Showing posts with label Ajith. Show all posts
Showing posts with label Ajith. Show all posts

6 February 2015

என்னை அறிந்தால்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

-- SPOILER ALERT --

பரமசிவன் காலத்திலிருந்து அஜித்தின் எல்லா படங்களையும் FDFS பார்த்துவிடும் பரம விசிறி. இந்தமுறை கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டதால் டிக்கெட் கிடைக்கவில்லை. அங்கே, இங்கேயென்று அலைந்து கடைசியில் படம் பார்க்க முடியாது என்று கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்ட நிலையில் ஒரு ஆபத்பாந்தவர் எக்ஸ்ட்ரா டிக்கெட்டோடு வந்தார். அவருக்கு நன்றி கூறி துவங்குகிறேன்.

கதையை பொறுத்தவரையில் ஐ படத்திற்கு எழுதியதையே டிட்டோ போட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே இணையத்தில் வெளியான அதே கதை தான். பழைய கதையும் கூட. அதனாலேயே சஸ்பென்ஸ், ட்விஸ்ட் போன்ற பெரிய சுவாரஸ்யங்கள் இல்லை.

சமீப படங்களில் கூலர்ஸ், நடை, பஞ்ச் வசனம் என்றே பார்த்துப் பழகிய அஜித் சற்றே (சற்று தான்) வேறுபட்டிருக்கிறார். இன்னொரு பெரிய ஆறுதல் துணை நடிகர்கள் அஜித்துக்கு முகஸ்துதி போடும் காட்சிகள் வைக்காதது. அஜித் – அனிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் பது மலர்ச்சியாக இருக்கிறது.

அருண் விஜய்யின் பாத்திர படைப்பில் இன்னொரு டேனியல் பாலாஜியை பார்க்க முடிகிறது. பழைய படங்களில் எல்லாம் வில்லன் நடிகர்கள் திரையில் தோன்றினாலே ரசிகர்கள் நான்கைந்து தலைமுறைகளை தோண்டி எடுத்து வசைமொழி பேசுவார்கள். வில்லன் நடிகர்களை பொறுத்தவரையில் வசை தான் பாராட்டு என்று கொள்ளலாம். அந்த வகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களிடம் கேவலமாக திட்டு வாங்கியிருக்கிறார் அருண் விஜய். அஜித்தை மிஞ்சியிருக்கிறார் என்கிற காழ்ப்புணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம். வே டூ கோ அருண் விஜய் !

பேரிளம்பெண் என்ற பதத்திற்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய இரு கதாநாயகிகள். கெளதம் மேனனின் கேமரா வழியாக பார்க்கும்போது மட்டும் ஒரு சுற்று கூடுதல் அழகியாக தெரிகிறார் த்ரிஷா. அனுஷ்கா அந்தோ பரிதாபம். சிகையலங்காரம் வேறு சகிக்கவில்லை. 

பேபி அனிகா செம க்யூட். பாந்தமாக முகத்தை வைத்திருப்பது ஒருவித அழகு என்றால், சிரிக்கும்போது தெரியும் தெத்துப்பல் அதைவிட அழகு. அனிகாவிடம் அனுஷ்காவை பார்த்துக்கொள்ளுமாறு ஒப்படைக்கும்போது “Of course, அப்பா” என்று ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறார். அது க்யூட்நெஸ்ஸின் உச்சம்.

ஏறத்தாழ ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டை போன்ற வேடத்தில் நடித்திருக்கும் விவேக்கை பார்த்தால் பாவமாக இருக்கிறது. சில காட்சிகளில் மட்டும் தலை காட்டினாலும் நாசரின் வேடம் நேர்த்தியாக இருந்தது. இன்னும் கொஞ்சம் வரமாட்டாரா என்று ஏங்க வைத்துவிட்டு இறக்கிறார். பார்வதி நாயர் வேடத்தில் வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம்; நடிகைகளுக்கா பஞ்சம்.

திரைக்கதை சூத்திரங்களில் முக்கியமானதாக ‘SHOW, DON’T TELL’ என்ற விதியை சொல்வார்கள். ஆனால் இயக்குநர் ஆங்கிலத்தில் பேசிவிட்டு பின்பு அதையே தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லும் மேஜர் சுந்தர்ராஜன் போல இரண்டையும் செய்கிறார். செய்கிறார் என்றால் செய்துகொண்டே இருக்கிறார். இது சில இடங்களில் ஒரு நாவல் படிப்பது போன்ற உணர்வை தந்தாலும்கூட ஒரு கட்டத்திற்கு மேல் சலித்துவிடுகிறது.

அதாரு உதாரு, மாயா பஸார் பாடல்கள் ரிப்பீட் மோட் வகையறா. வசனங்கள் ஆங்காங்கே பளிச்சிடும் மின்னல்கள். வடிவேலு, விவேக் பேசிய நகைச்சுவை வசனங்களை சீரியஸான காட்சிகளில் அஜித் பேசுகிறார். அப்படியும் நமக்கு வேடிக்கையாக தோன்றா வகையில் காட்சியாக்கியிருக்கின்றனர்.

அஜித், த்ரிஷா, அனிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் மென்மையாக கையாளப்பட்டுள்ளன. பெண்கள் விரும்பக்கூடும். மற்றவர்களுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது.

இரண்டாம் பாதியில் அஜித்துக்கும் அருண் விஜய்க்கும் இடையே நடைபெறும் அந்த சேஸ், நிஜமாகவே நகம் கடிக்க வைக்கும் சிலிர்ப்பான நிமிடங்கள். திரைக்கதைக்காக மட்டும் சொல்லவில்லை. வேறு யாருடைய படமாக இருந்தாலும் எப்படியும் சுபம் தான் போடுவார்கள் என்று உறுதியாக நம்பலாம். ஈவு இரக்கமில்லாமல் மாயாவையே சாகடித்த இயக்குநர் என்பதாலும் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்கிறது.

வழக்கமாக சினிமா ரசிகர்கள் ஏதோ ஒன்று தெறிக்குது, தெறிக்குது என்பார்களே அது இந்த படத்தில் குறைவாகவே தெறித்திருக்கிறது. சரி, critically acclaimed படமாக இருக்குமா என்றால் அதுவும் கிடையாது. படத்தில் வரும் ஒரு வசனத்தின் பாணியிலேயே சொல்வதென்றால், ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு இந்தப்பக்கம் மாஸ், அந்தப்பக்கம் க்ளாஸ். இரண்டிற்கும் இடையே என்னை அறிந்தால்.

அஜித் தனக்கு விதிக்கப்பட்ட வட்டத்திற்குள் இருந்து கொஞ்சூண்டு எட்டிப் பார்த்திருக்கிறார். அவர் அதனை விட்டு முழுமையாக வெளிவர வேண்டும். ஆனால் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதை நினைக்கும்போது அவர் மறுபடியும் அதே வட்டத்திற்குள்ளேயே சென்று அடைந்துகொள்வார் என்றே உறுதியாகக் தோன்றுகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 January 2014

அஜித்தும் காஜலும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் வீரம் படத்திற்கு டிக்கெட் எடுக்கவில்லை. கிடைக்கவில்லை என்று சொல்லமுடியாது. பெருமுயற்சி செய்திருந்தால் எடுத்திருந்திருக்கலாம். கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டேன். இதற்கிடையே நண்பர் ஒருவர் அவருடைய ஜில்லாவிற்கு அழைத்து நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன். ஆக, புது வருடத்தின் முதல் சினிமா கன்னுக்குட்டியினுடையது...! அஜித் படம்தான் பார்க்க முடியவில்லை அவரைப் பற்றி எழுதவாவது செய்யலாமே என்பதால் ஒரு டைம்பாஸ் போஸ்ட்.

எதுக்கு மாமா வளவள'ன்னு ?  புதுவருஷத்துல என் படத்தை தான் மொதல்ல பாக்கணும்'ங்குற ஒன் ஆசையை சொல்லிடேன்
முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தாலும் சக முன்னணிகளோடு ஒப்பிடும்போது அஜித்துக்கு ஹீரோயின்கள் அமைவதில் அப்படியொன்றும் நற்பேறு கிடையாது பார்த்தீர்களா...? அவருடைய படங்கள் வெளிவரும் சமயம் அந்த படங்களின் நாயகி புகழின் உச்சியிலிருப்பது மிகவும் அரிதாகவே நடந்திருக்கிறது. ஆமாம், சிம்ரன், ஜோதிகா, அசின், த்ரிஷா, நயன்தாரா போன்ற பிரபல நடிகைகளுடன் அஜித் நடித்திருக்கிறார். இருப்பினும் சில விஷயங்களை வைத்து அஜித்துக்கு ஹீரோயின் ராசி இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிடலாம்.

1. சமகால ஆளுமைகளுடன் நடிக்காதது
விஜய்யை பாருங்கள். துப்பாக்கி, ஜில்லா என இரண்டு படங்களுடன் காஜலுடன் ஜோடி போட்டுவிட்டார். சூர்யா மாற்றானில். நேற்று வந்த கார்த்தி கூட இரண்டு படங்களில் நடித்தாகி விட்டது. ஆனால் அஜித்துக்கு இன்னமும் அந்த பாக்கியம் கிட்டவில்லை. போலவே விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி என ஆர்யா வரை ரவுண்டு கட்டிவிட்ட அனுஷ்கா இன்னும் அஜித்துடன் நடிக்கவில்லை. அது புறமிருக்க அமலா பால், நஸ்ரியா, சமந்தா என புதிதாக களம் இறங்கியவர்களுடனும் ஜோடி சேர்ந்த பாடில்லை.

2. இறந்தகால ஆளுமைகளுடன் நடிப்பது
உதாரணத்திற்கு வீரத்தில் நடித்திருக்கும் தமன்னாவையே எடுத்துக் கொள்ளலாம். பையா, சுறா படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் தமன்னா உச்சத்தில் இருந்தார். அப்போதெல்லாம் ஜோடி சேர முடியாத தமன்னா இப்போது காலம் கடந்து சேர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் நயன்தாரா, மங்காத்தாவில் த்ரிஷா போன்றவர்களை இந்த பட்டியலில் சேர்க்கலாம். சினேகா என்றொரு நடிகை இருந்தார். அவர் ஜனாவில் நடிக்க ஒப்பந்தமானபோது பிரபலமாக இருந்தார். அஜித் – சினேகா ஜோடி அபாரமாக இருக்குமென ரசிகர்கள் காத்திருந்தார்கள், வருடக்கணக்கில். இறுதியில் ஜனா வெளிவந்தபோது சினேகாவின் புகழ் கிட்டத்தட்ட சரிந்து முடிந்திருந்தது.

3. சுமார் மூஞ்சிகளுடன் நடிப்பது
இது கொஞ்சம் பெரிய பட்டியல். தீனாவில் லைலா, ஆஞ்சநேயாவில் மீரா ஜாஸ்மின், அட்டகாசத்தில் பூஜா, திருப்பதியில் சதா, அசலில் பாவனா, சமீரா ரெட்டி என பெரிய பிரபலங்கள் இல்லையென்றாலும் சந்தடி சாக்கில் அஜித்துடன் நடித்துவிட்டார்கள். குறிப்பாக அசல், திருப்பதி படங்களை எல்லாம் நான் சைவ உணவகத்தில் வேண்டா வெறுப்பாக சாப்பிடும் மனோபாவத்துடனேயே பார்த்தேன்.

4. அதிகம் அறியப்படாதவர்களுடன் நடிப்பது
இதுவும் ஏறத்தாழ முந்தைய லிஸ்டை போன்றது தான். பில்லா 2ல் பார்வதி ஓமனக்குட்டன், வில்லனில் கிரண், சிட்டிசனில் வசுந்தரா தாஸ், ரெட்டில் ஒரு மொக்கை மூஞ்சி போன்றவர்கள் இந்த பட்டியலின் கீழ் வருகிறார்கள். ப்ரியா கில் என்பவர் தமிழில் நடித்தது ஒரேயொரு படம் அதுவும் அஜித்துடன் என்றால் அவருடைய நற்பேறை பார்த்துக் கொள்ளுங்கள். பார்வதி ஓமனக்குட்டன் ஒலக அழகி என்றாலும் நம்மூரை பொறுத்தவரையில் புதுமுகம் தானே.

5. கிழவிகளுடன் நடித்தது
இரண்டாவது பட்டியலில் உள்ள த்ரிஷா, நயன்தாரா தவிர்த்து மீனா, தேவயானி, தபு போன்ற ஒப்பீட்டளவில் அஜித்துக்கு அக்கா போல தோற்றமளிக்கக் கூடிய நடிகைகளுடன் நடித்திருக்கிறார். ஆனந்த பூங்காற்றே படத்தில் நடிக்கும்போதே மீனா வயதில் அதிகம் போல தோற்றமளித்தார். அதன்பிறகு மூன்றாண்டுகள் கழித்து வெளிவந்த வில்லன் படத்திலும் மீனா அஜித்துடன் ஆட்டம் போட்டால் ஒரு ரசிகனுக்கு எப்படியிருக்கும்.

என்னது நான் தலைக்கு ஜோடியா ? பிரபா ஒன் வாய்க்கு சக்கரை போடணும்டா !
எதற்காக இப்படி சமந்தா சம்பந்தமில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறேன் என்று கேட்காதீர்கள். எனக்கு என்னுடைய கட்டை வேகும் முன் அஜித்தும், காஜலும் ஜோடியாக ஆடுவதை பார்க்க வேண்டும். அவ்வளவுதான்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 November 2013

பிரபா ஒயின்ஷாப் – 11112013


அன்புள்ள வலைப்பூவிற்கு,  

ஆரம்பம் படத்தினை மீண்டுமொரு முறை திரையரங்கில் பார்த்து தன்யனானேன். சில புதிய விஷயங்களை கவனிக்க முடிந்தது. ‘குட்கா முகேஷ்’ செய்திப்படம் காட்டவில்லை. அதாவது படத்தில் புகை, மது காட்சிகள் இல்லை. படக்குழுவினருக்கு சல்யூட். ஆனால், இஸ்திரி பொட்டி காட்சி உட்பட சில ராவான வன்முறைக் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். சுமா ரங்கநாத் சுமார் தான் என்றாலும் ஆளை பார்த்தால் நாற்பது வயது போலவா தெரிகிறது. ம்ம்ம். தீவிரவாத இயக்கத்தின் பெயர் ‘லயன்ஸ் லிபரேஷன்’. வேறொரு இயக்கத்தின் பெயரை நினைவூட்டுகிறது அல்லவா ? விஷ்ணுவர்தன், உமக்கு எதற்கு இந்த குறிக்கொழுப்பு வேலை ? முடியாது’ன்னு சொல்ல முடியாது பாடல் அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. எனக்கென்னவோ இரண்டாம் பாதியை விட முதல் பாதி பிடித்திருக்கிறது.

சுஜாதாவின் ஜே.கே படித்தேன். நாவலின் வயது 43. ஜே.கே ஒரு பைலட். அரசு சார்பாக விவசாய நிலங்களுக்கு விமானம் மூலம் மருந்து அடிப்பவன். ஒரு குழு அவனிடம் பணம் கொடுத்து ஏதோ ஆராய்ச்சி என்று சொல்லி ஒரு பெட்டியை விமானத்தில் எடுத்துவரச் சொல்கிறது. அது போதைப் பொருள் என்று அறியாமல் செய்கிறான். கைது செய்யப்படுகிறான். வி.ஐ.பி ஒருவரின் தலையீட்டால் விடுவிக்கப்படுகிறான். காவல்துறையின் பிடியிலிருக்கும் வி.ஐ.பியின் மகளை மீட்டு வரும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. மீட்டு வருகிறான், ஒப்படைப்பதற்குள் தப்பிவிடுகிறாள். அவளை துப்பறிய போக, அவளைப் பற்றியும் அவளுடைய குழுவின் திட்டமும் தெரிய வருகிறது. அது என்ன திட்டம் ? நிறைவேறியதா என்பது க்ளைமேக்ஸ். சுஜாதா ஒரு தீர்க்கதரிசி என்பது ஜே.கே நாவலின் மூலம் நிரூபணமாகிறது. படிக்கும்போது சத்யராஜ் நடித்த ஏர்போர்ட் என்ற திரைப்படம் நினைவுக்கு வந்தது. அடுத்ததாக படிக்க சில சுஜாதா நாவல்கள் வரிசையில் இருந்தாலும், ஒரு மாறுதலுக்காக பழம்பெரும் மனிதவள ஆய்வாளர் பிலோ.இருதயநாத் எழுதிய ‘கேரள ஆதிவாசிகள்’ படிக்க இருக்கிறேன்.

தீபாவளிக்கு முந்தய நாள் மாலையில் நண்பர் ஒருவர் போனில் அழைத்து ‘தல தீபாவளி’ வாழ்த்து சொன்னார். அவரும் நானும் சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்திருக்கிறோம். அப்போதிலிருந்தே என்னுடைய பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து வருடாவருடம் வாழ்த்துவார். எனக்கு ஒரு மாதிரியாக ‘சங்கடமாக’ இருக்கும். எனக்கு மட்டுமல்ல யாருடனாவது ஓரிரு வாரங்கள் மட்டும் பழகியிருந்தால் கூட அவர்களுடைய பிறந்தநாளை குறித்து வைத்து வாழ்த்து சொல்லும் பழக்கம் அவருக்கு உண்டு. தற்போது அவருடைய நண்பர்கள் வட்டத்தில் யாருக்கெல்லாம் ‘தல தீபாவளி’ என்று லிஸ்ட் எடுத்து ஒவ்வொருவராக வாழ்த்து சொல்லிவருவதாக கூறினார். அவரை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. எனக்கெல்லாம் என் குடும்பத்தினரை தவிர வேறு யாருடைய பிறந்தநாளும் தெரியாது. அதுவே கூட சமயங்களில் ஜூன் பதினான்கா, ஜூலை பதினான்கா ? என்று குழம்பும். இது ஒரு சின்ன விஷயம் தான் என்றாலும் நண்பருக்கு அவருடைய வாழ்வில் மேன்மையடைய உதவும். உதவியிருக்கும்.

சுட்ட கதை படத்தை வெளியான இரண்டாவது நாள் திரையரங்கில் கண்டேன். அடுத்த வாரத்திலேயே புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிவிட்டார்கள். அதுவும் விளம்பர இடைவேளை இல்லாமல். நல்ல பல்பு. இனி வேந்தர் சம்பந்தப்பட்ட படங்களை திரையரங்கில் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். போலவே, விஜய் டிவியில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். செய்தியைக் கேள்விப்பட்ட ஒரு நண்பர் நல்ல படம் திரையரங்கில் ஓடாமல் டிவியில் ஓடுகிறதே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார். அவருடைய எண்ணத்தின் படி மிஷ்கின் வேடத்தை வேறு யாராவது மாஸ் நடிகர்கள் செய்திருந்தால் படம் அபாரமாக வசூலை குவித்திருக்கும். அதாவது அஜித் போன்ற ஒரு நடிகர். ஓ.ஆவில் அஜித் நடித்திருந்தால் ? மிஷ்கின் வேடம் உண்மையில் அஜித்திற்கு நன்றாகவே பொருந்தும். ஆனால் படத்தின் உயிர்நாடி காட்சியொன்று இருக்கிறது. கல்லறையில் வைத்து கதை சொல்லும் காட்சி. அதை அஜித் மட்டுமல்ல, சமகால கதாநாயகர்கள் யாராலும் செய்திருக்க முடியாது. Kamal may be an exceptional case !

கமல் என்றதும் பட்டிமன்றம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. உண்மையில் கமல் உலக நாயகன் தான் ! அவரை மாதிரி உலகத்திலேயே யாராலும் நடிக்க முடியாது. சம்பவத்தை ஒட்டி சில நகைச்சுவை காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. ஒன்று, இந்தியன் படத்தில் சந்துரு என்ற மானஸ்தனை தேடும் காட்சி. இரண்டு, நாடோடிகள் பரணி இருபுறம் பல்பு வாங்கி அப்ப நான்தான் அவுட்டா என்று புலம்பும் காட்சி. மூன்று, விவேக் போலீஸ் ஸ்டேஷன் – அவனாவது கேஸ் விஷயமா பேசிக்கிட்டு இருக்கேன்னு சொன்னான், ஆனா நீ கேஸ் கூடவே பேசிக்கிட்டு இருக்கியே ! ரஜினி’ன்னு ஒரு மனுஷன் இந்தா வாரேன் இந்தா வாரேன்’ன்னு சொல்லியே நம்மாட்களுக்கு கிறுக்கு பிடிக்க வைத்தார். கமலின் சந்தர்ப்பவாதம், துரோகம், எச்சச்ச எச்சச்சாக்கு முன்னால் ரஜினி எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. கமல் இன்னமும் அக்ரஹாரத்து பிள்ளையாகவே இருக்கிறார்.

பாண்டிய நாடு படத்தில் Fy Fy Fy, அப்படின்னு ஒரு பாட்டு. என்னடா இது எல்லாரும் முனுமுனுக்குறாங்களே’ன்னு தேடிக் கண்டுபிடிச்சு கேட்டேன். நல்ல பாட்டு. லட்சுமி மேனனையெல்லாம் ரசிக்கும் சமூகத்தை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. முக்கியமான விஷயம், பாடலை பாடியவர் மூக்கு & முழியழகி ரம்யா நம்பீசன் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 November 2013

ஆரம்பம்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஆரம்பம் ட்ரைலர் பார்க்கும்போதே படம் மொக்கையா இருக்கும் போல பொறி தட்டியது. ஒண்ணுமில்லை, அஜித்தின் முந்தய சில படங்களைப் போலவே தத்துவ குத்து வசனங்கள், டுப்பு டுப்பு’ன்னு சுடுறாங்க, ஸ்லோ மோஷனில் நடக்குறாங்க, மங்காத்தா ட்ரைலரில் அஜித் கெட்டவார்த்தையில கத்துவாரே, அதே தொனியில் Make it simple என்று கத்துகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது எனக்குள் ஒரு எச்சரிக்கை மணி பலமாகவே ஒலித்தது. இருந்தாலும் அஜித் ரசிகனா நமக்கு கடமை’ன்னு ஒன்னு இருக்கு இல்லியா ? அதுவுமில்லாமல் மனதின் ஏதோவொரு ஒரு ஓரத்தில் படம் நல்லா இருந்து தொலைத்துவிடாதா என்ற ஆசையும் இருந்தது. இனி ஆரம்பம் !

இந்திய காவல்துறையில் ATS என்றழைக்கப்படும் Anti-Terrorist Squad பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். உயிரை பணயம் வைத்து பணிபுரியக்கூடியவர்கள். அந்த குழுவில் அஜித்தும் ராணாவும் பணிபுரிகிறார்கள். ஒருமுறை தீவிரவாதிகளிடமிருந்து பணயக்கைதிகளை மீட்கும் பணியின்போது ராணா உயிரிழந்துவிடுகிறார். காரணம், அவர் அணிந்திருந்த தரக்குறைவான புல்லட் ப்ரூப் ஜாக்கெட். அஜித் அதன் பின்புலத்தை ஆராய்ந்து புல்லட் ப்ரூப் ஜாக்கெட் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதை கண்டறிகிறார். அப்புறம் ஊழலுக்கு காரணமானவர்களை பழி வாங்கி, ஊழல் பணத்தை ஸ்விஸ் வங்கியிலிருந்து ரிசர்வ் வங்கிக்கு மாற்றி, தர்மத்தை நிலைநாட்டுவதோடு படம் நிறைவடைகிறது.

To make it simple, காலம் காலமாக தமிழ் சினிமாவில் பார்த்துவரும் பழி வாங்கும் கம் அநீதிக்கு எதிராக அவதாரம் எடுக்கும் கதை தான். ஆனால் திரைக்கதையை அட்டகாசமாக செதுக்கி அமைத்திருக்கிறார்கள் என்று சிம்பிளாக எழுதிவிட எனக்கும் ஆசை தான்...! ஆனால்...

சரி, தமிழ் சினிமாவில் அடிக்கடி காணக்கிடைக்கும் சில காட்சிகளை பற்றி கொஞ்சம் பார்ப்போம் :-
1. ஒரு நேர்மையான, புத்திசாலித்தனமான போலீஸ் அதிகாரி இருப்பார். அவர் அக்யூஸ்ட் பற்றிய எல்லா விவரங்களையும் சேகரித்துக் கொண்டுபோய் அவருடைய உயரதிகாரியிடம் தெரிவிப்பார். அந்த உயரதிகாரி கேரக்டர் கண்டிப்பாக பாலிவுட்டில் இருந்து துரத்திவிடப்பட்ட ஏதாவது ஒரு வில்லன் நடிகராக இருப்பார். அவர் முகத்தைப் பார்த்ததும் அவருதான் அந்த கருப்பு ஆடு’ன்னு நமக்கே தெள்ளத்தெளிவா தெரியும்.

2. விறுவிறுப்பான கதையோட்டத்தில் ஹீரோவுக்கு மிகமிக அருகாமையில் வெற்றி நெருங்க இருக்கிற தருணத்தில் ஒரு டுவிஸ்ட் வரும். வில்லன் குரூப் ஹீரோவுக்கு நெருக்கமான யாரையாவது கடத்தி வச்சிட்டு ஹீரோவை வரச்சொல்லி மிரட்டுவாங்க. அப்போ புத்திசாலி ஹீரோ அதே பாணியில் வில்லன் தரப்பு ஆட்களை கடத்தி வில்லனுக்கு செக் வைப்பார்.

3. கிட்டத்தட்ட பாதி படம் முடிந்திருக்கும் நிலையில் ஹீரோ வில்லன் குரூப்பிடம் வசமாக சிக்கிக்கொள்வார். வில்லன் குரூப்பிடம் துப்பாக்கி இருந்தாலும் சுட மாட்டாங்க, சுட்டாலும் உயிர் போயிடுச்சா’ன்னு கன்ஃபார்ம் பண்ண மாட்டாங்க. குத்துயிரும் கொலையுயிருமா விட்டிருவாங்க. அதுக்கப்புறம் ஹீரோ உயிர்த்தெழுந்து வந்து ஹீரோ வில்லன் குரூப்பை பழி வாங்குவார்.

4. ஒரு சேஸிங் சீன் வரும். வில்லன் குரூப் ஆளுங்க ஏகே 47 மாதிரியான துப்பாக்கியை வைத்துக்கொண்டு டுப்பு டுப்பு’ன்னு சுட்டுக்கிட்டே வருவாங்க. ஆனா ஹீரோவுக்கு எதுவும் ஆகாது. என்னடான்னு பார்த்தா, ஹீரோவுக்கு பக்கத்துலயும் பெஞ்சுலயும் தான் குண்டு படுமே தவிர மேல ஒரு குண்டு பாயாது. அப்படியே தப்பித்தவறி பாஞ்சா கூட தோள்பட்டை, முட்டிக்காலுக்கு கீழே போன்ற ஹீரோ அளவில் ஆபத்தில்லாத பகுதியில் மட்டுமே படும்.

4a. அதே சேஸிங் சீன். ஹீரோ ஒரு சின்ன கை துப்பாக்கி வச்சிட்டு வண்டி ஒட்டிக்கிட்டே திரும்பி பார்த்து சுடுவாரு. அதிக பட்சம் இரண்டு அல்லது மூன்று குண்டுகள். வில்லனின் அடியாட்கள் ஒவ்வொருவராக குண்டடி பட்டு ஆட்டத்திலிருந்து விலகிக்கொள்வார்கள். சமயங்களில் ஹீரோ மிகச்சரியாக வில்லன் குரூப் காரின் பெட்ரோல் டேங்கில் சுட்டு கார் பனைமர உயரத்திற்கு பறந்து சிதறும்.

5. வில்லனுக்கு நெருக்கமா ஒரு ரிவால்வர் ரீட்டா இருப்பாங்க. வில்லனுக்கு அடிக்கடி தொட்டுக்கிட ஊறுகாய் மாதிரி. ஆனா பாருங்க, படத்தின் இரண்டாம் பாதியில் ஹீரோ கையாலோ அல்லது வில்லன் கையாலேயோ அற்பாயுசில் இறந்துவிடுவார்கள்.

6. ஹீரோ படத்துவக்கத்திலிருந்து மர்மமான முறையில் நிறைய சமூக விரோத செயல்களைச் செய்வார். அவர் கெட்டவர் என்கிற தொனியில் ஏதாவதொரு துணை கதாபாத்திரம் கேள்வியெழுப்ப, அதற்கு இன்னொரு துணை கதாபாத்திரம் அவரு யாருன்னு தெரியுமாடா என்றபடி தொடங்க காட்சிகளில் ஃப்ளாஷ்பேக் விரியும்.

6a. ஃப்ளாஷ்பேக்கில் ஹீரோ அவருடைய குடும்பம், நண்பர்கள் சகிதம் சந்தோஷமா வாழ்ந்துக்கொண்டு இருப்பார். அவர்களின் மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு உணர்த்தும்பொருட்டு ஒரு கொண்டாட்டமான பாடல் வரும். கண்டிப்பாக அந்த பாடல் முடிந்தபிறகு ஒரு ட்விஸ்ட் வரும். குடும்பத்தின் மகிழ்ச்சி சிதைய துவங்கும்.

7. க்ளைமேக்ஸ் நெருங்கி வரும் வேளையில் ஒரு கிளப் சாங் வரும். ஏதாவது ஒரு ஐட்டம் சாங் நடிகை ஆடிக்கொண்டு இருப்பார். அங்கே ஹீரோவும் குறுக்க மறுக்க நடந்துக்கொண்டிருப்பார். பாடலுக்கு இடையிடையே மர்மமாக சில வேலைகளை செய்வார். பாடல் முடிந்ததும் க்ளைமேக்ஸ் தொடங்கும்.

8. பாம் வெடிக்க இன்னும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே உள்ளன என்று செவன் செக்மென்ட் டிஸ்ப்ளேயில் காட்டும். சிகப்பு, கருப்பு என இரண்டு வயர்கள். ஒன்றை கத்தரித்தால் சேஃப், மற்றொன்றை கத்தரித்தால் க்ளோஸ். ஒருசில நொடிகள் தடுமாறிவிட்டு ஹீரோ மிகச்சரியாக சேஃபான வயரை கத்தரிப்பார்.

மேலே சொன்ன காட்சிகளை நீங்கள் ரசித்துப் பார்ப்பவரா ? ஆம் எனில் கையைக் கொடுங்கள் ! சந்தேகமே இல்லாமல் ஆரம்பம் உங்களுக்கான சினிமா தான்...!

அஜித் இல்லையேல் ஆரம்பத்திற்கு ஆரம்பம் கூட கிடைத்திருக்காது. அஜித்தை திரையில் காட்டினாலே திரையங்கம் ஆனந்த அலறல் போடுகிறது. வாய் திறந்து ஏதாவது பேசிவிட்டால் விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. சர்வநிச்சயமாக ரஜினிக்கு அடுத்து அஜித்துக்கு தான் அதிக மாஸ் ! ஹாலியுட்டு படங்களில் மேட் டீமன் போல ஆர்யாவிற்கு இரண்டாம் நிலை கதாபாத்திரம். அவருடைய கல்லூரிக்கால கெட்டப் புதுமையாக இருந்தாலும் அப்படியொன்றும் சிரிப்பு மூட்டவில்லை. 

நயன்தாராவிற்கு ஒரேயொரு காட்சி தவிர்த்து கிளாமர் இல்லை. ஆனால் அந்த ஒரேயொரு காட்சி போதும். நயன்தாரா இன்னமும் டொக்கு ஆகவில்லை. அநேகமாக, டாப்ஸியின் நடிப்பில் நான் காணும் முதல் திரைப்படம் இதுதான் நினைக்கிறேன். பேபி ச்சோ ச்வீட் என்று கன்னத்தில் கிள்ளி முத்தா கொடுக்கணும் என்பது போல அப்படி இருக்கிறார்.

துணை நாயகிகள் விஷயத்தில் விஷ்ணுவை பாராட்ட வேண்டும். அதிகம் அறியப்படாத, எனினும் நல்ல பதார்த்தங்களான சுமா ரங்கனாதனையும் அக்ஷரா கவுடாவையும் கொணர்ந்திங்கு சேர்த்திருக்கிறார். டைட்டிலில் அறிமுகம் அக்ஷரா கவுடா என்று பார்த்ததும் பதறிவிட்டேன். அக்ஷரா ஏற்கனவே துப்பாக்கி படத்தில் ஐட்டம் என்னும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பே உயர்திரு 420 என்னும் படத்தில் அறிமுகமாகி விட்டதாக விக்கி சொல்கிறது. 

அஜித்தின் நண்பராக ராணா, நல்ல போலீஸ் கிஷோர், கெட்ட போலீஸ் அதுல் குல்கர்னி, மந்திரி மகேஷ் மஞ்சரேக்கர் என இன்னும் சிலரும் நடித்திருக்கிறார்கள்.

யுவன் இசையில் பாடல்கள் அப்படியொன்றும் ஈர்க்கவில்லை. ஒன்றிரண்டு கேட்கக் கேட்க பிடிக்கலாம். பின்னணி இசை கூட வழக்கம் போல அதிரடியாக இல்லையென்றாலும் ஆங்காங்கே படத்தை தூக்கி நிறுத்துகிறது. அஜித் ஒரு காட்சியில் அதுல் குல்கர்னியிடமும், அதற்கடுத்த காட்சியில் மகேஷ் மஞ்சரேக்கரிடமும் சவால் விடுகிறார். அவ்வளவு அருமையான காட்சியொன்றும் இல்லை. ஆனால், அப்படியே அங்கிருந்து திரும்பும்போது ஜோபியில் இருந்து கூலிங் கிளாஸ் எடுத்து மாட்டிக்கொண்டே ஸ்லோ மோஷனில் நடந்துவருகிறார் அஜித். அங்கே தடதடக்கிறது ஒரு பின்னணி இசை. அரங்கம் ஆர்ப்பரிக்கிறது !

ஆக, அஜித்தின் மாஸ், யுவனின் பின்னணி இசை. விஷ்ணுவின் ஸ்டைலிஷ் மேக் இவை மூன்றும் சேர்ந்து தான் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்துகின்றன. அஜித் ரசிகர்களுக்கும், வணிக சினிமாக்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கும் நிச்சயமாக இது ‘தல’ தீபாவளி தான் ! மற்றபடி என்னளவில் ஆரம்பம் பல்லைக் கடித்துக்கொண்டு ஒரேயொரு முறை பார்க்கக்கூடிய சினிமாவாகத் தான் தெரிகிறது.

ஆரம்பத்தில் குறிப்பிடத்தகுந்த சில நல்ல விஷயங்கள் என்று பார்த்தால், மும்பை தாக்குதலில் பலியான ஹேமந்த் கர்கரே என்னும் தியாகியின் வாழ்க்கையை யொட்டி மிக நெருக்கமாக அமைக்கப்பட்ட கதைக்களம், (இதனைப் பற்றி இன்னும் விரிவாக உண்மைத்தமிழன் அவர்களின் இடுகையில் படிக்கலாம்), அஜித் – நயன்தாராவிற்கு இடையே காதல், டூயட் வைக்க வாய்ப்பிருந்தாலும் அப்படி செய்யாதது போன்றவற்றை குறிப்பிடலாம்.

ஸ்டைலிஷ் மேக்கிங் என்ற பெயரில் அஜித் தொடர்ச்சியாக ஒரே மாதிரியான மாஸ் காட்சியமைப்புகள் கொண்ட படங்களில் நடிப்பது இன்னும் எவ்வளவு நாளைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரியவில்லை. அதற்குள் அஜித் அவருடைய படங்களின் பாணியை மாற்றிக்கொள்வது நல்லது. இல்லையேல் அவருடைய படங்களுக்கு எப்பொழுதுமே ‘ஆரம்பம்’ மட்டும்தான் கிடைக்கும் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment