Showing posts with label andaman. Show all posts
Showing posts with label andaman. Show all posts

13 July 2016

அந்தமானில் அருணகிரி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்த அருணகிரி – உலகம் சுற்றிய வாலிபன். தன்னுடைய உலக நாட்டு பயண அனுபவங்களைக் கொண்டு பதினைந்து நூல்கள் எழுதியிருக்கிறார். குறிப்பாக, ஜப்பானை பற்றி இதுவரை யாரும் எழுதியிராத தகவல்களை சேகரித்து எழுதியிருக்கிறார். மேலும் விகடன் பிரசுரமாக வெளியான ‘கட்சிகள் உருவான கதை’ உட்பட ஐந்து அரசியல் நூல்களையும் எழுதியிருக்கிறார். அவருடைய படைப்புகளில் ஒன்று – அந்தமானில் அருணகிரி ! புத்தகத்தின் பெயரைக் கேட்டதும் அதனை வாங்கியாக வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்.

புத்தகத்தின் தலைப்பிலிருந்தே நீங்கள் ஒரு விஷயத்தை யூகித்திருக்கலாம். முன்னுரையை படிக்கும்போது ஊர்ஜிதமாயிற்று. அது என்னவென்றால் பெரிய எழுத்தாள தொனியோடு, படாடோப அலங்காரங்கள் எல்லாம் இல்லாமல் ஒரு சாமானியன் பார்வையில் இருக்கிறது புத்தகத்தின் உள்ளடக்கம். கையில் ஒரு வாழைக்காய் பஜ்ஜியை வைத்துக்கொண்டு, அது எந்த எண்ணையில் தயாரிக்கப்பட்டது, எண்ணெய்களின் மூலம் எந்த நாடு, எண்ணெய் இந்தியாவிற்குள் நுழைந்த அரசியல் பின்னணி என்ன, மேலும் பஜ்ஜியை சுற்றியிருக்கும் தினத்தந்தி எந்த தேதியில் அச்சிடப்பட்டது, அதன் நிறுவனரின் வாழ்க்கை வரலாறு என்றெல்லாம் வளவளவென்று மொக்கை போடாமல் நேரடியாக பஜ்ஜியின் சுவை தரும் பரவசத்தை விளக்கத் துவங்கிவிடுகிறார். பஜ்ஜியின் சுவை தொண்டைக்குழிக்குள் இறங்கியபிறகு சாவகாசமாக இடையிடையே அரசியல், வரலாறு பேசுகிறார்.

சிறு வயதிலிருந்தே அந்தமான் மீதும், கப்பல் பயணம் மீதும் தனக்குள்ள பேராவலை விவரித்து புத்தகத்தை துவங்குகிறார். கப்பல் பயணம் குறித்த இவருடைய முப்பது வருட கனவு அந்தமானுக்கு ஸ்வராஜ்தீப்பில் பயணம் செய்யும்போது பூர்த்தியடைகிறது. அருணகிரியின் இந்த இச்சைகளையும், அவரது முதல் கப்பல் அனுபவத்தையும், அவருடைய விவரணைகளையும் படிக்கும்போது அப்படியே என்னை நானே படித்துக்கொள்வது போல இருக்கிறது. பல இடங்களில் அச்சு அசலாக எனது வலைப்பூவையே வாசிப்பது போல இருந்து என்னை புத்தகத்துடன் நெருக்கமாக உணரச் செய்தது.

இருப்பினும் வலைப்பூவில் / ஃபேஸ்புக்கில் எழுதுவதற்கும் புத்தகம் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உங்கள் வலைப்பூவை படிப்பவர்கள் பெரும்பாலும் உங்களுடன் நட்பு பாராட்டுபவர்களாகவும், குறைந்தபட்சம் உங்களுடைய குணாதிசயங்களை புரிந்து வைத்திருப்பவராகவும் இருப்பர். வலைப்பூவில் எழுதும்போது நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை (பயணத்தில் சைட்டடித்த ஃபிகர் பற்றியோ, குறட்டைவிட்டு தூக்கத்தை கெடுத்த சகபயணி குறித்தோ) எழுதலாம். நண்பன் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி கப்பலில் போக பயந்தது பற்றியும் அவனை எப்படி சமாதானப்படுத்தினீர்கள் என்றும் எழுதலாம். பெங்களூரில் போயிறங்கியதும் காஜல் அகர்வால் போஸ்டரை பார்த்தேன் என்று ஜொள் விடலாம். ஆனால் புத்தகத்தில் இதுபோன்ற அசட்டுத்தனங்கள் கூடாது. புத்தகத்தை வாங்கி படிப்பவர்கள் நம் மீது துளி கூட அக்கறை இல்லாதவராகவும், புத்தகத்தின் உள்ளடக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டும் வாங்கியிருக்கலாம். அவருடைய நம்பிக்கையை கெடுக்காத வண்ணம் பொறுப்புணர்ச்சியுடன் எழுத வேண்டும். அது இந்த புத்தகத்தில் நிறைய இடங்களில் தவறுகிறது.

தேசிய இளைஞர் திட்டம் என்கிற அமைப்பின் மூலம் அருணகிரி அவர்கள் அந்தமான் சென்றிருக்கிறார். அதனால் அந்த அமைப்பு, செயல்பாடுகள், முந்தைய முகாம்கள் போன்ற விவரணைகள் வருகின்றன. இடையிடையே அந்தமானில் படப்பிடிப்பு நடத்திய திரைப்படங்கள், அந்தமானில் வாழ்ந்த தமிழறிஞர்கள், தமிழர் சங்கம், அந்தமான் பொதுக்கூட்டத்தில் மறைந்த (அப்போதைய) வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி (தி.மு.க.), அந்தமான் ஹிந்துக் கோவில் திருவிழாக்கள், பயணத்தில் சந்தித்த வெளி மாநிலத்தவர் / வெளிநாட்டவர், ஈழத்தமிழ் பாடகி மாதங்கி அருள்பிரகாசம் என்று கலந்துகட்டி பல தகவல்களை அளிக்கிறார். கூடவே, கடலில் காகங்கள் பறக்குமா ? கப்பலில் காகத்தை கொண்டுவந்து நடுக்கடலில் பறக்க விட்டால் அது என்ன செய்யும் ? போன்ற கேள்விகளால் அவரது குழந்தைத்தனம் கொண்ட மறுபக்கத்தையும் காட்டுகிறார். மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் குறித்து குறைந்தது ஒரு புத்தகமாக எழுதிவிட வேண்டுமென தீவிரமாக பரிந்துரைக்கிறார்.

கப்பல் போர்ட் ப்ளேர் துறைமுகத்திற்கு சென்றடைந்ததும் கொஞ்சம் தரைதட்டத் துவங்குகிறது. அது மட்டுமில்லாமல் அருணகிரி அவர்கள் தன்னுடைய பத்துநாள் பயணத்தில் போர்ட் ப்ளேர் மற்றும் அதற்கு அருகே அமைந்துள்ள ஒன்றிரண்டு தீவுகளுக்கு மட்டும் போய் வந்திருப்பதாக தெரிகிறது. அவற்றில் கூட படிக்கும்போது இதனோடு பல தகவல்கள் சேர்த்து எழுதியிருக்கலாமே என்று ஆதங்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. உதாரணத்திற்கு சாத்தம் தீவில் அமைந்துள்ள மர அறுவை தொழிற்சாலைக்கு பின்னால் சுவாரஸ்யமான ஜப்பானிய போர் வரலாறு ஒன்று இருக்கிறது. ராஸ் தீவு ஒருகாலத்தில் ராணுவத் தலைமையிடமாக விளங்கியது. வைப்பர் தீவின் கதையைக் கேட்டால் மிரட்சியாக இருக்கும். மிக முக்கியமாக, வெளிநாட்டு கடற்கரைகளுக்கு இணையான ஹேவ்லாக் கடற்கரை இருக்கிறது. இதுகுறித்தெல்லாம் சிறிய சிறிய பத்திகள் எழுதிவிட்டு அந்தமான் காதலி படத்தில் சிவாஜி சுஜாதாவுடன் ரொமான்ஸ் செய்வதைப் பற்றி விவரித்திருக்கிறார் ஆசிரியர். அந்தமான் ஆதிவாசி இனங்களில் மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர்கள் சென்டினல் தீவில் வசிக்கும் ஆதிவாசிகள். அவர்களைப் பற்றி ஒரு பத்தி கூட எழுதாதது எல்லாம் மன்னிக்க முடியாத குற்றம்.

இது ஒருபக்கம் என்றால் நூற்றி நாற்பது பக்க புத்தகத்தில் எண்பத்திஐந்து பக்கங்களுடன் அந்தமான் அனுபவங்கள் முடிந்துவிடுகிறது. அதன்பிறகு நெல்லூர் ஞாயிறுச்சந்தை, மூணாறு, கழுகுமலை, யானைமலை போன்றவற்றை குறித்து எழுதியிருப்பதில் சில தகவல்கள் கிடைத்தாலும் கூட அவை அவுட் ஆப் சிலபஸ் என்பதால் அதிகம் ரசிக்க முடியவில்லை. உச்சபட்ச வன்முறை எது தெரியுமா ? கடைசி பதினைந்து பக்கங்களை நூலாசிரியர் பற்றி நடிகர் ராஜேஷ், லேனா தமிழ்வாணன் போன்றவர்கள் எழுதிய கட்டுரைகள் நிறைத்திருக்கின்றன.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கூட எனது பயண அனுபவங்களை மீண்டும் நினைவூட்டும் விதமாகவும், மீண்டுமொரு முறை பயணிக்க தூண்டும் வகையில் அமைந்துள்ளதாலும் அந்தமானில் அருணகிரியை ரசித்து வாசித்தேன். ஒத்த சிந்தனையுடைய நண்பர்கள் வாங்கிப் படிக்கலாம்.

அந்தமானில் அருணகிரி
மங்கையர்க்கரசி பதிப்பகம்
140 பக்கங்கள்
விலை ரூ.100/-

எழுத்தாளரின் அலைபேசி எண்: 94443 93903


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 February 2015

எஸ்.எஸ்.ரஜூலா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சிறு வயதிலிருந்தே கப்பல்கள் மீது எனக்கு ஒரு ‘க்ரேஸ்’ உண்டு. நான் அந்தமானுக்கு கப்பலில் செல்ல முடிவு செய்தபோது அனுபவஸ்தர்கள் எச்சரித்தார்கள். சில மணிநேரங்களில் கப்பல் போரடித்துவிடும் என்றார்கள். அப்படியெல்லாம் நடக்காது என்று நான் உறுதியாக நம்பினேன். யாருடைய பேச்சையும் கேட்காமல் கப்பலில் பயணித்தேன். கப்பல் என்னை ஏமாற்றவில்லை. குறிப்பாக, கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்துகொண்டு கையில் ஒரு தம்முடன் நண்பர்களுடன் அரட்டை அடித்த அந்த இரண்டு நாட்களை நினைத்தால் இப்போதும் கூட இன்னொரு முறை கிடைக்காதா ஏக்கமாக இருக்கிறது. முழுமையாக இரண்டரை தினங்கள் நம்மைச் சுற்றி வெறும் கடல் மட்டும் என்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத பரவச அனுபவம்.

அப்போதிலிருந்தே கப்பல் மீதான எனது ஆவல் ஒரு சுற்று கூடுதலாகிவிட்டது. பின்பொரு நாள் எதார்த்தமாக ஆயிரத்தில் ஒருவன் (புதியது) படம் பார்த்தபோது அதில் இடம்பெற்ற கப்பல் நான் பயணம் செய்தது என்று நினைவுகூர்ந்து சிலாகித்துக்கொண்டேன். துப்பாக்கி க்ளைமாக்ஸ் நினைவிருக்கிறதா ? அது படமாக்கப்பட்ட கப்பலின் பெயர் சாகர் சந்தானி. ஆராய்ச்சிக் கப்பல். சமீபத்தில் பார்த்த அனேகன் படத்தில் ஒரு கப்பல் காட்சி வருகிறது. பக்கா இந்திய பயணிகள் கப்பல். பார்த்ததும் பரவசமாகி கப்பலின் பெயரை திரையில் தேடினேன். நான் எதிர்பார்த்த கப்பல் இல்லை. கப்பலின் பெயர் எஸ்.எஸ்.ரஜூலா. (உண்மையில் ரஜூலா கப்பல் தற்சமயம் அழிக்கப்பட்டுவிட்டது என்று பின்னர் தெரிந்துக்கொண்டேன். எனவே படத்தில் இடம்பெற்றது என்ன கப்பல் என்று தரமான பிரதி வந்ததும் கண்டுபிடிக்க வேண்டும்).

எஸ்.எஸ்.ரஜூலா. வரலாற்று சிறப்புமிக்க கப்பலாக இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டு தான் கூகுள் செய்தேன். அவ்விதமே. டாக்டர் எஸ்.ஜெயபாரதி என்கிற பேராசிரியர் ரஜூலா கப்பலைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். 

ரஜூலா கப்பல் 1923ம் ஆண்டு பார்க்லே நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது. கப்பலின் பெயரில் உள்ள எஸ்.எஸ் என்பது ஸ்டீம் ஷிப் (நீராவிக் கப்பல்) என்பதை குறிக்கிறது. 

முந்தைய தலைமுறை மலேசிய / சிங்கை வாழ் இந்தியர்களுக்கு ரஜூலா கப்பலை கண்டிப்பாக நினைவிருக்கும். சென்னையிலிருந்து நாகப்பட்டினம் வழியாக பர்மா, பினாங்கு (மலேசியா), சிங்கப்பூர், அந்தமான், நிகோபர், இந்தோனேசியா பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகள் கப்பல். மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாய்மரக்கப்பல்களில் பயணம் செய்துகொண்டிருந்த காலகட்டம் அது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இரும்பினால் செய்யப்பட்ட நீராவிக்கப்பல்கள் அறிமுகமாயின. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் லட்சக்கணக்கான கூலிகள் மலேசியா, சிங்கப்பூருக்கு (அப்போது பிரிட்டிஷ் மலாயா) அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் போக்குவரத்துக்காக ரஜூலா உட்பட சில கப்பல்கள் செயல்பட்டு வந்தன. இடைப்பட்ட இந்த காலகட்டத்தில் கல்கத்தா இந்திய தலைநகராகவும், பர்மா பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு அங்கமாகவும் செயல்பட்டு வந்தது. 

தினசரி அலுவலகத்திற்கு பேருந்திலோ ரயிலிலோ பயணிப்பவர்கள் வாடிக்கையான சக பயணிகளின் முகங்கள் பரிட்சயம் ஆகியிருக்கும் அல்லவா ? இதே போல கப்பலிலும் ஒருவருக்கு ஒருவர் பரிட்சயமான பயணிகள் உண்டு என்றால் நம்ப முடிகிறதா ? கப்பலின் கடைசி வகுப்பில் இதுபோன்ற வாடிக்கையான ஆசாமிகளை காண முடியும். பெரும்பாலும் வியாபாரிகளாக இருப்பார்கள்.

இன்றைய இந்திய பயணிகள் கப்பல்களில் டீலக்ஸ், இரண்டாம், மூன்றாம் மற்றும் பங்க் வகுப்புகள் உள்ளன. பங்க் என்பது ரயிலில் உள்ளது போல மூன்றடுக்கு படுக்கைகள் கொண்ட ஒரு நீண்ட அறை. ரஜூலாவில் இவை தவிர்த்து ‘டெக்’ என்ற வகுப்பும் இருந்திருக்கிறது. இது கிட்டத்தட்ட ரயிலில் உள்ள முன்பதிவு செய்யாதவர்களுக்கான பகுதியைப் போன்றது. தனியாக இடம் ஒதுக்கப்பட மாட்டாது. சீக்கிரமாக ஏறி கிடைத்த இடத்தில் படுத்துக்கொள்ள வேண்டியதுதான். இது குறித்து உற்சாகமாக குறிப்பிடுகிறார் ஜெயபாரதி. அந்தக்கால திரையரங்குகளில் முக்கால்வாசி தரை டிக்கெட்டுதான், அப்புறம் பெஞ்ச் வரிசைகள், கடைசியாக இருக்கைகள். இருக்கை ஆட்கள் எல்லாம் இறுக்கமாக அமர்ந்து படம் பார்க்கும்போது தரை டிக்கெட் பகுதியில் கொண்டாட்ட மயமாக இருக்கும். அதுபோல டெக்கில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாகவும், வியாபாரிகளாகவும் இருப்பார்கள். இவர்களுக்குள் பயண நேரத்திற்குள் ஒரு இணக்கமான சூழல் ஏற்பட்டு ஆடிப் பாடிக்கொண்டு இருப்பார்களாம்.

ரஜூலா போக்குவரத்து காரணமாக நாகப்பட்டினத்தில் அந்திக்கடை என்ற சந்தை பிரபலமாக இருந்தது. சென்னையின் பர்மா பஜார் போன்றது. சாக்லேட்டுகள், சிகரெட்டுகள், சிறிய ட்ரான்ஸிஸ்டர்கள் உட்பட நம்மவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் வகையில் பல வெளிநாட்டு பொருட்கள் அந்திக்கடையில் விற்பனையாகும்.

இரண்டாம் உலகப்போரின் போது பர்மாவை ஜப்பான் கைப்பற்றியது. அந்த சமயத்தில் பர்மாவை மீட்கும் பொறுப்பு லார்ட் மவுண்ட் பேட்டனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தனது கடற்படைக்காக ரஜூலாவை பர்மாவிற்கு வரவழைத்துக்கொண்டார். அது மருத்துவ கப்பலாக செயல்பட்டது.

ரஜூலாவை பழுதாகாத கப்பல் என்று அன்றைய காலகட்டத்தில் சொல்வார்கள். 1966ல் ஏற்பட்ட புயலையும் பேரலைகளையும் தாக்கு பிடித்தது ரஜூலா. ‘ரங்கத்’ என்ற பெயரில் சிலகாலம் ஓடிய ரஜூலா இறுதியாக 1974ம் ஆண்டு மஹாராஷ்திர கப்பல் உடைக்கும் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு உடைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.

அனேகன் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் காட்சி அது. மேலோட்டமாக பார்த்தால், அந்த காட்சிக்கு கப்பலை பற்றிய டீடெயிலிங் தேவையே இல்லை. எனினும், ரஜூலாவையும், ரஜூலாவிற்கும் பர்மாவுக்கும் இடையேயான தொடர்பையும் நினைவுகூர்ந்து அதனை காட்சிப்படுத்திய படக்குழுவினரை வியக்காமல் இருக்க முடியவில்லை.

உதவிய சுட்டிகள்:

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 January 2014

பிரபா ஒயின்ஷாப் – 27012014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமாவில் முதன்முதலாக சயமீஸ் இரட்டையர்களை காட்டியது (நடிப்பில் தான்...!) மாற்றான் என்று சொல்லப்பட்டாலும், மாற்றான் படம் அறிவிக்கப்பட்டபிறகு படப்பிடிப்பை தொடங்கிய இருவன் என்ற லோ பட்ஜெட் படம் ரிலீஸில் முந்திக்கொண்டது. நிறைய பேருக்கு அப்படி ஓரு படம் வந்ததே தெரியாது என்பதால் மாற்றானின் புகழுக்கு பங்கமில்லை என்று நம்பலாம். உலக அளவில் முதன்முதலில் சயமீஸ் இரட்டையர்களை காட்டிய படம் எதுவென்று தெரியுமா...? விடை இறுதியில்...

*************************************************

ஃபர்ஸ்ட் லுக்கில் 'நவீன' இல்லை !
நவீன சரஸ்வதி சபதம் படம் பார்த்தேன். சிவாஜி காலத்திற்கு பிறகு அமைதியாக இருந்துவிட்ட சிவபெருமான் மீண்டுமொரு திருவிளையாடல் செய்கிறார். குடிபழக்க அடிமைகளான நால்வரை ஒரு தீவில் சிக்க வைக்கிறார். அவர்கள் தப்பிக்க சில வாய்ப்புகளையும் கொடுக்கிறார். தப்பித்தார்களா...? என்பது உச்சகாட்சி. நல்ல மனஉரு. அந்த சுவாரஸ்யத்தை திரையிலும் ஓரளவுக்கு காட்டியிருக்கிறார்கள். ஐ-பாடில் பாட்டு கேட்கும் சிவன், டெம்பிள் ரன் விளையாடும் முருகன், த்ரெட் மில்லில் ஓடும் விநாயகன் என்றெல்லாம் பக்தியை நவீன மயமாக்கி காமெடி செய்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து சுப்ரஜா ஸ்ரீதரன் ஒருவர் மட்டும்தான் ஹிந்து கடவுள்களை கிண்டலடித்ததற்காக ந.ச.ச படத்திற்கு  கண்டனம் தெரிவித்தார். சரி தொலையட்டும். அது என்னுடைய பிரச்சனையில்லை. நிவேதா தாமஸ் அம்மையாரை நாயகி என்று சொல்லிவிட்டு நான்கு ஆண்களையும் தீவையும் மட்டுமே முக்கால்வாசி படத்திற்கு காட்டியிருக்கிறார்கள். அதற்கு வேண்டுமானால் என்னுடைய கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

*************************************************

நேற்று மாலை அந்தமான் ராஸ் – நார்த் பே தீவுகளுக்கு இடையே ஒரு படகு விபத்து. அதில் பயணம் செய்த சுமார் 45 பேரில் 21 பேர் மரணம். மரணம் அடைந்த பெரும்பாலானவர்கள் காஞ்சிபுரத்து ஆட்கள். செய்தியைக் கேட்டதும் கொஞ்சம் பக்கென்று ஆகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நண்பர் சேதுராமன் அதே படகில் பயணம் செய்திருக்கக்கூடும். சென்ற வாரம் என்னுடைய பெற்றோர், தங்கை உட்பட உறவினர்கள் அதே பாதையில் பயணித்திருக்கிறார்கள். போர்ட் ப்ளேரிலிருந்து மூன்று தீவுகளுக்கு அழைத்துச் செல்லும் பேக்கேஜ் அது. சென்ற வாரமே, இரண்டு தீவுகளை பார்த்துவிட்டு மூன்றாவது தீவிற்கு செல்லும் வழியில் காற்று பலமாக வீசியதால் பயணம் ரத்து செய்யப்பட்டு திரும்பியிருக்கிறார்கள். நேற்றைக்கும் கூட அதே போல நிகழ்ந்திருக்கலாம். அந்த படகில் லைப் ஜாக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ளதை நானே பார்த்திருக்கிறேன், ஆனால் வெறும் சம்பிரதாயத்திற்காக. அதை எப்படி துரிதமாக எடுக்க வேண்டும் என்றோ, எப்படி பயன்படுத்த வேண்டும் என்றோ அவர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. வேறெப்போதும் போல அல்லாமல் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

*************************************************

மேலே குறிப்பிட்டதைப் போல ஒரு துயர செய்தியை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்தால் என்ன செய்வீர்கள்...? ஒரு சோக ஸ்மைலி. நாமும் சோகத்தில் பங்கெடுத்துக் கொள்கிறோம் என்பதற்கான அடையாளமாக அதனை கருதலாம். ஆனால் துயர செய்திகளை லைக் செய்வது பற்றி ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு தரப்பு இது அபத்தம் என்றும் மற்றொரு தரப்பு இதுவும் சோக ஸ்மைலி போல ஒரு பங்கெடுப்பு என்றும் சொல்கிறார்கள். ஃபேஸ்புக் மொழியாக தமிழை வைத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக இது அபத்தமாகத்தான் தெரியும். காரணம் – இன்னார் குறிப்பிட்ட துயர செய்தியை விரும்புகிறார் என்று ஃபேஸ்புக்கே தெரிவிக்கும். இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஃபேஸ்புக் ஒரு யோசனை வைத்திருக்கிறது. ஏற்கனவே உள்ள ‘ஃபீலிங்’ ஆப்ஷன் மூலம் சோகமாக இருக்கிறேன் என்று தெரிவு செய்தால் போதும் லைக் பட்டன் தற்காலிகமாக சிம்பதைஸ் பட்டனாக மாறிக்கொள்ளும். கூடிய விரைவில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரலாம்.

*************************************************

சென்ற வாரம் என்னுடைய ஒரு இடுகையில் நான் சிரிப்போ சிரிப்பு ஒலிப்பேழையில் வரும் ஜனகராஜ் மாதிரி என்று எழுதியிருந்தேன். அந்த சொற்றொடர் கண்டிப்பாக நிறைய பேருக்கு புரிந்திருக்கும். யாரேனும் அதனை குறிப்பிட்டு பின்னூட்டமிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ப்ச். நானே தொடர்கிறேன். எண்பதுகளில், தொண்ணூறுகளில் ஒலிப்பேழையில் பாடல்கள் கேட்கும் பழக்கம் உடையவர்களுக்கு நிச்சயம் சிரிப்போ சிரிப்பு என்ற ஒலிப்பேழையை பற்றி தெரிந்திருக்கும். என்னுடைய சிறிய வயதில் அந்த ஒலிப்பேழையை எத்தனையோ முறை திரும்பத் திரும்ப கேட்டிருக்கிறேன். அச்சமயத்தில் அதில் வரும் பெரும்பாலான நகைச்சுவைகள் எனக்கு மனப்பாடம். இப்போதும் நினைவிலிருப்பது (ஜனகராஜ் ஸ்வீட் ஸ்டால் நகைச்சுவை தவிர்த்து) என்று பார்த்தால் :-

- கிருபானந்த வாரியாரின் கிரிக்கெட் வர்ணனை
- 36 மொட்டைகளின் அட்டகாசங்கள் – பட ட்ரெயிலர்
- ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் கேட்கும் கலைஞர்
- மெஹபூபா பாடும் பாக்யராஜ், டி.ஆர், எம்.ஆர்.ராதா
- எலி பிடிப்பது எப்படி என்று சொல்லித்தரும் ஜனகராஜ்

படம்: அரவிந்த் ரஹ்மேனியாக்
சிரிப்போ சிரிப்பு ஒலிப்பேழையை பற்றி கூகுள் செய்துக்கொண்டிருந்த போது ஒரு ஆச்சரியம். அரவிந்த் ரஹ்மேனியாக் (ரஹ்மான் தீவிர விசிறியாம்) என்ற புண்ணியவான் சிரிப்போ சிரிப்பு ஆடியோ முழுவதையும் எம்.பி.3 கோப்பு வடிவில் தரவேற்றி வைத்திருக்கிறார். வேண்டுபவர்கள் கீழ்காணும் இணைப்பிற்கு சென்று அரவிந்திற்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு பதிவிறக்கிக் கொள்ளவும்.


*************************************************

வருடாவருடம் புத்தகக்காட்சி முடிந்ததும் புத்தகங்கள் படிப்பது தொடர்பாக ஒரு உற்சாகம் பிறக்கும். அந்த உற்சாக சூட்டோடு முடிந்தவரை வாங்கிய புத்தகங்களை படித்துவிடுவது புத்திசாலித்தனம். அப்படி சென்ற வாரத்தில் படித்த புத்தகங்கள் :-

புக் மார்க்ஸ் என்.சொக்கன்
தமிழா ! நீ ஓர் இந்துவா ? – மஞ்சை வசந்தன்
கி.பி.2087இல்... முனைவர் மலையமான்
திசை கண்டேன் வான் கண்டேன் சுஜாதா
குமரிக்கண்டமா ? சுமேரியமா ? – பா.பிரபாகரன்

வாசிப்பானுபவம் பற்றி தனித்தனியாக இல்லாமல் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு இடுகையாக வெளியிடுகிறேன்.

*************************************************

முதல் பத்தி கேள்விக்கு பதில் Freaks (1932). ஒரு சர்க்கஸ், கூத்து, வித்தை வகையறா குழு. அதன் அங்கத்தினர் பெரும்பாலும் உடல் குறைபாடு கொண்டவர்கள். அவர்கள் தவிர்த்து கிளியோபாட்ரா என்று ஒருத்தி. கிளியோபாட்ரா என்று சொல்லிவிட்டதால் அவளுடைய அழகு எப்படி என்று சொல்லத்தேவையில்லை. அவளை ஒரு குள்ள மனிதன் விரும்புகிறான். அவனுக்கு நிறைய சொத்து இருப்பதால் கிளியோபாட்ராவும் அவனை காதலிப்பது போல நடித்து திருமணம் செய்துகொள்கிறாள். அவர்களுடைய திருமண வரவேற்பில் எல்லா ‘ஃப்ரீக்ஸும்’ ஆடிப்பாட கிளியோபாட்ரா கோபப்பட்டு அவர்களை அவமதிக்கிறாள். அதன்பிறகு ஃப்ரீக்ஸ் அனைவரும் சேர்ந்து திட்டமிட்டு கிளியோபாட்ராவின் உடல் பாகங்களை சிதைத்து அவளை மனிதத்தலை கொண்ட வாத்தாக மாற்றிவிடுகிறார்கள். பொழுதுபோக்குக்காக மக்கள் அவளை வேடிக்கை பார்ப்பதாக படம் நிறைவடைகிறது.

படம்: Gabby Voltron
இத்திரைப்படத்தில் நிஜத்திலேயே சயமீஸ் இரட்டையர்களான டெய்சி & வைல்ட் ஹில்டன் நடித்திருக்கிறார்கள். கதைப்படி வைலட்டுக்கு மட்டும் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வைலட்டுடைய வருங்கால கணவன் அவளுக்கு முத்தமிடுகிறாள், அதனை டெய்சி உணருவதாக நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டுள்ளது ஒரு காட்சி.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 April 2013

அந்தமான் பயணம் - தகவல்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


அந்தமான் தொடர் ஒருவழியாக நிறைவுக்கு வந்துவிட்டது. படிப்பவர்களுக்கு எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. எனக்கு நிம்மதியாக இருக்கிறது. இனி எழுதியே ஆகவேண்டுமென பின்னிரவில் அமர்ந்து அரைத்தூக்கத்தில் தட்டச்ச தேவையில்லை. கீழ்காணும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் தொடரை முழுமையாக வாசித்து வந்தவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் பயன் பெறலாம்.

சீசன்:
அந்தமானில் டிசம்பர் துவங்கி மே மாதம் வரை சீசன். மற்ற மாதங்களில் சென்றால் என்ன என்று கேட்கலாம் - மழை பெய்து உங்கள் சுற்றுலா திட்டத்தை கலைக்கலாம், முன்னறிவிப்பின்றி உள்ளூர் கப்பல்கள் ரத்து செய்யப்படலாம். அதற்கு மேல், சில தீவுகள் சீசன் தவிர்த்து மற்ற காலகட்டத்தில் பராமரிப்பிற்காக பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும். க்ளைமேட்டை பொறுத்தவரையில் அதிக வெயிலுமில்லாமல் குளிருமில்லாமல் மிதமாகவே இருக்கும்.

பயணம்:
கப்பலில் சென்றால் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் வரை செலவாகும். பயண நேரத்தில் முழுமையாக மூன்று நாட்கள் கழிந்துவிடும். விமானச்செலவு நான்காயிரத்தில் தொடங்கி சமயங்களில் பதினெட்டாயிரம் வரை கூட செலவாகலாம். விமான கட்டணத்தை பொறுத்தவரையில் எவ்வளவு நாட்கள் முன்கூட்டியே பதிவு செய்கிறோமோ அதற்கு தகுந்தபடி விலை வேறுபடும். சனி, ஞாயிறுகளில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும். சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிடுவது நல்லது. பயண நேரம் இரண்டு மணி நேரம் பத்து நிமிடம்.

தங்குமிடம்:
ஏசி இல்லாத அறைகள் எனில் நாள்வாடகை அறுநூறிலிருந்து துவங்கும். ஏசி அறை வாடகைகள் ஆயிரத்திலிருந்து துவங்குகிறது. முடிந்தவரையில் போர்ட் ப்ளேரின் மையப்பகுதியில், அதாவது அபெர்டீன் பஜார், செல்லுலர் ஜெயில் அருகில் அறை எடுத்துக்கொள்வது சுற்றிப்பார்க்க வசதியாக இருக்கும். நான் வசித்த பகுதியின் பெயர், தெலானிப்பூர். அங்கே ஹாலிடே-இன் என்கிற தரமான ஏசி ஹோட்டல், எதிரிலேயே தர்பார் ஹோட்டல், ஆட்டோ ஸ்டாண்ட், மதுக்கூடம் என சகலவசதிகளும் உள்ளன.

எத்தனை நாள் தேவை ?
முந்தய பதிவொன்றில் குறிப்பிட்டது போல, அந்தமான் முழுவதையும் சுற்றிப்பார்க்க மாதங்கள் ஆகக்கூடும். லகரங்களில் செலவு செய்ய வேண்டி வரும். முக்கியமான சில இடங்களை மட்டும் தேர்வு செய்து சுற்றிப்பார்க்கலாம். இங்கிருந்து பயணம் செய்யும் நாளை ஓய்வாக கழிக்கலாம், அங்கே சுற்றிப்பார்க்க ஆறு நாட்கள், திரும்பவும் அங்கிருந்து பயணிக்க வேண்டிய நாள் - மொத்தமாக எட்டு நாட்கள் இருந்தால் மனநிறைவாக சுற்றிவரலாம். ஆறு அல்லது ஏழு நாட்கள் கைவசம் இருக்கும்போது சில இடங்களை தவிர்த்துவிடலாம். அதை விடவும் குறைவான நாட்கள் வைத்திருப்பவர்கள் அந்தமான் செல்வதையே தவிர்த்துவிடலாம்.

சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்:
நாள் 1: சென்னை - போர்ட் ப்ளேர் விமானப்பயணம் - ஓய்வு - மாலையில் கார்பன்'ஸ் கோவ் கடற்கரை
நாள் 2: போர்ட் ப்ளேர் சிட்டி டூர் (சாத்தம் ஸா மில், ஃபாரஸ்ட் மியூசியம், சாமுத்ரிகா மியூசியம், ZSI மியூசியம், அந்த்ரோபாலஜிக்கல் மியூசியம், மீன் காட்சியகம், அறிவியலகம், காந்தி பூங்கா, செல்லுலர் ஜெயில்)
நாள் 3: ராஸ் / வைபர் / நார்த் பே தீவுகள்
நாள் 4: பாராடங் சுண்ணக்குகைகள், மட் வால்கேனோ
நாள் 5: ஹேவ்லாக் - ராதாநகர், எலிபேண்ட் கடற்கரைகள்
நாள் 6: ஜாலிபாய், வண்டூர் கடற்கரை
நாள் 7: மவுண்ட் ஹேரியட் & சிடியா டாப்பு கடற்கரை
நாள் 8: பயண நிறைவு - சென்னை திரும்புதல்

பட்ஜெட் (இரண்டு நபர்களுக்கு)
பயணச்செலவு (Up and Down) : Rs.18000 - 32000
தங்குமிடம் (7 நாட்களுக்கு): Rs. 7000 - 10000
சுற்றுலா செலவு: Rs.12000 - 20000
இதர செலவுகள்: Rs.5000

மொத்தத்தில் இரண்டு நபர்களுக்கு செலவு நாற்பதாயிரத்தில் துவங்கி எழுபதாயிரம் வரை ஆகலாம்.

சில டிப்ஸ்
- அந்தமானில் திங்களன்று அருங்காட்சியகங்கள் விடுமுறை. எனவே போர்ட் ப்ளேர் சிட்டி டூர் திங்களில் அமையாதவாறு பார்த்துக்கொள்ளவும். போலவே ராஸ் ஐலேண்ட் புதன் விடுமுறை. எனவே நாட்களை சரியாக திட்டமிடவும்.
- எங்கு சென்றாலும் ஒரு பையில் மாற்றுத்துணி, டவல் மற்றும் குடிநீர் பாட்டில் வைத்துக்கொள்ளவும். நம்மின மக்கள் உற்சாக பானமும் !
- ராஸ் / வைபர் / நார்த் பே தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இத்தனை மணிக்கு மறுபடியும் படகிற்கு வரவேண்டும் என சொல்லி அனுப்புவார்கள். அதனை சரியாக பின்பற்றவும்.
- Avomine போன்ற கடல் நோய்மை தவிர்க்கும் மாத்திரைகளை உடன் வைத்திருக்கவும். உடல் ஒத்துழையாது என்று தெரியும் பட்சத்தில் பயணம் தொடங்குவதற்கு முன்பே மாத்திரையை உட்கொள்ளலாம்.
- பயணத்தில் தவிர்க்க முடியாமல் வாந்தி எடுத்துவிட்டால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தவும் இயல்பு நிலைக்கு திரும்பவும் முன்னேற்பாடு அவசியம்.
- ஷாப்பிங்கிற்கு தனியாக ஒருநாளை ஒதுக்கி வைத்துவிட்டு காத்திருக்காமல் பிடித்த பொருட்களை கண்டால் உடனடியாக வாங்கிவிடவும்.

சில DON'Ts
- கடற்கரைகளிளிருந்து சிப்பிகள், பவளப்பாறைகளை சேகரிக்க வேண்டாம். எப்படியும் விமான நிலைய சோதனையில் அகப்படுவீர்கள்.
- ஸ்கூபா டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளின் போது கவனமாக இருக்கவும். உதவியாளரின் கட்டளையை மீறி செயல்பட வேண்டாம்.
- கார்பின்’ஸ் கோவ் கடற்கரையில் சில சுற்றுலா பயணிகளை முதலை இழுத்துச்சென்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எச்சரிக்கை !
- நார்த் பே மற்றும் ஜாலிபாய் கடற்கரைகளில் உள்ள பவளப்பாறைகள் மீது கால்வைக்க வேண்டாம். அது அவற்றிற்கும் சமயங்களில் நமக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
- ஆதிவாசிகளை கண்டால் அவர்களை புகைப்படம் எடுக்கவோ, அவர்களுக்கு பொருட்கள் வழங்கவோ முயற்சி செய்ய வேண்டாம். மீறினால் ஜாமீன் கிடைக்காதபடி சிறையில் தள்ளப்படுவீர்கள். உங்களை அழைத்துச்சென்ற சுற்றுலா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.
- குப்பைகளை, குறிப்பாக ப்ளாஸ்டிக் குப்பைகளை போட வேண்டாம். மீறுபவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்றாலும் கூட சுற்றுச்சூழலின் நன்மை கருதி குப்பை போடாமலிருப்பது நல்லது.
- போட்டோ, வீடியோ தடை செய்யப்பட்ட இடங்களில் அவற்றை தவிர்க்கவும்.

பதிவில் விட்டுப்போன சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் கேட்கவும். அது மற்றவர்களுக்கும் உபயோகப்படும் எனில் பதிவில் பிற்சேர்க்கையாக இணைக்கப்படும். தனிப்பட்ட முறையில் ஆலோசனைகள், தொடர்பு எண்கள், பிற தகவல்கள் வேண்டுவோர் என்னுடைய மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். செல்போன் எண்ணிற்கு அழைக்க வேண்டாம். அது பெரும்பாலும் உயிரற்ற நிலையில் தான் இருக்கும்.

அந்தமான் பயணத்தொடருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்த நல் உள்ளங்களுக்கும், போனிலும், மெயிலிலும் நேரிலும் பாராட்டி ஊக்குவித்த நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 April 2013

அந்தமானில் நிறைவு நாள் - விமானப்பயணம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கிட்டத்தட்ட பயணத்தொடரின் இறுதிக்கு வந்துவிட்டோம். கடைசியாக ஒருநாள் ஓய்வாக குடித்துக் களிக்கலாம் என்று திட்டமிட்டு வைத்திருந்தபோது நம் பயண கர்த்தா நம்மை அழைத்து, மவுண்ட். ஹேரியட் - சிடியா டாப்பு போயிட்டு வாங்க சார்... என்று அன்பொழுக கேட்டார். பணம் எதுவும் வாங்கவில்லை. வாங்குவதாக இருப்பின் ஐநூறு ரூபாய் வாங்கியிருக்கக்கூடும். காலை சிற்றுண்டி முடித்துக்கொண்டு மதிய உணவை பார்சல் கட்டிக்கொண்டு கிளம்பினோம். முந்தய பதிவொன்றில் கண்ட சாத்தம் படகுத்துறையில் இருந்து சிறிய கப்பலொன்றில் புறப்பட்டோம். இருபது நிமிடப் பயணம். அதன்பின்பு சிறிது நேர மகிழ்வுந்து.


மவுண்ட் ஹேரியட் - பெயரைக் கேட்டதும் ஏதோ எவரெஸ்ட், கிளிமாஞ்சாரோ ரேஞ்சுக்கு நினைத்து வைத்திருந்தேன். ஹேரியட் டெயிலர் என்கிற துரையம்மாவின் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. 365மீ உயரம். எவரெஸ்டின் ஐந்து சதவிகிதம் கூட கிடையாது, எனினும் அந்தமானிலேயே உயரமான மலை. எரிமலை குழம்பு ஏதோ காணக் கிடைக்கப்போகிறது என்று நினைத்தவனுக்கு மறுபடியும் ஏமாற்றம் தான்; காரக்குழம்பு கூட கிடைக்கவில்லை. உண்மையில் அது காட்டுப்பகுதியில் ‘வியூ பாயிண்டுகள்' எல்லாம் வைத்து அமைக்கப்பட்ட சிறு பூங்கா. ஆனால் இயற்கை இயற்கையாகவே இருக்கக்கூடிய பகுதி. அமைதியான சூழல், அதனை லேசாக குலைக்க முயலும் பறவையின் கூக்குரல், அலாதியான காற்று என்று நாற்பதை கடந்தவர்களுக்கு உகந்த சூழல்.

சிடியா டாப்பு - என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமென்று தெரியவில்லை. இது மறுபடியும் ஒரு கடற்கரை பகுதி. கடற்கரைக்கு செல்வதற்கு முன்பு உயிரியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. ஆனால் அதன் கட்டுமான பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. சிலவகை முதலைகள், மான்கள், குரங்குகள் மாத்திரம் காணக் கிடைக்கின்றன. அங்கிருந்து சுமார் இரண்டரை கி.மீ மேடுபள்ளங்கள் தாண்டி பயணித்தால் சிடியா டாப்பு கடற்கரை. இந்த கடற்கரைக்கு மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் சென்றால் விஷுவல் ட்ரீட். மற்ற கடற்கரைகள் போல பெரிய ஆரவாரங்கள் இருக்காது. குடும்ப பாங்கான கடற்கரை. SLR கேமராக்காரர்களுக்கு சர்க்கரை பொங்கல்.


அபெர்டீன் பஜார் - போர்ட் ப்ளேரின் அங்காடித்தெரு. அந்தமான் மக்களை பொறுத்தவரையில் பஜாரில் எல்லாமே கிடைக்கும் என்ற நிலை இருந்தாலும், சுற்றுலாப்பயணிகளுக்கு அது சரிப்பட்டு வராது. ஏனெனில் பஜாரில் விற்கப்படும் பெரும்பாலான பொருட்கள் துணைக்கண்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுபவை. விலை அதிகம், தரம் எதிர்பார்க்க முடியாது. தவிர, திருநெல்வேலி அல்வா, சேலத்து மாம்பழம், சாத்தூர் காராசேவு போல அந்தமானுக்கென்று ஸ்பெஷல் எதுவும் கிடையாது. சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் கடைசி நாளில் ஷாப்பிங் செய்யலாம் என்று ஒரு எண்ணம் வைத்திருப்பார்கள். அந்தமானை பொறுத்தவரையில் பிடித்த பொருளை சுற்றுலா தளங்களில் பார்த்தால் உடனே வாங்கிவிடுவது உத்தமம்.


அந்தவகையில் அந்தமானில் இருந்து வாங்கிவர உகந்த சில பொருட்கள் - அந்தமான் கடற்கரையின் படங்கள் பொறித்த டீ-ஷர்ட், மரத்தில் செய்யப்பட்ட ஜரவா பொம்மைகள், சிப்பியில் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள். என்னுடைய கொள்முதலாக பன்னிரண்டு ஜரவா பொம்மைகளை வாங்கிவந்து உறவினர் இல்லங்களுக்கு கொடுத்தேன்.

*************************


அந்தமானை விட்டு பிரிய வேண்டிய நேரம் வந்தது. நீண்ட விடுமுறைக்குப்பின் பள்ளி செல்லும் மழலையின் மனநிலையில் தான் இருந்தேன். அதைவிட முதல் விமானப்பயணம் என்கிற படபடப்பு. ஏர் சிக்நெஸ் என்று கூகிளில் போட்டு தேடிக்கொண்டிருந்தேன். அன்றைய தினம் டிசம்பர் 26. சுனாமி நாள். நகரில் அதற்கான நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. என்னுடைய விமான நேரம் காலை பதினோரு மணி. கோ ஏர். ஒன்பதரை மணிக்கெல்லாம் நிலையத்திற்கு சென்று அமர்ந்துவிட்டேன். விமான நிலையத்திற்கு கூட வீர சவார்க்கரின் பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள். அந்தமானுக்கு கோ ஏர், ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா - ஆகிய நான்கு விமான சேவைகள் மட்டுமே உள்ளன. மலிவான மன நிறைவிற்கு கோ ஏரை தேர்ந்தெடுக்கலாம்.


என்னுடைய மூட்டை முடிச்சுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. எனக்கு முன்னர் பரிசோதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடற்கரையில் இருந்து சில அரிய வகை சிப்பிகளை பொறுக்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள்; ஸ்கேனிங் கருவி காட்டி கொடுத்துவிட்டது. விமான நிலைய பணியாட்களுக்கு தமிழ் தெரியாததால் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் சந்தேகங்களை கேட்டுக்கொண்டேன். என்னுடைய மூட்டை முடிச்சுகளையெல்லாம் சென்னைக்கு கொண்டு வந்திடுவீங்க தானே என்று நான்காவது முறை கேட்டபோதும் அவள் உதிர்த்த புன்னகை அழகாகத்தான் இருந்தது. பயணம் தொடங்க பதினைந்து நிமிடங்களே இருந்தன. பேருந்து ஒன்று எங்களை விமானத்திற்கு அருகாமையில் கொண்டு சென்றது.


வானில், வெகு தொலைவில் மட்டுமே பார்த்து ரசித்த விமானம். பழவந்தாங்கல், பரங்கிமலை பக்கம் விமானம் சற்று தாழ்வாக பறந்தாலே பரவசமடைவேன். அது இப்போது சில அடிகள் தொலைவில் நின்றுக்கொண்டிருக்கிறது. நான் அதில் பயணிக்கப்போகிறேன். விமானம் ஏறுவதற்கு முன்பே பறந்துக்கொண்டு தான் இருந்தேன். விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டோம். தடதடவென படியேறினேன் - சென்னையில் கப்பலேறிய அதே வேகத்துடன். ஜன்னலோர இருக்கை வாய்த்திருந்தது. அலைபேசியில் உள்ள ஃப்ளைட் மோடை முதன்முறையாக பயன்படுத்தி பெருமை அடைந்தேன். எத்தனை சினிமாக்களில் சீட் பெல்ட் காமெடி பார்த்திருப்போம். அவ்வளவையும் பார்த்தும்கூட சீட் பெல்ட் மாட்டத்தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் நயன்தாராவோ, ஹன்சிகாவோ குறைந்தபட்சம் தனிஷ்கா முகர்ஜியாவது அமர்ந்திருந்தால் உதவி கேட்டிருக்கலாம். கெரகம், ஒரு வட இந்திய சோம்பப்டி அமர்ந்திருந்தான். பெருமுயற்சி எடுத்து இறுதியில் நானே அணிந்துக்கொண்டேன்.

கழுகுப்பார்வையில் அந்தமான் தீவுகள்

மணி பதினொன்றை தாண்டி சில நிமிடங்கள் ஆகியிருந்தது. விமானம் இடமும், வலமுமாக திரும்பி ஏதோ விளையாடிக்கொண்டிருந்தது. திடீரென ரன்வேயில் நுழைந்து தடதடத்து உயரே எழும்பியது. அந்தமான் தீவுகளை விட்டு கடந்த சில நிமிடங்கள் கண்கொள்ளா காட்சி. கழுகுப்பார்வையில் குட்டி குட்டியாக தீவுகள் ! அதன்பிறகு கீழே வெண்பஞ்சு மேகங்களை தவிர வேறொன்றும் தெரியவில்லை. மேகங்களுக்கு இடையில் கூட எதுவும் தெரியவில்லை. ரிலேடிவ் ஸ்பீட் என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. அதிவேக ரயிலில் செல்லும்போது வெளியே இருக்கும் மரம், செடி கொடிகளை பார்க்கும்போது தான் ரயிலின் வேகம் தெரியும். அருகிலேயே இன்னொரு அதிவேக ரயில் அதே வேகத்தில் பயணித்தால் இரண்டு ரயில்களும் நின்றுக்கொண்டிருப்பது போலவே தோன்றும். போலவே மிக மிக தொலைவில் பார்த்து பழக்கப்பட்ட மேகங்களை மிக அருகில் பார்ப்பதாலோ என்னவோ விமானம் ஏதோ அந்தரத்தில் நின்றுக்கொண்டிருப்பதாகவே தோன்றியது.

சிங்கார சென்னை
சென்னையை அடைய வேண்டிய நேரத்திற்கு பதினைந்து நிமிடங்கள் மட்டுமே இருந்தன. ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டே இருந்தேன். தீப்பெட்டி சைஸில் ஒரு பொருள் கீழே தெரிந்தது. ஹார்பரில் நிற்கும் கப்பல் என்று சோம்பப்டி அவனுடைய புது மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சொன்னது சரிதான், மெரீனாவின் விசாலமான கரையை கடந்து விமானம் சென்னைக்குள் நுழைந்துக்கொண்டிருந்தது. தரையிறங்கும் போது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்குமோ ? பரமசிவன் படத்தில் லைலா முருகா முருகா என்று முனங்குவாரே. மறுபடியும் விமானம் இடமும் வலமுமாக ஏதோ ஆட்டம் காட்டி சின்ன ஜெர்க் கூட இல்லாமல் வெற்றிகரமாக தரையிறங்கிவிட்டது. முதல் வேலையாக அந்தமான் அங்கிளுக்கு போனை போட்டு கோட்டான கோடி நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.


விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் முதலில் தோன்றிய உணர்வு - யப்பா என்னா வெய்யிலு !


அடுத்து வருவது: அந்தமான் பயணம் - அசத்தல் டிப்ஸ்


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 April 2013

அந்தமான் - ஹேவ்லாக் கடற்கரைகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அந்தமானை நோக்கிய என்னுடைய கப்பல் பயணத்தில், ஒரு வெள்ளைக்கார சோடியை பார்த்து உள்ளூர்வாசி சொன்னது, “இவுகல்லாம் ஹேவ்லாக் போயி அவுத்துப்போட்டு படுத்துக்குவாக...”. அப்போதிலிருந்தே என்னுடைய மனது அந்த ஒற்றைச் சொல்லை கவனமாக பற்றிக்கொண்டது - ஹேவ்லாக். அந்தமானில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து “சந்தைக்கு போகணும் காசு கொடு...” என்று சொல்லும் சப்பாணி போல, எப்ப பாஸ் ஹேவ்லாக்குக்கு அனுப்பி வைப்பீங்க என்று டிராவல் ஏஜென்ட்டை நச்சரித்துக்கொண்டே இருந்தேன்.

ஹேவ்லாக் நம் கவலைகளுக்கான பூட்டு ! அந்தமான் தீவுகளிலேயே போர்ட் ப்ளேர் தவிர்த்து வெளிநாட்டவர் தங்குவதற்கு அனுமதிக்கப்படும் ஒரே தீவு - ஹேவ்லாக். அதனாலேயே ஹேவ்லாக் கடற்கரைகள் பிகினி மயமாகவும் பிறந்தமேனியாகவும் காட்சியளிக்கின்றன. கொண்டாட்ட விரும்பிகள், தேனிலவு தம்பதிகள் ஹேவ்லாக்கில் ஒரு இரவாவது தங்கி விரிவாக சுற்றிப்பார்ப்பது உகந்தது. அந்தமான் சுற்றுப்பயணம் முழுவதையும் ஹேவ்லாக்கில் மட்டுமே செலவளிப்போரும் உண்டு.

கொஞ்சம் மெனக்கெட்டால் டிராவல் ஏஜெண்டுகளின் தலையீடு இல்லாமல் ஹேவ்லாக் சென்றுவரலாம். போர்ட் ப்ளேரில் இருந்து ஹேவ்லாக் செல்வதற்கு அரசாங்க கப்பல் பம்பூகாவும் தனியார் கப்பல் மாக்ரூஸும் இருக்கின்றன. பம்பூகாவில் டிக்கெட் விலை 250ரூ. மாக்ரூஸில் 900ரூ. உங்கள் டிராவல் ஏஜெண்ட் உங்களிடம் சீசன்  உச்சத்தில் இருப்பதால் அரசாங்க கப்பலில் டிக்கெட் கிடைக்காது என்று காதில் பூ சுற்ற முயற்சிப்பார். ஏமாற வேண்டாம். உண்மையில் பம்பூகா பாதியளவு கூட நிரம்புவதில்லை. தரமான இருக்கைகள், தொலைகாட்சி, கேண்டீன், துரித வேகம் என்று தனியார் கப்பலில் சில வசதிகள் இருப்பது உண்மைதான். என்னைப்பொறுத்தவரையில் போர்ட் ப்ளேரில் இருந்து ஹேவ்லாக் செல்லும்போது அரசாங்க கப்பலிலும் திரும்பிவரும்போது தனியார் கப்பலை நாடுவதும் சாலச்சிறந்தது. முந்தய பத்தியில் குறிப்பிட்ட தரப்பினர் தவிர்த்து மற்றவர்கள் காலையில் கிளம்பி மாலையில் திரும்பிவிடலாம்.

போர்ட் ப்ளேரிலிருந்து ஹேவ்லாக் செல்வதற்கு ஹெலிகாப்டர், ஸீ ப்ளேன் சேவைகள் கூட உள்ளன. சராசரி கட்டணம் தான். ஆனால் செல்வாக்கு உள்ள ஆட்களுக்கு மட்டுமே வாய்க்கும் என்று நினைக்கிறேன்.

ஹேவ்லாக்கில் மொத்தம் ஏழு கடற்கரைகள் உள்ளன, எனினும் அவற்றில் இரண்டு மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு உகந்தது. ராதா நகர் கடற்கரை- ஆசியாவிலேயே தலைசிறந்தது என்று 2004ல் டைம்ஸ் மேகஸின் அறிவித்த கடற்கரை. ஹேவ்லாக் படகுத்துறையிலிருந்து 11கி.மீ தொலைவில் ராதாநகர் கடற்கரை அமைந்துள்ளது. ஆட்டோ பிடித்துக்கொள்ளலாம். இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு கிடைக்கும், எனினும் அது தேவையற்றது. ஹேவ்லாக்கை பொறுத்தவரையில் வெட்கம் என்னும் கருமத்தை களைந்துவிடுவது நல்லது, கூடவே ஆடைகளையும், உங்களுடையதை தான். அபத்தமாக சூரியனை உள்ளங்கையில் பிடித்திருப்பது போல போட்டோவெல்லாம் எடுக்க வேண்டாம். ஜஸ்ட் என்சாய் ! கடலலை லேசாக உடலை நனைத்துவிட்டு செல்கிறபடி, மணலில் மல்லாக்கப் படுத்துக்கொள்ளுங்கள் - கடவுளை காணலாம்.

நான் ராதாநகர் கடற்கரைக்கு சென்றபோது மணி மாலை ஐந்தை நெருங்கியிருந்தது. சூரியன் மறைகிற தருணம். நிறைய பேர் SLR கேமராவை வைத்து திருகிக்கொண்டிருந்தார்கள். அருகிலேயே ஒரு ரிக்கி பாண்டிங் ஒரு துரையம்மாவின் இதழை சுவைத்துக்கொண்டிருந்தான். இந்தியா ஏன் இதுவரை வல்லரசு ஆகவில்லை என்ற உண்மை உரைத்தது. அப்படியே அலைகளை தொட்டபடி ஒரு நடை நடந்தேன். ஒரு பிகினி மங்கை குப்புற படுத்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள். அவள் புட்டத்தில் ஒட்டியிருந்த ஈரமணல் கொஞ்சம் கொஞ்சமாக காய்ந்துக்கொண்டிருந்தது. அந்த தருணம்... திருவள்ளுவர் ஏதோ சொல்லியிருக்கிறாரே, ஆங் உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே உலக்கை... என்ன எழவோ, அப்படித்தான் ஆகியிருந்தது என்னுடைய நிலை. மீண்டும் என் உணர்வுகளை சமநிலைக்கு கொண்டுவர நேரம் பிடித்தது.

ராதாநகர் கடற்கரையிலிருந்து மீண்டும் படகுத்துறைக்கோ அல்லது அறைக்கோ செல்லும்வழியில் மூன்று கி.மீ தொலைவில் எலிபேண்ட் பீச்சுக்கு செல்வதற்கான குறுக்குப்பாதை அமைந்துள்ளது. வாகனங்கள் செல்ல முடியாது. காட்டுவழிப்பாதையாக சில கி.மீ நடந்து சென்றால் எலிபேண்ட் கடற்கரையை சென்றடையலாம். சில வருடங்கள் முன்பு வரை இங்கே யானை சவாரி நடைபெறும் என்று சொல்கிறார்கள். மற்றபடி முந்தய பதிவுகளில் சொன்ன ஸ்கூபா டைவிங், ஸ்னார்கலிங் வகையறா விளையாட்டுகள் ஹேவ்லாக்கிலும் உண்டு. ஹேவ்லாக் படகுத்துறை - ராதாநகர் பீச் - எலிபேண்ட் பீச் : எளிய புரிதலுக்காக கூகுள் மேப்.

தங்குமிடங்களை பொறுத்தவரையில் ஹேவ்லாக்கில் நிறைய ஆப்ஷன்கள் உள்ளன. நான் ஹேவ்லாக் சென்ற சமயம், என்னுடைய பயணத்தின் கடைசி நாட்கள். ஏற்கனவே என்னுடைய ஏ.டி.ம். கறவை மாட்டின் மடி வற்றியிருந்தது. எனவே ட்ராவல் ஏஜெண்டிடம் பாடாவதி லாட்ஜாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி வைத்திருந்தேன். அந்த வசந்த மாளிகையின் பெயர் பிலாஷி லாட்ஜ். ம்ம்ம் குடிபோதையில் உள்ள ஒருவன் படுத்து உறங்குவதற்கு போதுமானதாகவே இருந்தது. இருப்பினும் கரப்பான்களுக்கு பயந்து இரவெல்லாம் மின்விளக்குகளை எரியவிட்டு, தொலைக்காட்சியை சத்தமாக வைத்துக்கொண்டு தூங்கிய கதையை தனி அத்தியாயமாகத்தான் எழுத வேண்டும்.

மிக முக்கியமான தகவலை மறந்துவிட்டேன்; ஹேவ்லாக் செல்லும்போது ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ஒரு ஃபுல் பாட்டில் சரக்காவது வாங்கிச் செல்லுங்கள். மக்கள் வசிக்கும் பகுதிதானே, மதுக்கூடம் இருக்கும் என்று நம்பி சென்றுவிட்டேன். இருந்தது. மூன்று கி.மீ ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றார்கள். அதையும் செய்தேன். சலூன் கடை அளவில் உள்ள மிகச்சிறிய இடம். டேபிள் எல்லாம் இல்லை. கடைக்காரர் ஊற்றிக்கொடுப்பார். அப்படியே வாங்கி குடிக்க வேண்டியது தான். சைட் டிஷ் எல்லாம் ஊற்றிக்கொடுப்பவரின் முன்னே இறைந்துக்கிடக்கும். அள்ளி வள்ளு வதக்கு'ன்னு வாயில போட்டுக்க வேண்டியது தான். ஒரு தனி மனிதனாக இதுபோன்ற அனுபவங்களை நான் ரசித்து ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் வருத்தப்பட்டு பாரம் சுமக்க விரும்பாதவர்கள் சரக்குபுட்டியை போர்ட் ப்ளேரிலிருந்து சுமக்கலாம். அடுத்தது, உணவகங்கள். கிட்டத்தட்ட இரவு எட்டரை மணிக்கெல்லாம் எல்லோரும் கடையை சாத்திவிடுகின்றனர். எனவே தாமதிப்பது உகந்ததல்ல. மதுக்கூடத்திற்கு அருக சில பெங்காலிகளின் வீட்டுவாசலில் டேபிள் சேரெல்லாம் போட்டு உணவு பரிமாறுகிறார்கள். அவற்றை தவிர்த்தால் படகுத்துறைக்கு அருகில் வழக்கம்போல பொரொட்டா, ஃபிரைட் ரைஸ் விற்கும் உணவகங்கள் உள்ளன.

என்னடா ரெண்டு பீச்சு தானே இருக்கு என்று தோன்றலாம். ஹேவ்லாக் என்பது ஒரு உணர்ச்சி. அதனை வார்த்தைகளால் புரிய வைப்பது கடினம். பழமொழி சொன்னா அனுபவிக்கணும் என்று சொல்வதுபோல ஹேவ்லாக்கையெல்லாம் அனுபவிக்கணும் !

பி.கு: அந்தமான் தொடர் இழுத்துக்கொண்டே செல்கிறதே; எப்பதான் முடிப்பீங்க'ன்னு ஒரு நண்பர் கேட்டிருந்தார். இன்னும் இரண்டு கட்டுரைகள் உள்ளன.

படங்கள்: கூகுள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment