Showing posts with label வாசித்தவை. Show all posts
Showing posts with label வாசித்தவை. Show all posts

5 January 2015

ஃபேஸ்புக் பொண்ணு - சரோஜா தேவி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புத்தாண்டு உற்சாகமாகவும் உணர்ச்சிமயமாகவும் துவங்கியிருக்கிறது. உயிர்மையின் பத்து புதிய நூல்கள் கடந்த சனியன்று (03/01/2014) அண்ணா சாலை புக் பாயிண்டில் வெளியானது. அவற்றில் இரண்டு எனது விருப்பப் பட்டியலில் உள்ள எழுத்தாளர்களுடையது. அவ்விருவரும் வலையுலகின் கணேஷ் – வசந்த் போன்றவர்கள் (இருவரில் யார் வசந்த் என்பதற்கு அரங்கிற்கு வந்த ரசிகைகள் சாட்சி). ஒன்று, ‘லக்கிலுக்’ யுவகிருஷ்ணா எழுதிய சரோஜாதேவி. மற்றொன்று, அதிஷாவின் ஃபேஸ்புக் பொண்ணு.

கொஞ்சம் தாமதமாகவே புக் பாயிண்டுக்கு சென்றோம். சூழ்நிலை ஒத்துழைத்தால் சில புகைப்படங்கள் எடுக்கலாம் என்று கேமராவை (Canon powershot SX150) எடுத்துச் சென்றிருந்தேன். அங்கே சென்றால், பிரபு காளிதாஸ், உமா மகேஸ்வரன் லாவோ ஸு, சுதர்ஸன் ஹரிபாஸ்கர் போன்ற புகைப்பட ஜாம்பவான்கள் ஆளுக்கொரு SLR வைத்து சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்கள். போதாமைக்கு ஒருவர் வீடியோவும் எடுத்துக்கொண்டிருந்தார். கமுக்கமாக அமர்ந்துக்கொண்டேன்.

வானொலி தொகுப்பாளர் கண்மணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். எதிர்பார்த்த லவ் குரு வரவில்லை. எங்கெங்கு காணினும் பிரபலங்கள். வெளியிட வேண்டிய புத்தகங்கள் வந்து சேரவில்லை. நீதியரசர் சந்துரு வேறு அவுட் ஆஃப் சிலபஸில் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் போரடிக்கத் தான் செய்தது.

சற்று நேரத்தில் வெளியே போன் பேசுவதற்கு சென்றுவந்த நண்பர் ‘புக்ஸ் வந்துடுச்சு’ என்ற இன்பத்தேனை என் காதில் பாய்ச்சினார். என்னது மொளகா பஜ்ஜி போட்டுட்டாங்களா ? என்று பாய்ந்தோடி இரண்டு புத்தகங்களையும் முதல் ஆளாக வாங்கினேன், அதுவும் மேடையில் புத்தகம் வெளியிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே.

இருவரிடமும் ஆட்டோகிராப் வாங்க வேண்டும். எங்கே பேனா இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று எண்ணி அதையும் வீட்டிலிருந்தே கொண்டு வந்திருந்தேன். வெளியீடு முடிந்து எழுத்தாளர்கள் மேடையிலிருந்து இறங்கியதும், இருவரிடமும் ஆட்டோகிராப் வேண்டி நின்றேன். கையொப்பத்திற்கு ஐயாயிரம் கேட்காத நல்லிதயம் கொண்டவர்கள். அதிஷா சுருக்கமாக ‘அன்புடன் அ’ என்று முடித்துக்கொண்டார். யுவகிருஷ்ணா அவரிடமிருந்த சிகப்பு மை நிரப்பப்பட்ட ஹீரோ பேனாவால் ஏதோ எழுதி கையொப்பமிட்டார். ஆறு புத்தகங்கள் எழுதியவருக்கு கூட ஆட்டோகிராப் போடும்போது கை நடுங்கும் என்று நான் உணர்ந்துகொண்ட தருணம் அது. யுவகிருஷ்ணா எனக்கான ஆட்டோகிராபில் என்ன எழுதினார் என்பதை தட்டச்சினால் என் கைகளும் நடுங்கக்கூடும் (பார்க்க படம்). உணர்ச்சிமயமான தருணத்தில் எனது தகுதிக்கு மீறிய அப்படியொரு வார்த்தையை யுவகிருஷ்ணா எழுதிவிட்டாலும் கூட, அதனால் நான் கொண்ட மகிழ்ச்சி அளவில்லாதது. என்ன ஒன்று, வீட்டில் காட்ட முடியாத புத்தகம் என்பது தான் சிறிய வருத்தம்.

ஆக, ஃபேஸ்புக் பொண்ணு, சரோஜாதேவி ஆகிய புத்தகங்கள் அதனதன் ஆசிரியர்கள் ‘முதல்’ கையொப்பமிட்ட பிரதிகள் என்னிடம் உள்ளன. இதன் மதிப்பு சில வருடங்களுக்கு பிறகு லட்சங்களில் இருக்கக்கூடும்.

ஃபேஸ்புக் பொண்ணை இன்னும் வாசிக்கவில்லை. சரோஜா தேவியை பொறுத்தவரையில் ஏற்கனவே சொன்னதுபோல் எல்லாம் வலைப்பூவில் வாசித்த கட்டுரைகள். ஆயினும், என்னைப் பொறுத்தவரையில் ஒரு சிலபஸ் புத்தகம் போல பாதுகாக்க வேண்டியது. சுஜாதா நாவல்களை படிக்கும்போது வெறுமனே வாசகனாக இல்லாமல் நாமும் எழுத வேண்டுமென்ற உந்துதல் ஒன்று ஏற்படும். யுவகிருஷ்ணாவின் எழுத்துகளும் அப்படித்தான். அவருடைய சொல்லாடல்கள் ‘எழுச்சி’யூட்டுகின்றன. என்றும் இணைய சுஜாதா அவர் மட்டும்தான் !

ஒரு ஆறுதலான விஷயம், தினகரனின் முதன்மை ஆசிரியர் சில நாட்களுக்கு முன்பு சரோஜா தேவி புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தார். அதில் புத்தகத்தில் உள்ள தலைப்புகளை வரிசையாக பட்டியலிட்டு இறுதியாக ‘காஜல் அகர்வால்’ என்று முடித்திருந்தார். அதை வாசித்த நான்கூட கொஞ்சம் பொருமினேன். இப்போது இல்லை. அவர் குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் காஜல் அகர்வால் உட்பட சுமார் ஏழு கட்டுரைகள் புத்தகத்தில் இல்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 March 2014

வாசித்தவை – 3

அன்புள்ள வலைப்பூவிற்கு,


பத்து செகண்ட் முத்தம்
ரசி என்கிற தமிழரசி ஒரு ஓட்டப்பந்தயக்காரி. நூறு மீ தூரத்தை 9.58 நொடிகளில் கடந்திருப்பது தற்போதைய உலக சாதனை. செய்திருப்பவர் உசேன் போல்ட். பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் ஃப்ளாரென்ஸின் 10.49 உலக சாதனை. பெண்கள் யாரும் பத்து நொடிக்கு குறைவான நேரத்தில் ஓடியதில்லை. அதுதான் நாயகி ரசியின் லட்சியமாக இருக்கிறது. அவளுடைய மாமனும் பயிற்சியாளருமான ராஜ் மோகன் அவளை அப்படித்தான் வளர்த்திருக்கிறான். அதற்காக சராசரி பதின்பருவ பெண்ணுக்கு கிடைக்கவேண்டிய சந்தோஷங்களை எல்லாம் பறித்து வைத்திருக்கிறான். ஒரு கட்டத்தில் காதல் ரசியின் லட்சியத்திலிருந்து அவளை திசை மாற வைக்கிறது. பத்து செகண்ட் முத்தத்தை பூர்த்தி செய்தாளா ரசி...?

சுமார் நூறு பக்கங்கள் கொண்ட சிறிய நாவல்தான். நாவல் முழுக்க ரசிக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்துவிடுமோ என்ற பதைபதைப்பு தொற்றிக்கொண்டே வருகிறது. இங்க்லீஷ்காரன் என்ற திரைப்படத்தில் வரும் சத்யராஜ், நமீதா பகுதி கிளைக்கதையை ப.செ.மு.விலிருந்து உருவியிருக்கக்கூடும். ரசி க்ளைமாக்ஸில் திருந்தும் வில்லன் போல கடைசி பக்கத்தில் திருந்துவது அப்படி ஒன்றும் ஏற்புடையதாக இல்லை.

பத்து செகண்ட் முத்தம் – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.80 – ஆன்லைனில் வாங்க

காதல் விதிகள்
ரிச்சர்ட் டெம்ப்ளர் என்னும் மேலை நாட்டு எழுத்தாளர் வேலை விதிகள், காதல் விதிகள், செல்வம் சேர்க்கும் விதிகள் போன்ற தலைப்புகள் உட்பட சில சுயமுன்னேற்ற நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றை கிழக்கு மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. அந்த நூல்களை எப்போதோ ஒரு சமயம் ஆர்வக்கோளாரில் வாங்கி வைத்திருந்தேன். அப்படி என்னதான் இருக்கிறது என்று ஒரு கிளான்ஸ் புரட்டிப் பார்த்தேன். மொழிபெயர்ப்பு என்பதாலேயே இருபது பக்கங்களை தாண்ட முடியவில்லை. யோகா சாமியார்களை போல பொத்தாம் பொதுவாக காதலுக்கு டிப்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.

உண்மையில் காதல் என்பதற்கு பொதுவான விதிகள் எல்லாம் வகுக்க முடியாது என்பது என்னுடைய அபிப்ராயம். அது ஒரு கஸ்டமைஸ்ட் உணர்வு. காதலிப்பவர், காதலிக்கப்படுபவர், அவர்களுடைய பண்பாடு, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல காரணிகளை பொறுத்து காதலின் தன்மையும் அதற்கான விதிகளும் வேறுபடுகின்றன.

காதல் விதிகள் - ரிச்சர்ட் டெம்ப்ளர் - கிழக்கு பதிப்பகம் – ரூ.150 – ஆன்லைனில் வாங்க

கிளியோபாட்ரா
நான் அபுனைவு புத்தகங்களை அவ்வளவாக விரும்புவது கிடையாது. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. பத்து பக்கங்களை தாண்டுவதற்குள் நித்திராதேவி வந்து என்னை கட்டி அணைத்துக் கொள்வாள். ஆனால் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் என்றால் ஒரு ஆர்வக்கோளாரில் வாங்கிவிடுவேன். குறிப்பாக அய்யா இன்போஸிஸ் நாராயணமூர்த்தி, தோழர் அனில் அம்பானி, பில் கேட்ஸு போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களின் அட்டையை பார்த்தாலே எனக்கு நரம்பெல்லாம் புடைத்துக் கொள்ளும். வாங்கி அடுத்தநாளே படித்து கிழித்து அவர்களைப் போலவே பெரிய ஆட்களாகி விட வேண்டுமென்ற உத்வேகம். ஆனால் வாங்கியபிறகு அவற்றை பிரித்து அரை பக்கம் கூட படித்ததில்லை.

கிளியோபாட்ரா அப்படியில்லை. சிறுவயதிலிருந்தே கிளியோபாட்ரா என்றால் ஒரு மதிமயக்கம். இருப்பினும் ஆங்காங்கே படித்த செய்தி துணுக்குகளை தவிர கிளியோபாட்ரா பற்றிய நூல்களை படித்தோ, திரைப்படங்களை பார்த்ததோ இல்லை. சில மாதங்களுக்கு முன்பு சீமாட்டி வெலிங்கடன் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் காட்சியின் போது கிழக்கு வெளியீடான கிளியோபாட்ராவை வாங்கியிருந்தேன்.

முதல் இரண்டு அத்தியாயங்கள் முறையே ஒன்றாம், பன்னிரண்டாம் டாலெமிகளைப் பற்றி சொல்கிறது. அதன்பின் கிளியோபாட்ரா அறிமுகமாகி நூல் பிடித்தாற்போல அவருடைய மரணம் வரை செல்கிறது. ரோமப் பேரரசுகளான ஜூலியஸ் சீசரையும், மார்க் ஆண்டனியையும் காதலில் வீழித்தியவள். நிச்சயம் படித்துத் தெரிந்துக்கொள்ள வேண்டியது கிளியோபாட்ராவின் வரலாறு...!

கிளியோபாட்ரா – முகில் – கிழக்கு பதிப்பகம் – ரூ.150 – ஆன்லைனில் வாங்க

60 அமெரிக்க நாட்கள்
சுஜாதா மூன்றாவது முறையாக அமெரிக்க சென்றபோது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தலைப்பை படித்துவிட்டு வழக்கமான பயணக்கட்டுரைகள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். ஒருவகையில் பயணக்கட்டுரை தான். ஆனால் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பற்றியோ டிஸ்னிலேன்ட் சென்றுவந்த அனுபவத்தையோ எழுதிவிடவில்லை. 

பொதுவாக அமெரிக்க மக்களின் வாழ்க்கை முறையையும் அங்கே குடிபெயர்ந்த இந்தியர்களின் நிலையையும் அலசுகிறது நூல். தவிர அமெரிக்க அரசியல், தொழில்நுட்பம் என்று ஏனைய விஷயங்களையும் எழுதியிருக்கிறார். இறுதியில் முத்தாய்ப்பாக அமெரிக்காவில் குடிபெயர விரும்பும் இந்தியர்களுக்கு சில அறிவுரைகள் சொல்லியிருக்கிறார். எப்போதோ எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை தற்சமயம் படிக்கும்போது சுஜாதா ஒரு தீர்க்கதரிசி என்றே தோன்றுகிறது.

60 அமெரிக்க நாட்கள் – சுஜாதா – உயிர்மை – ரூ.65 – ஆன்லைனில் வாங்க

மனிதனும் மர்மங்களும்
ஆவிகள், பறக்கும் தட்டுகள், வேற்றுகிரக வாசிகள், இன்னபிற ஆமானுஷ்யங்களை பற்றி எழுதியிருக்கிறார் மதன். ஆரம்பத்தில் இதையெல்லாம் உண்மையிலேயே மதன் தான் எழுதினாரா சுத்த பேத்தலாக இருக்கிறதே என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக புத்தகம் தனக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறது.

குறிப்பாக, மார்கன் ராபர்ட்ஸன் பற்றிய தகவல். அவர் ஒரு எழுத்தாளர். 1898ல் கப்பல் விபத்து சம்பந்தமாக கற்பனையாக ஒரு நாவல் எழுதியிருக்கிறார், கற்பனை கப்பலின் பெயர் டைட்டன். அவர் எழுதிய பல விஷயங்கள் 1912ல் விபத்தை சந்தித்த டைட்டானிக்குடன் ஒத்துப்போகிறது. இறுதியில், வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வந்து மனிதனின் விந்தணு, கருமுட்டை மாதிரிகளை சேகரித்து செல்கிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

எனினும் இவற்றையெல்லாம் மதன் புனைவாக எழுதியிருந்தால் பட்டைய கெளப்பியிருக்கும் என்பது என் எண்ணம்...!

மனிதனும் மர்மங்களும் – மதன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.140 – ஆன்லைனில் வாங்க

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment