1 March 2013

அந்தமான் - பழங்குடியினர்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அடுத்து நாம் பார்க்கவிருப்பது பாராடங். போர்ட் ப்ளேரில் இருந்து சுமார் நூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் சுண்ணாம்பு குகையை பார்ப்பதற்கு சாலை வழியாகவும், கடல்வழியாகவும் பின்னர் மேங்ரோவ் காடுவழியாகவும் பயணிக்க வேண்டியிருக்கும். பாராடங்கின் சிறப்பு அந்த சுண்ணாம்பு குகையல்ல. ஜரவா எனும் பழங்குடியினர் வசிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியை கடந்து பயணிக்க வேண்டும். உண்மையில் அவர்கள்தான் நாகரிக மக்கள் வசிப்பதற்காக பிற பகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்கள். ஒரு காலத்தில் அந்தமான் & நிகோபர் தீவுகள் முழுமைக்கும் பல்வேறு சமூகத்தை சேர்ந்த பழங்குடியினர் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தற்போது எஞ்சியிருப்பதாக கருதப்படும் சில பழங்குடியின சமூகங்களை பற்றி தொடரும் பத்திகளில் காண்போம்.

ஜரவா (Jarawa)
அந்தமானின் செல்லப்பிள்ளைகள். சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை தெற்கு அந்தமானில் ஆதிக்கம் செலுத்தியவர்கள். வெள்ளையர்களின் வருகையாலும், நகரமயமாக்கல் காரணமாகவும் வேறு வழியில்லாமல் மேற்கு பகுதியில் வசிக்க தொடங்கிவிட்டனர். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஜரவாக்கள் நாகரிக மக்களோடு சிநேகம் கொள்ள தொடங்கியிருக்கிறார்கள். முந்தய பத்தியில் குறிப்பிட்டது போல பாராடங் செல்லும் சுற்றுலா பயணிகளை வழிமறித்து அவர்களிடம் உணவுப்பொருட்கள் பெற ஆரம்பித்தனர். அதுபோல ஒருமுறை உணவுக்காக வழிமறித்த பழங்குடியினரை நடனமாட வைத்து அதை இணையத்தில் பரவ விட்டிருக்கிறார்கள். அதற்குப்பின் அந்தமான் நிர்வாகம் கடுமையான சட்ட திட்டங்களை வகுத்து, ஜரவா மக்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. செய்தி. எனினும் தற்போது ஜரவா மக்கள் தாங்களாகவே வெளியுலகிற்கு வரவும், ஆடைகள் உடுத்தவும், கல்வி கற்கவும் தொடங்கியிருக்கிறார்கள். கவலையளிக்கும் வகையில், ஜரவா மக்கள் தற்போது சுமார் இருநூறிலிருந்து நானூறு பேர் வரை மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள்.



க்ரேட் அந்தமானீஸ் (Great Andamanese)
அந்நிய படையெடுப்புக்கு முன்பு அந்தமான் முழுவதிலும் வசித்து வந்த, ஒத்த மொழிகள் பேசிய பத்துக்கும் மேற்பட்ட இனங்களை தற்போது க்ரேட் அந்தமானீஸ் என்று பகுத்து வைத்திருக்கிறார்கள். இருநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை ஆறாயிரத்தை கடந்த எண்ணிக்கையில் இருந்தவர்கள், வெள்ளையர்கள் கொண்டு வந்து பரப்பிய நோய்களை சமாளிக்க முடியாமல் கிட்டத்தட்ட அழிவை நோக்கி சென்று பின் மீண்டு வந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் வெறும் பத்தொன்பது பேர் மட்டுமே எஞ்சியிருந்து, தற்போது தோராயமாக ஐம்பது பேர் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். சில தலைமுறைக்கு முன்பிலிருந்தே இவர்கள் இந்தியர்களோடு இல்வாழ்க்கையில் இணைந்ததால் ஹிந்தி சரளமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆறு கி.மீ பரப்பளவு கொண்ட சிறிய தீவொன்றில் இவர்களுக்காக குடில்கள், பள்ளி, மருத்துவமனை போன்ற வசதிகளை செய்துக்கொடுத்திருக்கிறது அந்தமான் நிர்வாகம்.

ஆங்கீஸ் (Onge)
லிட்டில் அந்தமான் தீவில் வசித்து வரும் ஆங்கீ இன மக்களின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவாகவே உள்ளது. தங்களது பாரம்பரிய கதைகளின் வழியாக நிலநடுக்கத்தை பற்றியும் ஆழி பேரலைகளை பற்றி புரிந்து வைத்திருக்கும் ஆங்கீஸ் 2004ல் சுனாமி வந்தபோது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் பிழைத்திருக்கிறார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு விஷச் சாராயத்தை தவறுதலாக உட்கொண்டு எட்டு பேர் இறந்திருக்கிறார்கள். பெருகி வரும் சாராய மோகம் ஆங்கீஸ் இனமக்களுக்கு ஆபத்தாக இருந்து வருகிறது. தவிர ஆங்கீஸ் இனப்பெண்கள் மிகவும் அரிதாக கருவுருவதால் ஆங்கீஸ் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நிகொபரீஸ் (Nicobarese)
க்ரேட் அந்தமானீஸை போலவே நிகோபர் தீவுகளில் வாழும் பழங்குடியினரை நிகொபரீஸ் என்று அழைக்கிறார்கள். நிகோபர் தீவுகளை இன்னமும் மிகவும் பாதுகாப்பாகவும், நாகரிக மக்கள் எளிதில் நுழைய முடியாதபடியும் வைத்திருப்பதாலோ என்னவோ நிகொபரீஸ் எண்ணிக்கையில் இருபதாயிரத்திற்கு மேல் உள்ளனர். ஒப்பீட்டளவில் மிகவும் நாகரிகமடைந்தவர்கள். இலவச கல்வி திட்டத்தின் வாயிலாக இன்னும் சில ஆண்டுகளில் நிகோபர் மக்கள் அரசு பணியிடங்களை நிரப்ப காத்திருக்கிறார்கள். மேலை நாட்டு மத போதகர் ஒருவர் பைபிளை நிகொபரீஸில் மொழி பெயர்த்ததால் நிகொபரீஸ் கிட்டத்தட்ட அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். சுனாமியில் இறந்தவர்களின் அலறல் இன்னமும் கேம்பெல் பே பகுதியில் நள்ளிரவுகளில் கேட்பதாக நிகோபர் மக்கள் நம்புகிறார்கள். 



செண்டிநெலீஸ்
முற்றிலும் நாகரிக மனித தொடர்பற்ற மக்கள். சுனாமி வந்த சமயம், ஹிந்து நாளிதழ் முகப்பு பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. ஒருமுறை அந்தமான் நிர்வாகம், நாகரிக மக்கள் குழுவை, இவர்களுடைய தீவிற்கு நட்புக்கரம் நீட்ட அனுப்பி வைத்தது. குறிப்பிட்ட தொலைவு வரை படகில் சென்று அங்கிருந்து தேங்காய்களை வீசியிருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியுடன் தேங்காய்களை பெற்றுக்கொண்டனர் பழங்குடியினர். அடுத்தகட்டமாக கரையில் இறங்க முயற்சி செய்ததும் மூர்க்கமாக தாக்க தொடங்கியிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு அவர்களுடைய பகுதியில் அத்துமீறிய மீனவர்கள் இருவரை அம்பெய்தி கொன்றிருக்கிறார்கள். இவர்களுடைய எண்ணிக்கை கூட இதுவரையில் மர்மமாகவே இருந்து வருகிறது.



ஷாம்பென்
ஒப்பீட்டளவில் மிகவும் சாதுவானவர்கள். இந்தோனேசிய, பர்மிய, வியட்நாமிய மக்களின் சாயலை கொண்டவர்கள். க்ரேட் நிகோபர் தீவில் ஆங்காங்கே சிறுசிறு பிரிவுகளாக வாழ்ந்து வருகிறார்கள். இருநூறிலிருந்து முன்னூறு வரையில் எண்ணிக்கை இருக்கலாம் என கருதப்படுகிறது. இடுப்புக்கு கீழே மட்டும் உடையணியும் வழக்கம் கொண்டவர்கள். வன விலங்குகளை வேட்டையாடியும், காய்கறி, பழங்களாலும் பசியாறுகிறார்கள். கடற்கரையோரம் குடியிருக்கும் பழக்கமில்லாததால் ஷாம்பென் மக்களை சுனாமி பெரிய அளவில் பாதிக்கவில்லை.

மேற்கண்ட தகவல்களையும் மேலதிக தகவல்களையும் போர்ட் ப்ளேரில் உள்ள மனித இயல் அருங்காட்சியகத்தில் தெரிந்துக்கொள்ளலாம். அதுபற்றிய விவரங்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் விவரிக்கிறேன்.


படங்கள் உதவி: கூகுள்

சில  காணொளிகள்:
Jarawa
http://www.youtube.com/watch?v=tlRSsvB4iLE
http://www.youtube.com/watch?v=u5lwwsxVr9M
http://www.youtube.com/watch?v=q8thUedRXnk


Onge
http://www.youtube.com/watch?v=4GtZiW2GSkM

Sentinelese
http://www.youtube.com/watch?v=OaPYwlXOTzQ

Shompen
http://www.youtube.com/watch?v=fcLr22O6pl0

 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 comments:

ஜீவன் சுப்பு said...

ரெம்ப விரிவான பதிவு . தகவல்களுக்காக ரெம்ப மெனக்கட்டு இருக்கீங்க ங்குறது படிக்கும் போது உணரமுடியுது . தொடர் தொடர வாழ்த்துக்கள் .

Anonymous said...

நல்ல கட்டுரை. பழங்குடிகளிடம் "நாகரீகம் மிகுந்த" நம் மக்கள் நடந்து கொள்ளும் முறை அசிங்கமானது.

Ponmahes said...

ரமணா விஜய காந்த் அண்ணாச்சி மாதரி நெறைய புள்ளி விவரங்கள அள்ளி வீசியிருக்கிய லே .....

யோ பிலாசபி இந்த இன மக்களோடு நீ ஏதும் போட்டோ க்ளிக்க வில்லையா ????.அப்படி எடுத்திருந்தால் அதை பகிர்ந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் கூகிள் அண்ணனுக்கும் வேல மிச்சம் ...

//உண்மையில் அவர்கள்தான் நாகரிக மக்கள் வசிப்பதற்காக பிற பகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்கள்.

இத எப்படி படிக்கணும் ?????????எனக்கு சரியாய் அர்த்தம் புரிய முடியல

ஆனா இந்த பதிவ எழுதுவதற்கு ரொம்ப மெனக்கெட்ட மாதிரி தெரியுது ...

தொகுப்பு அருமை ....

aavee said...

அரிய தகவல்கள்..

சீனு said...

அருமையான தொகுப்பு... அது சரி பழங்'குடி'யினரோடு மட்டும் தான் புகைப்படம் எடுபீர்களோ :-)

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு.
பகிர்வுக்கு நன்றி.

Philosophy Prabhakaran said...

பொன் மகேஸ், பழங்குடியினரோடு போட்டோ எடுத்துக்கொள்வதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை... அவர்களை ஒருசில நொடிகள் பார்க்க முடிந்தாலே அபூர்வம்...

// இத எப்படி படிக்கணும் ?????????எனக்கு சரியாய் அர்த்தம் புரிய முடியல //

http://upload.wikimedia.org/wikipedia/commons/c/c2/Andamanese_comparative_distribution.png

இந்த படத்தை பார்த்தால் புரிந்துக்கொள்ள முடியும்... சில நூறு வருடங்களுக்கு முன்பு அந்தமான் முழுக்க பழங்குடியினர் மட்டுமே வசித்தனர்... இப்போது சில பகுதிகளில் மட்டும் வாழ்கிறார்கள்...

செங்கதிரோன் said...

You have written very brifely and the youtube links are useful...

Unknown said...

நல்ல தகவல் பதிவு