Showing posts with label season. Show all posts
Showing posts with label season. Show all posts

30 December 2016

கொல்லிமலை – பயணக்குறிப்புகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கொல்லிமலை ஒரு பேச்சுலர்’ஸ் பேரடைஸ் என்றுதான் சொல்லவேண்டும். கொல்லியில் நீங்கள் கோவில்களைத் தவிர மற்ற போக்கிடங்களுக்கு சென்றால் அங்கே குழுவாக மது அருந்திக்கொண்டிருக்கும் ஆடவர்களை சாதாரணமாக பார்க்கலாம். மேலும் ஆங்காங்கே காலி மது புட்டிகள் வீசப்பட்டிருக்கும். இதனாலும் வேறு சில காரணங்களாலும் இங்கே குடும்பமாக அதிகம் பேர் செல்வதில்லை. செல்லக்கூடாது என்றில்லை. சில கொடுமைகளையெல்லாம் சகித்துக்கொள்பவர்கள் செல்லலாம்.

எப்படி செல்வது...?
சென்னையிலிருந்து சுமார் 400 கி.மீ. பெங்களூரிலிருந்து சுமார் 300 கி.மீ. சொந்த வாகனத்தில் சென்றால் எட்டிலிருந்து ஒன்பது மணிநேரத்திற்குள் சென்றுவிடலாம். சென்னையிலிருந்து செல்பவர்கள் செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ராசிபுரம் வழியாக செல்லலாம். ஒரு ஐம்பது கி.மீ கூடுதலாக சுற்ற தயாராக உள்ளவர்கள் வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக வரலாம். இந்த வழியில் சிறப்பம்சம் ரோடு அட்டகாசமாக இருக்கிறது. 

பேருந்தில் அல்லது ரயிலில் செல்பவர்கள் நாமக்கல் சென்று அங்கிருந்து செம்மேடு அல்லது நேரடியாக அறப்பளீஸ்வரர் கோவில் செல்லும் பேருந்தை பிடிக்கலாம். ஆனால், மலை மீது உள்ள இடங்களை சுற்றிப்பார்க்க தனி வாகனம் இருந்தால் தான் சரியாக இருக்கும். எனவே நாமக்கல்லிருந்து தனியார் வாகனத்தை வாடகைக்கு பிடித்துக்கொள்ளலாம்.

எங்கே தங்குவது...?
பெரும்பாலான தங்கும் விடுதிகள் செம்மேட்டையும் அதனை ஒட்டியும் அமைந்திருக்கின்றன. முன்பே ஒருமுறை சொன்னது போல கொல்லியில் ரிஸார்ட் என்கிற வார்த்தையே ஒரு மாயை. குடும்பத்துடன் செல்பவர்கள் கொஞ்சம் பாங்கான விடுதியில் தங்க விரும்பினால் P.A.Holiday Innல் தேர்ந்தெடுக்கலாம். ஓரளவிற்கு கெளரவமான இடத்தில் தங்க விரும்பும் நல்ல தம்பிகள் நல்லதம்பியில் தங்கலாம். தண்ணிவண்டி தம்பிகளுக்கு ஏரோ மேன்ஷன், SKGV லாட்ஜ். இவற்றில் SKGV லாட்ஜ் மட்டும் செம்மேட்டில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி இருக்கிறது. இதில் சாதக, பாதகங்கள் உண்டு. ஒரு அவசரத்திற்கு பிளாஸ்டிக் கிளாஸ் வாங்கக்கூட கடை இருக்காது. ஆனால் மனித நடமாட்டம் குறைவான பகுதியில் தனிமையாக பொழுதைக் களிக்கலாம். 

எத்தனை நாட்கள்...?
மூன்று நாட்கள். வெள்ளி காலை கிளம்பி மாலை சென்றடைந்து, சனி சுற்றிப் பார்த்து, ஓய்வெடுத்து, ஞாயிறு திரும்புவது கச்சிதமான திட்டம். நேரமில்லாதவர்கள் இரண்டு நாட்களில் பயணத்திட்டத்தை சுருக்கிக்கொள்ளலாம்.

என்ன பார்க்கலாம்...?
கொல்லியில் என்னென்ன இடங்களை பார்க்கலாம் என ஒரு பட்டியல் இருக்கிறது. கூடவே அவற்றை எந்த வரிசையில் பார்ப்பது என்றும் ஒரு முறை இருக்கிறது. நானே பிரத்யேகமாக தயாரித்த இந்த வரிசைமுறையை பின்பற்றினால் உங்கள் நேரத்தை சேமிக்கலாம். 


10. நம்ம அருவி (வரைபடத்தில் இல்லை)


முதல் நான்கு இடங்களை போகும் வழியிலேயே / தினத்திலேயே பார்த்துவிடலாம். அடுத்த எட்டு இடங்களை மறுநாள் காலை துவங்கி ஒவ்வொன்றாக பார்த்துவிட்டு இறங்கலாம். கடைசி எட்டை மூன்றாவது நாள் அல்லது திரும்பும்போதோ பார்க்கலாம்.

எப்போது செல்லலாம்...?
ஆகாயகங்கையில் வருடம் முழுக்க நீர்வரத்து இருக்கிறது. குறிப்பிட்டு சொல்வதென்றால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்றால் தட்ப வெப்பம் செமத்தியாக இருக்கும். எல்லா அருவிகளிலும் நீர்வரத்து அதிகமாக இருக்கும். கோவில்கள் மீது விருப்பம் உள்ளவர்கள், கொங்கலாய் அம்மன் கோவில் திருவிழாவை காண விழைபவர்கள் ஏப்ரலில் செல்லலாம். வருடாவருடம் நடைபெறும் வல்வில் ஓரி திருவிழாவை பார்க்க விரும்புபவர்கள் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் செல்லலாம்.

எங்கே வாங்கலாம்...?
கொல்லி செல்லும்போது ஒரு முழு பகார்டி பாட்டிலை இங்கிருந்து சுமந்துச் சென்றோம். அங்கே சென்று பார்த்தால் செம்மேட்டில் அழகாக, அளவாக ஒரு டாஸ்மாக் இருக்கிறது, அங்கே பகார்டி கிடைக்கவும் செய்கிறது. பொதுவாகவே கொல்லிமலை குடிகாரர்களின் சொர்க்கம் போல தோன்றுகிறது. எந்த மூலைக்கு திரும்பினாலும் சுற்றுலாவாசிகள் மறைவாக உட்கார்ந்து குடித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் காலி புட்டிகள். குடித்துவிட்டு பாட்டில்களை பாறைகளின் மீது வீசி சிதறடிப்பது இங்குள்ளவர்களின் கைப்பழக்கம் போலிருக்கிறது. 

முடிந்தவரைக்கும் சுற்றுச்சூழலை, இயற்கையை நாசம் செய்யாமல், சக சுற்றுலா பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் கொல்லியைக் கொண்டாடுங்கள். இத்துடன் கொல்லிமலை பயணக்கட்டுரைகள் அதிகாரப்பூர்வமாக நிறைவுபெறுகிறது. 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 July 2013

ஒரு மழைநேர மாலைப்பொழுதும் சில கஜுராக்களும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அது ஒரு மாலை நேரம். வெறுமனே மாலை நேரம் என்றெல்லாம் சாதாரணமாக சொல்லிவிட முடியாது. கார்மேகங்கள் சூழ்ந்து மழை பொழிவதற்காக காத்திருந்த மிக மிக ரம்மியமான மாலைப்பொழுது. அலுவலகத்தில் அரக்க பறக்க மின்னஞ்சலொன்றை தட்டச்சிக் கொண்டிருந்தேன். இதை மட்டும் அனுப்பி முடித்துவிட்டால் சீக்கிரம் வீட்டுக்குப் போய் முந்தானை முடிச்சு சீரியல் பார்க்கலாம், ஜொள்ளு வடிய வடிய சேட்டுக்கடை ஜிலேபி இரண்டை உள்ளே தள்ளலாம். எல்லாவற்றையும் விட முக்கியமாக ரமாவின் தினசரி வசையருவியிலிருந்து தப்பிக்கலாம். “ஸ்லர்ப்” – அன்றைய தினத்தின் ஆறாவது டீயின் கடைசி மடக்கை குடித்தேன், கூடவே மின்னஞ்சலையும். ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு வெளியேறத் தயாரானேன். ரிசப்ஷனில் பாலா தன்னுடைய கணினித்திரையில் எதையோ வெறித்துப்பார்த்தபடி இருந்தாள். என்னைப் பார்த்ததும் கொஞ்சம் மிரட்சியுடன் எழுந்து நின்றாள். நான் அவளை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. தப்பித்தவறி அவள்மீது பார்வை பட்டுவிட்டால் ராத்திரியெல்லாம் தூங்கவிடாமல் படுத்தியெடுத்து விடுவாள் ராட்சசி. இருப்பினும் அவளைக் கடந்துவந்த பின், பார்த்திருக்கலாமோ என்று தோன்றியது.

Thanks: gapingvoid.com

பாலாவை காணத்தவறிய விழிகளின் மீதுள்ள கோபத்தை பைக்கின் கிக் ஸ்டார்ட்டர் மீது காண்பித்தேன். அது உறுமியபடி வேகமெடுத்தது. அதிகபட்சம் இரண்டு சிக்னல்களை கடந்திருக்க மாட்டேன், ஒரு கவிதைத்துளி என் மீது சிந்திய உணர்வு. அதெல்லாம் இருக்காது என்றெண்ணியபடியே வண்டியின் வேகத்தை அதிகரித்தேன். அடுத்ததடுத்து கவிதைத்துளிகள் என்னை சீண்டிக்கொண்டிருந்தன. சில நிமிடங்களில் வானிலிருந்து அதீத கவிதைகள் பொழிய ஆரம்பித்தன. ஆம், பெருமழை. அடடே முந்தானை முடிச்சு பார்க்க முடியாதே ! ம்ம்ம் பரவாயில்லை ரமாவிடம் கதை கேட்டுக்கொள்ளலாம். மொத்தமாக நனைந்து முடிவதற்குள் டீக்கடையின் ஓரமாக வண்டியை செலுத்திவிட்டு ஒதுங்கினேன்.

அது நாயர் டீக்கடை என்று சொன்னால் க்ளேஷேவாக இருக்கும். தாராளமாக நின்றால் ஐந்து பேர் நிற்கக்கூடிய அந்த டீக்கடையின் வெளிப்பகுதியில் மழையின் காரணமாக சுமார் இருபது பேர் நின்றுக்கொண்டிருந்தோம். அதாவது அடைந்திருந்தோம். நான்கைந்து ஐ.டி. பணியாளர்கள், ஒருவன் கையில் டீ கிளாஸும் ஒருத்தியின் விரலிடுக்கில் கிங்ஸும் அகப்பட்டது. ஒரு தாத்தா அவருடன் அழைத்து வந்திருந்த சிறுமிக்கு ஜாம் பன் வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அது அவரை சட்டை செய்யாமல் குர்குரே கேட்டு அடம் பிடித்துக்கொண்டிருந்தது. ஒருத்தி சுற்றியிருந்த காடா துணிக்கிடையே இரண்டு கண்கள் மட்டும் தெரிந்தது. அவளுடைய ஸ்கூட்டி என்னுடைய ஸ்ப்ளெண்டருடன் சேர்ந்து நனைந்துக்கொண்டிருந்தது. எனக்கு எதிரில் ஒருத்தன் வாழைக்காய் பஜ்ஜியை தினத்தந்தியில் வைத்து பிதுக்கி கொடுமைபடுத்திக் கொண்டிருந்தான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டேயிருந்த எனக்கு சற்றே அயர்ச்சியான காரணத்தினால் “மாஸ்டர்... ஒரு டீ...!” என்று அலறினேன்.

பட உதவி: கூகிள்
டீ சொல்லிவிட்டு சட்டென திரும்பியபோது தான் அந்த காக்கி நிற வஸ்து என் கண்களில் பட்டது. அதற்கு கஜூரா என்று பெயர். முதலில் கஜூராவின் குணநலன்களை ஒப்பித்துவிடுகிறேன். கஜூரா கிட்டத்தட்ட சதுர வடிவத்தில் இருக்கும், சமயத்தில் மாஸ்டரின் கைவண்ணத்தை பொறுத்து வடிவம் மாறுபடும். போண்டாவை போலவே கஜூராவும் ஒரு இனிப்பு பண்டம். எனினும் போண்டாவைக் காட்டிலும் திடமானது. ஒரு கஜூராவை கையில் எடுத்தால் சாப்பிட்டு முடிக்க பத்து நிமிடங்கள் வரை ஆகலாம். நிற்க. என்னைப் போன்ற திறன் படைத்தவர்கள் இரண்டு நிமிடங்களிலேயே கூட தின்று முடிக்கலாம். என்னுடைய நினைவுக்குவியலிலிருந்து அரைக்கால் சட்டை அணிந்திருந்த நான் தேன்மொழியிடமிருந்து கஜூராவை அபகரித்துத் தின்ற காட்சியை “சார்... டீ...” என்ற பாழாய்ப்போன மாஸ்டரின் குரல் கலைத்து தொலைத்தது.

ஒரு கையில் டீ கிளாஸை வாங்கியபடி மறு கையில் கஜூரா ஒன்றினை எடுத்து வாயில் வைத்தேன். அய்யுய்யோ ! நான் கஜூராவையா சாப்பிடுறேன்... கடவுளையே சாப்பிடுறேன். நான் கடைசியாக கஜூரா சாப்பிட்டது எப்போது என்று நினைவில்லை. ஆனால் நிச்சயமாக பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். கஜூரா சாப்பிடுவதில் ஒரு மிகப்பெரிய நன்மை உள்ளது. வயிறு துரிதமாக நிரம்பிவிடும். கஜூராவை கடித்தபடியே உலகத்தைப் பற்றி சிந்திக்க துவங்குகிறேன். உலகம் ஏன் கஜூராவைப் போல சதுரமாக அல்லாமல் போண்டாவை போல உருண்டையாக இருக்கிறது. ஆனால் அத்தகைய உலகத்தில் வாழக்கூடிய வாழ்க்கை மட்டும் போண்டாவை போல மென்மையாக அல்லாமல் கஜுராவைப் போல கடினமானதாக இருக்கிறதே ! போண்டாவின் சுவை போண்டாவில் இல்லை, அதன் இடையிடையே தென்படும் மிளகில் தான் என்று யாரோ ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறாராம். அதுபோலத்தான் கஜூராவும். கஜூராவின் சுவை கஜூராவில் இல்லை, அதனை மெல்லும் வாயில்தான் இருக்கிறது. அடுத்ததடுத்து கஜூராக்களை லபக்கிக்கொண்டிருந்தேன். கடைசியாக ஒரேயொரு கஜூரா மட்டும் பலகார பலகையில் எஞ்சியிருந்தது.

பட உதவி: கூகிள்
ஒரு புதிய மனிதர் டீக்கடைக்குள் நுழைகிறார். உடைந்து விழுந்து விடுவாரோ என்று அச்சப்படுகின்ற வகையில் ஒல்லியான தேகம், வழுக்குப்பாறை போன்றதொரு சொட்டைத்தலை, தன்னுடைய அளவிற்கு பொருந்தாத முழுக்கை சட்டை, பாலைவனச்சோலை காலத்து பேண்ட், கழுத்தில் ருத்திராட்ச கொட்டை, நெற்றியில் விபூதிப்பட்டை. கணநேரம் கஜூராவை மறந்து கண்ணசைக்காமல் அந்த மனிதரை பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன வாங்க வந்திருப்பார் ? மாஸ்டரிடம் ஒற்றை விரலைக்காட்டி சைகையில் ஏதோ சொன்னார். ரெகுலர் கஷ்டமராக இருக்கக்கூடும். பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். அது புகையை கக்கியது. அடுத்த சில நிமிடங்களில் அவர் சைகையில் குறிப்பிட்ட பானம் அவருடைய கைகளுக்கு வந்தது. அது டீ ! டீயை ஒரு மிடறு குடித்துவிட்டு சிகரெட்டை இழுத்தார். அதுவே சில நிமிடங்களுக்கு தொடர்ந்தன. சிகரெட் தன்னுடைய கடைசி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்தது. திடீரென ஒரு சுதாரிப்பு. நான் ஏன் அவரையே நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன் ? உண்மையில் எனக்கு என்ன பிரச்சனை ? ஏதோவொரு உண்மை உரைக்க அவர் மீதிருந்து என்னுடைய பார்வையை விலக்கிக்கொண்டேன். கடைசி கஜூராவை எடுக்க கையை நீட்டினேன். என்னை முந்திய ஒரு கை அதனை அபகரித்துவிட்டது. அது அவருடைய கை. அவருக்கும் கஜூரா பிடிக்கும் போலிருக்கிறது. வந்த கோபத்திற்கு அவரை நாலு மிதி மிதிக்கவேண்டும் போல தோன்றியது. எனக்கொரு தேன்மொழி இருந்தது போல அவருக்கொரு கனிமொழி இருந்திருக்கலாம் என்று நினைத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். மழை குறைந்திருந்தது.

சாலையில் வாகனங்கள் நகர ஆரம்பிக்கின்றன. நான் என்னுடைய நந்தவனத்தேரை நகர்த்தி அதன் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முற்படுகிறேன். அதற்குள் பாலைவனச்சோலை கடைசி கஜூராவை விழுங்கிவிட்டு அவருடைய வாகனத்தை எடுக்கிறார். அவரைக் கண்டதும் எனக்குள் சிறு அதிர்ச்சி. அவர் என்னைக்கண்டு லேசாக புன்னகைக்கிறார். கஜூராவை அபகரித்ததற்காக மன்னிப்பு கேட்கும் புன்னகை. புது உற்சாகத்துடன் வண்டியை கிளப்பி வேகமெடுக்கிறேன். அவரும் வண்டியை எடுத்துக்கொண்டு எனக்கு நேரெதிர் திசையை நோக்கி தன்னுடைய பயணத்தை துவங்குகிறார். சிறு தூறலுக்கிடையே தொடர்கிறது எங்கள் பயணம்... சாலையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் கூட !


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 April 2013

அந்தமான் பயணம் - தகவல்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


அந்தமான் தொடர் ஒருவழியாக நிறைவுக்கு வந்துவிட்டது. படிப்பவர்களுக்கு எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. எனக்கு நிம்மதியாக இருக்கிறது. இனி எழுதியே ஆகவேண்டுமென பின்னிரவில் அமர்ந்து அரைத்தூக்கத்தில் தட்டச்ச தேவையில்லை. கீழ்காணும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் தொடரை முழுமையாக வாசித்து வந்தவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் பயன் பெறலாம்.

சீசன்:
அந்தமானில் டிசம்பர் துவங்கி மே மாதம் வரை சீசன். மற்ற மாதங்களில் சென்றால் என்ன என்று கேட்கலாம் - மழை பெய்து உங்கள் சுற்றுலா திட்டத்தை கலைக்கலாம், முன்னறிவிப்பின்றி உள்ளூர் கப்பல்கள் ரத்து செய்யப்படலாம். அதற்கு மேல், சில தீவுகள் சீசன் தவிர்த்து மற்ற காலகட்டத்தில் பராமரிப்பிற்காக பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும். க்ளைமேட்டை பொறுத்தவரையில் அதிக வெயிலுமில்லாமல் குளிருமில்லாமல் மிதமாகவே இருக்கும்.

பயணம்:
கப்பலில் சென்றால் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் வரை செலவாகும். பயண நேரத்தில் முழுமையாக மூன்று நாட்கள் கழிந்துவிடும். விமானச்செலவு நான்காயிரத்தில் தொடங்கி சமயங்களில் பதினெட்டாயிரம் வரை கூட செலவாகலாம். விமான கட்டணத்தை பொறுத்தவரையில் எவ்வளவு நாட்கள் முன்கூட்டியே பதிவு செய்கிறோமோ அதற்கு தகுந்தபடி விலை வேறுபடும். சனி, ஞாயிறுகளில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும். சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிடுவது நல்லது. பயண நேரம் இரண்டு மணி நேரம் பத்து நிமிடம்.

தங்குமிடம்:
ஏசி இல்லாத அறைகள் எனில் நாள்வாடகை அறுநூறிலிருந்து துவங்கும். ஏசி அறை வாடகைகள் ஆயிரத்திலிருந்து துவங்குகிறது. முடிந்தவரையில் போர்ட் ப்ளேரின் மையப்பகுதியில், அதாவது அபெர்டீன் பஜார், செல்லுலர் ஜெயில் அருகில் அறை எடுத்துக்கொள்வது சுற்றிப்பார்க்க வசதியாக இருக்கும். நான் வசித்த பகுதியின் பெயர், தெலானிப்பூர். அங்கே ஹாலிடே-இன் என்கிற தரமான ஏசி ஹோட்டல், எதிரிலேயே தர்பார் ஹோட்டல், ஆட்டோ ஸ்டாண்ட், மதுக்கூடம் என சகலவசதிகளும் உள்ளன.

எத்தனை நாள் தேவை ?
முந்தய பதிவொன்றில் குறிப்பிட்டது போல, அந்தமான் முழுவதையும் சுற்றிப்பார்க்க மாதங்கள் ஆகக்கூடும். லகரங்களில் செலவு செய்ய வேண்டி வரும். முக்கியமான சில இடங்களை மட்டும் தேர்வு செய்து சுற்றிப்பார்க்கலாம். இங்கிருந்து பயணம் செய்யும் நாளை ஓய்வாக கழிக்கலாம், அங்கே சுற்றிப்பார்க்க ஆறு நாட்கள், திரும்பவும் அங்கிருந்து பயணிக்க வேண்டிய நாள் - மொத்தமாக எட்டு நாட்கள் இருந்தால் மனநிறைவாக சுற்றிவரலாம். ஆறு அல்லது ஏழு நாட்கள் கைவசம் இருக்கும்போது சில இடங்களை தவிர்த்துவிடலாம். அதை விடவும் குறைவான நாட்கள் வைத்திருப்பவர்கள் அந்தமான் செல்வதையே தவிர்த்துவிடலாம்.

சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்:
நாள் 1: சென்னை - போர்ட் ப்ளேர் விமானப்பயணம் - ஓய்வு - மாலையில் கார்பன்'ஸ் கோவ் கடற்கரை
நாள் 2: போர்ட் ப்ளேர் சிட்டி டூர் (சாத்தம் ஸா மில், ஃபாரஸ்ட் மியூசியம், சாமுத்ரிகா மியூசியம், ZSI மியூசியம், அந்த்ரோபாலஜிக்கல் மியூசியம், மீன் காட்சியகம், அறிவியலகம், காந்தி பூங்கா, செல்லுலர் ஜெயில்)
நாள் 3: ராஸ் / வைபர் / நார்த் பே தீவுகள்
நாள் 4: பாராடங் சுண்ணக்குகைகள், மட் வால்கேனோ
நாள் 5: ஹேவ்லாக் - ராதாநகர், எலிபேண்ட் கடற்கரைகள்
நாள் 6: ஜாலிபாய், வண்டூர் கடற்கரை
நாள் 7: மவுண்ட் ஹேரியட் & சிடியா டாப்பு கடற்கரை
நாள் 8: பயண நிறைவு - சென்னை திரும்புதல்

பட்ஜெட் (இரண்டு நபர்களுக்கு)
பயணச்செலவு (Up and Down) : Rs.18000 - 32000
தங்குமிடம் (7 நாட்களுக்கு): Rs. 7000 - 10000
சுற்றுலா செலவு: Rs.12000 - 20000
இதர செலவுகள்: Rs.5000

மொத்தத்தில் இரண்டு நபர்களுக்கு செலவு நாற்பதாயிரத்தில் துவங்கி எழுபதாயிரம் வரை ஆகலாம்.

சில டிப்ஸ்
- அந்தமானில் திங்களன்று அருங்காட்சியகங்கள் விடுமுறை. எனவே போர்ட் ப்ளேர் சிட்டி டூர் திங்களில் அமையாதவாறு பார்த்துக்கொள்ளவும். போலவே ராஸ் ஐலேண்ட் புதன் விடுமுறை. எனவே நாட்களை சரியாக திட்டமிடவும்.
- எங்கு சென்றாலும் ஒரு பையில் மாற்றுத்துணி, டவல் மற்றும் குடிநீர் பாட்டில் வைத்துக்கொள்ளவும். நம்மின மக்கள் உற்சாக பானமும் !
- ராஸ் / வைபர் / நார்த் பே தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இத்தனை மணிக்கு மறுபடியும் படகிற்கு வரவேண்டும் என சொல்லி அனுப்புவார்கள். அதனை சரியாக பின்பற்றவும்.
- Avomine போன்ற கடல் நோய்மை தவிர்க்கும் மாத்திரைகளை உடன் வைத்திருக்கவும். உடல் ஒத்துழையாது என்று தெரியும் பட்சத்தில் பயணம் தொடங்குவதற்கு முன்பே மாத்திரையை உட்கொள்ளலாம்.
- பயணத்தில் தவிர்க்க முடியாமல் வாந்தி எடுத்துவிட்டால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தவும் இயல்பு நிலைக்கு திரும்பவும் முன்னேற்பாடு அவசியம்.
- ஷாப்பிங்கிற்கு தனியாக ஒருநாளை ஒதுக்கி வைத்துவிட்டு காத்திருக்காமல் பிடித்த பொருட்களை கண்டால் உடனடியாக வாங்கிவிடவும்.

சில DON'Ts
- கடற்கரைகளிளிருந்து சிப்பிகள், பவளப்பாறைகளை சேகரிக்க வேண்டாம். எப்படியும் விமான நிலைய சோதனையில் அகப்படுவீர்கள்.
- ஸ்கூபா டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளின் போது கவனமாக இருக்கவும். உதவியாளரின் கட்டளையை மீறி செயல்பட வேண்டாம்.
- கார்பின்’ஸ் கோவ் கடற்கரையில் சில சுற்றுலா பயணிகளை முதலை இழுத்துச்சென்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எச்சரிக்கை !
- நார்த் பே மற்றும் ஜாலிபாய் கடற்கரைகளில் உள்ள பவளப்பாறைகள் மீது கால்வைக்க வேண்டாம். அது அவற்றிற்கும் சமயங்களில் நமக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
- ஆதிவாசிகளை கண்டால் அவர்களை புகைப்படம் எடுக்கவோ, அவர்களுக்கு பொருட்கள் வழங்கவோ முயற்சி செய்ய வேண்டாம். மீறினால் ஜாமீன் கிடைக்காதபடி சிறையில் தள்ளப்படுவீர்கள். உங்களை அழைத்துச்சென்ற சுற்றுலா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.
- குப்பைகளை, குறிப்பாக ப்ளாஸ்டிக் குப்பைகளை போட வேண்டாம். மீறுபவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்றாலும் கூட சுற்றுச்சூழலின் நன்மை கருதி குப்பை போடாமலிருப்பது நல்லது.
- போட்டோ, வீடியோ தடை செய்யப்பட்ட இடங்களில் அவற்றை தவிர்க்கவும்.

பதிவில் விட்டுப்போன சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் கேட்கவும். அது மற்றவர்களுக்கும் உபயோகப்படும் எனில் பதிவில் பிற்சேர்க்கையாக இணைக்கப்படும். தனிப்பட்ட முறையில் ஆலோசனைகள், தொடர்பு எண்கள், பிற தகவல்கள் வேண்டுவோர் என்னுடைய மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். செல்போன் எண்ணிற்கு அழைக்க வேண்டாம். அது பெரும்பாலும் உயிரற்ற நிலையில் தான் இருக்கும்.

அந்தமான் பயணத்தொடருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்த நல் உள்ளங்களுக்கும், போனிலும், மெயிலிலும் நேரிலும் பாராட்டி ஊக்குவித்த நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment