Showing posts with label islands. Show all posts
Showing posts with label islands. Show all posts

12 April 2013

அந்தமான் பயணம் - தகவல்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


அந்தமான் தொடர் ஒருவழியாக நிறைவுக்கு வந்துவிட்டது. படிப்பவர்களுக்கு எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. எனக்கு நிம்மதியாக இருக்கிறது. இனி எழுதியே ஆகவேண்டுமென பின்னிரவில் அமர்ந்து அரைத்தூக்கத்தில் தட்டச்ச தேவையில்லை. கீழ்காணும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் தொடரை முழுமையாக வாசித்து வந்தவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் பயன் பெறலாம்.

சீசன்:
அந்தமானில் டிசம்பர் துவங்கி மே மாதம் வரை சீசன். மற்ற மாதங்களில் சென்றால் என்ன என்று கேட்கலாம் - மழை பெய்து உங்கள் சுற்றுலா திட்டத்தை கலைக்கலாம், முன்னறிவிப்பின்றி உள்ளூர் கப்பல்கள் ரத்து செய்யப்படலாம். அதற்கு மேல், சில தீவுகள் சீசன் தவிர்த்து மற்ற காலகட்டத்தில் பராமரிப்பிற்காக பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும். க்ளைமேட்டை பொறுத்தவரையில் அதிக வெயிலுமில்லாமல் குளிருமில்லாமல் மிதமாகவே இருக்கும்.

பயணம்:
கப்பலில் சென்றால் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் வரை செலவாகும். பயண நேரத்தில் முழுமையாக மூன்று நாட்கள் கழிந்துவிடும். விமானச்செலவு நான்காயிரத்தில் தொடங்கி சமயங்களில் பதினெட்டாயிரம் வரை கூட செலவாகலாம். விமான கட்டணத்தை பொறுத்தவரையில் எவ்வளவு நாட்கள் முன்கூட்டியே பதிவு செய்கிறோமோ அதற்கு தகுந்தபடி விலை வேறுபடும். சனி, ஞாயிறுகளில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும். சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிடுவது நல்லது. பயண நேரம் இரண்டு மணி நேரம் பத்து நிமிடம்.

தங்குமிடம்:
ஏசி இல்லாத அறைகள் எனில் நாள்வாடகை அறுநூறிலிருந்து துவங்கும். ஏசி அறை வாடகைகள் ஆயிரத்திலிருந்து துவங்குகிறது. முடிந்தவரையில் போர்ட் ப்ளேரின் மையப்பகுதியில், அதாவது அபெர்டீன் பஜார், செல்லுலர் ஜெயில் அருகில் அறை எடுத்துக்கொள்வது சுற்றிப்பார்க்க வசதியாக இருக்கும். நான் வசித்த பகுதியின் பெயர், தெலானிப்பூர். அங்கே ஹாலிடே-இன் என்கிற தரமான ஏசி ஹோட்டல், எதிரிலேயே தர்பார் ஹோட்டல், ஆட்டோ ஸ்டாண்ட், மதுக்கூடம் என சகலவசதிகளும் உள்ளன.

எத்தனை நாள் தேவை ?
முந்தய பதிவொன்றில் குறிப்பிட்டது போல, அந்தமான் முழுவதையும் சுற்றிப்பார்க்க மாதங்கள் ஆகக்கூடும். லகரங்களில் செலவு செய்ய வேண்டி வரும். முக்கியமான சில இடங்களை மட்டும் தேர்வு செய்து சுற்றிப்பார்க்கலாம். இங்கிருந்து பயணம் செய்யும் நாளை ஓய்வாக கழிக்கலாம், அங்கே சுற்றிப்பார்க்க ஆறு நாட்கள், திரும்பவும் அங்கிருந்து பயணிக்க வேண்டிய நாள் - மொத்தமாக எட்டு நாட்கள் இருந்தால் மனநிறைவாக சுற்றிவரலாம். ஆறு அல்லது ஏழு நாட்கள் கைவசம் இருக்கும்போது சில இடங்களை தவிர்த்துவிடலாம். அதை விடவும் குறைவான நாட்கள் வைத்திருப்பவர்கள் அந்தமான் செல்வதையே தவிர்த்துவிடலாம்.

சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்:
நாள் 1: சென்னை - போர்ட் ப்ளேர் விமானப்பயணம் - ஓய்வு - மாலையில் கார்பன்'ஸ் கோவ் கடற்கரை
நாள் 2: போர்ட் ப்ளேர் சிட்டி டூர் (சாத்தம் ஸா மில், ஃபாரஸ்ட் மியூசியம், சாமுத்ரிகா மியூசியம், ZSI மியூசியம், அந்த்ரோபாலஜிக்கல் மியூசியம், மீன் காட்சியகம், அறிவியலகம், காந்தி பூங்கா, செல்லுலர் ஜெயில்)
நாள் 3: ராஸ் / வைபர் / நார்த் பே தீவுகள்
நாள் 4: பாராடங் சுண்ணக்குகைகள், மட் வால்கேனோ
நாள் 5: ஹேவ்லாக் - ராதாநகர், எலிபேண்ட் கடற்கரைகள்
நாள் 6: ஜாலிபாய், வண்டூர் கடற்கரை
நாள் 7: மவுண்ட் ஹேரியட் & சிடியா டாப்பு கடற்கரை
நாள் 8: பயண நிறைவு - சென்னை திரும்புதல்

பட்ஜெட் (இரண்டு நபர்களுக்கு)
பயணச்செலவு (Up and Down) : Rs.18000 - 32000
தங்குமிடம் (7 நாட்களுக்கு): Rs. 7000 - 10000
சுற்றுலா செலவு: Rs.12000 - 20000
இதர செலவுகள்: Rs.5000

மொத்தத்தில் இரண்டு நபர்களுக்கு செலவு நாற்பதாயிரத்தில் துவங்கி எழுபதாயிரம் வரை ஆகலாம்.

சில டிப்ஸ்
- அந்தமானில் திங்களன்று அருங்காட்சியகங்கள் விடுமுறை. எனவே போர்ட் ப்ளேர் சிட்டி டூர் திங்களில் அமையாதவாறு பார்த்துக்கொள்ளவும். போலவே ராஸ் ஐலேண்ட் புதன் விடுமுறை. எனவே நாட்களை சரியாக திட்டமிடவும்.
- எங்கு சென்றாலும் ஒரு பையில் மாற்றுத்துணி, டவல் மற்றும் குடிநீர் பாட்டில் வைத்துக்கொள்ளவும். நம்மின மக்கள் உற்சாக பானமும் !
- ராஸ் / வைபர் / நார்த் பே தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இத்தனை மணிக்கு மறுபடியும் படகிற்கு வரவேண்டும் என சொல்லி அனுப்புவார்கள். அதனை சரியாக பின்பற்றவும்.
- Avomine போன்ற கடல் நோய்மை தவிர்க்கும் மாத்திரைகளை உடன் வைத்திருக்கவும். உடல் ஒத்துழையாது என்று தெரியும் பட்சத்தில் பயணம் தொடங்குவதற்கு முன்பே மாத்திரையை உட்கொள்ளலாம்.
- பயணத்தில் தவிர்க்க முடியாமல் வாந்தி எடுத்துவிட்டால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தவும் இயல்பு நிலைக்கு திரும்பவும் முன்னேற்பாடு அவசியம்.
- ஷாப்பிங்கிற்கு தனியாக ஒருநாளை ஒதுக்கி வைத்துவிட்டு காத்திருக்காமல் பிடித்த பொருட்களை கண்டால் உடனடியாக வாங்கிவிடவும்.

சில DON'Ts
- கடற்கரைகளிளிருந்து சிப்பிகள், பவளப்பாறைகளை சேகரிக்க வேண்டாம். எப்படியும் விமான நிலைய சோதனையில் அகப்படுவீர்கள்.
- ஸ்கூபா டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளின் போது கவனமாக இருக்கவும். உதவியாளரின் கட்டளையை மீறி செயல்பட வேண்டாம்.
- கார்பின்’ஸ் கோவ் கடற்கரையில் சில சுற்றுலா பயணிகளை முதலை இழுத்துச்சென்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எச்சரிக்கை !
- நார்த் பே மற்றும் ஜாலிபாய் கடற்கரைகளில் உள்ள பவளப்பாறைகள் மீது கால்வைக்க வேண்டாம். அது அவற்றிற்கும் சமயங்களில் நமக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
- ஆதிவாசிகளை கண்டால் அவர்களை புகைப்படம் எடுக்கவோ, அவர்களுக்கு பொருட்கள் வழங்கவோ முயற்சி செய்ய வேண்டாம். மீறினால் ஜாமீன் கிடைக்காதபடி சிறையில் தள்ளப்படுவீர்கள். உங்களை அழைத்துச்சென்ற சுற்றுலா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.
- குப்பைகளை, குறிப்பாக ப்ளாஸ்டிக் குப்பைகளை போட வேண்டாம். மீறுபவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்றாலும் கூட சுற்றுச்சூழலின் நன்மை கருதி குப்பை போடாமலிருப்பது நல்லது.
- போட்டோ, வீடியோ தடை செய்யப்பட்ட இடங்களில் அவற்றை தவிர்க்கவும்.

பதிவில் விட்டுப்போன சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் கேட்கவும். அது மற்றவர்களுக்கும் உபயோகப்படும் எனில் பதிவில் பிற்சேர்க்கையாக இணைக்கப்படும். தனிப்பட்ட முறையில் ஆலோசனைகள், தொடர்பு எண்கள், பிற தகவல்கள் வேண்டுவோர் என்னுடைய மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். செல்போன் எண்ணிற்கு அழைக்க வேண்டாம். அது பெரும்பாலும் உயிரற்ற நிலையில் தான் இருக்கும்.

அந்தமான் பயணத்தொடருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்த நல் உள்ளங்களுக்கும், போனிலும், மெயிலிலும் நேரிலும் பாராட்டி ஊக்குவித்த நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 April 2013

அந்தமானில் நிறைவு நாள் - விமானப்பயணம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கிட்டத்தட்ட பயணத்தொடரின் இறுதிக்கு வந்துவிட்டோம். கடைசியாக ஒருநாள் ஓய்வாக குடித்துக் களிக்கலாம் என்று திட்டமிட்டு வைத்திருந்தபோது நம் பயண கர்த்தா நம்மை அழைத்து, மவுண்ட். ஹேரியட் - சிடியா டாப்பு போயிட்டு வாங்க சார்... என்று அன்பொழுக கேட்டார். பணம் எதுவும் வாங்கவில்லை. வாங்குவதாக இருப்பின் ஐநூறு ரூபாய் வாங்கியிருக்கக்கூடும். காலை சிற்றுண்டி முடித்துக்கொண்டு மதிய உணவை பார்சல் கட்டிக்கொண்டு கிளம்பினோம். முந்தய பதிவொன்றில் கண்ட சாத்தம் படகுத்துறையில் இருந்து சிறிய கப்பலொன்றில் புறப்பட்டோம். இருபது நிமிடப் பயணம். அதன்பின்பு சிறிது நேர மகிழ்வுந்து.


மவுண்ட் ஹேரியட் - பெயரைக் கேட்டதும் ஏதோ எவரெஸ்ட், கிளிமாஞ்சாரோ ரேஞ்சுக்கு நினைத்து வைத்திருந்தேன். ஹேரியட் டெயிலர் என்கிற துரையம்மாவின் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. 365மீ உயரம். எவரெஸ்டின் ஐந்து சதவிகிதம் கூட கிடையாது, எனினும் அந்தமானிலேயே உயரமான மலை. எரிமலை குழம்பு ஏதோ காணக் கிடைக்கப்போகிறது என்று நினைத்தவனுக்கு மறுபடியும் ஏமாற்றம் தான்; காரக்குழம்பு கூட கிடைக்கவில்லை. உண்மையில் அது காட்டுப்பகுதியில் ‘வியூ பாயிண்டுகள்' எல்லாம் வைத்து அமைக்கப்பட்ட சிறு பூங்கா. ஆனால் இயற்கை இயற்கையாகவே இருக்கக்கூடிய பகுதி. அமைதியான சூழல், அதனை லேசாக குலைக்க முயலும் பறவையின் கூக்குரல், அலாதியான காற்று என்று நாற்பதை கடந்தவர்களுக்கு உகந்த சூழல்.

சிடியா டாப்பு - என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமென்று தெரியவில்லை. இது மறுபடியும் ஒரு கடற்கரை பகுதி. கடற்கரைக்கு செல்வதற்கு முன்பு உயிரியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. ஆனால் அதன் கட்டுமான பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. சிலவகை முதலைகள், மான்கள், குரங்குகள் மாத்திரம் காணக் கிடைக்கின்றன. அங்கிருந்து சுமார் இரண்டரை கி.மீ மேடுபள்ளங்கள் தாண்டி பயணித்தால் சிடியா டாப்பு கடற்கரை. இந்த கடற்கரைக்கு மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் சென்றால் விஷுவல் ட்ரீட். மற்ற கடற்கரைகள் போல பெரிய ஆரவாரங்கள் இருக்காது. குடும்ப பாங்கான கடற்கரை. SLR கேமராக்காரர்களுக்கு சர்க்கரை பொங்கல்.


அபெர்டீன் பஜார் - போர்ட் ப்ளேரின் அங்காடித்தெரு. அந்தமான் மக்களை பொறுத்தவரையில் பஜாரில் எல்லாமே கிடைக்கும் என்ற நிலை இருந்தாலும், சுற்றுலாப்பயணிகளுக்கு அது சரிப்பட்டு வராது. ஏனெனில் பஜாரில் விற்கப்படும் பெரும்பாலான பொருட்கள் துணைக்கண்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுபவை. விலை அதிகம், தரம் எதிர்பார்க்க முடியாது. தவிர, திருநெல்வேலி அல்வா, சேலத்து மாம்பழம், சாத்தூர் காராசேவு போல அந்தமானுக்கென்று ஸ்பெஷல் எதுவும் கிடையாது. சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் கடைசி நாளில் ஷாப்பிங் செய்யலாம் என்று ஒரு எண்ணம் வைத்திருப்பார்கள். அந்தமானை பொறுத்தவரையில் பிடித்த பொருளை சுற்றுலா தளங்களில் பார்த்தால் உடனே வாங்கிவிடுவது உத்தமம்.


அந்தவகையில் அந்தமானில் இருந்து வாங்கிவர உகந்த சில பொருட்கள் - அந்தமான் கடற்கரையின் படங்கள் பொறித்த டீ-ஷர்ட், மரத்தில் செய்யப்பட்ட ஜரவா பொம்மைகள், சிப்பியில் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள். என்னுடைய கொள்முதலாக பன்னிரண்டு ஜரவா பொம்மைகளை வாங்கிவந்து உறவினர் இல்லங்களுக்கு கொடுத்தேன்.

*************************


அந்தமானை விட்டு பிரிய வேண்டிய நேரம் வந்தது. நீண்ட விடுமுறைக்குப்பின் பள்ளி செல்லும் மழலையின் மனநிலையில் தான் இருந்தேன். அதைவிட முதல் விமானப்பயணம் என்கிற படபடப்பு. ஏர் சிக்நெஸ் என்று கூகிளில் போட்டு தேடிக்கொண்டிருந்தேன். அன்றைய தினம் டிசம்பர் 26. சுனாமி நாள். நகரில் அதற்கான நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. என்னுடைய விமான நேரம் காலை பதினோரு மணி. கோ ஏர். ஒன்பதரை மணிக்கெல்லாம் நிலையத்திற்கு சென்று அமர்ந்துவிட்டேன். விமான நிலையத்திற்கு கூட வீர சவார்க்கரின் பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள். அந்தமானுக்கு கோ ஏர், ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா - ஆகிய நான்கு விமான சேவைகள் மட்டுமே உள்ளன. மலிவான மன நிறைவிற்கு கோ ஏரை தேர்ந்தெடுக்கலாம்.


என்னுடைய மூட்டை முடிச்சுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. எனக்கு முன்னர் பரிசோதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடற்கரையில் இருந்து சில அரிய வகை சிப்பிகளை பொறுக்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள்; ஸ்கேனிங் கருவி காட்டி கொடுத்துவிட்டது. விமான நிலைய பணியாட்களுக்கு தமிழ் தெரியாததால் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் சந்தேகங்களை கேட்டுக்கொண்டேன். என்னுடைய மூட்டை முடிச்சுகளையெல்லாம் சென்னைக்கு கொண்டு வந்திடுவீங்க தானே என்று நான்காவது முறை கேட்டபோதும் அவள் உதிர்த்த புன்னகை அழகாகத்தான் இருந்தது. பயணம் தொடங்க பதினைந்து நிமிடங்களே இருந்தன. பேருந்து ஒன்று எங்களை விமானத்திற்கு அருகாமையில் கொண்டு சென்றது.


வானில், வெகு தொலைவில் மட்டுமே பார்த்து ரசித்த விமானம். பழவந்தாங்கல், பரங்கிமலை பக்கம் விமானம் சற்று தாழ்வாக பறந்தாலே பரவசமடைவேன். அது இப்போது சில அடிகள் தொலைவில் நின்றுக்கொண்டிருக்கிறது. நான் அதில் பயணிக்கப்போகிறேன். விமானம் ஏறுவதற்கு முன்பே பறந்துக்கொண்டு தான் இருந்தேன். விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டோம். தடதடவென படியேறினேன் - சென்னையில் கப்பலேறிய அதே வேகத்துடன். ஜன்னலோர இருக்கை வாய்த்திருந்தது. அலைபேசியில் உள்ள ஃப்ளைட் மோடை முதன்முறையாக பயன்படுத்தி பெருமை அடைந்தேன். எத்தனை சினிமாக்களில் சீட் பெல்ட் காமெடி பார்த்திருப்போம். அவ்வளவையும் பார்த்தும்கூட சீட் பெல்ட் மாட்டத்தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் நயன்தாராவோ, ஹன்சிகாவோ குறைந்தபட்சம் தனிஷ்கா முகர்ஜியாவது அமர்ந்திருந்தால் உதவி கேட்டிருக்கலாம். கெரகம், ஒரு வட இந்திய சோம்பப்டி அமர்ந்திருந்தான். பெருமுயற்சி எடுத்து இறுதியில் நானே அணிந்துக்கொண்டேன்.

கழுகுப்பார்வையில் அந்தமான் தீவுகள்

மணி பதினொன்றை தாண்டி சில நிமிடங்கள் ஆகியிருந்தது. விமானம் இடமும், வலமுமாக திரும்பி ஏதோ விளையாடிக்கொண்டிருந்தது. திடீரென ரன்வேயில் நுழைந்து தடதடத்து உயரே எழும்பியது. அந்தமான் தீவுகளை விட்டு கடந்த சில நிமிடங்கள் கண்கொள்ளா காட்சி. கழுகுப்பார்வையில் குட்டி குட்டியாக தீவுகள் ! அதன்பிறகு கீழே வெண்பஞ்சு மேகங்களை தவிர வேறொன்றும் தெரியவில்லை. மேகங்களுக்கு இடையில் கூட எதுவும் தெரியவில்லை. ரிலேடிவ் ஸ்பீட் என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. அதிவேக ரயிலில் செல்லும்போது வெளியே இருக்கும் மரம், செடி கொடிகளை பார்க்கும்போது தான் ரயிலின் வேகம் தெரியும். அருகிலேயே இன்னொரு அதிவேக ரயில் அதே வேகத்தில் பயணித்தால் இரண்டு ரயில்களும் நின்றுக்கொண்டிருப்பது போலவே தோன்றும். போலவே மிக மிக தொலைவில் பார்த்து பழக்கப்பட்ட மேகங்களை மிக அருகில் பார்ப்பதாலோ என்னவோ விமானம் ஏதோ அந்தரத்தில் நின்றுக்கொண்டிருப்பதாகவே தோன்றியது.

சிங்கார சென்னை
சென்னையை அடைய வேண்டிய நேரத்திற்கு பதினைந்து நிமிடங்கள் மட்டுமே இருந்தன. ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டே இருந்தேன். தீப்பெட்டி சைஸில் ஒரு பொருள் கீழே தெரிந்தது. ஹார்பரில் நிற்கும் கப்பல் என்று சோம்பப்டி அவனுடைய புது மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சொன்னது சரிதான், மெரீனாவின் விசாலமான கரையை கடந்து விமானம் சென்னைக்குள் நுழைந்துக்கொண்டிருந்தது. தரையிறங்கும் போது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்குமோ ? பரமசிவன் படத்தில் லைலா முருகா முருகா என்று முனங்குவாரே. மறுபடியும் விமானம் இடமும் வலமுமாக ஏதோ ஆட்டம் காட்டி சின்ன ஜெர்க் கூட இல்லாமல் வெற்றிகரமாக தரையிறங்கிவிட்டது. முதல் வேலையாக அந்தமான் அங்கிளுக்கு போனை போட்டு கோட்டான கோடி நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.


விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் முதலில் தோன்றிய உணர்வு - யப்பா என்னா வெய்யிலு !


அடுத்து வருவது: அந்தமான் பயணம் - அசத்தல் டிப்ஸ்


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 April 2013

அந்தமான் - ஹேவ்லாக் கடற்கரைகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அந்தமானை நோக்கிய என்னுடைய கப்பல் பயணத்தில், ஒரு வெள்ளைக்கார சோடியை பார்த்து உள்ளூர்வாசி சொன்னது, “இவுகல்லாம் ஹேவ்லாக் போயி அவுத்துப்போட்டு படுத்துக்குவாக...”. அப்போதிலிருந்தே என்னுடைய மனது அந்த ஒற்றைச் சொல்லை கவனமாக பற்றிக்கொண்டது - ஹேவ்லாக். அந்தமானில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து “சந்தைக்கு போகணும் காசு கொடு...” என்று சொல்லும் சப்பாணி போல, எப்ப பாஸ் ஹேவ்லாக்குக்கு அனுப்பி வைப்பீங்க என்று டிராவல் ஏஜென்ட்டை நச்சரித்துக்கொண்டே இருந்தேன்.

ஹேவ்லாக் நம் கவலைகளுக்கான பூட்டு ! அந்தமான் தீவுகளிலேயே போர்ட் ப்ளேர் தவிர்த்து வெளிநாட்டவர் தங்குவதற்கு அனுமதிக்கப்படும் ஒரே தீவு - ஹேவ்லாக். அதனாலேயே ஹேவ்லாக் கடற்கரைகள் பிகினி மயமாகவும் பிறந்தமேனியாகவும் காட்சியளிக்கின்றன. கொண்டாட்ட விரும்பிகள், தேனிலவு தம்பதிகள் ஹேவ்லாக்கில் ஒரு இரவாவது தங்கி விரிவாக சுற்றிப்பார்ப்பது உகந்தது. அந்தமான் சுற்றுப்பயணம் முழுவதையும் ஹேவ்லாக்கில் மட்டுமே செலவளிப்போரும் உண்டு.

கொஞ்சம் மெனக்கெட்டால் டிராவல் ஏஜெண்டுகளின் தலையீடு இல்லாமல் ஹேவ்லாக் சென்றுவரலாம். போர்ட் ப்ளேரில் இருந்து ஹேவ்லாக் செல்வதற்கு அரசாங்க கப்பல் பம்பூகாவும் தனியார் கப்பல் மாக்ரூஸும் இருக்கின்றன. பம்பூகாவில் டிக்கெட் விலை 250ரூ. மாக்ரூஸில் 900ரூ. உங்கள் டிராவல் ஏஜெண்ட் உங்களிடம் சீசன்  உச்சத்தில் இருப்பதால் அரசாங்க கப்பலில் டிக்கெட் கிடைக்காது என்று காதில் பூ சுற்ற முயற்சிப்பார். ஏமாற வேண்டாம். உண்மையில் பம்பூகா பாதியளவு கூட நிரம்புவதில்லை. தரமான இருக்கைகள், தொலைகாட்சி, கேண்டீன், துரித வேகம் என்று தனியார் கப்பலில் சில வசதிகள் இருப்பது உண்மைதான். என்னைப்பொறுத்தவரையில் போர்ட் ப்ளேரில் இருந்து ஹேவ்லாக் செல்லும்போது அரசாங்க கப்பலிலும் திரும்பிவரும்போது தனியார் கப்பலை நாடுவதும் சாலச்சிறந்தது. முந்தய பத்தியில் குறிப்பிட்ட தரப்பினர் தவிர்த்து மற்றவர்கள் காலையில் கிளம்பி மாலையில் திரும்பிவிடலாம்.

போர்ட் ப்ளேரிலிருந்து ஹேவ்லாக் செல்வதற்கு ஹெலிகாப்டர், ஸீ ப்ளேன் சேவைகள் கூட உள்ளன. சராசரி கட்டணம் தான். ஆனால் செல்வாக்கு உள்ள ஆட்களுக்கு மட்டுமே வாய்க்கும் என்று நினைக்கிறேன்.

ஹேவ்லாக்கில் மொத்தம் ஏழு கடற்கரைகள் உள்ளன, எனினும் அவற்றில் இரண்டு மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு உகந்தது. ராதா நகர் கடற்கரை- ஆசியாவிலேயே தலைசிறந்தது என்று 2004ல் டைம்ஸ் மேகஸின் அறிவித்த கடற்கரை. ஹேவ்லாக் படகுத்துறையிலிருந்து 11கி.மீ தொலைவில் ராதாநகர் கடற்கரை அமைந்துள்ளது. ஆட்டோ பிடித்துக்கொள்ளலாம். இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு கிடைக்கும், எனினும் அது தேவையற்றது. ஹேவ்லாக்கை பொறுத்தவரையில் வெட்கம் என்னும் கருமத்தை களைந்துவிடுவது நல்லது, கூடவே ஆடைகளையும், உங்களுடையதை தான். அபத்தமாக சூரியனை உள்ளங்கையில் பிடித்திருப்பது போல போட்டோவெல்லாம் எடுக்க வேண்டாம். ஜஸ்ட் என்சாய் ! கடலலை லேசாக உடலை நனைத்துவிட்டு செல்கிறபடி, மணலில் மல்லாக்கப் படுத்துக்கொள்ளுங்கள் - கடவுளை காணலாம்.

நான் ராதாநகர் கடற்கரைக்கு சென்றபோது மணி மாலை ஐந்தை நெருங்கியிருந்தது. சூரியன் மறைகிற தருணம். நிறைய பேர் SLR கேமராவை வைத்து திருகிக்கொண்டிருந்தார்கள். அருகிலேயே ஒரு ரிக்கி பாண்டிங் ஒரு துரையம்மாவின் இதழை சுவைத்துக்கொண்டிருந்தான். இந்தியா ஏன் இதுவரை வல்லரசு ஆகவில்லை என்ற உண்மை உரைத்தது. அப்படியே அலைகளை தொட்டபடி ஒரு நடை நடந்தேன். ஒரு பிகினி மங்கை குப்புற படுத்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள். அவள் புட்டத்தில் ஒட்டியிருந்த ஈரமணல் கொஞ்சம் கொஞ்சமாக காய்ந்துக்கொண்டிருந்தது. அந்த தருணம்... திருவள்ளுவர் ஏதோ சொல்லியிருக்கிறாரே, ஆங் உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே உலக்கை... என்ன எழவோ, அப்படித்தான் ஆகியிருந்தது என்னுடைய நிலை. மீண்டும் என் உணர்வுகளை சமநிலைக்கு கொண்டுவர நேரம் பிடித்தது.

ராதாநகர் கடற்கரையிலிருந்து மீண்டும் படகுத்துறைக்கோ அல்லது அறைக்கோ செல்லும்வழியில் மூன்று கி.மீ தொலைவில் எலிபேண்ட் பீச்சுக்கு செல்வதற்கான குறுக்குப்பாதை அமைந்துள்ளது. வாகனங்கள் செல்ல முடியாது. காட்டுவழிப்பாதையாக சில கி.மீ நடந்து சென்றால் எலிபேண்ட் கடற்கரையை சென்றடையலாம். சில வருடங்கள் முன்பு வரை இங்கே யானை சவாரி நடைபெறும் என்று சொல்கிறார்கள். மற்றபடி முந்தய பதிவுகளில் சொன்ன ஸ்கூபா டைவிங், ஸ்னார்கலிங் வகையறா விளையாட்டுகள் ஹேவ்லாக்கிலும் உண்டு. ஹேவ்லாக் படகுத்துறை - ராதாநகர் பீச் - எலிபேண்ட் பீச் : எளிய புரிதலுக்காக கூகுள் மேப்.

தங்குமிடங்களை பொறுத்தவரையில் ஹேவ்லாக்கில் நிறைய ஆப்ஷன்கள் உள்ளன. நான் ஹேவ்லாக் சென்ற சமயம், என்னுடைய பயணத்தின் கடைசி நாட்கள். ஏற்கனவே என்னுடைய ஏ.டி.ம். கறவை மாட்டின் மடி வற்றியிருந்தது. எனவே ட்ராவல் ஏஜெண்டிடம் பாடாவதி லாட்ஜாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி வைத்திருந்தேன். அந்த வசந்த மாளிகையின் பெயர் பிலாஷி லாட்ஜ். ம்ம்ம் குடிபோதையில் உள்ள ஒருவன் படுத்து உறங்குவதற்கு போதுமானதாகவே இருந்தது. இருப்பினும் கரப்பான்களுக்கு பயந்து இரவெல்லாம் மின்விளக்குகளை எரியவிட்டு, தொலைக்காட்சியை சத்தமாக வைத்துக்கொண்டு தூங்கிய கதையை தனி அத்தியாயமாகத்தான் எழுத வேண்டும்.

மிக முக்கியமான தகவலை மறந்துவிட்டேன்; ஹேவ்லாக் செல்லும்போது ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ஒரு ஃபுல் பாட்டில் சரக்காவது வாங்கிச் செல்லுங்கள். மக்கள் வசிக்கும் பகுதிதானே, மதுக்கூடம் இருக்கும் என்று நம்பி சென்றுவிட்டேன். இருந்தது. மூன்று கி.மீ ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றார்கள். அதையும் செய்தேன். சலூன் கடை அளவில் உள்ள மிகச்சிறிய இடம். டேபிள் எல்லாம் இல்லை. கடைக்காரர் ஊற்றிக்கொடுப்பார். அப்படியே வாங்கி குடிக்க வேண்டியது தான். சைட் டிஷ் எல்லாம் ஊற்றிக்கொடுப்பவரின் முன்னே இறைந்துக்கிடக்கும். அள்ளி வள்ளு வதக்கு'ன்னு வாயில போட்டுக்க வேண்டியது தான். ஒரு தனி மனிதனாக இதுபோன்ற அனுபவங்களை நான் ரசித்து ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் வருத்தப்பட்டு பாரம் சுமக்க விரும்பாதவர்கள் சரக்குபுட்டியை போர்ட் ப்ளேரிலிருந்து சுமக்கலாம். அடுத்தது, உணவகங்கள். கிட்டத்தட்ட இரவு எட்டரை மணிக்கெல்லாம் எல்லோரும் கடையை சாத்திவிடுகின்றனர். எனவே தாமதிப்பது உகந்ததல்ல. மதுக்கூடத்திற்கு அருக சில பெங்காலிகளின் வீட்டுவாசலில் டேபிள் சேரெல்லாம் போட்டு உணவு பரிமாறுகிறார்கள். அவற்றை தவிர்த்தால் படகுத்துறைக்கு அருகில் வழக்கம்போல பொரொட்டா, ஃபிரைட் ரைஸ் விற்கும் உணவகங்கள் உள்ளன.

என்னடா ரெண்டு பீச்சு தானே இருக்கு என்று தோன்றலாம். ஹேவ்லாக் என்பது ஒரு உணர்ச்சி. அதனை வார்த்தைகளால் புரிய வைப்பது கடினம். பழமொழி சொன்னா அனுபவிக்கணும் என்று சொல்வதுபோல ஹேவ்லாக்கையெல்லாம் அனுபவிக்கணும் !

பி.கு: அந்தமான் தொடர் இழுத்துக்கொண்டே செல்கிறதே; எப்பதான் முடிப்பீங்க'ன்னு ஒரு நண்பர் கேட்டிருந்தார். இன்னும் இரண்டு கட்டுரைகள் உள்ளன.

படங்கள்: கூகுள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 April 2013

அந்தமான் - போர்ட் ப்ளேர் நகருலா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அந்தமானில் பிற தீவுகள் தவிர்த்து போர்ட் ப்ளேரிலேயே பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கின்றன. சொல்லப்போனால் முன்னுரிமை கொடுக்கவேண்டியவை. காரணம் இந்த இடங்களை சுற்றிப்பார்க்கும்போது உங்களுக்கு அந்தமானை பற்றி நிறைய தகவல்கள் கிடைக்கும். எஞ்சியிருக்கிற பயணத்தை எப்படி திட்டமிடலாம் என்கிற எண்ணம் கிடைக்கும். நினைவிருக்கட்டும் என்னுடைய கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டுள்ள இடங்கள் தவிர்த்து அந்தமானில் நிறைய சுற்றுலா தளங்கள் உள்ளன. மொத்தத்தையும் சுற்றிப்பார்க்க மாதங்கள் ஆகலாம். எனவே சரியான தேர்வு, திட்டமிடல் அவசியமாகிறது. அதனால் அந்தமான் சுற்றுலாவின் முதல்நாளாக போர்ட் ப்ளேர் நகருலாவை வைத்துக்கொள்வது உகந்தது.

டூர் ஏஜெண்டுகளை அணுக வேண்டிய அவசியமில்லை. பத்தடிக்கு ஒன்றாக இருக்கும் ஏதாவதொரு டிராவல்ஸில் இருந்து நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஒரு காரை புக் செய்துக்கொள்ளவும் அல்லது ஆட்டோ ஒன்றை டிரைவரோடு சேர்த்து வாடகைக்கு பிடித்துக்கொள்ளவும். மாற்றுத்துணி எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் முழுக்க முழுக்க தகவல் சார்ந்தது என்பதால் விருப்பமிருந்தால் குறிப்பெடுக்க நோட்டு - பேனா எடுத்துச்செல்லலாம். காலை எட்டு மணிக்கு டிபனை முடித்துவிட்டு கிளம்புவது உத்தமம்.

சாத்தம் மர-அறுவை தொழிற்சாலை
சாத்தம் என்கிற தனித்தீவில் அமைந்துள்ள வரலாற்று பெருமைகள் நிறைந்த தொழிற்சாலை. அந்தமான் தீவுகளிலேயே பாலத்தால் இணைக்கப்பட்ட ஒரே தீவு. ஆசியாவின் பழமையான தொழிற்சாலைகளுள் ஒன்று. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் குண்டுமழை பொழிந்த இடம். தொழிற்சாலையில் இன்னமும் போர்த்தளும்புகள் இருக்கின்றன. நிறைய தமிழ் தொழிலாளிகள் தென்படுகின்றனர். அவர்களிடம் அன்பு என்ற சமாச்சாரத்தை கொஞ்சம் காட்டினால் போதும், அவர்களாகவே முன்வந்து உங்களுக்கு தொழிற்சாலையை சுற்றிக்காட்டி அங்கு நடைபெறும் பணிகளை விளக்குவார்கள். தொழிற்சாலை வாயிலில் அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. தொழிற்சாலையை பற்றியும் ஜப்பானிய படையெடுப்பை பற்றிய தகவல்கள் ஆங்கே தொகுக்கப்பட்டுள்ளது. மரத்தில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

சாமுத்ரிகா அருங்காட்சியகம்
இந்திய கடற்படையின் பராமரிப்பின் கீழ் உள்ள அருங்காட்சியகம். வாயிலிலேயே பிரம்மாண்ட திமிங்கலத்தின் எலும்புக்கூடு வரவேற்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் அந்தமானின் வரலாறு மற்றும் புவியியல் சார்ந்த தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம். மேலும் அந்தமானின் கடல்வளங்கள், மீன்கள், பவளப்பாறைகள் பற்றிய தகவல்களும் அடக்கம். சாமுத்ரிகாவின் எதிரிலேயே உயிரியல் அருங்காட்சியம் ஒன்றும் அமைந்துள்ளது. சரியான திட்டமிடல் காரணமாக அங்கே செல்ல முடியவில்லை. பெயரின்படி அந்தமானின் உயிரியல் வளங்கள், அரிய வகை முதலைகள், ஆமைகள் பற்றிய தகவல்கள் அங்கே இருக்கலாம்.

மனிதவியல் அருங்காட்சியகம்
அந்தமானில் அவசியம் பார்க்கவேண்டிய அருங்காட்சியகம். அந்தமான் மக்களின் மத, மொழி, கலாசார பழக்கவழக்கங்கள் பற்றிய தகவல்கள் இங்கே சேகரிக்கப்பட்டுள்ளன. தவிர அந்தமானின் வெவ்வேறு வகையான பழங்குடியினரை பற்றிய அரிய புகைப்படங்கள், நிறைய தகவல்கள், பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை தெரிந்துக்கொள்ளலாம். அருங்காட்சியகத்தின் கீழே சில கடைகள் அமைந்துள்ளன. ஜரவா பொம்மைகள், டீ-ஷர்ட்டுகள், கைவினைப்பொருட்கள் முதிலியன கிடைக்கின்றன. முக்கியமாக அந்தமான் டூரிஸ்ட் கைடு கிடைக்கிறது. விலை 100ரூ. 

செல்லுலர் ஜெயில்
அந்தமானில் பார்த்தே தீரவேண்டிய வரலாற்று சிறப்பிடம். முதலில் சில அறைகளில் சிறை குறித்த வரலாற்று தகவல்களும் ஓவியங்களும் இடம் பெற்றிருக்கின்றன. அங்கே கொடுக்கப்பட்ட தண்டனைகள் பற்றிய வடிவமைப்புகள் கதிகலங்க வைக்கின்றன. முந்தய பதிவு ஒன்றில் குறிப்பிட்டது போல அந்தமானை பொறுத்தவரையில் காந்திக்கு இணையாக வீர சவார்க்கர் போற்றப்படுகிறார். சவார்க்கர் முப்பது ஆண்டுகளுக்கு மேல் அங்கே சிறைப்படுத்த பட்டுள்ளார். சாவர்க்கரின் நண்பர்கள் பலர் சிறைக்குள்ளிருந்தபடி பல போராட்டங்கள் நிகழ்த்தி ஆங்கிலேயர்களால் தண்டனைகளுக்கு உட்பட்டு உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். அந்தமான், அந்தமான் சிறை சுதந்திரத்திற்கு முன்பு காலா பாணி (கருப்பு நீர்) என்று அழைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய துணைக்கண்டத்தில் இருந்து அந்தமான் சிறைக்கு ஒருவர் கப்பலேற்றப்பட்டுவிட்டால் அவர் உயிரோடு திரும்புவதற்கு சாத்தியமில்லை என்னுமளவிற்கு கொடுமையான இடம். அவ்வாறு உயிரிழப்பவர்களை கல்லைக் கட்டி கடலில் வீசும் முறை கையாளப்பட்டிருக்கிறது.

மீன் காட்சியகம் & அறிவியலகம்
மீன் காட்சியகம் சிறையிலிருந்து நடை தொலைவிலேயே அமைந்துள்ளது. இரண்டு சிறிய அரங்கங்களில் மீன்கள், பவளப்பாறைகள், அவற்றை பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அறிவியியலகத்திற்கு சரியான திட்டமிடல் காரணமாக செல்ல முடியவில்லை. ஆனால் அது அவசியம் பார்த்திருக்க வேண்டிய இடம் என்று அறிகிறேன்.

இதுவரையிலும் குறிப்பிட்ட இடங்களை நீங்கள் காலை எட்டரை மணிக்கு துவங்கி மாலை மூன்று மணிக்குள் பார்த்திருக்க வேண்டும்.

காந்தி பார்க்
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறிய பூங்கா. மாலை மூன்று மணிக்கு முன்பு பெரிதாக ஆரவாரங்கள் இருக்காது. காதலர்கள் அமர்ந்து அளவளாவ உகந்த இடம். மாலையில் படகு சவாரி நடைபெறுகிறது. சிறிய அளவிலான ஜப்பானிய வழிபாட்டு தளத்தை காணலாம்.

ரைட்டு. நான்கு அல்லது நான்கரை மணிக்கு காந்தி பூங்காவிலிருந்து கிளம்பி கார்பின்ஸ் கோவ் கடற்கரையை அடைவது உத்தமம்.

கார்பின்ஸ் கோவ்
மெரீனாவோடு ஒப்பிடும்போது கார்பின்ஸ் கோவ் மிக மிகச் சிறியது. எனினும் அநியாயத்துக்கு பராமரிக்கிறார்கள். நாயத்துக்கு நாமெல்லாம் (சென்னை வாசிகள்) மெரீனாவின் புகைப்படத்தை நடுஹாலில் மாட்டிவைத்து தினமும் கும்பிட வேண்டும். வாட்டர் ஸ்கூட்டர் சவாரி கிடைக்கிறது. ஒரு ட்ரிப்புக்கு 350ரூ. கார்பின்ஸ் கோவுடைய சிறப்பு அங்குள்ள சாய்வுப்பலகைகள் தான். பேசாமல் மல்லாக்க படுத்து கொஞ்ச நேரம் அமைதிக்கடலில் மூழ்கலாம். உணர்ச்சிவசப்பட தேவையில்லை. அந்தமானில் கும்மாளம் போடுவதற்கு வேறுசில கடற்கரைகள் உண்டு. கார்பின்ஸ் கோவ் சாத்விக கடற்கரை. அமைதியாக அமர்ந்து ரசித்துவிட்டு திரும்புவதே சிறந்தது.

அங்கிருந்து கிளம்பும்போது மணி ஆறு அல்லது ஆறரை ஆகியிருக்கலாம். நேரமும் விருப்பமும் இருப்பவர்கள் மறுபடியும் செல்லுலர் ஜெயிலுக்கு சென்றால் அங்கே ஒளியும் ஒலியும் காட்டுவார்கள். (Sound & Light show). அதை பார்த்துவிட்டு இரவு பாருக்கு திரும்பலாம்.

அடுத்து வருவது: அந்தமான் - ஹேவ்லாக் கடற்கரை

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 March 2013

அந்தமான் - ஜாலிபாய்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பெயருக்கேற்ற தீவு. ஜாலிபாய் டிசம்பரில் துவங்கி மே மாதம் வரை மட்டுமே சுற்றுலா பயணிகளுக்காக திறந்து விடப்பட்டிருக்கும். அடுத்த ஆறு மாதங்களுக்கு ரெட் ஸ்கின் என்ற இன்னொரு தீவு திறக்கப்படும்.இரண்டும் ஒரே மாதிரியான தீவுகள். எனவே நீங்கள் செல்லும்போது எந்த தீவு வரவேற்பு கம்பளம் விரிக்கிறதோ, அங்கே சென்றிடுங்கள். ஜாலிபாய் செல்வதற்கு அந்தமான் நிர்வாகத்திலிருந்து அனுமதி பெற வேண்டும் என்பதால் ட்ராவல் ஏஜெண்டிடம் ஒப்படைத்து விடுவது நல்லது. அனுமதியும் டிக்கெட் கட்டணமும் சேர்த்து 700ரூ. போர்ட் ப்ளேரிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள வண்டூரிலிருந்து தான் படகுகள் புறப்படும். அதுவரை அழைத்துச் செல்ல / மறுபடி கொண்டுவந்து விட நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து செலவு வேறுபடும். மிக முக்கியமாக, ஜாலிபாய்க்கு செல்லும்போது டவல், மாற்றுத்துணி எடுத்துச் சென்றே ஆகவேண்டும். அது தேவைப்படாது என்று நினைப்பவர்கள் ஜாலிபாயை தவிர்த்துவிடலாம். தேவைப்படுமென்றால் கேமரா எடுத்துக்கொள்ளவும். தேவைகேற்ப உற்சாக பானம் அவசியம்.


கழுகுப்பார்வையில் ஜாலிபாய்
தீவுக்குள் பிளாஸ்டிக் குப்பைகள் போட தடை உள்ளது. எனவே, முடிந்தவரையில் பிளாஸ்டிக் கவர்களை தவிர்க்கவும். தண்ணீர், உ.பா காரணமாக வாட்டர் பாட்டிலை தவிர்க்க முடியாது; கவலையில்லை, நீங்கள் உள்ளே செல்லும்போது எத்தனை பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்துச் செல்கிறீர்கள் என்று டோக்கன் போட்டுக்கொள்ள வேண்டும். திரும்பி வரும்போது அதே எண்ணிக்கை பாட்டில்களை காட்டி பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். தீவிற்குள் ப்ளாஸ்டிக் கழிவுகளை கொட்டக்கூடாது என்பதற்குத்தான் இத்தனை கட்டுப்பாடுகள். இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி அங்கே குப்பை கொட்டுவது மிகவும் எளிது; எனினும் சுயக்கட்டுப்பாடு அவசியம்.

காலை ஏழு மணிக்கு டிபன் அடித்துவிட்டு, மதியத்திற்கு பார்சல் வாங்கிக்கொண்டு கிளம்பினால், எட்டு, எட்டரைக்கு வண்டூர் மரைன் பூங்காவை சென்றடைந்து அங்குள்ள சிறிய மியூசியத்தை சுற்றிப் பார்த்துவிடலாம். காலை ஒன்பது மணி தாண்டியதும் ஓடங்கள் ஒவ்வொன்றாக புறப்படும். சுமார் ஒன்றரை மணிநேர பயணம். ஜாலிபாய் பவழப்பாறைகளால் சூழப்பட்ட தீவு. படகுத்துறை கட்டும்போது அவற்றை அழிக்க வேண்டி வரும் என்பதால் படகுத்துறை இல்லை. எனவே, ஓடங்கள் சில அடிகள் தூரத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து கண்ணாடி அடிப்புறம் கொண்ட படகுகள் நம்மை தீவிற்கு கொண்டு செல்லும். படகின் அடிப்புறத்தின் வழியாக பவழப்பாறைகளை பார்க்கலாம்.


கண்ணாடி படகினூடே
ஜாலிபாய் - அந்த தீவில் கால் பதித்ததும் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, குறைந்தபட்ச ஆடையைத் தவிர மற்றவை துறந்து கடலில் குதிப்பது. வட இந்திய குலோப் ஜாமூன்களும், ரசகுல்லாக்களும் கடலில் மிதக்கக்கூடும். நான் முன்பே சொன்னது போல சுயக்கட்டுப்பாடு அவசியம். ஒரு பத்து நிமிடங்கள் கடலோடு அளவளாவி விட்டு, ஒரு கட்டிங் அடித்துக்கொள்வது உடலிற்கு உகந்தது. 

ஸ்னார்கலிங் - எளிய புரிதலுக்கும் இளைப்பாறுதலுக்கும்

படகிலிருந்து இறங்கும்போது உங்களுக்கு ஒரு டோக்கன் கொடுத்திருப்பார்கள். இலவச ஸ்னார்கலிங்கிற்கான டோக்கன். போட்டி அதிகமாக இருக்கும், எனவே உங்கள் படகிற்கான ஸ்னார்கலிங் கைடு யாரென்று கண்டுபிடித்து ஒட்டிக்கொள்ளவும். இங்குதான் ஸ்வாரஸ்யம் ஆரம்பம்; நீருக்குள் பார்ப்பதற்கான கண்ணாடியும், சுவாசக்குழாயும் தரப்படும். வாய் வழியாக மட்டுமே சுவாசிக்க முடியும். சுவாசக்குழாயின் மறுபகுதி நீர்நிலைக்கு மேலே இருக்கும். முதலிரண்டு நிமிடங்கள் சிரமமாக இருக்கும்; அப்புறம் பழகிவிடும். பயப்பட வேண்டாம். லைப் ஜாக்கெட் அல்லது ரப்பர் டியூப் வழங்கப்படும். எனவே நீர்மட்டத்திலேயே மிதப்பீர்களே தவிர மூழ்கிவிட வாய்ப்பில்லை. மேலும் கைடு உங்கள் கையைப் பிடித்தபடி நீந்தி வருவார்.


கடல் மீன்களோடு சேர்ந்து நீந்துகிற உணர்வு. கைடு மீன்களின் பெயர்களை சொல்லி ஹிந்தியில் ஏதாவது விளக்கம் சொல்லிக்கொண்டிருப்பார். அவரோடு பேச முயற்சிக்க வேண்டாம்; முயன்றால் சுவாசிப்பதில் கவனம் குறைந்துவிடும். கொஞ்ச தூரம் நீந்திய பிறகு உங்கள் இலவச ட்ரிப் முடிந்துவிட்டது. இன்னும் தூரம் செல்ல வேண்டுமென்றால் தூரத்திற்கேற்ப 300/400/500ரூ செலவாகும் என்றார். நான் 300ரூ தர சம்மதித்தேன். ஆழம் சற்று அதிகமானது. பெரிய பெரிய மீன்களும் பவழப்பாறைகளும் தென்பட ஆரம்பித்தன. இப்போது கைடை அழைத்தேன். 500ரூ தருகிறேன், முடிந்தவரை ஆழத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்றேன்.

கடல் வெள்ளரி
மறுபடியும் மீன்களோடு சேர்ந்து நீந்தத் துவங்கினேன். பவழப்பாறைகள் மீது கால் படாதபடி பார்த்துக்கொள்ள வலியுறுத்தினான். அப்படி கால் வைப்பது அவற்றிற்கும், சமயங்களில் நமக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரித்தான். தீடீரென ஒரு ஸ்டார் ஃபிஷ்ஷை கையில் எடுத்து விளக்கம் கொடுத்தான். அடுத்த நொடி, அதை என் கையில் திணித்து விட்டான். இதுவரைக்கும் புத்தகத்திலும் மியூசியங்களிலும் மட்டுமே பார்த்த ஸ்டார் ஃபிஷ் இப்போது என்னுடைய கைகளில்; பரவசமான நிமிடம் அது. கொஞ்ச தூரம் சென்றதும் பெரிய சைஸ் அட்டைப்பூச்சி மாதிரி ஏதோவொன்று கடல் பரப்பில் கிடந்தது. அதையும் கையில் கொடுத்தான். ஸ்டார் ஃபிஷ் கல்லு போல திடமாக இருந்தது, இப்போது கொடுத்திருப்பது வழவழப்பாக இருக்கிறது. பெயர் ஸீ குகும்பர். தமிழாக்கினால் கடல் வெள்ளரிக்காய். அந்த சில நிமிடங்கள், கடவுளைக் கண்ட பரவசத்தோடு கரைக்கு திரும்பினேன்.

நான் - கட்டிங் - கடல்: த்ரீஸம் உல்லாசம் அனுபவித்தோம். நினைவிருக்கட்டும், இங்கிருக்கும் கழிவறை மற்றும் உடை மாற்றும் அறைகள் தற்காலிக தென்னை ஓலைக்குடில்கள் மட்டுமே. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இருந்தாலும்கூட. ஆண்களைப் போல பெண்கள் சுலபமாக ஒத்துப்போக இயலாது. கட்டி வந்த மதிய உணவை முடித்துவிட்டு, கடலலை படாத மணல்பரப்பில் படுத்துக்கொண்டேன். முந்தய பத்தியில் குறிப்பிட்டதைப் போன்ற விளையாட்டுகளை விரும்பாத சா.சாதங்கள் கண்ணாடி படகுகளில் பயணித்து நேரத்தை செலவிடலாம்.


அதிகபட்சம் மூன்று மணிநேரங்கள். ஓடங்கள் திரும்பத் தயாராகும். ப்ளாஸ்டிக் பாட்டில்களை கீழே போடாமல் கவனமாக எடுத்து பைக்குள் திணித்துக்கொள்ளவும். திரும்ப வரும்போது நிச்சயம் அயர்ச்சியாக இருக்கும். ஓடத்தின் மேல்பகுதிக்கு சென்று மல்லாக்கப்படுத்து ஒரு குட்டித்தூக்கம் போட்டால் சொர்க்கம்...!

திரும்பி வந்தபிறகு நேரம் அனுமதித்தால், வண்டூர் பீச்சையும் பார்த்துவிட்டு வரலாம். அருகில் சில கடைகள் இருக்கிறது. சிப்பியில், மரத்தில் செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன. மரத்தால் செய்யப்பட்ட ஜரவா பொம்மைகளை அந்தமான் நினைவாக வாங்கிக்கொள்ளலாம். மாலை ஆறு மணிக்குள் மீண்டும் ஹோட்டல் அறைக்கு திரும்பிவிடலாம்.

அடுத்து வருவது: போர்ட் ப்ளேர் சிட்டி டூர்


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

7 March 2013

அந்தமான் - பாராடங் சுண்ணக்குகை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அந்தமான் சுற்றுலா தளங்களில் சற்றே விந்தையானது பாராடங் சுண்ணாம்பு குகைகள். இருபது நிமிடங்கள் மட்டுமே சுற்றிப்பார்க்க வேண்டிய இடத்திற்கு காலையிலிருந்து மாலை வரை பயணத்தில் நேரம் செலவிட வேண்டும், அதுவும் வெவ்வேறு பயணமுறைகளில். அதிக கைகளுக்கு அவுட் சோர்ஸ் செய்யப்படும் சுற்றுலா தளமும் கூட.

நபர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம், காலை உணவு மற்றும் மதிய உணவு உட்பட. பாராடங் செல்ல சில சிறப்பு அனுமதி தேவைப்படும் என்பதால் ட்ராவல் ஏஜெண்டிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவது உத்தமம். அதிகாலை ஆறு, ஆறரை மணிக்கெல்லாம் போர்ட் ப்ளேரின் வட கோடியிலிருந்து ஸ்வராஜ் மஸ்டா புறப்பட்டு, அவரவர் வசிப்பிடத்திற்கு சென்று தன்னை நிரப்பிக்கொள்ளும். காலை எட்டு, எட்டரை மணிக்கு ஒரு செக் போஸ்டை சென்றடையும், காலை உணவுகள் வழங்கப்படும். கனமான இட்லிகள், தொட்டுக்க சட்னி, சாம்பார். பிடிக்கவில்லையென்றால் கவலைப்பட வேண்டாம். அருகில் சில ஆடுகள் பாவமாக உங்கள் முகத்தை பார்த்தபடி நிற்கும். அவைகளுக்கு போட்டுவிடலாம். சரியாக காலை ஒன்பது மணிக்கு வாகனங்கள் கிளம்பத் தயாராகும்.



© உஷா ஸ்ரீகுமார்
செக் போஸ்டை தாண்டி நாம் பயணிக்கவிருப்பது ஜரவாக்கள் வாழும் பகுதி. அதற்கென சில கட்டுப்பாடுகள் உள்ளன :-
    1. முன்னே ஒரு ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனம், பின்னர் சுற்றுலா வாகனங்கள், இறுதியில் ஒரு ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனம்.
    2. மணிக்கு நாற்பது கி.மீ மேல் வேகமெடுக்கக் கூடாது. இடையில் வாகனத்தை எங்கேயும் நிறுத்தக் கூடாது.
    3. ஜரவாக்களை காணும் பட்சத்தில் புகைப்படங்கள் எடுக்கக்கூடாது. அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது.
    4. ஜன்னல் வழியாக உணவுப்பொருட்களையோ வேறு எந்த ஒரு பொருளையோ வீசக்கூடாது.

மேற்படி விதிமுறைகள் எதையாவது மீறினால் உங்களுக்கும், உங்களை அழைத்துவந்த சுற்றுலா நிறுவனத்திற்கும் கடுமையான சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும். உணவுப்பொருட்களை ஜரவாக்களுக்கு வழங்கும் பட்சத்தில் அவர்கள் அதனை உடனடியாக உட்கொள்வதில்லை. பல நாட்கள் வைத்திருந்து கெட்டுப்போயிற்று என்று கூட அறியாமல் உட்கொள்வதால் அது அவர்களுக்கு விஷமாகி விட வாய்ப்புண்டு. அதற்குத்தான் இத்தனை கட்டுப்பாடுகள். அப்புறம் முந்தய பதிவில் சொன்ன நிர்வாண வீடியோ சர்ச்சையும் ஒரு காரணம்.



Ferry எனப்படும் சிறிய கப்பல்
ஜரவா பகுதிக்குள் நுழைந்ததும், நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருபுறமும் மாறி மாறி அலசிக்கொண்டிருந்தோம். கடைசி வரைக்கும் அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சாலைப்பகுதியை கடந்தபின்பு அங்கிருந்து சுமார் இருபது நிமிடங்கள் சிறிய கப்பலில் பயணிக்க வேண்டும். அங்கிருந்து ஒரு சிறிய படகில் படகொன்றிற்கு எட்டு பேராக அழைத்துச்செல்வார்கள். தலை சுற்றுகிறதா ? பொறுமை. எட்டு பேர் கொண்ட குழுவில் என்னுடன் ஒரு வட இந்திய குடும்பம் பயணித்தது. இரண்டு ரசகுல்லாக்கள். இளையவள் பார்ப்பதற்கு ஒரு குட்டி காஜல் அகர்வால் போலவே இருந்தாள். அவளே மாட்டிவிட மாட்டாளா என்று லைப் ஜாக்கெட்டை தலைகீழாக பொறுத்தினேன். உல்டாக்கி புல்டா என்று இந்தியில் ஏதோ சொல்லிக்கொண்டே சைகை காட்டினாள். சீறிப்பாய்ந்தது... படகு !


இருபுறமும் அடர்த்தியான மேங்க்ரோவ் காடுகள், அனகோண்டா படங்களில் காட்டுவது போல. பின்னர் வளைந்து நெளிந்த குறுகிய பாதைக்குள் பயணித்து, நிறுத்தத்தை அடைந்தது. இன்னும் முடியவில்லை. அங்கிருந்து கிட்டத்தட்ட ஒரு கி.மீ நடந்துசெல்ல வேண்டும். சரியாக சுண்ணக்குகை வாயிலில் எலுமிச்சை ஜூஸ் கடைகள் நான்கைந்து உள்ளன. இளைப்பாறிக்கொள்ளலாம்.


அங்கிருந்து ஒரு வழிகாட்டி டார்ச் லைட்டுடன் உடன் வருவார். சுண்ணக்குகைகளின் வரலாற்றில் வட இந்திய மொழியில் விளக்குவார். அந்தரத்தில் தெரியும் சில சுண்ண உருவங்களை காட்டி, அதோ பாருங்க விநாயகர் மாதிரி உருவாயிருக்கு, இதோ நாகலிங்கம், அங்கே பவளப்பாறை என்று இயற்கையாகவே உருவான சிலவற்றை காட்டுவார். முடிந்தது. இவ்வளவு தான் பாராடங் சுண்ணக்குகைகள்.


Mud Volcano
அங்கிருந்து சற்று தொலைவில் சகதி எரிமலை (mud volcano) ஒன்று இருப்பதாக அறிய முடிகிறது. சரியான திட்டமிடல் இல்லாததால் அங்கே செல்ல முடியவில்லை. உங்கள் ட்ராவல் ஏஜெண்டிடம் முன்னரே மட் வால்கேனோ பற்றி கேட்டுக்கொள்வது நல்லது.

மதிய சாப்பாடு அங்குள்ள வீட்டுச்சமையல் விற்பன்னர்களிடம் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டிருக்கும். உண்மையில் விருந்தினர் வீடுகளில் கிடைக்கும் உபசரிப்பு. ஆனால் சைவம் மட்டும்தான்.

மாலை மூன்று மணியளவில் மீண்டும் வாகன அணிவகுப்பு தொடங்கும். அனைவருமே களைப்பாக உறங்கிக்கொண்டிருந்தோம். என்னருகில் அமர்ந்திருந்த இந்திக்காரர் “கானா... கானா...” என்று ட்ரைவரை நோக்கி கத்திக்கொண்டே இருந்தார். பாட்டு போடணுமாம். திடீரென ட்ரைவர், “ஜரவா... ஜரவா...” என்று அலற, அனைவரும் கண்விழித்து பார்த்தோம். ஆனா பெண்ணா என்று தெரியவில்லை. இடுப்புக்கு மேல் ஆடையணியாத இரண்டு மனிதர்கள். அடர் கறுப்பு நிறம். எங்களை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டே கடந்தனர்.

படங்கள்: © ஜெயதேவ் தாஸ்
முந்தய பகுதி: அந்தமான் பழங்குடியினர்
அடுத்து வருவது: ஜாலிபாய் தீவு
அந்தமான் கட்டுரைகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment