Showing posts with label film. Show all posts
Showing posts with label film. Show all posts

10 March 2014

ஆப்ரா கா டாப்ரா !


Post Comment

3 March 2014

பிரபா ஒயின்ஷாப் – 03032014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

Such an eventful weekend...!

நீண்ட நாட்களுக்கு பிறகு மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தேன். என்னைப் பொறுத்தவரையில் மெரினா மகிழ்ச்சிக்கு பல வாயில்கள் கொண்ட ஒரு வீடு. கடலலையில் கால் நனைக்கலாம், மணலில் காலாற நடக்கலாம், மல்லாக்க படுத்துக்கொண்டு அண்டவெளியை வேடிக்கை பார்க்கலாம், சைட் அடிக்கலாம் அல்லது அமைதியாக ஏதேனும் ஒரு கல்லிருக்கையில் அமர்ந்து கொள்ளலாம். நான் கடைசி வாசலை தேர்ந்தெடுத்தேன். கடற்கரையில் காக்கைகள் அராஜகம் செய்கின்றன. எனக்கு சில அடிகள் தள்ளி ஒரு எளியவர் அமர்ந்து உணவு பொட்டலத்தை பிரித்தார். சரியாக பத்து நொடிகள் ஆகியிருக்கும், எங்கிருந்தோ பத்து, பன்னிரண்டு காக்கைகள் வந்து அவரை சூழ்ந்துகொண்டன. நானாக இருந்தால் சோத்துப்பொட்டலத்தை போட்டுவிட்டு ஓடியே போயிருப்பேன். அந்த மனிதருக்கு அது வழக்கம் போல. அவர் பாட்டுக்கு அசராமல் சாப்பிட்டு முடித்தார். அதுவுமில்லாமல் காக்கைகள் மிகத் தாழ்வாக பறக்கின்றன. என் தலைக்கு மிக மிக அருகில் சில காகங்கள் பறப்பதும், நான் பயந்துபோய் குனிந்துகொள்வதும், அப்புறம் யாராவது பார்த்திருப்பார்களோ என்று அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அசடு வழிவதாகவோ பொழுது போனது.

புகைப்படம்: தி ஹிந்து
காக்கைகள் என்றதும் நினைவுக்கு வருகிறது. எனக்கு சில மூடநம்பிக்கைகள் உள்ளன. ஆனால் எனக்கோ மற்றவர்களுக்கோ எந்த தொந்தரவும் தராதவை. சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஒருமுறை தலையில் முட்டினால் கொம்பு முளைத்துவிடும் என்று ஜெனிலியா நம்புவார். ஜெயம் ரவி நீ இதையெல்லாமா நம்புற...? என்று கேட்கும்போது நல்லா இருக்குல்ல என்று சிரித்தபடி பதிலளிப்பார் ஜெனிலியா. அதுபோல தான் எனக்கு சில நம்பிக்கைகள். விஷயம் இதுதான். தினமும் காலையில் எங்கள் வீட்டு வாசலில் ஒரு குறிப்பிட்ட காகம் வந்து கரைகிறது. உடனே தாத்தா வந்துவிட்டார் என்று அதற்கு கொஞ்சம் உணவுப்பொருள் வைப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த காக்காவும் சளைத்ததில்லை. உப்புமாவோ, வெண் பொங்கலோ வைத்தால் சீண்டாது. உணவை எடுத்துக்கொண்டு போய் வைக்க தாமதமானாலும் விடாமல் கரைந்து கொண்டிருக்கும். அதுவும் அசாதாரண குரலில். ஏதோ சுனாமி வரப்போகிறது என்று எச்சரிப்பது போல இருக்கும். என்றோ ஒருநாள் அந்த காக்கைக்கு உணவளித்து அது தினமும் வந்து பழகியிருக்கக்கூடும். அல்லது உண்மையாகவே மறைந்த முன்னோர்கள் காக்கைகளாக உரு பெறுகிறார்களோ என்னவோ...?

அப்படி அவர்கள் காக்கைகளாக உருப்பெறும் பட்சத்தில் அவர்களுடைய வாழ்நாள் எவ்வளவாக இருக்கும் என்று தேடினேன். காக்கைகளை நாம் ஆங்கிலத்தில் Crow என்று அழைத்தாலும் அவற்றிற்கு Raven என்ற பெயரும் உண்டு. காக்கைகளில் பல இனங்கள் இருக்கின்றன. பொதுவாக காக்கைகள் இருபது வயது வரை வாழ்கின்றன. அதாவது உருமாறும் நமது மூதாதையர்களின் வாழ்நாள் இருபது வருடங்கள். அதன்பிறகு அவர்கள் என்னவாக ஆகிறார்கள் என்று யாராவது கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அதிகபட்சமாக ஒரு காக்கை 59 வயது வரை வாழ்ந்திருப்பதாக நம்பப்படுகிறது. டாட்டா என்று பெயரிடப்பட்ட அந்த காக்கை ஒரு செல்லபிராணியாக வீடுகளில் வளர்ந்திருக்கிறது. ஒருவேளை அதனை அதிக கவனம் செலுத்தி வீட்டுச்சூழலில் வளர்த்தமையால் கூட அத்தனை வருடங்கள் வாழ்ந்திருக்கலாம். இந்த செய்தியை படித்தவுடன் எனக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. டாட்டாவை விட வேறு எந்த காக்கையும் அதிக ஆண்டுகள் வாழ்ந்ததில்லை என்று எப்படி சொல்ல முடியும். உலகில் உள்ள எல்லா காக்கைகளின் வயதையும் சென்சஸ் அதிகாரிகள் கணக்கெடுத்து வைத்திருக்கிறார்களா என்ன...?

சரி, காகங்கள் பற்றிய கரைதலை நிறுத்திக்கொள்வோம். நேற்று காலை ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. நண்பர் அருள் செல்வன் அவருடைய குறும்பட ஷூட்டிங்கை பார்ப்பதற்கு அழைத்திருந்தார். வெட்டி ப்ளாக்கர்ஸ் சிறுகதை போட்டியில் ரஜினியிசம் என்ற சிறுகதை நிறைய பேருடைய நினைவிலிருக்கும். அதை எழுதியவர் தான் இந்த அருள் செல்வன். ஏற்கனவே சொம்பு, மொக்கை பையன் சார் உட்பட ஐந்தாறு குறும்படங்களில் பணியாற்றியிருக்கிறார். எல்லாமே சராசரிக்கு மேல் என்று சொல்லக்கூடிய அளவில் இருந்தன. அவற்றில் சொம்பு என் விருப்பதிற்குகந்தது. எல்லா படங்களையும் மிகக் குறைந்த செலவில் தயாரிக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயம். தற்சமயம் H2SO4, பொண்ணு ஒன்னு கிடைக்கல என்று இரு குறும்படங்களை இயக்கிக்கொண்டிருக்கிறார். ஒரு உற்சாகமான அணியையும் தன்னகத்தே வைத்திருக்கிறார் அருள். பெங்களூரில் ஒரு உலக பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் கிருஷ்ணனுக்கு நடிப்பதில் பேரார்வம். அருளுக்காக பெங்களூரிலிருந்து சென்னை வந்து நடித்து கொடுத்துவிட்டு செல்கிறார். கிட்டத்தட்ட அருளின் எல்லா படங்களிலும் கிருஷ்ணன் நடித்திருக்கிறார். எந்த வேடம் கொடுத்தாலும் இயல்பாக நடித்துவிடுகிறார். இந்தமுறை அருள் செல்வன் குழுவினர் நாளைய இயக்குநரில் பங்குபெற இருப்பதாக ஒரு தகவல் காதில் விழுந்தது. அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்...!

பார்க்க: சொம்பு

அங்கிருந்து மதிய உணவிற்கு அண்ணா நகர் ஸீ ஷெல்ஸுக்கு அழைத்துச் சென்றார் அஞ்சாசிங்கம். ஏதோ மட்டன் ரான் பிரியாணி என்று சொல்லிக்கொண்டிருந்தார். நான் கூட ஆட்டுத்தொடையை அப்படியே கொண்டு வந்து வைப்பார்கள் போல என்று நம்பிக்கொண்டிருந்தேன். வண்ணமயமான உணவகம். ஏராளமான மேட்டுக்குடி யுவதிகளும், சீமாட்டிகளும் சில தடிமாடுகளுடன் வந்து செல்கிறார்கள். கைகளை கழுவிவிட்டு வருவதற்குள் சைட்டடிக்க தோதான இடத்தில் அமர்ந்துகொண்டார் சிவக்குமார். சரி, வளர்ற பிள்ளையாச்சே’ன்னு விட்டுத்தர வேண்டியதாக போய்விட்டது. கேபிள், கே.ஆர்.பி, பிரபு கிருஷ்ணா ஆகியோரை நீண்ட நாட்களுக்கு பின் சந்திக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆரூர் மூனாவும் வந்திருந்தார். பிரியாணி வெகு சுமார். பில்லுக்கு பணம் செலுத்திய அஞ்சாசிங்கத்துக்கு என்னுடைய அனுதாபங்கள்.

முந்தய பத்தி எங்கு போய் முடியும் என யூகித்திருப்பீர்கள். வேறென்ன, கழுதை கெட்டா குட்டிச்சுவரு. ஆனால் மது பழக்கத்தை நிறுத்தியபிறகு மற்றவர்கள் மது அருந்துவதை வேடிக்கை பார்ப்பது துயரமாக இருக்கிறது. அதிலும் ஒருத்தர் குரியர் நெப்போலியனுக்கு பக்க வாத்தியமாக வெண்ணிலா ஐஸ்க்ரீமை சுவைக்கிறார். என்ன கருமம்டா...! போனதற்கு உருப்படியாக ஆரூராரிடமிருந்து ராஜீவ்காந்தி சாலை, உப்புநாய்கள், மரபல்லி ஆகியவற்றை கொண்டு வந்திருக்கிறேன்.

சமீபத்தில் எழுதியது: தெகிடி

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 January 2014

பிரபா ஒயின்ஷாப் – 27012014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமாவில் முதன்முதலாக சயமீஸ் இரட்டையர்களை காட்டியது (நடிப்பில் தான்...!) மாற்றான் என்று சொல்லப்பட்டாலும், மாற்றான் படம் அறிவிக்கப்பட்டபிறகு படப்பிடிப்பை தொடங்கிய இருவன் என்ற லோ பட்ஜெட் படம் ரிலீஸில் முந்திக்கொண்டது. நிறைய பேருக்கு அப்படி ஓரு படம் வந்ததே தெரியாது என்பதால் மாற்றானின் புகழுக்கு பங்கமில்லை என்று நம்பலாம். உலக அளவில் முதன்முதலில் சயமீஸ் இரட்டையர்களை காட்டிய படம் எதுவென்று தெரியுமா...? விடை இறுதியில்...

*************************************************

ஃபர்ஸ்ட் லுக்கில் 'நவீன' இல்லை !
நவீன சரஸ்வதி சபதம் படம் பார்த்தேன். சிவாஜி காலத்திற்கு பிறகு அமைதியாக இருந்துவிட்ட சிவபெருமான் மீண்டுமொரு திருவிளையாடல் செய்கிறார். குடிபழக்க அடிமைகளான நால்வரை ஒரு தீவில் சிக்க வைக்கிறார். அவர்கள் தப்பிக்க சில வாய்ப்புகளையும் கொடுக்கிறார். தப்பித்தார்களா...? என்பது உச்சகாட்சி. நல்ல மனஉரு. அந்த சுவாரஸ்யத்தை திரையிலும் ஓரளவுக்கு காட்டியிருக்கிறார்கள். ஐ-பாடில் பாட்டு கேட்கும் சிவன், டெம்பிள் ரன் விளையாடும் முருகன், த்ரெட் மில்லில் ஓடும் விநாயகன் என்றெல்லாம் பக்தியை நவீன மயமாக்கி காமெடி செய்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து சுப்ரஜா ஸ்ரீதரன் ஒருவர் மட்டும்தான் ஹிந்து கடவுள்களை கிண்டலடித்ததற்காக ந.ச.ச படத்திற்கு  கண்டனம் தெரிவித்தார். சரி தொலையட்டும். அது என்னுடைய பிரச்சனையில்லை. நிவேதா தாமஸ் அம்மையாரை நாயகி என்று சொல்லிவிட்டு நான்கு ஆண்களையும் தீவையும் மட்டுமே முக்கால்வாசி படத்திற்கு காட்டியிருக்கிறார்கள். அதற்கு வேண்டுமானால் என்னுடைய கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

*************************************************

நேற்று மாலை அந்தமான் ராஸ் – நார்த் பே தீவுகளுக்கு இடையே ஒரு படகு விபத்து. அதில் பயணம் செய்த சுமார் 45 பேரில் 21 பேர் மரணம். மரணம் அடைந்த பெரும்பாலானவர்கள் காஞ்சிபுரத்து ஆட்கள். செய்தியைக் கேட்டதும் கொஞ்சம் பக்கென்று ஆகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நண்பர் சேதுராமன் அதே படகில் பயணம் செய்திருக்கக்கூடும். சென்ற வாரம் என்னுடைய பெற்றோர், தங்கை உட்பட உறவினர்கள் அதே பாதையில் பயணித்திருக்கிறார்கள். போர்ட் ப்ளேரிலிருந்து மூன்று தீவுகளுக்கு அழைத்துச் செல்லும் பேக்கேஜ் அது. சென்ற வாரமே, இரண்டு தீவுகளை பார்த்துவிட்டு மூன்றாவது தீவிற்கு செல்லும் வழியில் காற்று பலமாக வீசியதால் பயணம் ரத்து செய்யப்பட்டு திரும்பியிருக்கிறார்கள். நேற்றைக்கும் கூட அதே போல நிகழ்ந்திருக்கலாம். அந்த படகில் லைப் ஜாக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ளதை நானே பார்த்திருக்கிறேன், ஆனால் வெறும் சம்பிரதாயத்திற்காக. அதை எப்படி துரிதமாக எடுக்க வேண்டும் என்றோ, எப்படி பயன்படுத்த வேண்டும் என்றோ அவர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. வேறெப்போதும் போல அல்லாமல் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

*************************************************

மேலே குறிப்பிட்டதைப் போல ஒரு துயர செய்தியை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்தால் என்ன செய்வீர்கள்...? ஒரு சோக ஸ்மைலி. நாமும் சோகத்தில் பங்கெடுத்துக் கொள்கிறோம் என்பதற்கான அடையாளமாக அதனை கருதலாம். ஆனால் துயர செய்திகளை லைக் செய்வது பற்றி ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு தரப்பு இது அபத்தம் என்றும் மற்றொரு தரப்பு இதுவும் சோக ஸ்மைலி போல ஒரு பங்கெடுப்பு என்றும் சொல்கிறார்கள். ஃபேஸ்புக் மொழியாக தமிழை வைத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக இது அபத்தமாகத்தான் தெரியும். காரணம் – இன்னார் குறிப்பிட்ட துயர செய்தியை விரும்புகிறார் என்று ஃபேஸ்புக்கே தெரிவிக்கும். இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஃபேஸ்புக் ஒரு யோசனை வைத்திருக்கிறது. ஏற்கனவே உள்ள ‘ஃபீலிங்’ ஆப்ஷன் மூலம் சோகமாக இருக்கிறேன் என்று தெரிவு செய்தால் போதும் லைக் பட்டன் தற்காலிகமாக சிம்பதைஸ் பட்டனாக மாறிக்கொள்ளும். கூடிய விரைவில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரலாம்.

*************************************************

சென்ற வாரம் என்னுடைய ஒரு இடுகையில் நான் சிரிப்போ சிரிப்பு ஒலிப்பேழையில் வரும் ஜனகராஜ் மாதிரி என்று எழுதியிருந்தேன். அந்த சொற்றொடர் கண்டிப்பாக நிறைய பேருக்கு புரிந்திருக்கும். யாரேனும் அதனை குறிப்பிட்டு பின்னூட்டமிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ப்ச். நானே தொடர்கிறேன். எண்பதுகளில், தொண்ணூறுகளில் ஒலிப்பேழையில் பாடல்கள் கேட்கும் பழக்கம் உடையவர்களுக்கு நிச்சயம் சிரிப்போ சிரிப்பு என்ற ஒலிப்பேழையை பற்றி தெரிந்திருக்கும். என்னுடைய சிறிய வயதில் அந்த ஒலிப்பேழையை எத்தனையோ முறை திரும்பத் திரும்ப கேட்டிருக்கிறேன். அச்சமயத்தில் அதில் வரும் பெரும்பாலான நகைச்சுவைகள் எனக்கு மனப்பாடம். இப்போதும் நினைவிலிருப்பது (ஜனகராஜ் ஸ்வீட் ஸ்டால் நகைச்சுவை தவிர்த்து) என்று பார்த்தால் :-

- கிருபானந்த வாரியாரின் கிரிக்கெட் வர்ணனை
- 36 மொட்டைகளின் அட்டகாசங்கள் – பட ட்ரெயிலர்
- ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் கேட்கும் கலைஞர்
- மெஹபூபா பாடும் பாக்யராஜ், டி.ஆர், எம்.ஆர்.ராதா
- எலி பிடிப்பது எப்படி என்று சொல்லித்தரும் ஜனகராஜ்

படம்: அரவிந்த் ரஹ்மேனியாக்
சிரிப்போ சிரிப்பு ஒலிப்பேழையை பற்றி கூகுள் செய்துக்கொண்டிருந்த போது ஒரு ஆச்சரியம். அரவிந்த் ரஹ்மேனியாக் (ரஹ்மான் தீவிர விசிறியாம்) என்ற புண்ணியவான் சிரிப்போ சிரிப்பு ஆடியோ முழுவதையும் எம்.பி.3 கோப்பு வடிவில் தரவேற்றி வைத்திருக்கிறார். வேண்டுபவர்கள் கீழ்காணும் இணைப்பிற்கு சென்று அரவிந்திற்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு பதிவிறக்கிக் கொள்ளவும்.


*************************************************

வருடாவருடம் புத்தகக்காட்சி முடிந்ததும் புத்தகங்கள் படிப்பது தொடர்பாக ஒரு உற்சாகம் பிறக்கும். அந்த உற்சாக சூட்டோடு முடிந்தவரை வாங்கிய புத்தகங்களை படித்துவிடுவது புத்திசாலித்தனம். அப்படி சென்ற வாரத்தில் படித்த புத்தகங்கள் :-

புக் மார்க்ஸ் என்.சொக்கன்
தமிழா ! நீ ஓர் இந்துவா ? – மஞ்சை வசந்தன்
கி.பி.2087இல்... முனைவர் மலையமான்
திசை கண்டேன் வான் கண்டேன் சுஜாதா
குமரிக்கண்டமா ? சுமேரியமா ? – பா.பிரபாகரன்

வாசிப்பானுபவம் பற்றி தனித்தனியாக இல்லாமல் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு இடுகையாக வெளியிடுகிறேன்.

*************************************************

முதல் பத்தி கேள்விக்கு பதில் Freaks (1932). ஒரு சர்க்கஸ், கூத்து, வித்தை வகையறா குழு. அதன் அங்கத்தினர் பெரும்பாலும் உடல் குறைபாடு கொண்டவர்கள். அவர்கள் தவிர்த்து கிளியோபாட்ரா என்று ஒருத்தி. கிளியோபாட்ரா என்று சொல்லிவிட்டதால் அவளுடைய அழகு எப்படி என்று சொல்லத்தேவையில்லை. அவளை ஒரு குள்ள மனிதன் விரும்புகிறான். அவனுக்கு நிறைய சொத்து இருப்பதால் கிளியோபாட்ராவும் அவனை காதலிப்பது போல நடித்து திருமணம் செய்துகொள்கிறாள். அவர்களுடைய திருமண வரவேற்பில் எல்லா ‘ஃப்ரீக்ஸும்’ ஆடிப்பாட கிளியோபாட்ரா கோபப்பட்டு அவர்களை அவமதிக்கிறாள். அதன்பிறகு ஃப்ரீக்ஸ் அனைவரும் சேர்ந்து திட்டமிட்டு கிளியோபாட்ராவின் உடல் பாகங்களை சிதைத்து அவளை மனிதத்தலை கொண்ட வாத்தாக மாற்றிவிடுகிறார்கள். பொழுதுபோக்குக்காக மக்கள் அவளை வேடிக்கை பார்ப்பதாக படம் நிறைவடைகிறது.

படம்: Gabby Voltron
இத்திரைப்படத்தில் நிஜத்திலேயே சயமீஸ் இரட்டையர்களான டெய்சி & வைல்ட் ஹில்டன் நடித்திருக்கிறார்கள். கதைப்படி வைலட்டுக்கு மட்டும் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வைலட்டுடைய வருங்கால கணவன் அவளுக்கு முத்தமிடுகிறாள், அதனை டெய்சி உணருவதாக நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டுள்ளது ஒரு காட்சி.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 November 2013

பிரபா ஒயின்ஷாப் – 18112013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

படித்த புத்தகம் – டாக்டர் பிலோ. இருதயநாத் எழுதிய கேரள ஆதிவாசிகள். படிப்பதற்கு கொஞ்சம் அசுவாரஸ்யமாக இருந்தாலும் ஆதிவாசிகளின் பண்பாடு, சடங்குகள் பற்றி நிறைய தகவல்களை உள்ளடக்கிய புத்தகம். செருமர்கள், மலைப் பணிக்கர்கள், நாயாடிகள் உள்ளிட்ட வெவ்வேறு ஆதிவாசிகள் குழுவினரைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இன்னும் நிறைய டீடெயிலிங், சுவையான எழுத்து இருந்திருக்கலாம். எனக்கு என்னவென்றால் புத்தகத்தை விட அதன் ஆசிரியர் இருதயநாத் பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துவிட்டது. மனிதர் சைக்கிளிலேயே இந்தியா முழுவதும் சுற்றி வந்திருக்கிறாராம். சைக்கிளிலேயே இரவு உறங்குவதற்கு தகுந்தபடி ஒரு செட்டப் வைத்திருப்பாராம். ஆசிரியரின் பிற புத்தகங்களையும் படித்து முடித்தபிறகு, அவரைப் பற்றிய தகவல்களை சேகரித்து பதிவிட வேண்டும். கேரள ஆதிவாசிகள் உள்ளிட்ட ஆசிரியரின் புத்தகங்களை வாங்குவதற்கு.

இப்பொழுது கேரள ஆதிவாசிகள் புத்தகத்திலிருந்து சில வரிகள் :- நாயாடிகளுக்குள் விசித்திரமான ஒரு சுயம்வரம் நடக்கிறது. ஒரு புதிய குடிசை கட்டி அதில் சுயம்வரப் பெண்ணை தனியே வைப்பார்கள். பெண்ணின் தந்தையோ உறவினர்களில் ஒருவனோ குடிசைக்கருகில் அமர்ந்து மேளம் அடித்துப் பாட்டு பாடுவான். மணமாகாத பல வாலிபர்கள் ஆளுக்கு ஒரு குச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு உடனே வந்து சேருவார்கள். குடிசையை சுற்றி ஆடிப்பாடுவார்கள். பின்னர் எல்லா வாலிபர்களும் தங்கள் கைக்குச்சியை குடிசை மீது சொருகுவார்கள். குடிசைக்குள்ளே இருக்கும் பெண் தன் குலதெய்வத்தை எண்ணியபடி, குச்சிகளுள் ஒன்றை இழுத்துக்கொள்ளுவாள். குச்சியுடன் குடிசையிலிருந்து வெளியே வருவாள். குச்சி யாருடையதோ அந்த வாலிபனையே அவள் மணந்துக்கொள்ள வேண்டும்.

மற்றொரு புத்தகமும் படிக்கக் கிடைத்தது. எனினும் அதன் ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க அது தனிப்பதிவாக எழுதப்படும். புத்தகத்தின் பெயர் கோவை நேரம் !

உன்னோடு ஒரு நாள் என்றொரு திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து, வந்த சுவடே தெரியாமல் ஓடிப்போனது. அண்ணாச்சி கூட அத்திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதவில்லை என்று நினைக்கிறேன். இணையத்தில் பதிவிறக்கக் கிடைத்ததாலும், க்ரைம் த்ரில்லர் என்று சொல்லப்பட்டதாலும் பார்த்தேன். ஒப்பீட்டளவில் நன்றாகவே இருந்தது. ஹீரோ, அவனுடைய மனைவி, நண்பன் மூவர் தான் பிரதான பாத்திரங்கள். ஹீரோவின் மனைவிக்கும் நண்பருக்கும் தொடர்பு. அது ஹீரோவிற்கு தெரிந்துவிடுகிறது. ஒருநாள் நண்பனும் மனைவியும் ஹோட்டல் அறையில் இருக்க, ஹீரோ வலியச் சென்று அவர்களுக்கு எதிர் அறையை பிடித்து லென்ஸ் வழியாக பார்த்துக்கொண்டே காத்திருக்கிறார். எதிர் அறையின் கதவு எப்போது திறந்தாலும் தன்னிடமுள்ள துப்பாக்கியை வைத்து சுட்டுவிட வேண்டுமென்பது திட்டம். மனைவிக்கும் நண்பருக்கும் விஷயம் தெரிந்து... என்ன நடந்தது என்று நேரமிருந்தால் பதிவிறக்கி பார்த்துக்கொள்ளவும். பதிவிறக்க லிங்க். இயக்குநர் துரை கார்த்திகேயன் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு விபத்தில் பலியாகிவிட்டார் என்பது துயரம். லோ பட்ஜெட் படம் தான் என்றாலும் அது அவ்வளவாக தெரியாதபடி திறம்பட உழைத்திருக்கிறார்.

நேற்றைய தினமணி கதிரின் புதிய வார்ப்புகள் என்னையும் சக பதிவர்கள் சிலரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ‘சக பதிவர்கள்’ என்ற சொல்லுக்காக யாராவது அடிக்க வந்தாலும் வரலாம். தினமணி அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்த தோழன் மபா அவர்களுக்கு நன்றிகள். மபாவுக்கு குறும்பு ஜாஸ்தியாக இருக்கும் போலிருக்கிறது. பாராட்டுவது போலவே நன்றாகவே ஊமைக்குத்து விடுகிறார். என்னைப் பற்றி ஃபிளாசபியில் பிஎச்டி வாங்கியவர் போல் எழுதக்கூடியவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதுபோல, வா.மணிகண்டனை ஜல்லியடிக்காமல் எழுதக்கூடிய மிகச் சிலரில் ஒருவர் என்றும், சுரேஷ் கண்ணனை பிற்போக்குத்தனமான முற்போக்குவாதிகளை ஓட ஓட விரட்டக்கூடிய துணிச்சல்காரர் என்றும் எழுதியிருக்கிறார். நக்கலுய்யா உனக்கு ! இப்படியே இதுபோன்ற அறிமுகங்களிலேயே திருப்தி அடைந்துவிடாமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். பத்திரிகையில் என்னுடைய படைப்பு வெளியாக வேண்டும் என்பதை குறுகிய கால லட்சியமாக கொள்கிறேன். புதிய வார்ப்புகள் பகுதியை வாசிக்க.

வில்லா பார்த்தபிறகு அதன் இயக்குநரின் சில குறும்படங்களை தேடி, பார்த்தேன். Coffee பிடித்திருந்தது. காபியின் சிறப்பு என்னவென்றால் பிரதான கதாபாத்திரம் Kopi Luwak பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? என்று கேட்கிறது. ஆனால் அதுபற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. நமக்கு விருப்பமிருந்தால் நாமாகவே தேடித் தெரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான். ஒரு விளம்பரம்.

சமீபத்தில் அதீத் ஈர்ப்பை ஏற்படுத்திய பாடல் இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்திலிருந்து. விஜய் சேதுபதியின் உடல்மொழி அட்டகாசம். அப்படியே வடசென்னை வாலிபர்களை பிரதிபலிக்கிறது. கூடவே கானா பாலா குரல், ராஜூ சுந்தரம் நடனம், இடையிடையே வரும் ரைம்ஸ் என்று அத்தனையும் சூப்பர் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 March 2013

பரதேசி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இனி இயக்குனர் பாலா படங்களை பார்ப்பதில்லை என்று முடிவு செய்திருந்தவர்களில் நானும் ஒருவன். விமர்சகர்களின் ஏகோபித்த ஓகோபித்த ஆதரவு தான் என்னை திரையரங்கிற்கு நகர்த்திச் சென்றது. எப்போதுமே ஒரு படத்தை வெளிவந்ததும் சுடச்சுட பார்ப்பதற்கும், நான்கைந்து நாட்கள் ஆறப்போட்டு அடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சஸ்பென்ஸோடு படம் பார்க்கும்போது அது ஏற்படுத்தும் தாக்கம், விமர்சனங்களை படித்துவிட்டு பார்க்கும்போது கிடைப்பதில்லை.

பரதேசியைப் பற்றி ஏற்கனவே பலதரப்பட்ட விமர்சனங்கள் வெளிவந்துவிட்டன. புதிதாக சொல்வதற்கு ஏதுமில்லை என்று நினைக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு நான் Grotesque என்கிற படத்தை பார்த்தேன். திரைப்பட வரலாற்றில் அதீத வன்முறை கொண்ட பத்து திரைப்படங்களை பட்டியலிட்டால் Grotesque கண்டிப்பாக இடம்பெறும். முதன்முதலில் அதனை பார்த்தபோது அது பிடித்ததா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் கடுமையான தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது. இன்றளவும் அந்த படம் என்னை அடிக்கடி மன உளைச்சலிலிருந்து விடுவிக்கிறது. உங்கள் முகத்தில் தொடர்ந்து கரியை பூசிக்கொண்டே இருக்கும் இருபெரும் அரசியல்வாதிகளைப் பற்றி நினைத்தாலே உங்களுக்கு காறி உமிழ தோன்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். எனினும் உங்களுடைய கோபம் அவரை துளியளவு கூட பாதிக்கப்போவதில்லை. போன்ற சமயங்களில் Grotesque படத்தில் துன்புறுத்தப்படும் மனிதர்களாக அந்த இருபெரும் அரசியல்வாதிகளை நினைத்துக்கொண்டால் ஒருவித மனநிம்மதி கிடைப்பதை உணருவீர்கள். வன்முறை, செக்ஸ் என்று நம்முடைய உணர்ச்சிகளுக்கு கட்டாயம் ஒரு வடிகால் தேவை. இல்லையென்றால் ஒரு கட்டத்தில் அது வெடித்துச் சிதறிவிடும். Noctural emission கேள்விப்பட்டதில்லையா ? அதுபோல பாலாவுடைய ஆழ்மன வன்முறை உணர்வுகளுக்கு அவருடைய படங்கள் வடிகாலாக இருக்கலாம்.

கார்த்திக்கு ஒரு பருத்தி வீரன் கிடைத்தது போல, அதர்வாவிற்கு பரதேசி கிடைத்திருக்கிறது. முதல் படமாக கிடைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதர்வாவின் நடிப்பு ஒன்றும் உறுத்தலாக இல்லையென்றாலும், சாலூர் ராசா என்கிற அந்த வேடத்தில் கச்சிதமாக நடிப்பதற்கு தமிழ் சினிமாவில் அதர்வாவை விட திறமைசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

வேதிகாவும், தன்ஷிகாவும் நாயகிகள். தன்னுடைய பட நாயகிகளை அவலட்சணமாக காட்சிப்படுத்த முனையும் திருவாளர் பாலாவிற்கு இந்தமுறை தோல்வியே கிடைத்திருக்கிறது. குறிப்பாக தன்ஷிகா, ஒரு பத்து லோடு கரியை இறக்கி தன்ஷியின் முகத்தில் தேய்த்தால் கூட அவர் அழகாகவே இருப்பார். 

கவிஞர் விக்கிரமாதித்யனும், அதர்வாவின் பாட்டியும் மனதைவிட்டு அகல மறுக்கின்றனர். கிராமத்தில் வசிப்பவர்கள், நிச்சயமாக விக்கிரமாதித்தன் கதாபாத்திரம் போன்ற ஒருவரையாவது தங்கள் வாழ்நாளில் சந்தித்திருப்பார்கள். 

ஆமாம், பரதேசியில் பவர்ஸ்டார் நடிப்பதாக இருந்ததே. இப்படிப்பட்ட கதைக்கு எப்படி பவர் பொருந்துவார் என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் வருகிற மருத்துவர் பரிசுத்தம் - அதுதான் பவருக்கு ஒதுக்கப்பட்ட வேடம். இப்போது நடன இயக்குனர் சிவசங்கர் நடிப்பில் வெளிவந்திருக்கிறது. அந்த வேடத்தில் மட்டும் பவர் ஸ்டார் நடித்திருந்தால், பரதேசி பஞ்சராகியிருக்கும்.

அவத்த பையா பாடலும் அதன் பெண்குரலும் அநியாயத்திற்கு வசீகரிக்கின்றன. மற்றபடி இசையைக் காட்டிலும் கேமரா அதிக கவன ஈர்ப்பு செய்கிறது. முதல்காட்சியில் சாலூர் கிராமத்திற்குள் நம்மை அழைத்துச் செல்வதிலிருந்தே கேமராவின் ஆளுமை துவங்கிவிடுகிறது. 

வழக்கமாக பாலா படங்களில் காணப்படும் சில விஷயங்கள் பரதேசியில் இல்லாதது அதிர்ச்சியான ஆறுதல். போலீஸ், நீதிபதிகளை கிண்டலடிக்கவில்லை; திருநங்கை அல்லது போன்ற கதாபாத்திரங்கள் இல்லை; உச்சக்கட்ட காட்சியில் நாயகன் பொங்கி எழுந்து வன்முறையில் இறங்கவில்லை. இப்படி நிறைய இல்லைகள்.

பரதேசியிலிருந்து இருவேறு தரப்பினரும் புரிந்துக்கொள்ள விஷயங்கள் இருக்கிறது. நமக்கு கீழே பணிபுரிபவர்களை அன்பாக நடத்தவேண்டும், அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதே சமயம், நம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மேல்மட்டத்திற்கு நேர்மையான உழைப்பை தரவேண்டும். அதையெல்லாம் விட முக்கியமாக சுதந்திரத்தின் மேன்மையை சமகால இளைஞர்களுக்கு உணர்த்தியிருக்கிறது பரதேசி.

நமக்கு ஃபீலிங் படமெல்லாம் பிடிக்காது என்பவர்களுக்காக சொல்கிறேன் - பரதேசி ஒரு நல்ல ஃபீல் குட் திரைப்படம். நல்ல நிறுவனத்தில் வேலை செய்து, கைநிறைய ஊதியம் வாங்கினாலும் கூட என்ன வாழ்க்கைடா இது ? என்கிற ரீதியில் புலம்புபவர்கள் பரதேசியை பாருங்கள். உங்களுடைய நிலையை மனமகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள பழகிவிடுவீர்கள்...!

என்னையும் சேர்த்து, பரதேசியின் மீது மட்டரகமான எதிர்பார்ப்பை வைத்திருந்த அனைவருடைய முகத்திலும் கரியை பூசிவிட்டார் பாலா...!

தொடர்புடைய சுட்டி: Grotesque

அடுத்து வருவது: அந்தமான் - போர்ட் ப்ளேர் நகருலா

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment