Showing posts with label travel. Show all posts
Showing posts with label travel. Show all posts

17 October 2016

கொல்லிமலை - தொடக்கம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கொல்லிமலை – மலைகளின் இளவரசி ! தென்னிந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்களிலேயே குறிப்பிடத்தக்கது கொல்லிமலை. ஏனென்றால் வரலாற்றுச் சிறப்புகளையும், ஆன்மிகப் பெருமைகளையும் கொண்ட, அதே சமயத்தில் சுற்றுலாவிற்கும் உகந்த மலை வாசஸ்தலம் கொல்லிமலை. மேலும் சென்னையிலிருந்து ஒப்பீட்டளவில் குறைந்த தூரம். தோராயமாக 370 கி.மீ.

மூலம்: கூகுள் மேப்ஸ்
கொல்லிமலைக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. கொல்லி மலையுச்சிக்கு சென்றடைய மொத்தம் 70 கொண்டையூசி வளைவுகளை கடக்க வேண்டும். இதனை கூகிள் மேப்ஸில் பார்த்தால் நம் இதயத்துடிப்பு அதிகரிக்கும். அதிகரித்த இயதுடிப்பை ECGயில் ப்ளாட் செய்தது போலிருக்கும். சுயமாக வாகனம் ஓட்டிச்செல்பவர்களுக்கு இது ஒரு கொடுப்பினை. இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் கொல்லிமலைக்கு செல்வதென்று முடிவு செய்தோம்.

ஒரு நிறைந்த வெள்ளிக்கிழமை, அதிகாலை நான்கு மணிக்கு துவங்கியது எங்கள் பயணம். மூன்று பேர், இரண்டு வாகனம், ஒரு இலக்கு – கொல்லிமலை.

நேர்த்தியான திட்டமிடலுடன், ராணுவ ஒழுங்குடன் துவங்கியது எங்கள் பயணம். ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை இடைவேளை. சராசரியாக மணிக்கு 50 கி.மீ. தூரத்தை கடக்க வேண்டுமென திட்டம் வகுத்துக்கொண்டோம். அதன்படி அதிகாலை நான்கு மணிக்கு கிளம்பிய நாங்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, (கள்ளக்குறிச்சிக்கு முன்பாக ஒருமணிநேர உணவு இடைவேளை) கள்ளக்குறிச்சி, ஆத்தூர், திம்மநாயக்கன்பட்டி வழியாக மலையடிவார கிராமமான காரவள்ளியை மதியம் 12:15க்கு சென்றடைந்தோம்.

இதில் ஆத்தூரிலிருந்து திம்மநாயக்கன்பட்டி வழியாக வந்தது மட்டும் மோசமான அனுபவமாக அமைந்தது. இந்த பாதையில் நிறைய சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், பொதுவாகவே மோசமான சாலைகள் என்பதாலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தையும் சினத்தையும் ஏற்படுத்தியது. திம்மநாயக்கன்பட்டி வழிக்கு பதிலாக கொஞ்சம் சுற்றி சேலம், ராசிபுரம் வழியை தேர்ந்தெடுத்திருந்தால் சாலை நன்றாக இருந்திருக்கக்கூடும்.


காரவள்ளியில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு 70 கொண்டையூசி வளைவுகளை ஸ்பரிசிக்கத் துவங்கினோம். கடந்தமுறை ஏலகிரி சென்றபோது சில கொண்டையூசி வளைவுகளை கடந்ததுமே நல்ல உயரத்தை அடைந்துவிட்டோம் என்று உணர முடிந்தது. கொல்லிமலை அப்படியில்லை. ஒரு தேர்ந்த உற்சாக பானத்தைப் போல கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஏற ஆரம்பித்தது.

கொண்டையூசி வளைவுகளினூடே பயணம் செய்யும்போது நீங்கள் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவோ, இளைப்பாறிக்கொள்ளவோ உகந்த நோக்குமுனை முப்பத்தி நான்காவது வளைவில் அமைந்துள்ளது.

இவ்வளைவில் மன்னர் வல்வில் ஓரியை பற்றிய புறநானூற்றுப் பாடலையும் பாடலின் ஓவிய வடிவையும் காணலாம். இச்செய்யுள் குறித்து நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். கேள்விப்படாதவர்களுக்காக சுருக்கமாகச் சொல்கிறேன். மன்னர் ஓரியின் வில்லாற்றலை புகழ்ந்து எழுதப்பட்ட செய்யுள் அது ! அதாவது ஓரி ஒரேயொரு அம்பினை எய்தினால் அது யானை, புலி, கலைமான், பன்றி ஆகிய விலங்குகளை துளைத்து ஊடுருவி இறுதியாக தரையிலிருக்கும் உடும்பின் மீது பாயுமாம் !

மன்னரின் பராக்கிரமங்களை வியந்தபடி எஞ்சியிருக்கும் கொண்டையூசி வளைவுகளையும் கடந்து செம்மேடு என்ற சிற்றூரை அடைந்தோம். கொல்லிமலையை பொறுத்தவரையில் செம்மேடு தலைநகரம் போன்றது. குறிப்பாக சுற்றுலா பயணிகளுக்கு உண்ணவும், உறங்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவும், செல்பேசிக்கு மீள்நிரப்பு செய்யவும் ஒற்றை நிறுத்தமும், மையப்புள்ளியும் செம்மேடுதான். சகாக்களில் ஒருவரின் ஆலோசனைப்படி வசந்தமாளிகை உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டோம்.

அறை தேடும் படலம் துவங்கியது. கொல்லியில் தங்குமிடங்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவுதான். பொதுவாக எந்த சுற்றுலா தளத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கே ரிஸார்ட் எனப்படும் உல்லாச போக்கிடங்கள் இருக்கும். உல்லாச போக்கிடம் என்றால் குறைந்தபட்சம் நீச்சல் குளம், சிறிய உள்விளையாட்டு அரங்கு, அறையில் குளிர்சாதனப் பெட்டி போன்றவை இருப்பது அவசியம். ஆனால் கொல்லியில் எங்கேயும் நீச்சல்குளம் கிடையாது. பெயரளவில் மட்டுமே ரிஸார்ட். மற்றபடி அவற்றை லாட்ஜ் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒப்பீட்டளவில் நல்லதம்பி (ரிஸார்ட்) மற்றும் P.A. ஹாலிடே இன் ஆகிய இரண்டும் பரவாயில்லை ரகம்.

சில தங்குமிடங்களை பார்வையிட்டுவிட்டு நல்லதம்பியில் செட்டிலானோம். (தங்குமிடங்களை தேர்ந்தெடுப்பதைப் பற்றிய விரிவான குறிப்புகளை நாம் தொடரின் இறுதியில் பார்க்கலாம்). 

வெள்ளி மாலை நல்லதம்பியில் ‘முழு’ ஓய்வெடுத்துவிட்டு, சனி காலை கொல்லிமலையை சுற்றிப்பார்க்க உற்சாகமாக தயாரானோம்.

அடுத்த இடுகை: ஆகாயகங்கை

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 July 2016

அந்தமானில் அருணகிரி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்த அருணகிரி – உலகம் சுற்றிய வாலிபன். தன்னுடைய உலக நாட்டு பயண அனுபவங்களைக் கொண்டு பதினைந்து நூல்கள் எழுதியிருக்கிறார். குறிப்பாக, ஜப்பானை பற்றி இதுவரை யாரும் எழுதியிராத தகவல்களை சேகரித்து எழுதியிருக்கிறார். மேலும் விகடன் பிரசுரமாக வெளியான ‘கட்சிகள் உருவான கதை’ உட்பட ஐந்து அரசியல் நூல்களையும் எழுதியிருக்கிறார். அவருடைய படைப்புகளில் ஒன்று – அந்தமானில் அருணகிரி ! புத்தகத்தின் பெயரைக் கேட்டதும் அதனை வாங்கியாக வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்.

புத்தகத்தின் தலைப்பிலிருந்தே நீங்கள் ஒரு விஷயத்தை யூகித்திருக்கலாம். முன்னுரையை படிக்கும்போது ஊர்ஜிதமாயிற்று. அது என்னவென்றால் பெரிய எழுத்தாள தொனியோடு, படாடோப அலங்காரங்கள் எல்லாம் இல்லாமல் ஒரு சாமானியன் பார்வையில் இருக்கிறது புத்தகத்தின் உள்ளடக்கம். கையில் ஒரு வாழைக்காய் பஜ்ஜியை வைத்துக்கொண்டு, அது எந்த எண்ணையில் தயாரிக்கப்பட்டது, எண்ணெய்களின் மூலம் எந்த நாடு, எண்ணெய் இந்தியாவிற்குள் நுழைந்த அரசியல் பின்னணி என்ன, மேலும் பஜ்ஜியை சுற்றியிருக்கும் தினத்தந்தி எந்த தேதியில் அச்சிடப்பட்டது, அதன் நிறுவனரின் வாழ்க்கை வரலாறு என்றெல்லாம் வளவளவென்று மொக்கை போடாமல் நேரடியாக பஜ்ஜியின் சுவை தரும் பரவசத்தை விளக்கத் துவங்கிவிடுகிறார். பஜ்ஜியின் சுவை தொண்டைக்குழிக்குள் இறங்கியபிறகு சாவகாசமாக இடையிடையே அரசியல், வரலாறு பேசுகிறார்.

சிறு வயதிலிருந்தே அந்தமான் மீதும், கப்பல் பயணம் மீதும் தனக்குள்ள பேராவலை விவரித்து புத்தகத்தை துவங்குகிறார். கப்பல் பயணம் குறித்த இவருடைய முப்பது வருட கனவு அந்தமானுக்கு ஸ்வராஜ்தீப்பில் பயணம் செய்யும்போது பூர்த்தியடைகிறது. அருணகிரியின் இந்த இச்சைகளையும், அவரது முதல் கப்பல் அனுபவத்தையும், அவருடைய விவரணைகளையும் படிக்கும்போது அப்படியே என்னை நானே படித்துக்கொள்வது போல இருக்கிறது. பல இடங்களில் அச்சு அசலாக எனது வலைப்பூவையே வாசிப்பது போல இருந்து என்னை புத்தகத்துடன் நெருக்கமாக உணரச் செய்தது.

இருப்பினும் வலைப்பூவில் / ஃபேஸ்புக்கில் எழுதுவதற்கும் புத்தகம் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உங்கள் வலைப்பூவை படிப்பவர்கள் பெரும்பாலும் உங்களுடன் நட்பு பாராட்டுபவர்களாகவும், குறைந்தபட்சம் உங்களுடைய குணாதிசயங்களை புரிந்து வைத்திருப்பவராகவும் இருப்பர். வலைப்பூவில் எழுதும்போது நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை (பயணத்தில் சைட்டடித்த ஃபிகர் பற்றியோ, குறட்டைவிட்டு தூக்கத்தை கெடுத்த சகபயணி குறித்தோ) எழுதலாம். நண்பன் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி கப்பலில் போக பயந்தது பற்றியும் அவனை எப்படி சமாதானப்படுத்தினீர்கள் என்றும் எழுதலாம். பெங்களூரில் போயிறங்கியதும் காஜல் அகர்வால் போஸ்டரை பார்த்தேன் என்று ஜொள் விடலாம். ஆனால் புத்தகத்தில் இதுபோன்ற அசட்டுத்தனங்கள் கூடாது. புத்தகத்தை வாங்கி படிப்பவர்கள் நம் மீது துளி கூட அக்கறை இல்லாதவராகவும், புத்தகத்தின் உள்ளடக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டும் வாங்கியிருக்கலாம். அவருடைய நம்பிக்கையை கெடுக்காத வண்ணம் பொறுப்புணர்ச்சியுடன் எழுத வேண்டும். அது இந்த புத்தகத்தில் நிறைய இடங்களில் தவறுகிறது.

தேசிய இளைஞர் திட்டம் என்கிற அமைப்பின் மூலம் அருணகிரி அவர்கள் அந்தமான் சென்றிருக்கிறார். அதனால் அந்த அமைப்பு, செயல்பாடுகள், முந்தைய முகாம்கள் போன்ற விவரணைகள் வருகின்றன. இடையிடையே அந்தமானில் படப்பிடிப்பு நடத்திய திரைப்படங்கள், அந்தமானில் வாழ்ந்த தமிழறிஞர்கள், தமிழர் சங்கம், அந்தமான் பொதுக்கூட்டத்தில் மறைந்த (அப்போதைய) வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி (தி.மு.க.), அந்தமான் ஹிந்துக் கோவில் திருவிழாக்கள், பயணத்தில் சந்தித்த வெளி மாநிலத்தவர் / வெளிநாட்டவர், ஈழத்தமிழ் பாடகி மாதங்கி அருள்பிரகாசம் என்று கலந்துகட்டி பல தகவல்களை அளிக்கிறார். கூடவே, கடலில் காகங்கள் பறக்குமா ? கப்பலில் காகத்தை கொண்டுவந்து நடுக்கடலில் பறக்க விட்டால் அது என்ன செய்யும் ? போன்ற கேள்விகளால் அவரது குழந்தைத்தனம் கொண்ட மறுபக்கத்தையும் காட்டுகிறார். மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் குறித்து குறைந்தது ஒரு புத்தகமாக எழுதிவிட வேண்டுமென தீவிரமாக பரிந்துரைக்கிறார்.

கப்பல் போர்ட் ப்ளேர் துறைமுகத்திற்கு சென்றடைந்ததும் கொஞ்சம் தரைதட்டத் துவங்குகிறது. அது மட்டுமில்லாமல் அருணகிரி அவர்கள் தன்னுடைய பத்துநாள் பயணத்தில் போர்ட் ப்ளேர் மற்றும் அதற்கு அருகே அமைந்துள்ள ஒன்றிரண்டு தீவுகளுக்கு மட்டும் போய் வந்திருப்பதாக தெரிகிறது. அவற்றில் கூட படிக்கும்போது இதனோடு பல தகவல்கள் சேர்த்து எழுதியிருக்கலாமே என்று ஆதங்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. உதாரணத்திற்கு சாத்தம் தீவில் அமைந்துள்ள மர அறுவை தொழிற்சாலைக்கு பின்னால் சுவாரஸ்யமான ஜப்பானிய போர் வரலாறு ஒன்று இருக்கிறது. ராஸ் தீவு ஒருகாலத்தில் ராணுவத் தலைமையிடமாக விளங்கியது. வைப்பர் தீவின் கதையைக் கேட்டால் மிரட்சியாக இருக்கும். மிக முக்கியமாக, வெளிநாட்டு கடற்கரைகளுக்கு இணையான ஹேவ்லாக் கடற்கரை இருக்கிறது. இதுகுறித்தெல்லாம் சிறிய சிறிய பத்திகள் எழுதிவிட்டு அந்தமான் காதலி படத்தில் சிவாஜி சுஜாதாவுடன் ரொமான்ஸ் செய்வதைப் பற்றி விவரித்திருக்கிறார் ஆசிரியர். அந்தமான் ஆதிவாசி இனங்களில் மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர்கள் சென்டினல் தீவில் வசிக்கும் ஆதிவாசிகள். அவர்களைப் பற்றி ஒரு பத்தி கூட எழுதாதது எல்லாம் மன்னிக்க முடியாத குற்றம்.

இது ஒருபக்கம் என்றால் நூற்றி நாற்பது பக்க புத்தகத்தில் எண்பத்திஐந்து பக்கங்களுடன் அந்தமான் அனுபவங்கள் முடிந்துவிடுகிறது. அதன்பிறகு நெல்லூர் ஞாயிறுச்சந்தை, மூணாறு, கழுகுமலை, யானைமலை போன்றவற்றை குறித்து எழுதியிருப்பதில் சில தகவல்கள் கிடைத்தாலும் கூட அவை அவுட் ஆப் சிலபஸ் என்பதால் அதிகம் ரசிக்க முடியவில்லை. உச்சபட்ச வன்முறை எது தெரியுமா ? கடைசி பதினைந்து பக்கங்களை நூலாசிரியர் பற்றி நடிகர் ராஜேஷ், லேனா தமிழ்வாணன் போன்றவர்கள் எழுதிய கட்டுரைகள் நிறைத்திருக்கின்றன.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கூட எனது பயண அனுபவங்களை மீண்டும் நினைவூட்டும் விதமாகவும், மீண்டுமொரு முறை பயணிக்க தூண்டும் வகையில் அமைந்துள்ளதாலும் அந்தமானில் அருணகிரியை ரசித்து வாசித்தேன். ஒத்த சிந்தனையுடைய நண்பர்கள் வாங்கிப் படிக்கலாம்.

அந்தமானில் அருணகிரி
மங்கையர்க்கரசி பதிப்பகம்
140 பக்கங்கள்
விலை ரூ.100/-

எழுத்தாளரின் அலைபேசி எண்: 94443 93903


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 April 2013

அந்தமான் பயணம் - தகவல்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


அந்தமான் தொடர் ஒருவழியாக நிறைவுக்கு வந்துவிட்டது. படிப்பவர்களுக்கு எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. எனக்கு நிம்மதியாக இருக்கிறது. இனி எழுதியே ஆகவேண்டுமென பின்னிரவில் அமர்ந்து அரைத்தூக்கத்தில் தட்டச்ச தேவையில்லை. கீழ்காணும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் தொடரை முழுமையாக வாசித்து வந்தவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் பயன் பெறலாம்.

சீசன்:
அந்தமானில் டிசம்பர் துவங்கி மே மாதம் வரை சீசன். மற்ற மாதங்களில் சென்றால் என்ன என்று கேட்கலாம் - மழை பெய்து உங்கள் சுற்றுலா திட்டத்தை கலைக்கலாம், முன்னறிவிப்பின்றி உள்ளூர் கப்பல்கள் ரத்து செய்யப்படலாம். அதற்கு மேல், சில தீவுகள் சீசன் தவிர்த்து மற்ற காலகட்டத்தில் பராமரிப்பிற்காக பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும். க்ளைமேட்டை பொறுத்தவரையில் அதிக வெயிலுமில்லாமல் குளிருமில்லாமல் மிதமாகவே இருக்கும்.

பயணம்:
கப்பலில் சென்றால் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் வரை செலவாகும். பயண நேரத்தில் முழுமையாக மூன்று நாட்கள் கழிந்துவிடும். விமானச்செலவு நான்காயிரத்தில் தொடங்கி சமயங்களில் பதினெட்டாயிரம் வரை கூட செலவாகலாம். விமான கட்டணத்தை பொறுத்தவரையில் எவ்வளவு நாட்கள் முன்கூட்டியே பதிவு செய்கிறோமோ அதற்கு தகுந்தபடி விலை வேறுபடும். சனி, ஞாயிறுகளில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும். சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிடுவது நல்லது. பயண நேரம் இரண்டு மணி நேரம் பத்து நிமிடம்.

தங்குமிடம்:
ஏசி இல்லாத அறைகள் எனில் நாள்வாடகை அறுநூறிலிருந்து துவங்கும். ஏசி அறை வாடகைகள் ஆயிரத்திலிருந்து துவங்குகிறது. முடிந்தவரையில் போர்ட் ப்ளேரின் மையப்பகுதியில், அதாவது அபெர்டீன் பஜார், செல்லுலர் ஜெயில் அருகில் அறை எடுத்துக்கொள்வது சுற்றிப்பார்க்க வசதியாக இருக்கும். நான் வசித்த பகுதியின் பெயர், தெலானிப்பூர். அங்கே ஹாலிடே-இன் என்கிற தரமான ஏசி ஹோட்டல், எதிரிலேயே தர்பார் ஹோட்டல், ஆட்டோ ஸ்டாண்ட், மதுக்கூடம் என சகலவசதிகளும் உள்ளன.

எத்தனை நாள் தேவை ?
முந்தய பதிவொன்றில் குறிப்பிட்டது போல, அந்தமான் முழுவதையும் சுற்றிப்பார்க்க மாதங்கள் ஆகக்கூடும். லகரங்களில் செலவு செய்ய வேண்டி வரும். முக்கியமான சில இடங்களை மட்டும் தேர்வு செய்து சுற்றிப்பார்க்கலாம். இங்கிருந்து பயணம் செய்யும் நாளை ஓய்வாக கழிக்கலாம், அங்கே சுற்றிப்பார்க்க ஆறு நாட்கள், திரும்பவும் அங்கிருந்து பயணிக்க வேண்டிய நாள் - மொத்தமாக எட்டு நாட்கள் இருந்தால் மனநிறைவாக சுற்றிவரலாம். ஆறு அல்லது ஏழு நாட்கள் கைவசம் இருக்கும்போது சில இடங்களை தவிர்த்துவிடலாம். அதை விடவும் குறைவான நாட்கள் வைத்திருப்பவர்கள் அந்தமான் செல்வதையே தவிர்த்துவிடலாம்.

சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்:
நாள் 1: சென்னை - போர்ட் ப்ளேர் விமானப்பயணம் - ஓய்வு - மாலையில் கார்பன்'ஸ் கோவ் கடற்கரை
நாள் 2: போர்ட் ப்ளேர் சிட்டி டூர் (சாத்தம் ஸா மில், ஃபாரஸ்ட் மியூசியம், சாமுத்ரிகா மியூசியம், ZSI மியூசியம், அந்த்ரோபாலஜிக்கல் மியூசியம், மீன் காட்சியகம், அறிவியலகம், காந்தி பூங்கா, செல்லுலர் ஜெயில்)
நாள் 3: ராஸ் / வைபர் / நார்த் பே தீவுகள்
நாள் 4: பாராடங் சுண்ணக்குகைகள், மட் வால்கேனோ
நாள் 5: ஹேவ்லாக் - ராதாநகர், எலிபேண்ட் கடற்கரைகள்
நாள் 6: ஜாலிபாய், வண்டூர் கடற்கரை
நாள் 7: மவுண்ட் ஹேரியட் & சிடியா டாப்பு கடற்கரை
நாள் 8: பயண நிறைவு - சென்னை திரும்புதல்

பட்ஜெட் (இரண்டு நபர்களுக்கு)
பயணச்செலவு (Up and Down) : Rs.18000 - 32000
தங்குமிடம் (7 நாட்களுக்கு): Rs. 7000 - 10000
சுற்றுலா செலவு: Rs.12000 - 20000
இதர செலவுகள்: Rs.5000

மொத்தத்தில் இரண்டு நபர்களுக்கு செலவு நாற்பதாயிரத்தில் துவங்கி எழுபதாயிரம் வரை ஆகலாம்.

சில டிப்ஸ்
- அந்தமானில் திங்களன்று அருங்காட்சியகங்கள் விடுமுறை. எனவே போர்ட் ப்ளேர் சிட்டி டூர் திங்களில் அமையாதவாறு பார்த்துக்கொள்ளவும். போலவே ராஸ் ஐலேண்ட் புதன் விடுமுறை. எனவே நாட்களை சரியாக திட்டமிடவும்.
- எங்கு சென்றாலும் ஒரு பையில் மாற்றுத்துணி, டவல் மற்றும் குடிநீர் பாட்டில் வைத்துக்கொள்ளவும். நம்மின மக்கள் உற்சாக பானமும் !
- ராஸ் / வைபர் / நார்த் பே தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இத்தனை மணிக்கு மறுபடியும் படகிற்கு வரவேண்டும் என சொல்லி அனுப்புவார்கள். அதனை சரியாக பின்பற்றவும்.
- Avomine போன்ற கடல் நோய்மை தவிர்க்கும் மாத்திரைகளை உடன் வைத்திருக்கவும். உடல் ஒத்துழையாது என்று தெரியும் பட்சத்தில் பயணம் தொடங்குவதற்கு முன்பே மாத்திரையை உட்கொள்ளலாம்.
- பயணத்தில் தவிர்க்க முடியாமல் வாந்தி எடுத்துவிட்டால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தவும் இயல்பு நிலைக்கு திரும்பவும் முன்னேற்பாடு அவசியம்.
- ஷாப்பிங்கிற்கு தனியாக ஒருநாளை ஒதுக்கி வைத்துவிட்டு காத்திருக்காமல் பிடித்த பொருட்களை கண்டால் உடனடியாக வாங்கிவிடவும்.

சில DON'Ts
- கடற்கரைகளிளிருந்து சிப்பிகள், பவளப்பாறைகளை சேகரிக்க வேண்டாம். எப்படியும் விமான நிலைய சோதனையில் அகப்படுவீர்கள்.
- ஸ்கூபா டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளின் போது கவனமாக இருக்கவும். உதவியாளரின் கட்டளையை மீறி செயல்பட வேண்டாம்.
- கார்பின்’ஸ் கோவ் கடற்கரையில் சில சுற்றுலா பயணிகளை முதலை இழுத்துச்சென்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எச்சரிக்கை !
- நார்த் பே மற்றும் ஜாலிபாய் கடற்கரைகளில் உள்ள பவளப்பாறைகள் மீது கால்வைக்க வேண்டாம். அது அவற்றிற்கும் சமயங்களில் நமக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
- ஆதிவாசிகளை கண்டால் அவர்களை புகைப்படம் எடுக்கவோ, அவர்களுக்கு பொருட்கள் வழங்கவோ முயற்சி செய்ய வேண்டாம். மீறினால் ஜாமீன் கிடைக்காதபடி சிறையில் தள்ளப்படுவீர்கள். உங்களை அழைத்துச்சென்ற சுற்றுலா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.
- குப்பைகளை, குறிப்பாக ப்ளாஸ்டிக் குப்பைகளை போட வேண்டாம். மீறுபவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்றாலும் கூட சுற்றுச்சூழலின் நன்மை கருதி குப்பை போடாமலிருப்பது நல்லது.
- போட்டோ, வீடியோ தடை செய்யப்பட்ட இடங்களில் அவற்றை தவிர்க்கவும்.

பதிவில் விட்டுப்போன சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் கேட்கவும். அது மற்றவர்களுக்கும் உபயோகப்படும் எனில் பதிவில் பிற்சேர்க்கையாக இணைக்கப்படும். தனிப்பட்ட முறையில் ஆலோசனைகள், தொடர்பு எண்கள், பிற தகவல்கள் வேண்டுவோர் என்னுடைய மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். செல்போன் எண்ணிற்கு அழைக்க வேண்டாம். அது பெரும்பாலும் உயிரற்ற நிலையில் தான் இருக்கும்.

அந்தமான் பயணத்தொடருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்த நல் உள்ளங்களுக்கும், போனிலும், மெயிலிலும் நேரிலும் பாராட்டி ஊக்குவித்த நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 April 2013

அந்தமானில் நிறைவு நாள் - விமானப்பயணம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கிட்டத்தட்ட பயணத்தொடரின் இறுதிக்கு வந்துவிட்டோம். கடைசியாக ஒருநாள் ஓய்வாக குடித்துக் களிக்கலாம் என்று திட்டமிட்டு வைத்திருந்தபோது நம் பயண கர்த்தா நம்மை அழைத்து, மவுண்ட். ஹேரியட் - சிடியா டாப்பு போயிட்டு வாங்க சார்... என்று அன்பொழுக கேட்டார். பணம் எதுவும் வாங்கவில்லை. வாங்குவதாக இருப்பின் ஐநூறு ரூபாய் வாங்கியிருக்கக்கூடும். காலை சிற்றுண்டி முடித்துக்கொண்டு மதிய உணவை பார்சல் கட்டிக்கொண்டு கிளம்பினோம். முந்தய பதிவொன்றில் கண்ட சாத்தம் படகுத்துறையில் இருந்து சிறிய கப்பலொன்றில் புறப்பட்டோம். இருபது நிமிடப் பயணம். அதன்பின்பு சிறிது நேர மகிழ்வுந்து.


மவுண்ட் ஹேரியட் - பெயரைக் கேட்டதும் ஏதோ எவரெஸ்ட், கிளிமாஞ்சாரோ ரேஞ்சுக்கு நினைத்து வைத்திருந்தேன். ஹேரியட் டெயிலர் என்கிற துரையம்மாவின் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. 365மீ உயரம். எவரெஸ்டின் ஐந்து சதவிகிதம் கூட கிடையாது, எனினும் அந்தமானிலேயே உயரமான மலை. எரிமலை குழம்பு ஏதோ காணக் கிடைக்கப்போகிறது என்று நினைத்தவனுக்கு மறுபடியும் ஏமாற்றம் தான்; காரக்குழம்பு கூட கிடைக்கவில்லை. உண்மையில் அது காட்டுப்பகுதியில் ‘வியூ பாயிண்டுகள்' எல்லாம் வைத்து அமைக்கப்பட்ட சிறு பூங்கா. ஆனால் இயற்கை இயற்கையாகவே இருக்கக்கூடிய பகுதி. அமைதியான சூழல், அதனை லேசாக குலைக்க முயலும் பறவையின் கூக்குரல், அலாதியான காற்று என்று நாற்பதை கடந்தவர்களுக்கு உகந்த சூழல்.

சிடியா டாப்பு - என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமென்று தெரியவில்லை. இது மறுபடியும் ஒரு கடற்கரை பகுதி. கடற்கரைக்கு செல்வதற்கு முன்பு உயிரியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. ஆனால் அதன் கட்டுமான பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. சிலவகை முதலைகள், மான்கள், குரங்குகள் மாத்திரம் காணக் கிடைக்கின்றன. அங்கிருந்து சுமார் இரண்டரை கி.மீ மேடுபள்ளங்கள் தாண்டி பயணித்தால் சிடியா டாப்பு கடற்கரை. இந்த கடற்கரைக்கு மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் சென்றால் விஷுவல் ட்ரீட். மற்ற கடற்கரைகள் போல பெரிய ஆரவாரங்கள் இருக்காது. குடும்ப பாங்கான கடற்கரை. SLR கேமராக்காரர்களுக்கு சர்க்கரை பொங்கல்.


அபெர்டீன் பஜார் - போர்ட் ப்ளேரின் அங்காடித்தெரு. அந்தமான் மக்களை பொறுத்தவரையில் பஜாரில் எல்லாமே கிடைக்கும் என்ற நிலை இருந்தாலும், சுற்றுலாப்பயணிகளுக்கு அது சரிப்பட்டு வராது. ஏனெனில் பஜாரில் விற்கப்படும் பெரும்பாலான பொருட்கள் துணைக்கண்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுபவை. விலை அதிகம், தரம் எதிர்பார்க்க முடியாது. தவிர, திருநெல்வேலி அல்வா, சேலத்து மாம்பழம், சாத்தூர் காராசேவு போல அந்தமானுக்கென்று ஸ்பெஷல் எதுவும் கிடையாது. சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் கடைசி நாளில் ஷாப்பிங் செய்யலாம் என்று ஒரு எண்ணம் வைத்திருப்பார்கள். அந்தமானை பொறுத்தவரையில் பிடித்த பொருளை சுற்றுலா தளங்களில் பார்த்தால் உடனே வாங்கிவிடுவது உத்தமம்.


அந்தவகையில் அந்தமானில் இருந்து வாங்கிவர உகந்த சில பொருட்கள் - அந்தமான் கடற்கரையின் படங்கள் பொறித்த டீ-ஷர்ட், மரத்தில் செய்யப்பட்ட ஜரவா பொம்மைகள், சிப்பியில் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள். என்னுடைய கொள்முதலாக பன்னிரண்டு ஜரவா பொம்மைகளை வாங்கிவந்து உறவினர் இல்லங்களுக்கு கொடுத்தேன்.

*************************


அந்தமானை விட்டு பிரிய வேண்டிய நேரம் வந்தது. நீண்ட விடுமுறைக்குப்பின் பள்ளி செல்லும் மழலையின் மனநிலையில் தான் இருந்தேன். அதைவிட முதல் விமானப்பயணம் என்கிற படபடப்பு. ஏர் சிக்நெஸ் என்று கூகிளில் போட்டு தேடிக்கொண்டிருந்தேன். அன்றைய தினம் டிசம்பர் 26. சுனாமி நாள். நகரில் அதற்கான நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. என்னுடைய விமான நேரம் காலை பதினோரு மணி. கோ ஏர். ஒன்பதரை மணிக்கெல்லாம் நிலையத்திற்கு சென்று அமர்ந்துவிட்டேன். விமான நிலையத்திற்கு கூட வீர சவார்க்கரின் பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள். அந்தமானுக்கு கோ ஏர், ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா - ஆகிய நான்கு விமான சேவைகள் மட்டுமே உள்ளன. மலிவான மன நிறைவிற்கு கோ ஏரை தேர்ந்தெடுக்கலாம்.


என்னுடைய மூட்டை முடிச்சுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. எனக்கு முன்னர் பரிசோதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடற்கரையில் இருந்து சில அரிய வகை சிப்பிகளை பொறுக்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள்; ஸ்கேனிங் கருவி காட்டி கொடுத்துவிட்டது. விமான நிலைய பணியாட்களுக்கு தமிழ் தெரியாததால் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் சந்தேகங்களை கேட்டுக்கொண்டேன். என்னுடைய மூட்டை முடிச்சுகளையெல்லாம் சென்னைக்கு கொண்டு வந்திடுவீங்க தானே என்று நான்காவது முறை கேட்டபோதும் அவள் உதிர்த்த புன்னகை அழகாகத்தான் இருந்தது. பயணம் தொடங்க பதினைந்து நிமிடங்களே இருந்தன. பேருந்து ஒன்று எங்களை விமானத்திற்கு அருகாமையில் கொண்டு சென்றது.


வானில், வெகு தொலைவில் மட்டுமே பார்த்து ரசித்த விமானம். பழவந்தாங்கல், பரங்கிமலை பக்கம் விமானம் சற்று தாழ்வாக பறந்தாலே பரவசமடைவேன். அது இப்போது சில அடிகள் தொலைவில் நின்றுக்கொண்டிருக்கிறது. நான் அதில் பயணிக்கப்போகிறேன். விமானம் ஏறுவதற்கு முன்பே பறந்துக்கொண்டு தான் இருந்தேன். விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டோம். தடதடவென படியேறினேன் - சென்னையில் கப்பலேறிய அதே வேகத்துடன். ஜன்னலோர இருக்கை வாய்த்திருந்தது. அலைபேசியில் உள்ள ஃப்ளைட் மோடை முதன்முறையாக பயன்படுத்தி பெருமை அடைந்தேன். எத்தனை சினிமாக்களில் சீட் பெல்ட் காமெடி பார்த்திருப்போம். அவ்வளவையும் பார்த்தும்கூட சீட் பெல்ட் மாட்டத்தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் நயன்தாராவோ, ஹன்சிகாவோ குறைந்தபட்சம் தனிஷ்கா முகர்ஜியாவது அமர்ந்திருந்தால் உதவி கேட்டிருக்கலாம். கெரகம், ஒரு வட இந்திய சோம்பப்டி அமர்ந்திருந்தான். பெருமுயற்சி எடுத்து இறுதியில் நானே அணிந்துக்கொண்டேன்.

கழுகுப்பார்வையில் அந்தமான் தீவுகள்

மணி பதினொன்றை தாண்டி சில நிமிடங்கள் ஆகியிருந்தது. விமானம் இடமும், வலமுமாக திரும்பி ஏதோ விளையாடிக்கொண்டிருந்தது. திடீரென ரன்வேயில் நுழைந்து தடதடத்து உயரே எழும்பியது. அந்தமான் தீவுகளை விட்டு கடந்த சில நிமிடங்கள் கண்கொள்ளா காட்சி. கழுகுப்பார்வையில் குட்டி குட்டியாக தீவுகள் ! அதன்பிறகு கீழே வெண்பஞ்சு மேகங்களை தவிர வேறொன்றும் தெரியவில்லை. மேகங்களுக்கு இடையில் கூட எதுவும் தெரியவில்லை. ரிலேடிவ் ஸ்பீட் என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. அதிவேக ரயிலில் செல்லும்போது வெளியே இருக்கும் மரம், செடி கொடிகளை பார்க்கும்போது தான் ரயிலின் வேகம் தெரியும். அருகிலேயே இன்னொரு அதிவேக ரயில் அதே வேகத்தில் பயணித்தால் இரண்டு ரயில்களும் நின்றுக்கொண்டிருப்பது போலவே தோன்றும். போலவே மிக மிக தொலைவில் பார்த்து பழக்கப்பட்ட மேகங்களை மிக அருகில் பார்ப்பதாலோ என்னவோ விமானம் ஏதோ அந்தரத்தில் நின்றுக்கொண்டிருப்பதாகவே தோன்றியது.

சிங்கார சென்னை
சென்னையை அடைய வேண்டிய நேரத்திற்கு பதினைந்து நிமிடங்கள் மட்டுமே இருந்தன. ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டே இருந்தேன். தீப்பெட்டி சைஸில் ஒரு பொருள் கீழே தெரிந்தது. ஹார்பரில் நிற்கும் கப்பல் என்று சோம்பப்டி அவனுடைய புது மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சொன்னது சரிதான், மெரீனாவின் விசாலமான கரையை கடந்து விமானம் சென்னைக்குள் நுழைந்துக்கொண்டிருந்தது. தரையிறங்கும் போது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்குமோ ? பரமசிவன் படத்தில் லைலா முருகா முருகா என்று முனங்குவாரே. மறுபடியும் விமானம் இடமும் வலமுமாக ஏதோ ஆட்டம் காட்டி சின்ன ஜெர்க் கூட இல்லாமல் வெற்றிகரமாக தரையிறங்கிவிட்டது. முதல் வேலையாக அந்தமான் அங்கிளுக்கு போனை போட்டு கோட்டான கோடி நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.


விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் முதலில் தோன்றிய உணர்வு - யப்பா என்னா வெய்யிலு !


அடுத்து வருவது: அந்தமான் பயணம் - அசத்தல் டிப்ஸ்


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 April 2013

அந்தமான் - ஹேவ்லாக் கடற்கரைகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அந்தமானை நோக்கிய என்னுடைய கப்பல் பயணத்தில், ஒரு வெள்ளைக்கார சோடியை பார்த்து உள்ளூர்வாசி சொன்னது, “இவுகல்லாம் ஹேவ்லாக் போயி அவுத்துப்போட்டு படுத்துக்குவாக...”. அப்போதிலிருந்தே என்னுடைய மனது அந்த ஒற்றைச் சொல்லை கவனமாக பற்றிக்கொண்டது - ஹேவ்லாக். அந்தமானில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து “சந்தைக்கு போகணும் காசு கொடு...” என்று சொல்லும் சப்பாணி போல, எப்ப பாஸ் ஹேவ்லாக்குக்கு அனுப்பி வைப்பீங்க என்று டிராவல் ஏஜென்ட்டை நச்சரித்துக்கொண்டே இருந்தேன்.

ஹேவ்லாக் நம் கவலைகளுக்கான பூட்டு ! அந்தமான் தீவுகளிலேயே போர்ட் ப்ளேர் தவிர்த்து வெளிநாட்டவர் தங்குவதற்கு அனுமதிக்கப்படும் ஒரே தீவு - ஹேவ்லாக். அதனாலேயே ஹேவ்லாக் கடற்கரைகள் பிகினி மயமாகவும் பிறந்தமேனியாகவும் காட்சியளிக்கின்றன. கொண்டாட்ட விரும்பிகள், தேனிலவு தம்பதிகள் ஹேவ்லாக்கில் ஒரு இரவாவது தங்கி விரிவாக சுற்றிப்பார்ப்பது உகந்தது. அந்தமான் சுற்றுப்பயணம் முழுவதையும் ஹேவ்லாக்கில் மட்டுமே செலவளிப்போரும் உண்டு.

கொஞ்சம் மெனக்கெட்டால் டிராவல் ஏஜெண்டுகளின் தலையீடு இல்லாமல் ஹேவ்லாக் சென்றுவரலாம். போர்ட் ப்ளேரில் இருந்து ஹேவ்லாக் செல்வதற்கு அரசாங்க கப்பல் பம்பூகாவும் தனியார் கப்பல் மாக்ரூஸும் இருக்கின்றன. பம்பூகாவில் டிக்கெட் விலை 250ரூ. மாக்ரூஸில் 900ரூ. உங்கள் டிராவல் ஏஜெண்ட் உங்களிடம் சீசன்  உச்சத்தில் இருப்பதால் அரசாங்க கப்பலில் டிக்கெட் கிடைக்காது என்று காதில் பூ சுற்ற முயற்சிப்பார். ஏமாற வேண்டாம். உண்மையில் பம்பூகா பாதியளவு கூட நிரம்புவதில்லை. தரமான இருக்கைகள், தொலைகாட்சி, கேண்டீன், துரித வேகம் என்று தனியார் கப்பலில் சில வசதிகள் இருப்பது உண்மைதான். என்னைப்பொறுத்தவரையில் போர்ட் ப்ளேரில் இருந்து ஹேவ்லாக் செல்லும்போது அரசாங்க கப்பலிலும் திரும்பிவரும்போது தனியார் கப்பலை நாடுவதும் சாலச்சிறந்தது. முந்தய பத்தியில் குறிப்பிட்ட தரப்பினர் தவிர்த்து மற்றவர்கள் காலையில் கிளம்பி மாலையில் திரும்பிவிடலாம்.

போர்ட் ப்ளேரிலிருந்து ஹேவ்லாக் செல்வதற்கு ஹெலிகாப்டர், ஸீ ப்ளேன் சேவைகள் கூட உள்ளன. சராசரி கட்டணம் தான். ஆனால் செல்வாக்கு உள்ள ஆட்களுக்கு மட்டுமே வாய்க்கும் என்று நினைக்கிறேன்.

ஹேவ்லாக்கில் மொத்தம் ஏழு கடற்கரைகள் உள்ளன, எனினும் அவற்றில் இரண்டு மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு உகந்தது. ராதா நகர் கடற்கரை- ஆசியாவிலேயே தலைசிறந்தது என்று 2004ல் டைம்ஸ் மேகஸின் அறிவித்த கடற்கரை. ஹேவ்லாக் படகுத்துறையிலிருந்து 11கி.மீ தொலைவில் ராதாநகர் கடற்கரை அமைந்துள்ளது. ஆட்டோ பிடித்துக்கொள்ளலாம். இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு கிடைக்கும், எனினும் அது தேவையற்றது. ஹேவ்லாக்கை பொறுத்தவரையில் வெட்கம் என்னும் கருமத்தை களைந்துவிடுவது நல்லது, கூடவே ஆடைகளையும், உங்களுடையதை தான். அபத்தமாக சூரியனை உள்ளங்கையில் பிடித்திருப்பது போல போட்டோவெல்லாம் எடுக்க வேண்டாம். ஜஸ்ட் என்சாய் ! கடலலை லேசாக உடலை நனைத்துவிட்டு செல்கிறபடி, மணலில் மல்லாக்கப் படுத்துக்கொள்ளுங்கள் - கடவுளை காணலாம்.

நான் ராதாநகர் கடற்கரைக்கு சென்றபோது மணி மாலை ஐந்தை நெருங்கியிருந்தது. சூரியன் மறைகிற தருணம். நிறைய பேர் SLR கேமராவை வைத்து திருகிக்கொண்டிருந்தார்கள். அருகிலேயே ஒரு ரிக்கி பாண்டிங் ஒரு துரையம்மாவின் இதழை சுவைத்துக்கொண்டிருந்தான். இந்தியா ஏன் இதுவரை வல்லரசு ஆகவில்லை என்ற உண்மை உரைத்தது. அப்படியே அலைகளை தொட்டபடி ஒரு நடை நடந்தேன். ஒரு பிகினி மங்கை குப்புற படுத்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள். அவள் புட்டத்தில் ஒட்டியிருந்த ஈரமணல் கொஞ்சம் கொஞ்சமாக காய்ந்துக்கொண்டிருந்தது. அந்த தருணம்... திருவள்ளுவர் ஏதோ சொல்லியிருக்கிறாரே, ஆங் உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே உலக்கை... என்ன எழவோ, அப்படித்தான் ஆகியிருந்தது என்னுடைய நிலை. மீண்டும் என் உணர்வுகளை சமநிலைக்கு கொண்டுவர நேரம் பிடித்தது.

ராதாநகர் கடற்கரையிலிருந்து மீண்டும் படகுத்துறைக்கோ அல்லது அறைக்கோ செல்லும்வழியில் மூன்று கி.மீ தொலைவில் எலிபேண்ட் பீச்சுக்கு செல்வதற்கான குறுக்குப்பாதை அமைந்துள்ளது. வாகனங்கள் செல்ல முடியாது. காட்டுவழிப்பாதையாக சில கி.மீ நடந்து சென்றால் எலிபேண்ட் கடற்கரையை சென்றடையலாம். சில வருடங்கள் முன்பு வரை இங்கே யானை சவாரி நடைபெறும் என்று சொல்கிறார்கள். மற்றபடி முந்தய பதிவுகளில் சொன்ன ஸ்கூபா டைவிங், ஸ்னார்கலிங் வகையறா விளையாட்டுகள் ஹேவ்லாக்கிலும் உண்டு. ஹேவ்லாக் படகுத்துறை - ராதாநகர் பீச் - எலிபேண்ட் பீச் : எளிய புரிதலுக்காக கூகுள் மேப்.

தங்குமிடங்களை பொறுத்தவரையில் ஹேவ்லாக்கில் நிறைய ஆப்ஷன்கள் உள்ளன. நான் ஹேவ்லாக் சென்ற சமயம், என்னுடைய பயணத்தின் கடைசி நாட்கள். ஏற்கனவே என்னுடைய ஏ.டி.ம். கறவை மாட்டின் மடி வற்றியிருந்தது. எனவே ட்ராவல் ஏஜெண்டிடம் பாடாவதி லாட்ஜாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி வைத்திருந்தேன். அந்த வசந்த மாளிகையின் பெயர் பிலாஷி லாட்ஜ். ம்ம்ம் குடிபோதையில் உள்ள ஒருவன் படுத்து உறங்குவதற்கு போதுமானதாகவே இருந்தது. இருப்பினும் கரப்பான்களுக்கு பயந்து இரவெல்லாம் மின்விளக்குகளை எரியவிட்டு, தொலைக்காட்சியை சத்தமாக வைத்துக்கொண்டு தூங்கிய கதையை தனி அத்தியாயமாகத்தான் எழுத வேண்டும்.

மிக முக்கியமான தகவலை மறந்துவிட்டேன்; ஹேவ்லாக் செல்லும்போது ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ஒரு ஃபுல் பாட்டில் சரக்காவது வாங்கிச் செல்லுங்கள். மக்கள் வசிக்கும் பகுதிதானே, மதுக்கூடம் இருக்கும் என்று நம்பி சென்றுவிட்டேன். இருந்தது. மூன்று கி.மீ ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றார்கள். அதையும் செய்தேன். சலூன் கடை அளவில் உள்ள மிகச்சிறிய இடம். டேபிள் எல்லாம் இல்லை. கடைக்காரர் ஊற்றிக்கொடுப்பார். அப்படியே வாங்கி குடிக்க வேண்டியது தான். சைட் டிஷ் எல்லாம் ஊற்றிக்கொடுப்பவரின் முன்னே இறைந்துக்கிடக்கும். அள்ளி வள்ளு வதக்கு'ன்னு வாயில போட்டுக்க வேண்டியது தான். ஒரு தனி மனிதனாக இதுபோன்ற அனுபவங்களை நான் ரசித்து ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் வருத்தப்பட்டு பாரம் சுமக்க விரும்பாதவர்கள் சரக்குபுட்டியை போர்ட் ப்ளேரிலிருந்து சுமக்கலாம். அடுத்தது, உணவகங்கள். கிட்டத்தட்ட இரவு எட்டரை மணிக்கெல்லாம் எல்லோரும் கடையை சாத்திவிடுகின்றனர். எனவே தாமதிப்பது உகந்ததல்ல. மதுக்கூடத்திற்கு அருக சில பெங்காலிகளின் வீட்டுவாசலில் டேபிள் சேரெல்லாம் போட்டு உணவு பரிமாறுகிறார்கள். அவற்றை தவிர்த்தால் படகுத்துறைக்கு அருகில் வழக்கம்போல பொரொட்டா, ஃபிரைட் ரைஸ் விற்கும் உணவகங்கள் உள்ளன.

என்னடா ரெண்டு பீச்சு தானே இருக்கு என்று தோன்றலாம். ஹேவ்லாக் என்பது ஒரு உணர்ச்சி. அதனை வார்த்தைகளால் புரிய வைப்பது கடினம். பழமொழி சொன்னா அனுபவிக்கணும் என்று சொல்வதுபோல ஹேவ்லாக்கையெல்லாம் அனுபவிக்கணும் !

பி.கு: அந்தமான் தொடர் இழுத்துக்கொண்டே செல்கிறதே; எப்பதான் முடிப்பீங்க'ன்னு ஒரு நண்பர் கேட்டிருந்தார். இன்னும் இரண்டு கட்டுரைகள் உள்ளன.

படங்கள்: கூகுள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 March 2013

அந்தமான் - ஜாலிபாய்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பெயருக்கேற்ற தீவு. ஜாலிபாய் டிசம்பரில் துவங்கி மே மாதம் வரை மட்டுமே சுற்றுலா பயணிகளுக்காக திறந்து விடப்பட்டிருக்கும். அடுத்த ஆறு மாதங்களுக்கு ரெட் ஸ்கின் என்ற இன்னொரு தீவு திறக்கப்படும்.இரண்டும் ஒரே மாதிரியான தீவுகள். எனவே நீங்கள் செல்லும்போது எந்த தீவு வரவேற்பு கம்பளம் விரிக்கிறதோ, அங்கே சென்றிடுங்கள். ஜாலிபாய் செல்வதற்கு அந்தமான் நிர்வாகத்திலிருந்து அனுமதி பெற வேண்டும் என்பதால் ட்ராவல் ஏஜெண்டிடம் ஒப்படைத்து விடுவது நல்லது. அனுமதியும் டிக்கெட் கட்டணமும் சேர்த்து 700ரூ. போர்ட் ப்ளேரிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள வண்டூரிலிருந்து தான் படகுகள் புறப்படும். அதுவரை அழைத்துச் செல்ல / மறுபடி கொண்டுவந்து விட நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து செலவு வேறுபடும். மிக முக்கியமாக, ஜாலிபாய்க்கு செல்லும்போது டவல், மாற்றுத்துணி எடுத்துச் சென்றே ஆகவேண்டும். அது தேவைப்படாது என்று நினைப்பவர்கள் ஜாலிபாயை தவிர்த்துவிடலாம். தேவைப்படுமென்றால் கேமரா எடுத்துக்கொள்ளவும். தேவைகேற்ப உற்சாக பானம் அவசியம்.


கழுகுப்பார்வையில் ஜாலிபாய்
தீவுக்குள் பிளாஸ்டிக் குப்பைகள் போட தடை உள்ளது. எனவே, முடிந்தவரையில் பிளாஸ்டிக் கவர்களை தவிர்க்கவும். தண்ணீர், உ.பா காரணமாக வாட்டர் பாட்டிலை தவிர்க்க முடியாது; கவலையில்லை, நீங்கள் உள்ளே செல்லும்போது எத்தனை பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்துச் செல்கிறீர்கள் என்று டோக்கன் போட்டுக்கொள்ள வேண்டும். திரும்பி வரும்போது அதே எண்ணிக்கை பாட்டில்களை காட்டி பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். தீவிற்குள் ப்ளாஸ்டிக் கழிவுகளை கொட்டக்கூடாது என்பதற்குத்தான் இத்தனை கட்டுப்பாடுகள். இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி அங்கே குப்பை கொட்டுவது மிகவும் எளிது; எனினும் சுயக்கட்டுப்பாடு அவசியம்.

காலை ஏழு மணிக்கு டிபன் அடித்துவிட்டு, மதியத்திற்கு பார்சல் வாங்கிக்கொண்டு கிளம்பினால், எட்டு, எட்டரைக்கு வண்டூர் மரைன் பூங்காவை சென்றடைந்து அங்குள்ள சிறிய மியூசியத்தை சுற்றிப் பார்த்துவிடலாம். காலை ஒன்பது மணி தாண்டியதும் ஓடங்கள் ஒவ்வொன்றாக புறப்படும். சுமார் ஒன்றரை மணிநேர பயணம். ஜாலிபாய் பவழப்பாறைகளால் சூழப்பட்ட தீவு. படகுத்துறை கட்டும்போது அவற்றை அழிக்க வேண்டி வரும் என்பதால் படகுத்துறை இல்லை. எனவே, ஓடங்கள் சில அடிகள் தூரத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து கண்ணாடி அடிப்புறம் கொண்ட படகுகள் நம்மை தீவிற்கு கொண்டு செல்லும். படகின் அடிப்புறத்தின் வழியாக பவழப்பாறைகளை பார்க்கலாம்.


கண்ணாடி படகினூடே
ஜாலிபாய் - அந்த தீவில் கால் பதித்ததும் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, குறைந்தபட்ச ஆடையைத் தவிர மற்றவை துறந்து கடலில் குதிப்பது. வட இந்திய குலோப் ஜாமூன்களும், ரசகுல்லாக்களும் கடலில் மிதக்கக்கூடும். நான் முன்பே சொன்னது போல சுயக்கட்டுப்பாடு அவசியம். ஒரு பத்து நிமிடங்கள் கடலோடு அளவளாவி விட்டு, ஒரு கட்டிங் அடித்துக்கொள்வது உடலிற்கு உகந்தது. 

ஸ்னார்கலிங் - எளிய புரிதலுக்கும் இளைப்பாறுதலுக்கும்

படகிலிருந்து இறங்கும்போது உங்களுக்கு ஒரு டோக்கன் கொடுத்திருப்பார்கள். இலவச ஸ்னார்கலிங்கிற்கான டோக்கன். போட்டி அதிகமாக இருக்கும், எனவே உங்கள் படகிற்கான ஸ்னார்கலிங் கைடு யாரென்று கண்டுபிடித்து ஒட்டிக்கொள்ளவும். இங்குதான் ஸ்வாரஸ்யம் ஆரம்பம்; நீருக்குள் பார்ப்பதற்கான கண்ணாடியும், சுவாசக்குழாயும் தரப்படும். வாய் வழியாக மட்டுமே சுவாசிக்க முடியும். சுவாசக்குழாயின் மறுபகுதி நீர்நிலைக்கு மேலே இருக்கும். முதலிரண்டு நிமிடங்கள் சிரமமாக இருக்கும்; அப்புறம் பழகிவிடும். பயப்பட வேண்டாம். லைப் ஜாக்கெட் அல்லது ரப்பர் டியூப் வழங்கப்படும். எனவே நீர்மட்டத்திலேயே மிதப்பீர்களே தவிர மூழ்கிவிட வாய்ப்பில்லை. மேலும் கைடு உங்கள் கையைப் பிடித்தபடி நீந்தி வருவார்.


கடல் மீன்களோடு சேர்ந்து நீந்துகிற உணர்வு. கைடு மீன்களின் பெயர்களை சொல்லி ஹிந்தியில் ஏதாவது விளக்கம் சொல்லிக்கொண்டிருப்பார். அவரோடு பேச முயற்சிக்க வேண்டாம்; முயன்றால் சுவாசிப்பதில் கவனம் குறைந்துவிடும். கொஞ்ச தூரம் நீந்திய பிறகு உங்கள் இலவச ட்ரிப் முடிந்துவிட்டது. இன்னும் தூரம் செல்ல வேண்டுமென்றால் தூரத்திற்கேற்ப 300/400/500ரூ செலவாகும் என்றார். நான் 300ரூ தர சம்மதித்தேன். ஆழம் சற்று அதிகமானது. பெரிய பெரிய மீன்களும் பவழப்பாறைகளும் தென்பட ஆரம்பித்தன. இப்போது கைடை அழைத்தேன். 500ரூ தருகிறேன், முடிந்தவரை ஆழத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்றேன்.

கடல் வெள்ளரி
மறுபடியும் மீன்களோடு சேர்ந்து நீந்தத் துவங்கினேன். பவழப்பாறைகள் மீது கால் படாதபடி பார்த்துக்கொள்ள வலியுறுத்தினான். அப்படி கால் வைப்பது அவற்றிற்கும், சமயங்களில் நமக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரித்தான். தீடீரென ஒரு ஸ்டார் ஃபிஷ்ஷை கையில் எடுத்து விளக்கம் கொடுத்தான். அடுத்த நொடி, அதை என் கையில் திணித்து விட்டான். இதுவரைக்கும் புத்தகத்திலும் மியூசியங்களிலும் மட்டுமே பார்த்த ஸ்டார் ஃபிஷ் இப்போது என்னுடைய கைகளில்; பரவசமான நிமிடம் அது. கொஞ்ச தூரம் சென்றதும் பெரிய சைஸ் அட்டைப்பூச்சி மாதிரி ஏதோவொன்று கடல் பரப்பில் கிடந்தது. அதையும் கையில் கொடுத்தான். ஸ்டார் ஃபிஷ் கல்லு போல திடமாக இருந்தது, இப்போது கொடுத்திருப்பது வழவழப்பாக இருக்கிறது. பெயர் ஸீ குகும்பர். தமிழாக்கினால் கடல் வெள்ளரிக்காய். அந்த சில நிமிடங்கள், கடவுளைக் கண்ட பரவசத்தோடு கரைக்கு திரும்பினேன்.

நான் - கட்டிங் - கடல்: த்ரீஸம் உல்லாசம் அனுபவித்தோம். நினைவிருக்கட்டும், இங்கிருக்கும் கழிவறை மற்றும் உடை மாற்றும் அறைகள் தற்காலிக தென்னை ஓலைக்குடில்கள் மட்டுமே. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இருந்தாலும்கூட. ஆண்களைப் போல பெண்கள் சுலபமாக ஒத்துப்போக இயலாது. கட்டி வந்த மதிய உணவை முடித்துவிட்டு, கடலலை படாத மணல்பரப்பில் படுத்துக்கொண்டேன். முந்தய பத்தியில் குறிப்பிட்டதைப் போன்ற விளையாட்டுகளை விரும்பாத சா.சாதங்கள் கண்ணாடி படகுகளில் பயணித்து நேரத்தை செலவிடலாம்.


அதிகபட்சம் மூன்று மணிநேரங்கள். ஓடங்கள் திரும்பத் தயாராகும். ப்ளாஸ்டிக் பாட்டில்களை கீழே போடாமல் கவனமாக எடுத்து பைக்குள் திணித்துக்கொள்ளவும். திரும்ப வரும்போது நிச்சயம் அயர்ச்சியாக இருக்கும். ஓடத்தின் மேல்பகுதிக்கு சென்று மல்லாக்கப்படுத்து ஒரு குட்டித்தூக்கம் போட்டால் சொர்க்கம்...!

திரும்பி வந்தபிறகு நேரம் அனுமதித்தால், வண்டூர் பீச்சையும் பார்த்துவிட்டு வரலாம். அருகில் சில கடைகள் இருக்கிறது. சிப்பியில், மரத்தில் செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன. மரத்தால் செய்யப்பட்ட ஜரவா பொம்மைகளை அந்தமான் நினைவாக வாங்கிக்கொள்ளலாம். மாலை ஆறு மணிக்குள் மீண்டும் ஹோட்டல் அறைக்கு திரும்பிவிடலாம்.

அடுத்து வருவது: போர்ட் ப்ளேர் சிட்டி டூர்


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment