Showing posts with label kadhal. Show all posts
Showing posts with label kadhal. Show all posts

12 March 2014

வாசித்தவை – 3

அன்புள்ள வலைப்பூவிற்கு,


பத்து செகண்ட் முத்தம்
ரசி என்கிற தமிழரசி ஒரு ஓட்டப்பந்தயக்காரி. நூறு மீ தூரத்தை 9.58 நொடிகளில் கடந்திருப்பது தற்போதைய உலக சாதனை. செய்திருப்பவர் உசேன் போல்ட். பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் ஃப்ளாரென்ஸின் 10.49 உலக சாதனை. பெண்கள் யாரும் பத்து நொடிக்கு குறைவான நேரத்தில் ஓடியதில்லை. அதுதான் நாயகி ரசியின் லட்சியமாக இருக்கிறது. அவளுடைய மாமனும் பயிற்சியாளருமான ராஜ் மோகன் அவளை அப்படித்தான் வளர்த்திருக்கிறான். அதற்காக சராசரி பதின்பருவ பெண்ணுக்கு கிடைக்கவேண்டிய சந்தோஷங்களை எல்லாம் பறித்து வைத்திருக்கிறான். ஒரு கட்டத்தில் காதல் ரசியின் லட்சியத்திலிருந்து அவளை திசை மாற வைக்கிறது. பத்து செகண்ட் முத்தத்தை பூர்த்தி செய்தாளா ரசி...?

சுமார் நூறு பக்கங்கள் கொண்ட சிறிய நாவல்தான். நாவல் முழுக்க ரசிக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்துவிடுமோ என்ற பதைபதைப்பு தொற்றிக்கொண்டே வருகிறது. இங்க்லீஷ்காரன் என்ற திரைப்படத்தில் வரும் சத்யராஜ், நமீதா பகுதி கிளைக்கதையை ப.செ.மு.விலிருந்து உருவியிருக்கக்கூடும். ரசி க்ளைமாக்ஸில் திருந்தும் வில்லன் போல கடைசி பக்கத்தில் திருந்துவது அப்படி ஒன்றும் ஏற்புடையதாக இல்லை.

பத்து செகண்ட் முத்தம் – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.80 – ஆன்லைனில் வாங்க

காதல் விதிகள்
ரிச்சர்ட் டெம்ப்ளர் என்னும் மேலை நாட்டு எழுத்தாளர் வேலை விதிகள், காதல் விதிகள், செல்வம் சேர்க்கும் விதிகள் போன்ற தலைப்புகள் உட்பட சில சுயமுன்னேற்ற நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றை கிழக்கு மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. அந்த நூல்களை எப்போதோ ஒரு சமயம் ஆர்வக்கோளாரில் வாங்கி வைத்திருந்தேன். அப்படி என்னதான் இருக்கிறது என்று ஒரு கிளான்ஸ் புரட்டிப் பார்த்தேன். மொழிபெயர்ப்பு என்பதாலேயே இருபது பக்கங்களை தாண்ட முடியவில்லை. யோகா சாமியார்களை போல பொத்தாம் பொதுவாக காதலுக்கு டிப்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.

உண்மையில் காதல் என்பதற்கு பொதுவான விதிகள் எல்லாம் வகுக்க முடியாது என்பது என்னுடைய அபிப்ராயம். அது ஒரு கஸ்டமைஸ்ட் உணர்வு. காதலிப்பவர், காதலிக்கப்படுபவர், அவர்களுடைய பண்பாடு, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல காரணிகளை பொறுத்து காதலின் தன்மையும் அதற்கான விதிகளும் வேறுபடுகின்றன.

காதல் விதிகள் - ரிச்சர்ட் டெம்ப்ளர் - கிழக்கு பதிப்பகம் – ரூ.150 – ஆன்லைனில் வாங்க

கிளியோபாட்ரா
நான் அபுனைவு புத்தகங்களை அவ்வளவாக விரும்புவது கிடையாது. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. பத்து பக்கங்களை தாண்டுவதற்குள் நித்திராதேவி வந்து என்னை கட்டி அணைத்துக் கொள்வாள். ஆனால் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் என்றால் ஒரு ஆர்வக்கோளாரில் வாங்கிவிடுவேன். குறிப்பாக அய்யா இன்போஸிஸ் நாராயணமூர்த்தி, தோழர் அனில் அம்பானி, பில் கேட்ஸு போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களின் அட்டையை பார்த்தாலே எனக்கு நரம்பெல்லாம் புடைத்துக் கொள்ளும். வாங்கி அடுத்தநாளே படித்து கிழித்து அவர்களைப் போலவே பெரிய ஆட்களாகி விட வேண்டுமென்ற உத்வேகம். ஆனால் வாங்கியபிறகு அவற்றை பிரித்து அரை பக்கம் கூட படித்ததில்லை.

கிளியோபாட்ரா அப்படியில்லை. சிறுவயதிலிருந்தே கிளியோபாட்ரா என்றால் ஒரு மதிமயக்கம். இருப்பினும் ஆங்காங்கே படித்த செய்தி துணுக்குகளை தவிர கிளியோபாட்ரா பற்றிய நூல்களை படித்தோ, திரைப்படங்களை பார்த்ததோ இல்லை. சில மாதங்களுக்கு முன்பு சீமாட்டி வெலிங்கடன் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் காட்சியின் போது கிழக்கு வெளியீடான கிளியோபாட்ராவை வாங்கியிருந்தேன்.

முதல் இரண்டு அத்தியாயங்கள் முறையே ஒன்றாம், பன்னிரண்டாம் டாலெமிகளைப் பற்றி சொல்கிறது. அதன்பின் கிளியோபாட்ரா அறிமுகமாகி நூல் பிடித்தாற்போல அவருடைய மரணம் வரை செல்கிறது. ரோமப் பேரரசுகளான ஜூலியஸ் சீசரையும், மார்க் ஆண்டனியையும் காதலில் வீழித்தியவள். நிச்சயம் படித்துத் தெரிந்துக்கொள்ள வேண்டியது கிளியோபாட்ராவின் வரலாறு...!

கிளியோபாட்ரா – முகில் – கிழக்கு பதிப்பகம் – ரூ.150 – ஆன்லைனில் வாங்க

60 அமெரிக்க நாட்கள்
சுஜாதா மூன்றாவது முறையாக அமெரிக்க சென்றபோது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தலைப்பை படித்துவிட்டு வழக்கமான பயணக்கட்டுரைகள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். ஒருவகையில் பயணக்கட்டுரை தான். ஆனால் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பற்றியோ டிஸ்னிலேன்ட் சென்றுவந்த அனுபவத்தையோ எழுதிவிடவில்லை. 

பொதுவாக அமெரிக்க மக்களின் வாழ்க்கை முறையையும் அங்கே குடிபெயர்ந்த இந்தியர்களின் நிலையையும் அலசுகிறது நூல். தவிர அமெரிக்க அரசியல், தொழில்நுட்பம் என்று ஏனைய விஷயங்களையும் எழுதியிருக்கிறார். இறுதியில் முத்தாய்ப்பாக அமெரிக்காவில் குடிபெயர விரும்பும் இந்தியர்களுக்கு சில அறிவுரைகள் சொல்லியிருக்கிறார். எப்போதோ எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை தற்சமயம் படிக்கும்போது சுஜாதா ஒரு தீர்க்கதரிசி என்றே தோன்றுகிறது.

60 அமெரிக்க நாட்கள் – சுஜாதா – உயிர்மை – ரூ.65 – ஆன்லைனில் வாங்க

மனிதனும் மர்மங்களும்
ஆவிகள், பறக்கும் தட்டுகள், வேற்றுகிரக வாசிகள், இன்னபிற ஆமானுஷ்யங்களை பற்றி எழுதியிருக்கிறார் மதன். ஆரம்பத்தில் இதையெல்லாம் உண்மையிலேயே மதன் தான் எழுதினாரா சுத்த பேத்தலாக இருக்கிறதே என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக புத்தகம் தனக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறது.

குறிப்பாக, மார்கன் ராபர்ட்ஸன் பற்றிய தகவல். அவர் ஒரு எழுத்தாளர். 1898ல் கப்பல் விபத்து சம்பந்தமாக கற்பனையாக ஒரு நாவல் எழுதியிருக்கிறார், கற்பனை கப்பலின் பெயர் டைட்டன். அவர் எழுதிய பல விஷயங்கள் 1912ல் விபத்தை சந்தித்த டைட்டானிக்குடன் ஒத்துப்போகிறது. இறுதியில், வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வந்து மனிதனின் விந்தணு, கருமுட்டை மாதிரிகளை சேகரித்து செல்கிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

எனினும் இவற்றையெல்லாம் மதன் புனைவாக எழுதியிருந்தால் பட்டைய கெளப்பியிருக்கும் என்பது என் எண்ணம்...!

மனிதனும் மர்மங்களும் – மதன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.140 – ஆன்லைனில் வாங்க

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

19 August 2013

ஆதலால் காதல் செய்வீர்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஆ.கா.செ பார்க்க வேண்டுமென்றே முன்னேற்பாடு ஏதுமில்லை. எஸ், மனிஷா யாதவ் அழகுதான். ஆனால் அவருக்காக எல்லாம் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. நண்பர்கள் எழுதியதை வைத்துப் பார்க்கும்போது படம் சராசரிக்கு மேலே ரகம் என்று தோன்றியது. நேரமும் சரியாக அமைந்ததால் பார்க்க முடிவெடுத்தேன். ஒரு படத்தை விமர்சனங்கள் தெரிந்துக்கொள்ளாமல் பார்ப்பதற்கும்,  தெரிந்துக்கொண்டபின் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆ.கா.செ.வை பொறுத்தவரையில் கதை என்ன ? எந்த காட்சியில் இடைவேளை போடுவார்கள் ? எப்போது எண்ட் கார்ட் போடுவார்கள் ? என்கிற வரைக்கும் ஏற்கனவே இணையத்தில் எழுதி வைத்திருப்பதால் படம் பார்ப்பதற்கு முன்பு பெரிய சுவாரஸ்யம் ஏற்படவில்லை.

ஆதலால் காதல் செய்வீர் – என்கிற தலைப்பை ஏன் தேர்வு செய்திருப்பார்கள் ? படத்திற்கு முதலில் ஆதலினால் காதல் செய்வீர் என்று பெயர் சூட்டியிருந்ததாக ஞாபகம். சுஜாதா நாவலின் தலைப்பு. ஒருவேளை ஏதேனும் காப்பிரைட் பிரச்சனை வந்ததோ என்னவோ ? ஆனால், கதைப்படி சுஜாதாவின் தீண்டும் இன்பம் நாவலை நினைவூட்டுகிறது. தலைப்பிற்கான காரணம் குறித்த என்னுடைய எண்ணத்தை கடைசியில் சொல்கிறேன்.

முதல் பத்தியில் குறிப்பிட்ட வரிகளை நினைவு கூர்ந்து கதைச் சுருக்கத்தை எழுதி நேர விரயம் செய்வதை தவிர்க்கிறேன். ஹீரோவாக சந்தோஷ் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார், யாரோ தயாரிப்பாளரின் வாரிசு என்று அறிந்துக்கொள்ள முடிகிறது. ஹீரோ சுமார் மூஞ்சி என்று சொன்னால் அது சுய-எள்ளல் ஆகிவிடும் பாயம் இருந்தாலும் கூட அதுதான் உண்மை ! மனிஷாவுக்கு வழக்கு எண் படத்தில் நடித்த அதே நடுத்தர வர்க்க மாணவி வேடம். இப்போது கல்லூரிக்கு செல்கிறார். மனிஷா எப்போது தொப்புள் தெரிகிறபடி உடையணிந்து ஃபோல்க் டான்செல்லாம் ஆடப்போகிறார் என்று தெரியவில்லை. காத்திருப்போம்.

ஜெயப்பிரகாஷ் என்கிற குணச்சித்திர நடிகர், பிரமாதமாக நடிக்கக்கூடியவர். ஆ.கா.செவில் அவருடைய நடிப்பை புறந்தள்ளி அவருடைய மனைவி வேடத்தில் நடித்திருப்பவர் முந்தியிருக்கிறார். ஹீரோவுடைய நண்பராக வரும் அர்ஜுனனும், ஹீரோயினின் தோழியாக வரும் அர்ச்சனாவும் கவனிக்க வைத்திருக்கிறார்கள். அர்ஜுனனுக்கு அவருடைய இயல்பே கதாபாத்திரமாக அமைந்துவிட்டது போல அனாயசமாக அசத்தியிருக்கிறார். இவர்கள் எல்லோரை விடவும் கடைசி காட்சியில் தோன்றிய அந்த குழந்தை – பாசாங்கில்லாத நடிப்பு. உண்மையில் அது நடிப்பு அல்ல. குழந்தையின் இயல்பாக செயல்களை படம் பிடித்திருக்கக்கூடும். குழந்தை தான் படத்தின் உண்மையான ஹீரோ !

கதையின் கருவாக எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் நல்லது. ஆனால், பொழுதுபோக்கு ரீதியாக பார்க்கும்போது வெறுமையாக தோன்றுகிறது. சரி, ஒரு கலைப்படைப்பாக பயணிக்கிறதா என்றால் அதுவுமில்லை. குறைந்தபட்சம் உணர்வுப்பூர்வமாக இருந்திருக்கலாம். உச்சக்கட்ட காட்சியில் குழந்தையை காட்டும்போது மனம் பதறுகிறது என்றாலும், ஹீரோ ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகள் நம்முள் பெரிதாக தாக்கம் ஏற்படுத்த மறுக்கிறது. பாடல்கள் மிகவும் சுமார் ரகம். ஒரு பாடலில் உதித் நாராயனையெல்லாம் கூட்டி வந்து அலற விட்டிருக்கிறார்கள். பாடல் வரிகள் அர்த்தமுடன் கூடியதாக இருப்பது மட்டும் ஆறுதல்.

ஆ.கா.செ. பெற்றோர்களுக்கான பாடம், ஆணாதைக் குழந்தைகள் கான்செப்ட் பற்றியெல்லாம் பேசினால் கூட இளைஞர்களுடைய நடைமுறை வாழ்வியலுக்கான படிப்பினைகள் நிறைய இருப்பதாக உணர்கிறேன், அதுவும் வெவ்வேறு படிநிலைகளில் :-

        - இளைஞர்கள், மாணவர்கள் தங்களுடைய இணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது.
        - அவ்வாறு, அவசரப்பட்டு விடும் இளைஞர்கள் உடல்ரீதியான உறவில் எல்லை மீறக்கூடாது.
        - அவ்வாறு, எல்லை மீறும் பட்சத்தில் ஆணுறை அல்லது தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்.
        - அவ்வாறு, கையாளவில்லை என்றால் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு மருத்துவ ஆலோசனை பெற்று மாத்திரைகளின் உதவியோடு கருவினை கலைக்கலாம்.
        - அவ்வாறு, கலைக்காத சூழ்நிலையில் முறையான கருகலைப்பு முறையை நாடலாம். ஆனால் முன்பே திட்டமிட்டு திருமணமாகாதவர் என்பது வெளியில் தெரியாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
        - அவ்வாறு, செய்துக்கொள்ள முடியவில்லை என்றால் பெற்றோரிடம் சரணாகதி அடைந்து திருமணம் செய்துவைக்க வாதிடலாம்.
        - அவ்வாறு பேசி அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் ரெஜிஸ்டர் திருமணம் செய்யலாம் அல்லது கோர்ட்டு / போலீஸ் உதவியை நாடலாம்.
        - எல்லாவற்றிற்கும் மேலாக காதலில் ஈடுபடுவோர் ஒருவரை ஒருவர் சரிவர புரிந்துக்கொண்டு, தக்க சந்தர்ப்பங்களில் விட்டுக்கொடுத்து காதலை விட்டுக்கொடுக்காமல் வாழ வேண்டும்.

மொத்தத்தில் ஆதலால் காதல் செய்வீர் வளர் இளம் பருவத்தினருக்கான திரைப்படம் என்று சர்வநிச்சயமாக சொல்லலாம்.

தலைப்பு விஷயத்திற்கு வருவோம். படத்தில் இருவர் காதல் செய்வதாக சொல்கிறார்கள். ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள், படுக்கையில் புரளுகிறார்கள், உறவு கொள்கிறார்கள். பெண் கருவுருகிறாள். கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள். ஆக, அவர்கள் ஒருவரையொருவர் உண்மையாக காதலிக்கவில்லை. ஆதலால் காதல் செய்வீர் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment