Showing posts with label travelogue. Show all posts
Showing posts with label travelogue. Show all posts

23 December 2013

பிரபா ஒயின்ஷாப் – 23122013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

டிசம்பர் பத்து தொடங்கி ஒரு வாரத்திற்கு இணையம் வேலை செய்யவில்லை. BSNL அலுவலகத்தை அழைத்தால் சம்பந்தப்பட்ட லைன்மேன் ஊருக்கு போயிருப்பதாகவும் (அதுவும் எங்கே...? சாத்தூருக்கு...!) திரும்பிவர மூன்று நாட்களாகும் என்றும் பதில் வந்தது. ஒருவழியாக அவர் திரும்பி வந்து இணைய கோளாறை சரி செய்துக் கொடுத்த நேரம் புனே பயணத்திற்கு கிளம்ப வேண்டியதாக ஆயிற்று.

இணையம் வேலை செய்யாதது கூட ஒரு வகையில் சாதகமாக அமைந்துவிட்டது. பாரதியார், தலைவர் பிறந்தநாள் தொடர்பான ஜல்லிகளை தவிர்த்தாயிற்று. வருடா வருடம் நடைபெறுகிற கூத்துதான். ஒன்று, பாரதியார் பிறந்தநாளை மறந்துவிட்டு தலைவர் பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்று கூப்பாடு போடும் கூட்டம். இரண்டு, பாரதியார், தலைவர் என இருபெரும் சகாப்தங்கள் அடுத்தடுத்த நாட்களில் பிறந்ததை எண்ணி சிலாகிக்கும் கூட்டம். மூன்று, உண்மையில் பாரதியின் பால் ஈடுபாடு இல்லையென்றாலும் முதல் கோஷ்டியிடமிருந்து தப்பிக்க வேண்டி, பாரதிக்கு ஒரு சம்பிரதாய வாழ்த்து சொல்லிவிட்டு தலைவர் பிறந்தநாள் கும்மியடிப்பவர்கள். அப்புறம், வழக்கம்போல தலைவர் சமூகத்துக்காக என்ன செஞ்சு கிழிச்சாரு’ன்னு ஒரு குரூப் கேட்கும். அதுக்கு நடிகரிடம் ஏன் சமூக அக்கறையை எதிர்பார்க்குறீங்க’ன்னு தலைவரின் அடிபொடிகள் கேட்கும். இதுல பியூட்டி என்னன்னா – மத்த லொட்டு லொசுக்கு நடிகர்களிடமெல்லாம் எதிர்பார்க்காத சமூக அக்கறையை ஏன் தலைவரிடம் மட்டும் எதிர்பார்க்கிறார்கள்...? என்ற கேள்விக்கு அவருடைய ரசிகர்களுக்கே மிக நன்றாகத் தெரியும். இருந்தாலும் வேறென்ன செய்வது...? திருடனுக்கு தேள் கொட்டினது மாதிரி பொத்திக்கிட்டு இருந்துதானே ஆகணும்...!

ஒரு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு ஆறு நாட்கள் புனே பயணம். மஹாராஷ்திரா, மொழிப்பற்றில் தமிழகத்தை மிஞ்சிய மாநிலம் போல. பெரும்பாலும் கடைகளுடைய பதாகைகளில் மராத்தி மட்டுமே காணப்படுகிறது. ஆட்டோக்களில் எல்லாம் பயங்கர சின்சியராக மீட்டர் போட்டு ஓட்டுகிறார்கள். அதுவும் எப்படி என்றால் மீட்டரில் ஐம்பத்தி நான்கு ரூபாய் காட்டினால் கர்ம சிரத்தையுடன் மீதி ஆறு ரூபாய் சில்லறை தேடித் தருகிறார்கள். அதேபோல மூன்று நபர்களுக்கு மேல் ஏற்றுவதில்லை. பெருநகரம் இல்லை என்பதாலோ என்னவோ போக்குவரத்து சிக்னல்கள் அதிகம் காணப்படுவதில்லை. ஆனால் போக்குவரத்து விதிகள் சகஜமாக மீறப்படுகிறது. போகிறபோக்கில் யாருடைய வாகனத்தையாவது தட்டிவிட்டு போனால் ஒரு மன்னிப்பு கூட கேட்பதில்லை. வள்ளுவரின் வாக்குப்படி கண்டபடி துப்பார்க்கு துப்பாய துப்பி வைக்கிறார்கள். துப்புவதில் படித்தவர் / படிக்காதவர், பாலின பேதமெல்லாம் கிடையாது. நிறைய மல்டிப்ளக்ஸ்கள் உள்ளன. ஆனாலும் சினிமாப்பட போஸ்டர்களை பார்க்க முடிவதில்லை. 

வந்ததுக்கு ஏதாவதொரு லோக்கல் திரையரங்கில் படம் பார்க்கலாம் என்றால் எங்கு பார்த்தாலும் சன்னி லியோனின் ஜாக்பாட் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘நஷா’ கண்ட வரலாறு நமக்கிருந்தாலும் போனது உறவினர் வீட்டுக்கு என்பதால் அடக்கி வாசிக்க வேண்டியதாக போய்விட்டது. வெள்ளி வரை காத்திருந்து அப்சரா சினிமாஸில் தூம் 3 பார்த்தேன். பக்கா லோக்கல் தியேட்டர். ஹிந்தியில் டிக்கெட் விலை எழுதியிருந்ததை பார்த்துவிட்டு ஒரு நைண்டி ருபீஸ் டிக்கெட் என்று நூறு ரூபாயை நீட்டினேன். டிக்கெட்டுடன் மீதி ஐம்பது ரூபாய் கிடைத்தது. என்னடா இது என்று பார்த்தால் ஹிந்தியில் ஐம்பதைத் தான் தொண்ணூறு போல எழுதுகிறார்கள். அரங்கில் படம் போடுவதற்கு முன்னால் தேசிய கீதம் போடுகிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் எந்தவித கிண்டலோ கேலியோ இல்லாமல் அனைவரும் எழுந்து அட்டேன்ஷனில் நிற்கிறார்கள். தேசிய கீதம் முடிந்ததும் ‘பாரத் மாதாகி ஜே’ என்று கோஷம் எழுப்பிவிட்டு சமத்தாக அமர்ந்துக்கொண்டார்கள். தூம் 3யில் தம், தண்ணி காட்சிகள் இல்லாததால் முகேஷ் ஹரானே செய்திப்படம் காட்டவில்லை.

ஏற்கனவே தூம் வரிசை படங்களைப் பற்றி கொஞ்சம் கேள்விப்பட்டிருந்ததால் படம் எப்படியிருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தது. என்னுடைய எதிர்பார்ப்பிற்கு எந்த ஏமாற்றமும் கொடுக்காமல் அமீர் கான் மூன்று காட்சிகளிலும் அபிஷேக் ஒரு காட்சியிலும் முறையே பைக், ஆட்டோ வைத்து கொரளி வித்தை காட்டுகிறார்கள். அமீருடன் ஒப்பிடும்போது அபிஷேக் வேடம் மிகவும் டம்மி போல தெரிகிறது. கத்ரினா கைப் அமீர் கானை முன்னே உட்கார வைத்துவிட்டு ஒரு ஸ்ட்ரிப் டீஸிங் பாணி நடனமாடுகிறார் பாருங்கள்... அபாரம்...! இருந்தாலும் பிபாஷா பிசாசு இல்லாதது வருத்தம் தான். ஓரளவுக்கு உடல்மொழியை வைத்து ஹிந்தி வசனங்களை புரிந்துக்கொண்டாலும், உதய் சோப்ரா அடித்த சோக்குகள் எதுவும் புரியவில்லை. சும்மா ஹிந்திக்காரர்களுடன் சேர்ந்து கடமைக்கு சிரித்து வைத்தேன். படம் முடிந்து வெளிவந்தபோது அடுத்த காட்சிக்கு பேய்க்கூட்டம் கூடியிருந்தது. படம் சூப்பர்ஹிட் போல.

பயண நேரத்தில் படிப்பதற்கென சுதாகரின் 6174 எடுத்துச் சென்றிருந்தேன். நாவலை வெறுமனே படிக்க முடியவில்லை. படிக்கும்போதே குறைந்தபட்சம் ஐம்பது விஷயங்களையாவது கூகுள் செய்யவேண்டும் போலிருக்கிறது. சில விஷயங்களை உள்வாங்கும்பொருட்டு மறுமுறை படிக்க வேண்டும். படித்துவிட்டு அதுபற்றி விரிவாக எழுத வேண்டும்.

அதற்கு முன்பு ஒரு சம்பவம். 6174 படித்துவிட்டு தோழர் சிங்கம் என்னிடம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் / ஃபேண்டஸி நாவல் குறித்த ப்ளாட் சொன்னார். என்னுடைய நேரம், நான் அப்போது 6174 படித்திருக்கவில்லை. படித்தபின்பு சிங்கம் சொன்ன கதையும் 6174 கதையும் நிறைய இடங்களில் ஒரே மாதிரியாக இருந்தது. ஒருவேளை சிங்கம் அக்கதையை நாவலாக்கினால் அது 6174-ன் காப்பியாகவே காட்சியளிக்கும். ஆனால் உண்மையில் அவருடையது 6174-ஐ விட அட்டகாசமான கதை. அடுத்தடுத்த ஸ்டோரி டிஸ்கஷன் சிட்டிங்குகளில் கலந்துக்கொண்டு அக்கதையை மென்மேலும் மெருகேற்ற வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 April 2013

அந்தமான் பயணம் - தகவல்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


அந்தமான் தொடர் ஒருவழியாக நிறைவுக்கு வந்துவிட்டது. படிப்பவர்களுக்கு எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. எனக்கு நிம்மதியாக இருக்கிறது. இனி எழுதியே ஆகவேண்டுமென பின்னிரவில் அமர்ந்து அரைத்தூக்கத்தில் தட்டச்ச தேவையில்லை. கீழ்காணும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் தொடரை முழுமையாக வாசித்து வந்தவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் பயன் பெறலாம்.

சீசன்:
அந்தமானில் டிசம்பர் துவங்கி மே மாதம் வரை சீசன். மற்ற மாதங்களில் சென்றால் என்ன என்று கேட்கலாம் - மழை பெய்து உங்கள் சுற்றுலா திட்டத்தை கலைக்கலாம், முன்னறிவிப்பின்றி உள்ளூர் கப்பல்கள் ரத்து செய்யப்படலாம். அதற்கு மேல், சில தீவுகள் சீசன் தவிர்த்து மற்ற காலகட்டத்தில் பராமரிப்பிற்காக பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும். க்ளைமேட்டை பொறுத்தவரையில் அதிக வெயிலுமில்லாமல் குளிருமில்லாமல் மிதமாகவே இருக்கும்.

பயணம்:
கப்பலில் சென்றால் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் வரை செலவாகும். பயண நேரத்தில் முழுமையாக மூன்று நாட்கள் கழிந்துவிடும். விமானச்செலவு நான்காயிரத்தில் தொடங்கி சமயங்களில் பதினெட்டாயிரம் வரை கூட செலவாகலாம். விமான கட்டணத்தை பொறுத்தவரையில் எவ்வளவு நாட்கள் முன்கூட்டியே பதிவு செய்கிறோமோ அதற்கு தகுந்தபடி விலை வேறுபடும். சனி, ஞாயிறுகளில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும். சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிடுவது நல்லது. பயண நேரம் இரண்டு மணி நேரம் பத்து நிமிடம்.

தங்குமிடம்:
ஏசி இல்லாத அறைகள் எனில் நாள்வாடகை அறுநூறிலிருந்து துவங்கும். ஏசி அறை வாடகைகள் ஆயிரத்திலிருந்து துவங்குகிறது. முடிந்தவரையில் போர்ட் ப்ளேரின் மையப்பகுதியில், அதாவது அபெர்டீன் பஜார், செல்லுலர் ஜெயில் அருகில் அறை எடுத்துக்கொள்வது சுற்றிப்பார்க்க வசதியாக இருக்கும். நான் வசித்த பகுதியின் பெயர், தெலானிப்பூர். அங்கே ஹாலிடே-இன் என்கிற தரமான ஏசி ஹோட்டல், எதிரிலேயே தர்பார் ஹோட்டல், ஆட்டோ ஸ்டாண்ட், மதுக்கூடம் என சகலவசதிகளும் உள்ளன.

எத்தனை நாள் தேவை ?
முந்தய பதிவொன்றில் குறிப்பிட்டது போல, அந்தமான் முழுவதையும் சுற்றிப்பார்க்க மாதங்கள் ஆகக்கூடும். லகரங்களில் செலவு செய்ய வேண்டி வரும். முக்கியமான சில இடங்களை மட்டும் தேர்வு செய்து சுற்றிப்பார்க்கலாம். இங்கிருந்து பயணம் செய்யும் நாளை ஓய்வாக கழிக்கலாம், அங்கே சுற்றிப்பார்க்க ஆறு நாட்கள், திரும்பவும் அங்கிருந்து பயணிக்க வேண்டிய நாள் - மொத்தமாக எட்டு நாட்கள் இருந்தால் மனநிறைவாக சுற்றிவரலாம். ஆறு அல்லது ஏழு நாட்கள் கைவசம் இருக்கும்போது சில இடங்களை தவிர்த்துவிடலாம். அதை விடவும் குறைவான நாட்கள் வைத்திருப்பவர்கள் அந்தமான் செல்வதையே தவிர்த்துவிடலாம்.

சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்:
நாள் 1: சென்னை - போர்ட் ப்ளேர் விமானப்பயணம் - ஓய்வு - மாலையில் கார்பன்'ஸ் கோவ் கடற்கரை
நாள் 2: போர்ட் ப்ளேர் சிட்டி டூர் (சாத்தம் ஸா மில், ஃபாரஸ்ட் மியூசியம், சாமுத்ரிகா மியூசியம், ZSI மியூசியம், அந்த்ரோபாலஜிக்கல் மியூசியம், மீன் காட்சியகம், அறிவியலகம், காந்தி பூங்கா, செல்லுலர் ஜெயில்)
நாள் 3: ராஸ் / வைபர் / நார்த் பே தீவுகள்
நாள் 4: பாராடங் சுண்ணக்குகைகள், மட் வால்கேனோ
நாள் 5: ஹேவ்லாக் - ராதாநகர், எலிபேண்ட் கடற்கரைகள்
நாள் 6: ஜாலிபாய், வண்டூர் கடற்கரை
நாள் 7: மவுண்ட் ஹேரியட் & சிடியா டாப்பு கடற்கரை
நாள் 8: பயண நிறைவு - சென்னை திரும்புதல்

பட்ஜெட் (இரண்டு நபர்களுக்கு)
பயணச்செலவு (Up and Down) : Rs.18000 - 32000
தங்குமிடம் (7 நாட்களுக்கு): Rs. 7000 - 10000
சுற்றுலா செலவு: Rs.12000 - 20000
இதர செலவுகள்: Rs.5000

மொத்தத்தில் இரண்டு நபர்களுக்கு செலவு நாற்பதாயிரத்தில் துவங்கி எழுபதாயிரம் வரை ஆகலாம்.

சில டிப்ஸ்
- அந்தமானில் திங்களன்று அருங்காட்சியகங்கள் விடுமுறை. எனவே போர்ட் ப்ளேர் சிட்டி டூர் திங்களில் அமையாதவாறு பார்த்துக்கொள்ளவும். போலவே ராஸ் ஐலேண்ட் புதன் விடுமுறை. எனவே நாட்களை சரியாக திட்டமிடவும்.
- எங்கு சென்றாலும் ஒரு பையில் மாற்றுத்துணி, டவல் மற்றும் குடிநீர் பாட்டில் வைத்துக்கொள்ளவும். நம்மின மக்கள் உற்சாக பானமும் !
- ராஸ் / வைபர் / நார்த் பே தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இத்தனை மணிக்கு மறுபடியும் படகிற்கு வரவேண்டும் என சொல்லி அனுப்புவார்கள். அதனை சரியாக பின்பற்றவும்.
- Avomine போன்ற கடல் நோய்மை தவிர்க்கும் மாத்திரைகளை உடன் வைத்திருக்கவும். உடல் ஒத்துழையாது என்று தெரியும் பட்சத்தில் பயணம் தொடங்குவதற்கு முன்பே மாத்திரையை உட்கொள்ளலாம்.
- பயணத்தில் தவிர்க்க முடியாமல் வாந்தி எடுத்துவிட்டால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தவும் இயல்பு நிலைக்கு திரும்பவும் முன்னேற்பாடு அவசியம்.
- ஷாப்பிங்கிற்கு தனியாக ஒருநாளை ஒதுக்கி வைத்துவிட்டு காத்திருக்காமல் பிடித்த பொருட்களை கண்டால் உடனடியாக வாங்கிவிடவும்.

சில DON'Ts
- கடற்கரைகளிளிருந்து சிப்பிகள், பவளப்பாறைகளை சேகரிக்க வேண்டாம். எப்படியும் விமான நிலைய சோதனையில் அகப்படுவீர்கள்.
- ஸ்கூபா டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளின் போது கவனமாக இருக்கவும். உதவியாளரின் கட்டளையை மீறி செயல்பட வேண்டாம்.
- கார்பின்’ஸ் கோவ் கடற்கரையில் சில சுற்றுலா பயணிகளை முதலை இழுத்துச்சென்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எச்சரிக்கை !
- நார்த் பே மற்றும் ஜாலிபாய் கடற்கரைகளில் உள்ள பவளப்பாறைகள் மீது கால்வைக்க வேண்டாம். அது அவற்றிற்கும் சமயங்களில் நமக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
- ஆதிவாசிகளை கண்டால் அவர்களை புகைப்படம் எடுக்கவோ, அவர்களுக்கு பொருட்கள் வழங்கவோ முயற்சி செய்ய வேண்டாம். மீறினால் ஜாமீன் கிடைக்காதபடி சிறையில் தள்ளப்படுவீர்கள். உங்களை அழைத்துச்சென்ற சுற்றுலா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.
- குப்பைகளை, குறிப்பாக ப்ளாஸ்டிக் குப்பைகளை போட வேண்டாம். மீறுபவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்றாலும் கூட சுற்றுச்சூழலின் நன்மை கருதி குப்பை போடாமலிருப்பது நல்லது.
- போட்டோ, வீடியோ தடை செய்யப்பட்ட இடங்களில் அவற்றை தவிர்க்கவும்.

பதிவில் விட்டுப்போன சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் கேட்கவும். அது மற்றவர்களுக்கும் உபயோகப்படும் எனில் பதிவில் பிற்சேர்க்கையாக இணைக்கப்படும். தனிப்பட்ட முறையில் ஆலோசனைகள், தொடர்பு எண்கள், பிற தகவல்கள் வேண்டுவோர் என்னுடைய மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். செல்போன் எண்ணிற்கு அழைக்க வேண்டாம். அது பெரும்பாலும் உயிரற்ற நிலையில் தான் இருக்கும்.

அந்தமான் பயணத்தொடருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்த நல் உள்ளங்களுக்கும், போனிலும், மெயிலிலும் நேரிலும் பாராட்டி ஊக்குவித்த நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

22 February 2013

அந்தமான் - ராஸ் / வைபர் / நார்த் பே தீவுகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அந்தமானில் மிக மிக எளிமையாக, குறைந்தபட்ச வழிகாட்டுதலோடு சுற்றி பார்க்கக்கூடிய தீவுகள். ராஜீவ் காந்தி வாட்டர் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் எனும் சிறிய பூங்காவிலிருந்து படகுகள் காலையில் கிளம்பும். நகரின் மையப்பகுதியில் இருந்து பூங்காவிற்கு ஆட்டோவில் செல்ல இருபது அல்லது முப்பது ரூபாய் ஆகலாம். மதிய உணவு உட்பட மூன்று தீவுகளையும் சுற்றிப்பார்க்க 500 ரூபாய் கட்டணம். டிக்கெட் கவுண்ட்டர், கூட்டம் பற்றிய கவலை வேண்டாம். பூங்காவின் முகப்பிலேயே நான்கைந்து தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினர் ஸ்டால் அமைத்து டிக்கெட் தருகிறார்கள். தனித்தனியாக மூன்று தீவுகளையும் கூட சுற்றிப்பார்க்கலாம். ஆனால் அது அவசியமில்லாதது. ஏன் என்று பதிவின் இறுதியில் உங்களுக்கே புரியும். நார்த் பே, ஜலகிரீடைகளின் தலைநகரம் என்பதால் டவல், மாற்றுத்துணி அவசியம் எடுத்துச்செல்லுங்கள். மதுப்பிரியர்கள் தங்கள் தகுதிக்கேற்ப குவாட்டரோ, ஹாஃபோ எடுத்துச்செல்வது சாலச்சிறந்தது. அப்புறம் தேவைப்பட்டால் கேமரா.

நாம் இப்போது பார்க்கப்போகும் மூன்று தீவுகளுமே நிரந்தர வசிப்பிடம் கிடையாது என்பதை நினைவில் கொள்ளவும். இவை சுற்றுலா பயணிகள் காலையிலிருந்து மாலை வரை மட்டுமே அனுமதிக்கப்படும் சிறிய அளவிலான தீவுகள்.

ராஸ் தீவு
போர்ட் ப்ளேரில் இருந்து கண்ணுக்கெட்டிய தூரம், இருபது நிமிட படகு பயணத்தில் ராஸ் தீவு. அங்கே கிட்டத்தட்ட அனைவருமே ரோஸ் ஐலேன்ட் என்றுதான் உச்சரிக்கிறார்கள். சுற்றிப்பார்த்துவிட்டு மறுபடி படகிற்கு வர இரண்டு மணிநேர அவகாசம் கொடுப்பார்கள். அதுவே போதுமானது. தீவை அடைந்ததும் அழகிய மான்குட்டிகள் நம்மை வரவேற்கின்றன. போட்டோ எடுக்க முனைந்தால் மட்டும் மிரண்டு ஓடுகின்றன.

ராஸ் தீவு சுதந்திரத்திற்கு முன்பு அந்தமானின் நிர்வாக தலைமையிடமாக விளங்கிய பகுதி. 1941ல் ஏற்பட்ட நிலநடுக்கம், பின்னர் ஜப்பானிய படையெடுப்பு என்று உருக்குலைந்து விட்டது. அந்த பழைய இடிபாடுகளுடன் கூடிய கட்டடங்கள் தான் தற்போதைய ராஸ் தீவை சுற்றுலா தளமாக வைத்திருக்கிறது. 



பாவம் போக்கிய தேவாலயம்
மருத்துவமனை, தேவாலயம், கல்லறை தோட்டம், அச்சகம், டென்னிஸ் கோர்ட் போன்றவை இருந்திருக்கின்றன என்பதை அங்கிருக்கும் பலகைகளும், எஞ்சியிருக்கும் கட்டிடங்களும் சொல்கின்றன. கெளதம் கார்த்திக் உள்ளங்கையிலிருந்து துளசி பாவத்தை துடைத்துவிடுவாரே அந்த தேவாலயம் இங்குதான் உள்ளது.

இந்த வரலாறெல்லாம் எங்களுக்கு வேண்டாம் பாஸு என்று சொல்லும் கொண்டாட்ட விரும்பிகள் சற்றே மக்கள் மந்தை செல்லும் பாதையிலிருந்து விலகினால் மனித நடமாட்டமில்லாத கடலை அடையலாம். நிர்வாணக்குளியல் போடலாம். காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னைக் காணும்வரை என்று பாடிக்கொண்டே ஆடலாம். ஆனால் இரண்டு மணிநேரங்களுக்குள் மறுபடியும் படகிற்கு வந்துவிடவும்.



ஆளில்லாத கடற்கரையில்...!
வைபர் தீவு
மற்றொரு குட்டி தீவு. இங்கே பதினைந்து நிமிடங்களுக்கு மேல் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. படகு பணியாளே நம்முடன் வந்து வைபர் தீவை பற்றி சிறிய உரை ஒன்றை ஆற்றுவார். அந்த உரையை கேட்ட பலரும் ஒருமுறையாவது “உச்சு” கொட்டுவார்கள். சிலர் கண்ணீரே விடுவார்களாம்.

முதன்முதலாக ஆங்கிலேயர்கள் வைபர் எனும் கப்பலில் இங்கு வந்தடைந்ததாலும், இங்கே வைபர் எனும் விஷப்பாம்புகள் உள்ளதாலும் இப்பெயர் பெற்றுள்ளது. அந்தமான் என்றதுமே நம் நினைவுக்கு வருவது ஜெயில். அந்த ஜெயில் கட்டுவதற்கு முன்பு வரை வைபர் தீவு ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக இருந்துள்ளது. இந்திய விடுதலை போராளிகளை கை, கால்களை பிணைத்து இங்கு விட்டுவிடுவார்களாம். தொடர்ச்சியாக உணவு, குடிநீர் கிடைக்காமல் வெயிலிலும், மழையிலும், குளிரிலும் வாடி, பாம்புகளிடம் கடிப்பட்டு மிகுந்த துயரத்தோடு மடிந்தார்களாம் இந்திய போராளிகள். இதனை சொல்லி முடிக்கும்போது அந்த கைடே சற்று உணர்ச்சிவசப்பட்டு கண்களில் கண்ணீர் வழிய வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் என்று கோஷம் எழுப்பினார்.

மறுபடி படகிற்கு வந்ததும் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படும். விஜிடபிள் பிரியாணி. அதனை அப்புறம் சாப்பிடலாம் என்று பைக்குள் திணிக்காமல் படகிலேயே வைத்து சாப்பிட்டுவிடுவது உசிதம். ஏனெனில், நார்த் பே நிறைய நீர் விளையாட்டுகள் அடங்கிய கொண்டாட்டத்தீவு.



இன்றைய பிணத்தின் மீது நாளைய பிணமொன்று...!
நார்த் பே
அந்தமானில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் நீர் விளையாட்டுகள் மொத்தமாக கிடைக்கப்பெறும் ஒன் ஸ்டாப் ஷாப். இந்த தீவை உங்களுக்கு நன்றாக தெரியும். பழைய இருபது ரூபாய் நோட்டுகளில் தென்னை மரங்களால் சூழப்பட்ட, கலங்கரை விளக்கமாக பொறிக்கப்பட்டிருக்கும். இங்குள்ள தீரச்செயல் வாய்ப்புகளை ஒருநடை பார்த்துவிடுவோம். எளிதான புரிதலுக்காக படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

ஸ்கூபா டைவிங்
டிஸ்கவரி வகையறா சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக உடையை அணிந்துக்கொண்டு மீன்களோடு நீந்திவிட்டு வரலாம். சிறிதளவு நீச்சல் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். கட்டணம் ரூ.4000/-

ஸீ வாக்
நீச்சல் தெரியாதவர்கள் இதனை தேர்ந்தெடுக்கலாம். ஹெல்மெட் மற்றும் பிரத்யேக ஆடையுடன் கடலின் உள்ளே மணல் படுகையில் நடந்து செல்லலாம். கட்டணம் ரூ.2700/-

ஸ்னார்கலிங்
கடலுக்குள் நீந்த வேண்டிய அவசியமில்லை. தலையை மட்டும் நீருக்குள் செலுத்தியபடி மிதக்க வேண்டும். சுவாசத்திற்காக நீர்பரப்பிற்கு மேலிருந்து பிளாஸ்டிக் குழாய் இணைக்கப்பட்டிருக்கும். கடலுக்கு அடியில் உள்ள மீன்களை, பவளப்பாறைகளை ரசிக்கலாம். கட்டணம் ரூ.500/-

பனானா ரைடு
தொலைகாட்சியில் டகேஷி கேஸில் பார்ப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஸ்பீட் போட்டின் பிற்பகுதியில் வாழைப்பழ வடிவ பலூன் இணைக்கப்பட்டிருக்கும். அதன் மீது நால்வரோ, ஐவரோ அமர படகு வேகமெடுக்கும். குறிப்பிட்ட தொலைவு வரை சென்றதும் படகை வேண்டுமென்றே திசைதிருப்பி நம்மை கடலுக்குள் தள்ளிவிடுவார்கள். கட்டணம் ரூ.250/-

ஸ்பீட் போட் & வாட்டர் ஸ்கூட்டர்
ரொம்ப ஸ்பெஷல் இல்லை. குடும்பத்தோடு செல்பவர்கள் ஸ்பீட் போட்டில் பயணிக்கலாம். சாகச விரும்பிகளை போட்டின் கூம்பு வடிவ முற்பகுதியில் அமர்த்தி வேகமெடுக்கிறார்கள். வாட்டர் ஸ்கூட்டரை நிறைய சினிமா பாடல் காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.

குறிப்பிடப்பட்டுள்ள எதற்கும் பயப்பட தேவையில்லை. லைப் ஜாக்கெட் கொடுப்பார்கள். அருகிலேயே நீச்சல் தெரிந்த உதவியாளர்கள் இருப்பார்கள். தேவைப்பட்டால் உடன் வருவார்கள். மேலும் இவையனைத்தும் உங்கள் வாழ்நாளில் ஒருமுறை அனுபவமாக இருக்கக்கூடும். அதனால் தவறவிட்டு பின்னர் வருந்தாமல், குதூகலமாக கும்மியடித்துவிட்டு வாருங்கள்.

உடை மாற்றிக்கொள்ளவும், குளிக்கவும், கழிக்கவும் - தென்னை ஓலையால் மூடப்பட்ட தற்காலிக அறைகள் உள்ளன. தண்ணீரில் ஆட்டம் போட்டதும் பசியெடுக்கும், அதற்கு தகுந்தாற்போல கடல் உணவுகள் கிடைக்கின்றன.

மாலை நாலரை மணிவாக்கில் மறுபடியும் போர்ட் ப்ளேருக்கு வந்துவிடலாம். படகில் எங்களோடு ஒரு தமிழ்க்குடும்பம் பயணித்தது. வழக்கமாக குழந்தைகளுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. எனக்கும் குழந்தைகளோடு இணக்கமாக பழகத் தெரியாது. அவர்கள் வீட்டுக்குழந்தை அநியாயத்திற்கு என்னுடன் ஒட்டிக்கொண்டது. என்னுடைய நீளமான கைவிரல் நகத்தை தொட்டுபார்த்துக்கொண்டே இருந்தது. போர்ட் ப்ளேர் திரும்பியதும் அவர்களிடமிருந்து விடைபெற, குழந்தை என் கரங்களை பற்றிக்கொண்டு ஒரே அடம். கொஞ்சம் சிரமப்பட்டு தான் வசிப்பிடம் திரும்பினேன்.

அடுத்ததாக நாம் காணவிருப்பது பழங்குடியினர் வசிக்கும் பகுதியை கடந்து செல்ல வேண்டிய பாராடங்...!

தொடரும்


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment