிரிப்பையெல்லாம் பார்த்து அலறுகிறது. ஹன்சிகா தலப்பாக்கட்டு பிரியாணி சாப்பிடத்தான் லாயக்கு என்றி எள்ளி நகையாடுகிறது. நாம் BMI லெவலுக்கெல்லாம் போக வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஹன்சிகாவின் பல்லு தெரிகிற சிரிப்பை பற்றி யோசிக்கும்போது சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது – “ஆத்தா... பையனை கூட்டிட்டு போய் வேப்பல அடிக்கணும் போல இருக்குது... நீ சிரிக்காத ஆத்தா...!”

திடீரென எனக்கு ஹன்சிகாவின் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு ? சமீபத்தில் வெளிவந்த தீ.வே.செ.கு திரைப்படம் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு மென்பொருள் நிறுவனம். அங்கே பணிபுரியும் ஆண் ஊழியர்கள் யாரும் அழகான பெண்களையே பார்த்திருக்க மாட்டார்கள் போலும். ஹன்சிகாவை கண்டதும் கிலோலிட்டர் கணக்கில் ஜொள்ளு வடிக்கிறார்கள். லிப்ட் திறந்துவிடுவது தொடங்கி வாகனத்தில் லிப்ட் கொடுப்பது வரை விழுந்தடித்து ஊழியம் செய்கிறார்கள். ஐ.டி இளைஞர்கள் என்ன அப்படியா காய்ந்துபோய் இருக்கிறார்கள். எனக்கென்னவோ தீ.வே.செ.கு ஒட்டுமொத்த தகவல்தொழில்நுட்ப ஊழியர்களையும் அவமானப்படுத்தியிருப்பதாகவே தோன்றுகிறது. ஹன்சிகாவைப் போன்ற வட இந்திய மைதாநிற அழகிகளை ரசிப்பதைவிட திராவிட பாரம்பரியத்தில் வந்த கோதுமை நிற தன்ஷிகாவை ரசிக்கலாம்.

ஹன்சிகா மோத்வாணி – அந்தப்பக்கம் போயிட்டுவா நீ !

தொடர்புடைய சுட்டி: அமலா பால்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment