Showing posts with label uyirmai. Show all posts
Showing posts with label uyirmai. Show all posts

16 March 2015

கால்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இவ்வளவு போரிங்கான நாவலை இதுவரையில் நான் வாசித்ததில்லை. உண்மையில், நான் அபிலாஷுடைய ரசிகனை வாசிக்க விரும்பினேன். அதனை வாசிப்பதற்கு அவருடைய முதல் நாவல் என்கிற வகையிலும், யுவ புரஸ்கார் விருது பெற்றது என்பதாலும் கால்கள் ஒரு Pre-requisite என்று நானாகவே கருதினேன்.

மொத்தம் 550 பக்கங்கள். நிறைய எழுத்தாளர்கள் எழுத்துரு அளவை பெரிதாக வைத்தோ, வரி வெளி அதிகமாக விட்டோ அல்லது படங்களைச் சேர்த்தோ பக்கங்களை அதிகரிக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் புத்தகம் முழுக்க முழுக்க எழுத்துகளால் நிறைந்திருக்கிறது என்பது முதல்முறை புரட்டும்போதே புரிந்துவிட்டது. ஆனால் உள்ளடக்கம் தான் சற்று சிக்கலானது. நான் பொதுவாக சோகமயமான படைப்புகளை விரும்புவது கிடையாது. கால்களை பொறுத்தவரையில் சோகம் என்று சொல்ல முடியாது. ஒருவிதமான அயர்ச்சியான உணர்வு.

சில நாவல்களை எடுத்து ஐம்பது பக்கம் வரை தாண்டி ஒரு Pleasure of the Text-ம் கிடைக்கவில்லை என்கிற பட்சத்தில் அதைத் தொடர்ந்து படித்து காலத்தை விரயம் ஆக்காமல் மற்றொன்றை ஆரம்பித்தல் என்றுமே சாலச் சிறந்தது என்கிறார் பிரபு காளிதாஸ். ஒவ்வொரு முறை மூடி வைத்துவிடலாமா என்று யோசிக்கும்போதும் யுவ புரஸ்காரை நினைத்துக்கொண்டே தம் கட்டி முடித்துவிட்டேன்.

இளம் பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட மது என்கிற பருவப்பெண்ணை மையப்படுத்தி கதை நகர்கிறது. தட்டையான நாவல் என்பார்களே, அதற்கு கால்கள் ஒரு நல்ல உதாரணம். கிட்டத்தட்ட முப்பத்தி இரண்டு அத்தியாயங்கள் வரை (365 பக்கங்கள் !) நாவல் ஒரே தொனியில் பயணிக்கிறது. அதற்குப் பிறகும் கூட பெரிய வித்தியாசமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மதுவின் உணர்வுகள் தான் நாவலின் சாரம் எனும்போது அது எவ்வளவு வலிமையானதாக இருந்திருக்க வேண்டும். நாவலில், மது யாரிடமும் எந்த உணர்ச்சியையும் பெரிதாக காட்ட மறுக்கிறாள். அப்பா, அம்மா, வைத்தியர், கார்த்திக் என பல பாத்திரங்கள் வருகின்றன. அவர்களையெல்லாம் மது எந்தவித சலனமும் இல்லாமல் எதிர்கொள்கிறாள், எதிர்கொள்கிறாள், எதிர்கொண்டே இருக்கிறாள், கடைசி வரைக்கும் எந்த மாற்றமும் இல்லை. மதுவுக்கு யாரைப் பார்த்தாலும் சோர்வாக இருக்கிறது. மற்றொரு எழுத்தாளருக்கு அடிக்கடி துக்கம் தொண்டையை அடைப்பது போல மதுவுக்கு அடிக்கடி சோர்வாக இருக்கிறது. அதை படிக்கும்போது நமக்கும் சோர்வாக இருக்கிறது. வார நாளொன்றின் மதியவேளையில் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு மாதிரியான சவசவ உணர்வு ஏற்படும் அல்லவா ? அந்த உணர்வுதான் நாவல் முழுமைக்கும் கிடைக்கிறது.

ஆரம்ப அத்தியாயங்களில் மது, கார்த்திக் உரையாடல்கள் வருகின்றன. பழைய பாலச்சந்தர் படங்களில் வருவது போல ஒருமாதிரி லொட லொட. ஒரேயொரு ஆறுதல், நல்லவேளையாக மது ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கவில்லை. அப்படி பிறந்திருந்தால் அதற்கும் சேர்த்து வேறு அழுது வடிந்திருக்கும் நாவல்.

உண்மையாகவே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதையே நினைத்து வருந்திக்கொண்டோ அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை காலிபர் இல்லாமல் நடந்து கீழே விழுந்து கொண்டோவா இருக்கிறார்கள் ? அல்லது அப்படி இருந்தால் அது ஊக்குவிக்கக் கூடிய விஷயமா ? என்னைப் பொறுத்தவரையில், கால்கள் ஆப்டிமிஸ்டிக் தொனியில் எழுதப்பட்ட ஒரு பெஸ்ஸிமிஸ்டிக் நாவல்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 February 2015

இரவல் காதலி + கொட்டு மொழக்கு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒரு விஷயத்தை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும்போது ஒரு கட்டத்தில் நம்மையறியாமல் அதன் மீது ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது. நாட்டின் நிலைமை அறிந்துகொள்ள சிகப்பு நா.....டா ! என்கிற விளம்பரப் பாடல் போல குருத்தோலை, இரவல் காதலி, கொட்டு மொழக்கு, செல்லமுத்து குப்புசாமி போன்ற பதங்கள் பரிட்சயமாகிவிட்டது. எழுத்தாளர் மென்பொருள் துறையில் பணிபுரிபவர் என்பதாலும் ஒரு ஆர்வம். அவருடைய இரண்டு நாவல்களை புத்தகக்காட்சியில் வாங்கினேன்.

முதலில் இரவல் காதலி. கமாக்கதை தளங்களில் விரவிக்கிடக்கும் UNSATISFIED WIFE கதையொன்றில் காதல் மற்றும் பிற உணர்ச்சிகளை சேர்த்து மானே தேனே போட்டு எழுதினால் இரவல் காதலி ரெடி.

முதல் ஐம்பது பக்கங்கள் சும்மா ஜிவ்வென்று பறக்கிறது. அதன்பிறகு கொஞ்சம் போரடித்தது. SMS, Gtalk சம்பாஷனைகளை பார்த்ததும் ஒருவேளை ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவலாக இருக்குமோ என்று பதிப்பிக்கப்பட்ட வருடத்தை அவசரமாக திருப்பிப் பார்த்தேன். புதுசுதான். SMS இடத்தை வாட்ஸப்பும், GTalk இடத்தை ஃபேஸ்புக் சாட்டும் எப்போதோ நிரப்பியாயிற்றே அய்யா. மைக்ரோஸாஃப்ட் வேர்டில் ஸ்மைலி போட்டால் அது J என்று மாறிக்கொள்வதை கவனித்திருப்பீர்கள். அது வினையாகி, சம்பாஷணைகளின் இடையே அடிக்கடி J, L என்று வருகிறது.

ஐ.டி.துறை சார்ந்த நாவல் என்பதால் அதன் வகையைச சேர்ந்த ‘ராஜீவ் காந்தி சாலை’யுடன் ஒப்பிடத் தோன்றுகிறது. ராகாசா’வில் பூர்வக்குடி மக்களின் விவசாய நிலங்களை பறித்தது, மாறிவரும் கலாசாரம், ஐடி ஊழியர்களின் வாழ்க்கைமுறை, கேப் டிரைவர்களின் கிளைக்கதைகள் என்று பலவற்றையும் தொட முயற்சி செய்திருப்பார் விநாயக முருகன். நிறைய கதாபாத்திரங்கள். சில சமயங்களில் குழப்பவும் கூட செய்தது. இரவல் காதலியில் அதுபோன்ற சிக்கல்கள் இல்லை. நான்கைந்து முக்கிய கதாபாத்திரங்கள். கொஞ்சம் ஐ.டி. கொஞ்சம் விமன் ஸைக்காலஜி. கொஞ்சம் செக்ஸ் என்று பிரமாதமான ப்ளெண்ட்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் எழுத்தாளர், “நான் எழுதுவதை எல்லாம் என் மனைவி படிக்க வேண்டும். பாராட்ட வேண்டும்” என்று ஆசைப்படுவதாக கூறினார். நியாயம்தான். என்னதான் ஆடவர்கள் ஆயிரம் பேர் பாராட்டினாலும் கூட பெண்ணின் பாராட்டு என்பது சிலிர்ப்பை தரக்கூடியது. அதுவும் நமக்கு உற்றவளுடைய பாராட்டு என்பது மிகவும் உன்னதமானது. அந்த வகையில் எழுத்தாளருடைய மன உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எழுத்தாளரின் மனைவி என்ன சொன்னார் தெரியுமா ? “நான் நான்கு பக்கங்கள் படிப்பதற்குள் தூங்கி விடுவேன்” என்று ஒரே போடாக போட்டார். என்னைக்கேட்டால் அதுவே சாலச் சிறந்தது என்பேன். இரவல் காதலி போன்ற கதையினை எழுத்தாளரின் மனைவி படித்தால் என்ன நடக்கும் என்று நினைத்தாலே கலக்கமாக இருக்கிறது. நாளடைவில் எழுத்தாளர் எழுதுவதையெல்லாம் மனைவி உட்கார்ந்து மட்டறுத்துக் கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும் ?

இரண்டாவது கொட்டு மொழக்கு.

கொட்டு மொழக்கின் பின்னட்டை பத்தி இப்படிச் செல்கிறது – கார்ப்பரேட் வாழ்க்கையின் அழுத்தங்களில் மூச்சுத்திணறும் ஒருவன்.... கொட்டு மொழக்கு மட்டுமல்ல. இந்த ஆண்டு வெளியான வேறு சில நாவல்களின் பின்னட்டைகளில் கூட ஏறத்தாழ இதே போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

சமீபத்தில் நடந்த புத்தகக்காட்சியில் ஒரு போட்டோக்கார நண்பர் ஸ்டால்களை போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். நித்யானந்தா ஸ்டாலில் பலமான வரவேற்பு கிடைத்தது. அங்கே வீற்றிருந்த ரெடிமேட் சாமியார் போட்டோக்கார நண்பரை அமர்த்தி கபாலத்தில் கை வைத்து உங்களுக்கு என்ன பிரச்சனை ? என்று கேட்டாராம். உடனே நண்பர் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நிம்மதியாக இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதைக் கேட்ட சாமியார் ஷாக் ஆகியிருக்கிறார். பின்னட்டை வாசகங்கள் எழுதும் ஆசாமிகளும் அந்த சாமியாரைப் போன்றவர்கள் தான். மனிதர்கள் எல்லோரும் ஏதோ ஒரு மனக்குறையோடு மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களாகவே கற்பிதம் செய்துகொள்கிறார்கள். ரைட்டு.

மரண வீடுகளை எதிர்கொள்ளத் தெரியாத ஒரு நகர நாகரிக மனிதன் என்ற கதைக்கரு பிடித்திருந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நாவலின் வட்டார மொழிநடை என்னை விழி பிதுங்க வைத்துவிட்டது. வட்டார மொழிநடை என்பது விருப்பத்திற்குரிய ஒன்றுதான். உரையாடல்கள் வட்டார மொழிநடையிலும், விவரணைகள் எழுத்துத் தமிழிலும் மாறி மாறி வரும்போது படிப்பதற்கு தொய்வில்லாமல் இருக்கும். இந்த நாவலை பொறுத்தவரையில் வட்டார மொழிநடை கொஞ்சம் ஓவர்டோஸ். குறிப்பிட்ட வட்டார மக்கள் விரும்பக்கூடும்.

சீரியஸாக போய்க்கொண்டிருக்கும் நாவலின் இடையே யாரோ ஒருவரை குத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள எழுத்தாளர் எடிமலை கதாபாத்திரம் எல்லாம் ரிட்டன் ஃபார்மட் சூரி என்றுதான் சொல்ல வேண்டும். முடியல. 

அப்புறம், மரண வீட்டு சடங்குகள் பற்றிய டீடெயிலிங். இதன் பின்னாலுள்ள எழுத்தாளரின் உழைப்பு நிச்சயம் பாராட்டுக்குரியது. நிறைய விவரங்களை தேடித் தேடித் தொகுத்திருக்கக்கூடும். சில இடங்களில் ‘எல்லாம் ஒரு சம்பிரதாயத்துக்கு செய்யுறது தாம்பா’ என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு போவதை எளிமையாக கடந்துபோக முடியவில்லை. எதற்காக ஒரு எழுத்தாளர் சடங்காச்சாரங்களை பற்றியெல்லாம் எழுத வேண்டும் ? அந்த சடங்குகளுக்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்களை தெளிவு படுத்தினாலன்றி அதனை எழுதுவதால் என்ன பயன் ? என்று புரியவில்லை.

இரண்டு நாவல்களைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்வதென்றால் நகர்புறத்து கதைகளை விரும்புபவர்கள் இரவல் காதலியையும், கிராமத்து கதைகளை விரும்புபவர்கள் கொட்டு மொழக்கினையும் வாசிக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 January 2014

அஜக்கு’ன்னா அஜக்குதான்...!

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இன்று ஃபேஸ்புக்கில் பிரபலமாக செயல்படும் அராத்து என்பவருடைய இரண்டு புத்தகங்கள் வெளியாகின்றன. இதற்கென சென்ற மாதத்திலிருந்தே விளம்பரப்படுத்துகிறேன் பேர்வழி என்று அல்லோல கல்லோலப் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அராத்து என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டாக்கரா...?

அராத்து எப்போதிலிருந்து ரெளடியானார் என்று எனக்கு தெரியவில்லை. ஆரம்பகாலத்தில் டிவிட்டரில் அவரை பின்தொடர்ந்துக் கொண்டிருந்தேன். ட்விட்டர் எனக்கு அவ்வளவு பழக்கமில்லை. அங்கே யார் பெரிய வஸ்தாது...? எத்தனை குரூப்புகள் உள்ளன...? போன்ற விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரியாது. இரவு வந்ததும் ஒரு க்ளான்ஸ் டைம்லைனை ஸ்க்ரோல் செய்து படிப்பேன். அவற்றில் குறிப்பாக ராஜன், தோட்டா, அராத்து போன்றவர்களின் ட்வீட் ரசிக்கும் வகையில் இருக்கும். அவ்வளவுதான். பெரும்பாலும் டிவிட்டரில் ராஜா / ரஹ்மான், ஐபோன் / அண்டிராய்ட் என ஏதாவது விவாதங்கள் நடந்துக்கொண்டிருக்கும். அல்லது ஏதாவதொரு டாபிக் கொடுத்து அதையொட்டியே எல்லோரும் ட்வீட்டிக் கொண்டிருப்பார்கள். நான் இரவில் வந்து அன்றைய ட்வீட்டுகளை பின்னோக்கி படிப்பதால் இவ்வாறான விவாதங்கள் அவ்வளவாக பிடிபட்டதில்லை. காலப்போக்கில் ட்விட்டரை மறந்துபோனேன்.

திடீரென ஒருநாள் ஃபேஸ்புக்கில் அராத்து இருப்பதையும், அங்கே அவர் ஆயிரக்கணக்கான அடிபொடிகளுடன் பெரிய வஸ்தாது ஆகியிருப்பதைக் கண்டேன். அவருக்கு நட்பு கோரிக்கை அனுப்பினேன். நீண்ட நாட்களாக அது கிடப்பிலேயே இருந்தது. ஆயினும் ஃபாலோயர் என்ற முறையில் அவருடைய நிலைத்தகவல்கள் எனக்குத் தெரிந்து நானும் அவற்றை விரும்பி வாசித்துக்கொண்டிருந்தேன். பின்னர் ஒருநாள் அவர் என்னுடைய நட்பு கோரிக்கையை கவனித்திருக்கவில்லையோ என்றெண்ணி பழைய கோரிக்கையை கேன்சல் செய்துவிட்டு மறுபடி நட்பு கோரினேன். இம்முறை என்னுடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அராத்து மிக நன்றாக எழுதுவார் என்றாலும், மிகுந்த தலைக்கனம் கொண்டவர் என்பதும், தனக்கு வரும் எதிர்வினைகளை நேர்மையற்ற முறையில் அவர் கையாண்டு வந்ததும் காரணமாகி நான் லைக், கமெண்ட் போன்ற எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் அவருடைய எழுத்துகளை மட்டும் ரசித்து வந்தேன். ஒரு தனிப்பட்ட மனிதரை பிடிக்காது என்பதற்காக அவருடைய எழுத்துகளை புறக்கணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது மட்டுமில்லாமல் அவருடைய எழுத்துகளை நான் தவறவிட விரும்பவில்லை.

அராத்து போன்றவர்கள் தங்களுக்கு வரும் எதிர்வினைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். அதைப் பற்றி எழுதுவதென்றால் அராத்து மேனேஜ்மென்ட் கான்செப்ட் போல தனி புத்தகமாகவே எழுதலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் ‘யாரோட கண்ணுக்கெல்லாம் கடவுள் தெரியுறார்...?’ என்கிற வடிவேலு நகைச்சுவை காட்சியைப் போன்ற டெக்னிக் தான். ஒரு எழுத்தாளர் என்றால்... ஏன் ஒவ்வொரு மனிதனுக்குமே திமிர் என்பது கட்டாயம் இருக்கும். இருக்க வேண்டும். ஆனால் அந்த திமிர் ‘நான் இப்படித்தான்’ என்று சொல்லும் வகையில் அமைந்தால் நலம். அராத்துவின் திமிரோ ‘என்னைத்தவிர எல்லாரும் முட்டாப்பயலுக’ (அவருடைய மொழியில் வேறொரு வார்த்தை) என்பதாக அமைந்துள்ளது. இதுவரையில் தனக்கு வரும் எதிர்வினைகளுக்கு அராத்து பொறுப்பாக பதில் சொல்லி நான் பார்த்ததே இல்லை. சில சமயங்களில் பெண்களுக்கு பதில் சொல்லியிருக்கலாம். மற்றபடி பெரும்பாலான நேரங்களில் கேள்வி கேட்பவனை கெட்டவார்த்தையில் அர்ச்சனை செய்து, ஒரு மாதிரியாக மனோதத்துவ முறையில் அவருடைய செயலுக்கு நியாயம் கற்பித்து, அடிபொடிகளையும் தூண்டிவிட்டு கும்மி அடிப்பதே அவருடைய ஸ்பெஷாலிட்டி கிக்.

அராத்துவின் தற்கொலை குறுங்கதைகள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு டாபிக். கதைகளுக்கென இருக்கும் வரைமுறைகளை பின்பற்றாமல், எல்லைகள் மீறி, ஒரு மாதிரியாக கை போன போக்கில், செக்ஸ் கலந்து எழுதும் அவருடைய தற்கொலை குறுங்கதைகளில் ஒரு கிக் இருக்கிறது. அது புத்தகமாக வெளிவரப்போகிறது என்றதும் கண்டிப்பாக வாங்க வேண்டிய லிஸ்டில் அதனை சேர்த்துக்கொண்டேன். ஆனால் சாரு போன்றவர்கள் தற்கொலை குறுங்கதைகள் என்பது ஆகச்சிறந்த இலக்கியம் என்னும் வகையில் ப்ரொமோட் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி யாரேனும் அதுதான் இலக்கியம் என்று கூறினால் ஒன்று, அப்படிச் சொல்பவர் போலியாக இருக்க வேண்டும். அல்லது இலக்கியம் என்பதே போலியாக இருக்க வேண்டும். என்னளவில், தற்கொலை குறுங்கதைகள் என்பது விகடன் டைம்பாஸ் போல ஒரு ரசிக்கவைக்கும் ஜாலியான புத்தகம். அவ்வளவுதான். இதே விதி அராஜகம் ஆயிரம் என்னும் அவருடைய ட்வீட் புத்தகத்திற்கும் பொருந்தும். ஜாலியான ஒன்லைனர்கள் கொண்ட ஒரு புத்தகத்தை திருக்குறளோடு ஒப்பிடுவது உச்சக்கட்ட அபத்தம். ஒரு மாதமாக அவர்கள் இப்படியெல்லாம் உதார் விட்டதன் விளைவு:- மூன்றாவது பத்தியிலுள்ள என்னுடைய கொள்கையைத் தாண்டி, அவருடைய எந்த புத்தகத்தையும் நான் விலை கொடுத்து வாங்குவதாக இல்லை என்று முடிவு செய்துவிட்டேன். அதனால் எனக்குத்தான் இழப்பு என்றாலும் கவலையில்லை.

நிற்க. அராத்து செக்ஸியாக எழுதுவதோ, கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவது குறித்தோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அது அவர் அவருடைய தனிப்பட்ட விருப்பம், கருத்து சுதந்திரம். சொல்லப் போனால் அவ்வாறாக கிளுகிளுப்பாக எழுதப்படும் விஷயங்களை நான் கூடுதல் கவனம் கொடுத்து படிக்கிறேன். ஆனால் சன்னி லி’யோனி’யை பற்றி எழுதிவிட்டு இது குறியை சுத்தமாக வைத்திருப்பதைப் பற்றிய விழிப்புணர்வு நிலைத்தகவல் என்று சொல்வது, வித்தியாச மசுறா ஸ்டேட்டஸ் போடுகிறேன் பேர்வழி என்று கற்பழிப்பு செய்தியை வைத்து காமெடி செய்துவிட்டு உள்ளூர் கற்பழிப்புகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் மீடியா, மக்களை பகடி செய்தேன் என்று சொல்வது போன்ற ‘டகுல் பாச்சா’ வேலைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னைப் பொறுத்தவரையில் அஜக்கு’ன்னா அஜக்குதான், குமுக்கு’ன்னா குமுக்குதான்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment