Showing posts with label niram. Show all posts
Showing posts with label niram. Show all posts

5 April 2014

ரத்தம் ஒரே நிறம் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் சுஜாதா நாவல்களை விரும்பி வாசிக்கிறேன் என்பதையும், ரத்தம் ஒரே நிறம் படித்ததில்லை என்பதையும் தெரிந்துகொண்ட நண்பர் செந்தில்குமார் (ஆரூர் மூனா அல்ல !) அந்த புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். முதற்கண் நன்றி செந்தில்குமாருக்கு. அவர் அனுப்பிய சமயத்தில் தற்செயலாக சீனு ரத்தம் ஒரே நிறத்தை சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். இருக்கலாம். ஆனால் இது என்னுடைய சிலபஸ் கிடையாது. நான் கொஞ்சம் ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன், த்ரில்லர் போன்றவை வாசிக்க விரும்பும் ஆசாமி. ரத்தம் ஒரே நிறத்தின் கதைக்கரு என்னவென்று தெரிந்தபோதே எனக்கு அசுவாரஸ்யமாக ஆகிவிட்டது. புத்தகம் வேறு முன்னூறு பக்கங்களுக்கு மேல். பிறகு படிக்கலாம் என்று கிடப்பில் போட்டாயிற்று. 

புத்தகம் கையில் கிடைத்து ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் கழித்து மெதுவாக மனமுவந்து புத்தகத்தை பிரித்தேன். வடிவமைப்பை பொறுத்தவரையில் சுஜாதா புத்தகங்களில் மாஸ்டர்பீஸ் என்பதில் சந்தேகமே இல்லை. புக்மார்க் தான் கொஞ்சம் நைந்து போயிருந்தது. எனக்கெல்லாம் சரித்திர கதை என்றாலே மன்னர் கால கதை என்றுதான் எண்ணம். சுஜாதா அவ்வளவு தூரம் செல்லவில்லை. 1857ம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற சிப்பாய் கலகத்தை அடிப்படையாக கொண்டு அதனோடு ஒரு தமிழ் சினிமா பாணி பழி வாங்கல் கதையையும் சேர்த்து எழுதியிருக்கிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில், ஆலப்பாக்கத்தில் வசிக்கும் முத்துக்குமரன் என்பவனுடைய தந்தையை ஆங்கிலேய லெப்டினன்ட் எட்வர்ட் மக்கின்ஸி என்பவன் கொன்றுவிடுகிறான். முத்துக்குமரன் மக்கின்ஸியை பழி வாங்கத் திட்டமிடுகிறான். அங்கிருந்து கதை துவங்குகிறது. ஒரு பெண் ஒரு நல்மனம் படைத்த ஆண் மீது காதல் வயப்படுகிறாள். ஆனால் அசம்பாவிதமாக அவளுடைய உடலை விரும்பும் ஒருவனுக்கு மனைவியாக்கப்படுகிறாள். இதையே இரண்டாக பெருக்கிக்கொள்ளுங்கள். ஒன்றுமில்லை, முத்துக்குமரன் – பூஞ்சோலை – ராக்கன், ஆஷ்லி – எமிலி – மக்கின்ஸி இரு முக்கோண காதல்களும் ஒரே மாதிரியாகவே பயணிக்கிறது. பதினெட்டு அத்தியாயங்கள் வரை இவர்களுடைய காதல் கதைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

அதன்பிறகு சிப்பாய் கலகத்திற்குள் மெதுவாக நுழைகிறது கதை. அதாகப்பட்ட சிப்பாய்க் கலகம் என்பது என்னவென்றால் ஆங்கிலேயர்களின் என்ஃபீல்டு ரக துப்பாக்கியில் பன்றி கொழுப்பை பயன்படுத்தினார்கள். இதனை உபயோகிக்கும் பொருட்டு கடிக்க வேண்டும் போல தெரிகிறது. இயல்பில் புலால் மறுக்கும் பிராமண சிப்பாய்களும், பன்றி இறைச்சி உட்கொள்வதை பாவமாக நினைக்கும் இஸ்லாமிய சிப்பாய்களும் எதிர்க்கிறார்கள். அதாவது பன்றி கொழுப்பை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக புரட்சி செய்கிறார்கள். சிப்பாய்க் கலகத்தில் வட இந்தியர்களே கணிசமான அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் ஒரு தமிழன் பங்கேற்றால் எப்படி இருந்திருக்கும் என்ற கண்ணோட்டம் நாவலின் ஒரு சிறப்பு.

ஒரு கதை அல்லது நாவலை படிக்கும்போது அதன் கதை மாந்தர்களுக்கென ஒரு உருவத்தை நம் மனம் தானாகவே வரைந்துகொள்ளும் இல்லையா...? முத்துக்குமரன் என்ற கதையின் நாயகன் பெயரை படித்ததும் சட்டென ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமரன் கண்களில் தெரிகிறார். அடுத்து எமிலி. சந்தேகமே இல்லாமல் எமி ஜாக்சனை நினைவூட்டுகிறார். சில காட்சிகள் மதராஸபட்டினத்தை நினைவூட்டுகிறது. பைராகி ஏனோ பிரேமானந்தாவாக தெரிகிறார். 

நிறைய இடங்களில் ஒரு தேர்ந்த மசாலா சினிமாவைப் போல செல்கிறது ரத்தம் ஒரே நிறம். கதையின் நாயகன் இரண்டு முறை சாவின் விளிம்பு வரை சென்று தப்பித்துவிடுகிறான். நம்பமுடியாத செயல்களை எல்லாம் செய்கிறான். பூஞ்சோலை ஆண் வேடமணிகிறாள். பைராகி என்கிற சித்தர் கதாபாத்திரம் வேறு.

ஏராளமாக உழைத்திருக்கிறார் சுஜாதா. கூகுள் பரிட்சயமில்லாத கால கட்டத்திலேயே நிறைய தகவல்களை திரட்டி எழுதியிருக்கிறார். படிக்கும்போது சாதாரணமாக தெரியக்கூடிய ஒரு பத்தியை எழுதுவதற்கு கூட நிறைய உழைப்பை செலவிட்டிருக்கிறார். முட்டை நடனம் என்ற ஒன்றை கூத்து கலைஞர்கள் செய்வதாய் ஒரு அத்தியாயத்தில் வருகிறது. அது பற்றிய விவரணையாக ஆங்கில புத்தகம் ஒன்றின் பெயரை கடைசி பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

செந்தில் குமார் எனக்கு அனுப்பி வைத்த பிரதியின் முதல் பக்கத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார். ஒருவர் நமக்கு பரிசளித்த பொருளை நாம் மற்றவருக்கு பரிசளிப்பது சரியாக இருக்காது. இருப்பினும் இந்த புத்தகம் ஒரு தவறான கைகளுக்கு கிடைத்திருப்பதில் எனக்கு வருத்தம் உள்ளது. இந்த நாவலை என்னிடமிருந்து இரவலாக பெற்று யாரேனும் படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.

ரத்தம் ஒரே நிறம்
சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
342 பக்கங்கள்
ரூ.260

என்றும் அன்புடன், 
N.R.PRABHAKARAN

Post Comment

10 February 2014

பிரபா ஒயின்ஷாப் – 10022014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

என்னுடைய பள்ளிக்கூட ஆசிரியர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர் ஆசீர்வாதம். பெயரே அதுதான். கடவுள் மறுப்பாளர். என்னை செதுக்கியதில் அவருக்கும் ஒரு கணிசமான பங்கு உண்டு. படித்து முடித்தபிறகு எல்லா வாத்தியார்களோடும் தொடர்பு விட்டுப் போயிற்று. அதாவது நான் விடுபட்டுக் கொண்டேன். பொதுவாகவே எனக்கு வாத்தியார்கள் மீது மிகுந்த மரியாதை இருந்தாலும் கூட அதனைவிட பயம் சற்று கூடுதலாக இருக்கும். வாத்தியார்கள் யாரேனும் பெயரைச் சொல்லி அழைத்தாலே கை, காலெல்லாம் உதற ஆரம்பித்துவிடும். அது மட்டுமில்லாமல் இன்னும் நீ கழிசடையாத்தான் இருக்கியா...? என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது. அதனால் வாத்தியார்களை எல்லாம் சந்தித்து பேசுவதோ, தொடர்பிலிருப்பதோ கிடையாது. ஆனால் மனதளவில் என்றும் தொடர்பிலிருப்பேன். இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ஆசீர்வாதம் வாத்தியாரைப் பற்றி கூட ஏற்கனவே என்னுடைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன். தற்சமயம் ஃபேஸ்புக் வந்துவிட்டதால் பழைய வாத்தியார்களை தேடிப் பார்த்தேன் ஆசீர்வாதம் மட்டும் கிடைத்தார். ஆச்சரியப்படுவதற்கில்லை. மனிதர் அந்த காலத்திலேயே, அதாவது சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பே ‘பென் ஃப்ரெண்ட்’ என்ற பதத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர், படிப்பு தாண்டி சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய பேசுவார். நட்பு கோரினேன், ஏற்றுக்கொண்டார். அவருடைய ஃபேஸ்புக் பயன்பாடு அப்படியொன்றும் எதிர்பார்த்த வகையில் இல்லை. தமிங்கிலத்தில் வேறு எழுதிக்கொண்டிருந்தார். நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சில நாட்களுக்கு முன்பு ஒரு நாள் திடீரென சாட்டுக்கு வந்து ‘என்னை நினைவிருக்கிறதா...?’ என்று கேட்டுவிட்டார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

பரஸ்பரம் நலம் விசாரிப்புகள் முடிந்தது. தற்சமயம் நான் ஒரு தமிழ் வலைப்பதிவர் என்று பெருமையாக சொல்லிக்கொண்டேன். அவருக்கு அது புரியவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. நான் அவருக்கு கொஞ்சம் சிரமப்பட்டு விளக்கிக் கொண்டிருக்கும்போதே ‘விருப்பப்பட்டால் தொடர்பு கொள்ளவும்’ என போன் நம்பரை அனுப்பி விட்டார். எனக்கு அப்போது வழக்கம்போல உதறல் தொடங்கிவிட்டது. சங்கடமான சூழ்நிலை. அழைப்பதற்கு பயம். அழைக்காமல் விட்டாலும் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடும். சிறிது நேர மனப்போராட்டத்திற்கு பிறகு அழைத்தேன். அவருக்கு என்னை அவ்வளவாக நினைவில்லை. என்னுடைய தந்தையின் பெயர், அவரிடம் தனிவகுப்பு படித்தது, அவர் என்னிடம் ஆசிரியரைப் பற்றி கேட்டு நான் பள்ளிக்கூட ஆசரியர் என்று புரிந்துகொண்டது எல்லாம் சொன்னபிறகு நினைவுக்கு கொண்டு வந்தார். இணையத்தில் தமிழில் எழுதத் தெரியவில்லை என்றார். அது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை என்று வழிமுறைகளை கூறினேன். ஒரு வாடிக்கையாளர் சேவை மைய பிரதிநிதியைப் போல அவருடைய கணினியில் கூகுள் ட்ரான்ஸ்லிட்ரெட் மென்பொருளை நிறுவ படிப்படியாக சொல்லிக்கொடுத்தேன். சிறிது நேரத்தில் தமிழ் டைப்பிங் கற்றுக் கொடுத்தாயிற்று. எனக்கு சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு நான் சொல்லிக்கொடுப்பது என்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம். அது மட்டுமில்லை. இன்னொரு பெருமையும் எனக்காக காத்திருக்கிறது. அவர் இரண்டு கவிதை புத்தகங்கள் எழுதியிருப்பதாகச் சொல்லி அதனை மின்புத்தக வடிவில் மாற்றித் தரும்படி கேட்டிருக்கிறார். அவர் எழுதிய கவிதை புத்தகங்கள் கவியாழித்தனமாக இருக்கும் என்பது எனக்கு திண்ணமாக தெரியும். இருக்கட்டும். அது என்னுடைய பிரச்சனையில்லை. ஆனால் அவருக்காக அதையும் செய்து தர போகிறேன். ஆசீர்வதிக்கப்பட்டதை போல உணர்கிறேன்...!
*
ஆசீர்வாதம் வாத்தியார் வகுப்பில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்வத்தை புனைந்து ஏற்கனவே ஒருமுறை எழுதியிருந்தேன். அது மீள் பிரசுரமாக :- வாத்தியார் ஒருநாள் மாணவர்களிடம் தன் கவலையை புலம்பிக்கொண்டிருந்தார். லீவு அன்னைக்காவது டிவியில் ஏதாவது உருப்படியாக பார்க்கலாம் என்று உட்கார்ந்தேன். என் மனைவியின் சர்வாதிகாரத்தில் ரிமோட் அவளுடைய கைகளுக்கு மாறிவிட்டது. புதுப்படம் போடுறாங்க பேசாம பாருங்க என்று மனதை திருடிவிட்டாய் என்ற படத்தை வைத்தார். அதில் சம்பந்தமே இல்லாமல் திடீர்ன்னு மஞ்சக்காட்டு மைனான்னு ஒரு பாட்டு வருது (தலையில் அடித்தபடி) விதியே என்று பார்த்துக்கொண்டிருந்தபோது பாடலின் இடையில் தெரியாத்தனமாக கவிஞர் அருமையா ஒருவரி எழுதியிருக்குறான் பாருங்க... பூக்கள் பொதுக்குழு கூட்டும்... உன்னை தலைமை தாங்கக்கேட்கும்...என்று லைட்டாக ரொமாண்டிக் மூடுக்கு தாவினார். உடனே நம்மாளு ஒருத்தன் எழுந்து சார் அதே பாட்டுல இன்னொரு வரிகூட நல்லாயிருக்கும்ன்னு சொன்னான். ஆர்வத்துடன் அவன் சொன்னதை கேட்ட வாத்தியார் அடுத்த நொடியே வன்முறை மூடுக்கு மாறி அவனுடைய முதுகில் கொத்துபரோட்டா போட்டுவிட்டார். அவன் குறிப்பிட்ட வரிகள் - கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு வேகத்தடையும் ஒன்று இங்கிருக்கு...”.
*
படவா... கடைசி ரெண்டு போஸ்டுல ஐஸ்வர்யாவைப் பத்தி ஜொள்ளு விட்டிருக்குற... இப்ப என்னடான்னா வாத்தியாரு, மஞ்சக்காட்டு மைனா'ன்னு மொக்கை போட்டுக்கிட்டு இருக்குற... நான் ஒருத்தி இருக்குறதே உனக்கு மறந்து போச்சுல்ல...!
*
Freaks படம் பற்றியும், அதில் காட்டப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றியும் எழுதியிருந்தேன். அதுகுறித்து மேலும் சில வரிகள். அப்படத்தில் ஜோஸஃபீன் ஜோஸப் என்றொரு கதாபாத்திரம். இவர் ஒரு இருபாலின உடலி. (Hermaphrodite என்ற பதத்தை தோராயமாக மொழி பெயர்த்தேன். தவறென்றால் மன்னிக்கவும்). அதாவது இவருடைய உடலை செங்குத்தாக பகுத்தால் ஒரு புறம் பெண்ணாகவும், மறுபுறம் ஆணாகவும் இருப்பார். ஆனால் ஜோ.ஜோ உண்மையாகவே இருபாலின உடலி என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

சில சமயங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களுக்கு வேடிக்கை காட்டும்பொருட்டு ஆண்களே இருபாலின உடலிகளாக சித்தரிக்கப்படுவார்கள். அதாவது ஒரு புறத்தில் மட்டும் ரோமங்களை மழித்து, உடற்பயிற்சிகள் செய்து கட்டுக்கோப்பாகவும், மறுபுறம் தொள தொளவென பெண்ணின் மார்பகத்தை போல வளரவிட்டு, ஒருபுறம் ஆணின் ஆடைகளையும் மறுபுறம் பெண்ணின் ஆடைகளையும் அணிந்துக்கொள்வார்களாம். ஜோஸஃபீன் ஜோஸப்ப்பும் அந்த மாதிரி ஒருவராக இருக்கலாம். 

Freaks படத்தின் ஒரு காட்சியில் ஜோஸஃபீன் ஒரு ஆடவரை குறுகுறுவென பார்த்தபடி கடந்துசெல்வார். உடனே அந்த ஆடவருக்கு அருகிலிருப்பவர், ஒருவேளை அவளுக்கு உன்னை பிடிக்கிறது ஆனால் அவனுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன் என்று கமெண்ட் அடிப்பார்.
*
அடிக்கடி சுஜாதா நாவல்களைப் பற்றி எழுதுவதை பார்த்துவிட்டு நண்பர் செந்தில்குமார் சாட்டில் வந்து ரத்தம் ஒரே நிறம் படித்திருக்கிறீர்களா...? என்று கேட்டார். படித்ததில்லை என்று சொன்னதுதான் தாமதம். கண்டிப்பாக படிக்க வேண்டுமென்று சொல்லி என்னுடைய விலாசத்தை வாங்கி புத்தகத்தை அனுப்பவே செய்துவிட்டார். அவர் அனுப்பிய புத்தகங்கள் கையில் கிடைத்த நேரத்தில் ஒத்திசைவாக சீனு அதனை சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று எழுதிய கட்டுரை படிக்கக் கிடைத்தது. சரித்திர நாவல் என்று தெரிகிறது. சுஜாதா – சரித்திரம் என்ற சேர்க்கையே ஆர்வத்தீயை கிளப்பிவிட்டாலும் அர்பணித்து படிக்க தொடர்ச்சியான சில மணிநேரங்கள் தேவைப்படுகின்றன. தற்சமயம் செந்தில்குமார் அனுப்பிய மற்றொரு சுஜாதா நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் பெயர் – ஆ...!
*
யாரோ ஒரு நண்பர் ஃபேஸ்புக்கில் சுரேஷ் பீட்டர்ஸை பற்றி நல்லவிதமாக எழுதி கீழ்காணும் பாடலை பகிர்ந்திருந்தார். அப்படியென்ன இருக்கிறது என்று எட்டிப்பார்த்தேன். அவ்வளவுதான், பாடல் தனக்குள் என்னை வசமாக இழுத்துக் கொண்டது. வித்தியாசமான இசை, நடனம், உடைகள், அதனுடன் ஸ்வர்ணலதாவின் குரல், மீனா எல்லாமுமாக சேர்ந்து காணொளியாகவே தரவிறக்கி அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பாடலின் இறுதியில் வரும் நாதஸ்வர இசையை கத்தரித்து என்னுடைய மொபைலில் ரிங்டோனாக வைத்துக்கொண்டேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment