Showing posts with label real. Show all posts
Showing posts with label real. Show all posts

18 February 2015

சென்னைக்கு மிக அருகில்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ராஜீவ்காந்தி சாலை எழுதிய விநாயக முருகனின் இரண்டாவது நாவல். தயக்கத்துடன்தான் படிக்கத் துவங்கினேன். ஏனென்றால் என்னிடம் உள்ள ஒரு கெட்டபழக்கம், ஒரு புத்தகத்தை பாதி படித்துக்கொண்டிருக்கும்போது பிடிக்காமல் போனால் உடனே தூக்கி கடாசிவிட மாட்டேன். எப்பாடு பட்டாவது அந்த புத்தகத்தை முழுமையாக வாசித்துவிட முயற்சி செய்வேன். இது எங்கே போய் முடியும் என்றால் நான்கைந்து நாட்களில் முடித்துவிட வேண்டிய புத்தகம் ஒன்றிரண்டு மாதங்கள் வரை நீளும். தேவையில்லாத மன உளைச்சல்களை ஏற்படுத்தும். ஏற்கனவே ராஜீவ் காந்தி சாலை படிக்கும்போது இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டேன் என்பதால் ஏற்பட்ட தயக்கம்.

சென்னைக்கு மிக அருகில் அப்படியில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

சித்திரை என்கிற பெரியவர் தான் கதையின் ஹீரோ. சென்னைக்கு மிக அருகில் உள்ள மணிமங்கலம் என்கிற கிராமத்தைச் சுற்றி கதை நகர்கிறது. அக்கிராமத்தில் வசித்துவரும் நில உரிமையாளர்கள் ஒவ்வொருவராக தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். சித்திரை மட்டும் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தை விற்க மனம் ஒப்பாமல் சிறிய அளவில் விவசாயம் செய்துவருகிறார். அப்படியொரு கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருபவரை இந்த சமூகம் எப்படியெல்லாம் நெருக்குகிறது என்பதுதான் பிரதான கதை.

இதனோடு நூல் பிடித்தாற்போல சில கிளைக்கதைகளும் வருகின்றன. எப்படியென்றால் மணிமங்கலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மருதம் பில்டர்ஸ், அதனுடைய விளம்பரப் படங்கள் ஒளிபரப்பாகும் கேலக்ஸி டிவி, அந்த விளம்பரங்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகை, அந்த சின்னத்திரை நடிகைக்கும் ஒரு சாமியாருக்கும் இடையே நடந்த சல்லாபம்... இப்படி ஒன்றோடொன்று தொடர்பு கொண்ட பல கிளைக்கதைகள். இதிலுள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், நித்தியானந்தா – ரஞ்சிதா விவகாரம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகள், பள்ளி பேருந்து விபத்தில் சிறுமி பலியான விவகாரம், ஆழ்துளை கிணற்றில் சிறுவர் / சிறுமியர் விழுந்து பலியாகும் விபத்துகள் உள்ளிட்ட பல உண்மைச் சம்பவங்களை புனைந்து எழுதியிருக்கிறார் விநாயக முருகன்.

முந்தைய நாவலில் காணப்பட்ட குறைகளை கவனமாக களைந்தெடுத்திருக்கிறார் விநாயக முருகன். கூடவே சுவாரஸ்யத்தை சேர்ப்பதற்காக எதை எந்த இடத்தில் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்று குறிப்பறிந்து கச்சிதமாக சேர்த்திருக்கிறார். 

எனினும் விநாயக முருகனின் இரண்டு நாவல்களுடைய தொனி மட்டும் ஒன்றுதான் – காலம் கெட்டுப்போய்விட்டது. அதாவது வயதானதும் மனிதர்கள் சமகால மாற்றங்களை சலித்துக்கொள்வார்கள் இல்லையா ? இந்த காலத்து பசங்க பெரியவங்க பேச்சை கேக்குறதில்ல, அரைகுறை துணியை உடுத்திக்கிட்டு திரியுதுங்க, சினிமாவே கதின்னு கெடக்குறாங்க, டிவியில போடுற கண்ட கருமத்தையும் பாக்குறாங்க இப்படி நிறைய. கூடவே, நாங்கள்லாம் அந்த காலத்துல என்று தொடங்கக்கூடிய வியாக்கியானங்கள். இப்படி நாவல் முழுவதும் பழமைவாதம் விரவிக் கிடக்கிறது. இது சில இடங்களில் ஈர்ப்பும் ஏற்பும் உடையதாக இருந்தாலும் பல இடங்களில் எரிச்சலையே தருகிறது. இத்தனைக்கும் நானே ஒரு பழமைவாதி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்புறம், மக்களுக்கு எல்லாமே செய்திதான், இரண்டு நாட்களில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவரவர் வேலையை பார்க்கத் துவங்கிவிடுவார்கள் என்பது போன்ற வசைகள். இவற்றை படிக்கும்போது ‘உங்கொப்பன் செத்தப்ப எத்தன நாள் அழுத ?’ என்கிற ராஜனின் ட்வீட் ஒன்று நினைவுக்கு வருகிறது. தயவு செய்து அப்டேட் ஆகுங்கள் விநாயக முருகன்.

விநாயக முருகனின் எழுத்தில் ஆச்சரியமூட்டிய ஒரு விஷயம், இடையிடையே சில இடங்களில் கனவுகளைப் பற்றி எழுதியிருக்கிறார். தூக்கத்தில் வரும் கனவுகளைப் பற்றி தான். இதற்கு முன்பு சுஜாதாவின் சில நாவல்களில் இதுபோன்ற கனவுகளை படித்திருக்கிறேன். அவற்றை படிக்கும்போது நிஜமாகவே கனவு காணும் ஓர் உணர்வு ஏற்படும். விநாயக முருகன் எழுதியிருக்கும் கனவுகள் வேறு வகையானது. குறிப்பிட்ட அந்த கதாபாத்திரத்தின் சூழ்நிலையை வாசகர்களுக்கு மறைமுகமாக உணர்த்தும் பொருட்டோ அல்லது உருவகப்படுத்தி சொல்லும் பொருட்டோ வரும் கனவுகள். மொத்தத்தில், படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன.

இறுதியாக, சென்னைக்கு மிக அருகில் போரடிக்காமல் படிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு நாவல். ஆனால், அதில் எழுத்தாளர் மிகவும் சீரியஸாக சொல்ல முயன்றிருக்கும் விஷயங்கள் மனதில் சிறிய பாதிப்பையாவது ஏற்படுத்தியிருக்கிறதா ? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முந்தைய சொற்றொடரை ‘என்னளவில்’ என்ற முற்சேர்க்கையுடன் படித்துக்கொள்ளுங்கள். ஐ.டி.யில் பணிபுரியும் சிலர், ‘இன்னும் பத்து வருஷம் கழிச்சு நானெல்லாம் வெவசாயம் பார்க்கப் போயிடுவேன்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அந்த மாதிரி ஆசாமிகள் வேண்டுமானால் சென்னைக்கு மிக அருகில் நாவலை படித்துவிட்டு தங்கள் வாய்ச்சவடாலுக்கு ஒரு வாய் அவலாக சேர்த்துக்கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 November 2013

பிரபா ஒயின்ஷாப் – 11112013


அன்புள்ள வலைப்பூவிற்கு,  

ஆரம்பம் படத்தினை மீண்டுமொரு முறை திரையரங்கில் பார்த்து தன்யனானேன். சில புதிய விஷயங்களை கவனிக்க முடிந்தது. ‘குட்கா முகேஷ்’ செய்திப்படம் காட்டவில்லை. அதாவது படத்தில் புகை, மது காட்சிகள் இல்லை. படக்குழுவினருக்கு சல்யூட். ஆனால், இஸ்திரி பொட்டி காட்சி உட்பட சில ராவான வன்முறைக் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். சுமா ரங்கநாத் சுமார் தான் என்றாலும் ஆளை பார்த்தால் நாற்பது வயது போலவா தெரிகிறது. ம்ம்ம். தீவிரவாத இயக்கத்தின் பெயர் ‘லயன்ஸ் லிபரேஷன்’. வேறொரு இயக்கத்தின் பெயரை நினைவூட்டுகிறது அல்லவா ? விஷ்ணுவர்தன், உமக்கு எதற்கு இந்த குறிக்கொழுப்பு வேலை ? முடியாது’ன்னு சொல்ல முடியாது பாடல் அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. எனக்கென்னவோ இரண்டாம் பாதியை விட முதல் பாதி பிடித்திருக்கிறது.

சுஜாதாவின் ஜே.கே படித்தேன். நாவலின் வயது 43. ஜே.கே ஒரு பைலட். அரசு சார்பாக விவசாய நிலங்களுக்கு விமானம் மூலம் மருந்து அடிப்பவன். ஒரு குழு அவனிடம் பணம் கொடுத்து ஏதோ ஆராய்ச்சி என்று சொல்லி ஒரு பெட்டியை விமானத்தில் எடுத்துவரச் சொல்கிறது. அது போதைப் பொருள் என்று அறியாமல் செய்கிறான். கைது செய்யப்படுகிறான். வி.ஐ.பி ஒருவரின் தலையீட்டால் விடுவிக்கப்படுகிறான். காவல்துறையின் பிடியிலிருக்கும் வி.ஐ.பியின் மகளை மீட்டு வரும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. மீட்டு வருகிறான், ஒப்படைப்பதற்குள் தப்பிவிடுகிறாள். அவளை துப்பறிய போக, அவளைப் பற்றியும் அவளுடைய குழுவின் திட்டமும் தெரிய வருகிறது. அது என்ன திட்டம் ? நிறைவேறியதா என்பது க்ளைமேக்ஸ். சுஜாதா ஒரு தீர்க்கதரிசி என்பது ஜே.கே நாவலின் மூலம் நிரூபணமாகிறது. படிக்கும்போது சத்யராஜ் நடித்த ஏர்போர்ட் என்ற திரைப்படம் நினைவுக்கு வந்தது. அடுத்ததாக படிக்க சில சுஜாதா நாவல்கள் வரிசையில் இருந்தாலும், ஒரு மாறுதலுக்காக பழம்பெரும் மனிதவள ஆய்வாளர் பிலோ.இருதயநாத் எழுதிய ‘கேரள ஆதிவாசிகள்’ படிக்க இருக்கிறேன்.

தீபாவளிக்கு முந்தய நாள் மாலையில் நண்பர் ஒருவர் போனில் அழைத்து ‘தல தீபாவளி’ வாழ்த்து சொன்னார். அவரும் நானும் சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்திருக்கிறோம். அப்போதிலிருந்தே என்னுடைய பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து வருடாவருடம் வாழ்த்துவார். எனக்கு ஒரு மாதிரியாக ‘சங்கடமாக’ இருக்கும். எனக்கு மட்டுமல்ல யாருடனாவது ஓரிரு வாரங்கள் மட்டும் பழகியிருந்தால் கூட அவர்களுடைய பிறந்தநாளை குறித்து வைத்து வாழ்த்து சொல்லும் பழக்கம் அவருக்கு உண்டு. தற்போது அவருடைய நண்பர்கள் வட்டத்தில் யாருக்கெல்லாம் ‘தல தீபாவளி’ என்று லிஸ்ட் எடுத்து ஒவ்வொருவராக வாழ்த்து சொல்லிவருவதாக கூறினார். அவரை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. எனக்கெல்லாம் என் குடும்பத்தினரை தவிர வேறு யாருடைய பிறந்தநாளும் தெரியாது. அதுவே கூட சமயங்களில் ஜூன் பதினான்கா, ஜூலை பதினான்கா ? என்று குழம்பும். இது ஒரு சின்ன விஷயம் தான் என்றாலும் நண்பருக்கு அவருடைய வாழ்வில் மேன்மையடைய உதவும். உதவியிருக்கும்.

சுட்ட கதை படத்தை வெளியான இரண்டாவது நாள் திரையரங்கில் கண்டேன். அடுத்த வாரத்திலேயே புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிவிட்டார்கள். அதுவும் விளம்பர இடைவேளை இல்லாமல். நல்ல பல்பு. இனி வேந்தர் சம்பந்தப்பட்ட படங்களை திரையரங்கில் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். போலவே, விஜய் டிவியில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். செய்தியைக் கேள்விப்பட்ட ஒரு நண்பர் நல்ல படம் திரையரங்கில் ஓடாமல் டிவியில் ஓடுகிறதே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார். அவருடைய எண்ணத்தின் படி மிஷ்கின் வேடத்தை வேறு யாராவது மாஸ் நடிகர்கள் செய்திருந்தால் படம் அபாரமாக வசூலை குவித்திருக்கும். அதாவது அஜித் போன்ற ஒரு நடிகர். ஓ.ஆவில் அஜித் நடித்திருந்தால் ? மிஷ்கின் வேடம் உண்மையில் அஜித்திற்கு நன்றாகவே பொருந்தும். ஆனால் படத்தின் உயிர்நாடி காட்சியொன்று இருக்கிறது. கல்லறையில் வைத்து கதை சொல்லும் காட்சி. அதை அஜித் மட்டுமல்ல, சமகால கதாநாயகர்கள் யாராலும் செய்திருக்க முடியாது. Kamal may be an exceptional case !

கமல் என்றதும் பட்டிமன்றம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. உண்மையில் கமல் உலக நாயகன் தான் ! அவரை மாதிரி உலகத்திலேயே யாராலும் நடிக்க முடியாது. சம்பவத்தை ஒட்டி சில நகைச்சுவை காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. ஒன்று, இந்தியன் படத்தில் சந்துரு என்ற மானஸ்தனை தேடும் காட்சி. இரண்டு, நாடோடிகள் பரணி இருபுறம் பல்பு வாங்கி அப்ப நான்தான் அவுட்டா என்று புலம்பும் காட்சி. மூன்று, விவேக் போலீஸ் ஸ்டேஷன் – அவனாவது கேஸ் விஷயமா பேசிக்கிட்டு இருக்கேன்னு சொன்னான், ஆனா நீ கேஸ் கூடவே பேசிக்கிட்டு இருக்கியே ! ரஜினி’ன்னு ஒரு மனுஷன் இந்தா வாரேன் இந்தா வாரேன்’ன்னு சொல்லியே நம்மாட்களுக்கு கிறுக்கு பிடிக்க வைத்தார். கமலின் சந்தர்ப்பவாதம், துரோகம், எச்சச்ச எச்சச்சாக்கு முன்னால் ரஜினி எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. கமல் இன்னமும் அக்ரஹாரத்து பிள்ளையாகவே இருக்கிறார்.

பாண்டிய நாடு படத்தில் Fy Fy Fy, அப்படின்னு ஒரு பாட்டு. என்னடா இது எல்லாரும் முனுமுனுக்குறாங்களே’ன்னு தேடிக் கண்டுபிடிச்சு கேட்டேன். நல்ல பாட்டு. லட்சுமி மேனனையெல்லாம் ரசிக்கும் சமூகத்தை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. முக்கியமான விஷயம், பாடலை பாடியவர் மூக்கு & முழியழகி ரம்யா நம்பீசன் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment