7 March 2013

அந்தமான் - பாராடங் சுண்ணக்குகை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அந்தமான் சுற்றுலா தளங்களில் சற்றே விந்தையானது பாராடங் சுண்ணாம்பு குகைகள். இருபது நிமிடங்கள் மட்டுமே சுற்றிப்பார்க்க வேண்டிய இடத்திற்கு காலையிலிருந்து மாலை வரை பயணத்தில் நேரம் செலவிட வேண்டும், அதுவும் வெவ்வேறு பயணமுறைகளில். அதிக கைகளுக்கு அவுட் சோர்ஸ் செய்யப்படும் சுற்றுலா தளமும் கூட.

நபர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம், காலை உணவு மற்றும் மதிய உணவு உட்பட. பாராடங் செல்ல சில சிறப்பு அனுமதி தேவைப்படும் என்பதால் ட்ராவல் ஏஜெண்டிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவது உத்தமம். அதிகாலை ஆறு, ஆறரை மணிக்கெல்லாம் போர்ட் ப்ளேரின் வட கோடியிலிருந்து ஸ்வராஜ் மஸ்டா புறப்பட்டு, அவரவர் வசிப்பிடத்திற்கு சென்று தன்னை நிரப்பிக்கொள்ளும். காலை எட்டு, எட்டரை மணிக்கு ஒரு செக் போஸ்டை சென்றடையும், காலை உணவுகள் வழங்கப்படும். கனமான இட்லிகள், தொட்டுக்க சட்னி, சாம்பார். பிடிக்கவில்லையென்றால் கவலைப்பட வேண்டாம். அருகில் சில ஆடுகள் பாவமாக உங்கள் முகத்தை பார்த்தபடி நிற்கும். அவைகளுக்கு போட்டுவிடலாம். சரியாக காலை ஒன்பது மணிக்கு வாகனங்கள் கிளம்பத் தயாராகும்.



© உஷா ஸ்ரீகுமார்
செக் போஸ்டை தாண்டி நாம் பயணிக்கவிருப்பது ஜரவாக்கள் வாழும் பகுதி. அதற்கென சில கட்டுப்பாடுகள் உள்ளன :-
    1. முன்னே ஒரு ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனம், பின்னர் சுற்றுலா வாகனங்கள், இறுதியில் ஒரு ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனம்.
    2. மணிக்கு நாற்பது கி.மீ மேல் வேகமெடுக்கக் கூடாது. இடையில் வாகனத்தை எங்கேயும் நிறுத்தக் கூடாது.
    3. ஜரவாக்களை காணும் பட்சத்தில் புகைப்படங்கள் எடுக்கக்கூடாது. அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது.
    4. ஜன்னல் வழியாக உணவுப்பொருட்களையோ வேறு எந்த ஒரு பொருளையோ வீசக்கூடாது.

மேற்படி விதிமுறைகள் எதையாவது மீறினால் உங்களுக்கும், உங்களை அழைத்துவந்த சுற்றுலா நிறுவனத்திற்கும் கடுமையான சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும். உணவுப்பொருட்களை ஜரவாக்களுக்கு வழங்கும் பட்சத்தில் அவர்கள் அதனை உடனடியாக உட்கொள்வதில்லை. பல நாட்கள் வைத்திருந்து கெட்டுப்போயிற்று என்று கூட அறியாமல் உட்கொள்வதால் அது அவர்களுக்கு விஷமாகி விட வாய்ப்புண்டு. அதற்குத்தான் இத்தனை கட்டுப்பாடுகள். அப்புறம் முந்தய பதிவில் சொன்ன நிர்வாண வீடியோ சர்ச்சையும் ஒரு காரணம்.



Ferry எனப்படும் சிறிய கப்பல்
ஜரவா பகுதிக்குள் நுழைந்ததும், நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருபுறமும் மாறி மாறி அலசிக்கொண்டிருந்தோம். கடைசி வரைக்கும் அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சாலைப்பகுதியை கடந்தபின்பு அங்கிருந்து சுமார் இருபது நிமிடங்கள் சிறிய கப்பலில் பயணிக்க வேண்டும். அங்கிருந்து ஒரு சிறிய படகில் படகொன்றிற்கு எட்டு பேராக அழைத்துச்செல்வார்கள். தலை சுற்றுகிறதா ? பொறுமை. எட்டு பேர் கொண்ட குழுவில் என்னுடன் ஒரு வட இந்திய குடும்பம் பயணித்தது. இரண்டு ரசகுல்லாக்கள். இளையவள் பார்ப்பதற்கு ஒரு குட்டி காஜல் அகர்வால் போலவே இருந்தாள். அவளே மாட்டிவிட மாட்டாளா என்று லைப் ஜாக்கெட்டை தலைகீழாக பொறுத்தினேன். உல்டாக்கி புல்டா என்று இந்தியில் ஏதோ சொல்லிக்கொண்டே சைகை காட்டினாள். சீறிப்பாய்ந்தது... படகு !


இருபுறமும் அடர்த்தியான மேங்க்ரோவ் காடுகள், அனகோண்டா படங்களில் காட்டுவது போல. பின்னர் வளைந்து நெளிந்த குறுகிய பாதைக்குள் பயணித்து, நிறுத்தத்தை அடைந்தது. இன்னும் முடியவில்லை. அங்கிருந்து கிட்டத்தட்ட ஒரு கி.மீ நடந்துசெல்ல வேண்டும். சரியாக சுண்ணக்குகை வாயிலில் எலுமிச்சை ஜூஸ் கடைகள் நான்கைந்து உள்ளன. இளைப்பாறிக்கொள்ளலாம்.


அங்கிருந்து ஒரு வழிகாட்டி டார்ச் லைட்டுடன் உடன் வருவார். சுண்ணக்குகைகளின் வரலாற்றில் வட இந்திய மொழியில் விளக்குவார். அந்தரத்தில் தெரியும் சில சுண்ண உருவங்களை காட்டி, அதோ பாருங்க விநாயகர் மாதிரி உருவாயிருக்கு, இதோ நாகலிங்கம், அங்கே பவளப்பாறை என்று இயற்கையாகவே உருவான சிலவற்றை காட்டுவார். முடிந்தது. இவ்வளவு தான் பாராடங் சுண்ணக்குகைகள்.


Mud Volcano
அங்கிருந்து சற்று தொலைவில் சகதி எரிமலை (mud volcano) ஒன்று இருப்பதாக அறிய முடிகிறது. சரியான திட்டமிடல் இல்லாததால் அங்கே செல்ல முடியவில்லை. உங்கள் ட்ராவல் ஏஜெண்டிடம் முன்னரே மட் வால்கேனோ பற்றி கேட்டுக்கொள்வது நல்லது.

மதிய சாப்பாடு அங்குள்ள வீட்டுச்சமையல் விற்பன்னர்களிடம் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டிருக்கும். உண்மையில் விருந்தினர் வீடுகளில் கிடைக்கும் உபசரிப்பு. ஆனால் சைவம் மட்டும்தான்.

மாலை மூன்று மணியளவில் மீண்டும் வாகன அணிவகுப்பு தொடங்கும். அனைவருமே களைப்பாக உறங்கிக்கொண்டிருந்தோம். என்னருகில் அமர்ந்திருந்த இந்திக்காரர் “கானா... கானா...” என்று ட்ரைவரை நோக்கி கத்திக்கொண்டே இருந்தார். பாட்டு போடணுமாம். திடீரென ட்ரைவர், “ஜரவா... ஜரவா...” என்று அலற, அனைவரும் கண்விழித்து பார்த்தோம். ஆனா பெண்ணா என்று தெரியவில்லை. இடுப்புக்கு மேல் ஆடையணியாத இரண்டு மனிதர்கள். அடர் கறுப்பு நிறம். எங்களை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டே கடந்தனர்.

படங்கள்: © ஜெயதேவ் தாஸ்
முந்தய பகுதி: அந்தமான் பழங்குடியினர்
அடுத்து வருவது: ஜாலிபாய் தீவு
அந்தமான் கட்டுரைகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

14 comments:

தினேஷ்குமார் said...

ஆஹா ஒரு த்ரில் படம் பார்க்க போரோம்னு நினைத்தேன் முடக்கிட்டீங்களே......

சக்தி கல்வி மையம் said...

இந்தகே கட்டுரை அந்தமான் செல்ல மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது.
நன்றி பிரபா..

கார்த்திக் சரவணன் said...

ரொம்பவே திரில்லிங்கான பயணம்... கலக்குங்க...

Ponmahes said...

//அந்தரத்தில் தெரியும் சில சுண்ண உருவங்களை காட்டி, அதோ பாருங்க விநாயகர் மாதிரி உருவாயிருக்கு, இதோ நாகலிங்கம், அங்கே பவளப்பாறை என்று இயற்கையாகவே உருவான சிலவற்றை காட்டுவார். முடிந்தது. இவ்வளவு தான் பாராடங் சுண்ணக்குகைகள்.

என்னயா இப்படி உடனே முடிச்சிட்ட... இத பாக்குறதுக்கா 1000 ரூபா குடுக்கணும் ....
ஆமா அங்கயும் ஏதாவது சிவலிங்கம்(http://2.bp.blogspot.com/-Nb1_p2I0WpE/URF2hswJ2DI/AAAAAAAACI0/-mX7kvm5aZY/s1600/28102012545.jpg) லா இல்லியா ???????????


//என்னருகில் அமர்ந்திருந்த இந்திக்காரர் “கானா... கானா...” என்று ட்ரைவரை நோக்கி கத்திக்கொண்டே இருந்தார். பாட்டு போடணுமாம்.

கானா ன்னா இந்தி யில சாப்பாடு ன்னு தான அர்த்தம் ...


எல்லாம் ஓகே தான் இந்த இடத்துக்கு போற பயண முறைய படிக்கும் போது தான் கொஞ்சம் தல சுத்துது தம்பி ....


இந்த இன மக்களை இவ்வளவு தூரம் கட்டுப்பாடு கள் வைத்து பாதுகாப்பதன் அவசியம் என்னனு புரியல பிரபா ..........

ஜீவன் சுப்பு said...

//அதிக கைகளுக்கு அவுட் சோர்ஸ் செய்யப்படும் சுற்றுலா தளமும் கூட. // புரியலையே என்னங்க அர்த்தம் ...

//பிடிக்கவில்லையென்றால் கவலைப்பட வேண்டாம். அருகில் சில ஆடுகள் பாவமாக உங்கள் முகத்தை பார்த்தபடி நிற்கும். அவைகளுக்கு போட்டுவிடலாம். //
"ஆட்டையே" போடாம இருந்தா சரி .

வெயிட்டிங் பார் ஜாலிபாய் ...

சீனு said...

பாரடாங் சுண்ணக்குகை படிக்கும் போதே மிரட்டுகிறது... நிச்சயம் அந்தமான் பார்த்தே ஆக வேண்டிய பகுதி...

வவ்வால் said...

பிரபா,

அந்தமான் பயணக்கட்டுரையை இப்போ தான் படிக்க முடிஞ்சது,நல்ல அனுபவம்,ஆனால் எக்கச்சக்கமாக செலவாகும்னு சொன்னாங்க, தோராயமா ஒரு நபருக்கு எம்புட்டு செலவாகும்.

அந்த"மான்" குட்டி காஜல் படத்தையாவது போட்டிருக்கலாம் :-))
-------------
//இந்த இன மக்களை இவ்வளவு தூரம் கட்டுப்பாடு கள் வைத்து பாதுகாப்பதன் அவசியம் என்னனு புரியல பிரபா ..........//

மரபியல் ரீதியாக மனிதனின் கலப்பிடமில்லாத ஜீன்கள் அவங்க கிட்டே தான் இருக்கு, அவங்களை அழியாமல் பாதுகாப்பது, மனித குல மரபணுவை பாதுகாப்பது போல.

பரிணாமவியல் மற்றும் ஆய்வுக்கு மிக தேவையான ,அடிப்படையான மரபணு இனம் ஜரவாஸ்.

உலக அளவில் இப்படி தூய மரபணு மனித இனக்குழுக்கள் வெகு குறைவே,கலப்படமாகி,அழியாமல் பாதுகாப்பது மிக அவசியம்.

கும்மாச்சி said...

அந்தமான் வெகுநாட்களாக செல்லவேண்டும் என்று நினைத்து கைகூடாத ஒன்று, உங்களது கட்டுரையைப் படித்தவுடன் செல்ல ஆர்வமாக இருக்கிறேன்.

சென்னை பித்தன் said...

ரசகுல்லா தவிர எதுவுமே உங்களுக்கு சுவாரஸ்யமா இல்லையோ?!

அமர பாரதி said...

பயணக் கட்டுரைகள் அருமை. கானா என்று சாப்பாட்டைப் பற்றி ஏதோ சொல்லியிருக்கலாம்.

அஜீம்பாஷா said...

ஏ பாய் இந்திக்காரன் கானா என்று டிரைவரை பார்த்து சொன்னது பாட்டு வையுங்கள் என்று.

MANO நாஞ்சில் மனோ said...

அடுத்து வருவது: ஜாலிபாய் தீவு//

கன்னிதீவும் காட்டுவீங்கதானே.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஒவ்வொரு அந்தமான் பதிவிலும், ஒவ்வொரு படம் எடுக்கலாம் போல..

அம்புட்டு டீடைல் சொல்லியிருக்க பிரபா.

தனிமரம் said...

போகத்தூண்டும் பயணக்கட்டுரை!